சரிரத்தில் மிகுந்த வலிவேதனைகளோடு, இயல்பாக இயங்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறேன். குறைந்துபோன செயல்பாட்டினால் மனமுடைந்து மிகவும் சோர்ந்துபோன வேளையில், “என் சரீரம் செயலற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இப்பொழுது  தேவனுக்கும் மற்றவர்களுக்கும் என்னால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தோன்றுகிறது”, என என் தோழியிடம் மனந்திறந்து கூறினேன்.

அப்பொழுது அவள் தன் கரத்தை என் கரம் மீது வைத்து, “நான் புன்னகையோடு உனக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுதும், உன் பேச்சை நான் கவனித்து கேட்கும் பொழுதும், உனக்குள் எவ்வித தாக்கத்தையும் நான் ஏற்படுத்துவதில்லை எனக் கூறுவாயா?”, எனக் கேட்டாள்.

அதைக் கேட்டு நான் சற்று தடுமாறி, என் சாய்வு நாற்காலியில் நன்கு சாய்ந்து, “கண்டிப்பாக இல்லை”, என பதிலளித்தேன்.

அதற்கு என் தோழி, “இதைத்தானே நீ எனக்கும் மற்றவர்களுக்கும் செய்கிறாய். அப்படியிருக்க ஏன் உனக்கு தானே பொய்களைக் கூறிக்கொள்கிறாய்”, என பாசத்தோடு முறைத்தாள்.

தேவனுக்கென்று நாம் செய்வது எதுவும் பயனற்றது கிடையாது என்பதை தேவன் எனக்கு நினைவூட்டியதற்காக அவளுக்கு நன்றி செலுத்தினேன்.

நம்முடைய சரீரங்கள் இப்பொழுது பலவீனமுள்ளதாயிருந்தாலும், “பலமுள்ளதாய் எழுந்திருக்கும்,” என