சிறந்த சிறுவர் புத்தகங்களில், இன்று அதிகமாக விற்பனையாகும் “வால்டோ எங்கே” (Where’s Waldo) என்னும் கார்ட்டூன் புத்தகதொகுப்பின் நட்சத்திர ஹீரோ ‘வால்டோ’. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள காட்சிகளில், மற்ற கதாப்பாத்திரங்களுக்கிடையே வால்டோ மறைந்து கொள்வான். சிறுவர்கள் அவனை கண்டுப்பிடிக்கவேண்டும். இதுவே அப்புத்தகத்தின் கரு. உலகெங்கும் உள்ள பெற்றோர்கள், தங்கள் சிறு பிள்ளைகள் வால்டோவை கண்டு பிடிக்கும் பொழுது, அவர்கள்  முகங்களில் வெளிப்படுத்தும் வெற்றிக் களிப்பைக் கண்டு ரசிப்பார்கள். சில சமயம் தங்கள் பிள்ளைகள் வால்டோவை கண்டுபிடிக்க அவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆதித் திருச்சபையில் மூப்பராக இருந்த ஸ்தேவான், கிருஸ்துவைக் குறித்து பிரசங்கித்ததற்காக கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு, (அப். 7) கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவம் பெருக ஆரம்பித்தது. ஆகவே அவர்கள் எருசலேமை விட்டு தப்பியோடினார்கள். அப்பொழுது இன்னொரு மூப்பராகிய பிலிப்பு, சமாரியவிற்கு தப்பிச்சென்ற கிறிஸ்தவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவர்களுக்கு கிறிஸ்துவைக் குறித்து இன்னும் அதிகமாய் பிரசங்கித்தான். அதை அவர்கள் எற்றுக்கொண்டார்கள் (8:6). அவ்வேளை, பரிசுத்த ஆவியானவர், ஒரு “விசேஷ” பணி நிமித்தமாக “வனாந்திர பாதையிலே” பிலிப்பை அனுப்பினார். தன்னுடைய சுவிசேஷப் பணியின் மூலம், மிகுந்த பலனை சமாரியாவிலே காணும்பொழுது, ஆவியானவரின் வழிநடத்துதல் பிலிப்பிற்கு விசித்திரமாக தோன்றியிருக்கக்கூடும். ஆனால், வழியிலே ஒரு எத்தியோப்பிய நாட்டு மந்திரிக்கு, ஏசாயா புத்தகத்திலிருந்து, கிறிஸ்துவை அவன் கண்டுகொள்ள உதவி செய்தபொழுது, பிலிப்பிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (வச. 26-40).

இதைப்போலவே, வேதத்தின் மூலம் பிறர் “இயேசுவை கண்டுக்கொள்ள” நாம் உதவும்படியான அநேக சந்தர்ப்பங்கள் நமக்கு கொடுக்கப்படுகின்றன. தன் பிள்ளை, வால்டோவை கண்டுப் பிடித்த போது, அவன் கண்களில் வெளிப்பட்ட சந்தோஷத்தைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போலவும், ஒரு எத்தியோப்பிய தலைவன் இயேசுவை கண்டடைந்த பொழுது பிலிப்புக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியை போலவும், நாமும் நம்மை சுற்றியுள்ளவர்கள் இயேசுவை கண்டுகொள்ளும்போது மிகுந்த சந்தோஷமடைவோம். ஒவ்வொரு நாளும் ஆவியானவரின் வழிநடத்துதலோடு, நமக்கு மிகவும் பரிச்சயமானவர்களானாலும் சரி, அல்லது ஒரே முறை சந்தித்தவர்களானாலும் சரி, கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பகிர நாம் ஆயத்தப்படு வோமாக.