மே, 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மே 2017

நொறுங்குண்ட நிலையின் அழகு!

கின்ட்சூகி (Kintsugi) என்பது உடைந்த மண்பாண்டங்களை சீரமைக்கும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு ஜப்பானிய கலை ஆகும். குங்கிலியம் (Resin) என்னும் ஒரு பிசின் வகையோடு பொன்துகள்களை கலந்து, உடைந்த துண்டுகளை அக்கலவையைக்கொண்டு ஒட்டிவிடுவார்கள். விரிசல்களிலும் இதை நிரப்பிடுவார்கள். விளைவு, மிக உறுதியான ஒரு இணைப்பு. உடைந்து போன மண்பாண்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறுமனே மறைப்பதற்கு பதில் ஒரு அற்புதமான கலையைக் கொண்டு அதை அழகான பாண்டமாக மாற்றிவிடுவார்கள். 

அதைப்போலவே, நாம் செய்த பாவத்திற்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும் பொழுது, அந்நொறுங்குண்ட நிலையை தேவன் மிக உயர்வாகக் காண்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாவீது பத்ஷேபாளோடு விபசாரத்தில் ஈடுபட்டதுமன்றி அவளுடைய கணவனைத் திட்டமிட்டு கொலை செய்தான். இதைக்குறித்து தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை எதிர்கொண்டு விசாரித்த பொழுது, தாவீது மனந்திரும்பினான். “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று பின்பு தாவீது செய்த ஜெபத்தின் மூலம், நாம் பாவம் செய்வோமானால் தேவன் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் (சங். 51:16-17). 

பாவத்தினால் நம்முடைய இருதயம் உடைந்து போயிருக்கும்பொழுது, சிலுவையிலே நமது இரட்சகரால் நமக்கு மிக தாராளமாய் அளிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மன்னிப்பைக் கொண்டு தேவன் நம் இருதயத்தை சீர்ப்படுத்துவார். நாம் அவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணிக்கும் பொழுது, அன்புடன் நம்மை வரவேற்று கிட்டிச் சேர்த்துக்கொள்வார் 

தேவன் எவ்வளவாய் இரக்கமுள்ளவர்! தாழ்மையுள்ள இருதயத்தையே தேவன் விரும்புவதாலும், அவருடைய இரக்கங்கள் மகாசவுந்தர்யமுள்ளதாய் இருப்பதாலும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்,” என்னும் இன்னொரு வேதாகம ஜெபம் இன்று நமதாகட்டும் (சங். 139:23-24).

இரக்கத்தை எதிர்பார்த்திடு இரக்கத்தை அளித்திடு!

என் தோழியின் தவறான தீர்மானங்களும் தேர்வுகளும் அவளை பாவத்திற்குள்ளாக மிக அதிகமாய் அழைத்துச் சென்றது மாத்திரமன்றி அவளுடைய செயல்கள் என்னையும் பாதித்தது. இதைக் குறித்து நான் ஒவ்வொரு வாரமும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும் பெண் ஒருவரிடம் முறையிட்டபொழுது, அவர் தன்னுடைய கரங்களை என் கரங்கள் மீது வைத்து, “சரி நாம் நம் அனைவருக்காகவுமே ஜெபிக்கலாம்” என்று கூறினார். 

அதற்கு நான், “நம் அனைவருக்காகவுமா?” என முகம் சுளித்து வினவினேன். 

“ஆம் எப்பொழுதும் இயேசுவே நம்முடைய பரிசுத்தத்தின் அளவுகோலாய் இருப்பதால், நம்முடைய பாவங்களை நாம் ஒருபோதும் மற்றவருடைய பாவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்று நீயே கூறியிருக்கிறாயே?” என அவர் பதிலளித்தார். 

நான் தவறை உணர்ந்து, “இந்த உண்மை எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் கூறுவது சரியே. என்னுடைய நியாயந்தீர்க்கும் மனப்பான்மையும் ஆவிக்குரிய பெருமையும் அவளுடைய பாவங்களை விட சாதாரமானதும் இல்லை மோசமானதுமில்லை” எனக் கூறினேன். 

அதற்கு அவர் “மேலும், நாம் உன்னுடைய தோழியை பற்றி பேசுவதின் மூலம் புறங்கூறிக் கொண்டிருக்கிறோம். இதனால்...” என்று கூற… 

“நாம் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்,” என பதிலளித்தேன். தவறை உணர்ந்து, தலையை தாழ்த்தி, “தயவு செய்து நமக்காக ஜெபம் செய்யுங்கள்,” என்றேன். 

தேவலாயத்திற்கு வந்து வெவ்வேறு விதமாக ஜெபித்த இரண்டு நபர்களைக் குறித்து உவமையாக இயேசு கூறியிருப்பதை லூக்கா 18ஆம் அதிகாரத்தில் காணலாம் (வச. 9-14). அந்த பரிசேயனைப் போல நாமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் நம்மை பற்றியே பெருமை பாராட்டிக்கொள்ளவும் கூடும் (வச. 11-12). இந்த மனப்பான்மையினால், மற்றவர்களை நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் உண்டென்றும், அவர்களை சீர்படுத்த நமக்கு வல்லமை உண்டென்றும், அப்பொறுப்பு நம்முடையதே என்றும் நாம் எண்ணி ஜீவிப்போம். 

ஆனால், நாம் இயேசுவின் பரிசுத்த வாழ்வையே மாதிரியாகக் கொண்டு, அவருடைய நன்மைகளை நம் வாழ்வில் கண்டுணரும் பொழுது, நாமும் அந்த ஆயக்காரனைப்போல, தேவகிருபை நமக்கு இன்னும் எவ்வளவு அதிகமாய் தேவை என்பதை அறிந்துகொள்வோம் (வச. 13). தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும்பொழுது, நாம் மனமாற்றம் அடைந்து, இரக்கத்தை எதிர்பார்க்வும் அதையே பிறருக்கு அளிக்கவும் வல்லமைபெறுவோம். ஒருபோதும் நாம் பிறரை குற்றவாளியாக தீர்க்கமாட்டோம். 

கனம் கனத்தை சந்திக்கட்டும்

அர்லிங்டன் (Arlington) தேசிய கல்லறையிலுள்ள ‘அறியாதவர்களின் கல்லறையில்’ நடந்தேறும் காவலர் மாற்றம் என்னை எப்போதும் வெகுவாய் கவர்ந்ததுண்டு. மிக மரியாதையுடன் கம்பீரமாக அதே சமயம் எளிமையாகவும் அந்நிகழ்வு நடக்கும். ‘தேவன் மாத்திரமே அறிந்த’ அப்போர்வீரர்களையும் அவர்களுடைய தியாகத்தையும் எண்ணி மிக ஜாக்கிரதையாக வடிவமைத்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு நெஞ்சை
நெகிழ வைக்கும் அஞ்சலி ஆகும். அது மாத்திரமல்ல மக்கள் கூட்டம் ஏதுமில்லாத போதும், முன்னும் பின்னுமாக சீரான வேகத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமான வானிலையிலும் அக்காவலர் நடந்துசெல்வது நெஞ்சை நெகிழச் செய்யும். 

2003ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநகரை இசபெல் (Isabel) சூறாவளி நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, அது அந்நகரை தாக்கக்கூடிய மிக மோசமான நேரத்தில் அக்காவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கிட்டத்தட்ட அக்காவலர் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. சூறாவளி வீசிய போதும் கூட மடிந்துபோன தங்களுடைய தோழர்களை கனப்படுத்தும் பொருட்டு எவ்வித சுயநலமுமின்றி அவரவர் இடத்திலேயே நின்றார்கள். 

தேவனிடத்தில் மனந்தளராத தன்னலமற்ற பக்தியுடன் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்று மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் போதனை நமக்கு தெரிவிப்பதாக நான் விசுவாசிக்கிறேன் (வச. 1-6). நற்கிரியைகளுக்கும் பரிசுத்த ஜீவியத்திற்கும் நேராக வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆனால் இவை ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்குமுரிய காரியங்களாக இருக்க வேண்டுமே அன்றி (வச. 4-6), நம்முடைய சுய மகிமைக்காக திட்டமிட்டு செயல்படுத்தபட்ட காரியங்களாக இருக்கக்கூடாது (வச. 2). நம்முடைய ஜீவியம் முழுவதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய சரீரங்களை “ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்கும்படி நம்மை நோக்கி மன்றாடுகிறார் (ரோம. 12:1) 

தேவனே, எங்களுடைய தனிமையான தருணங்களும் தனிமையற்ற தருணங்களும் நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பையும், பக்தியையும் பறைசாற்றுவதாக.

ஒரு அடைக்கலான் குருவியாகிலும்!

தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது. 

உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.

அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும். 

என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார். 

“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார். 

“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).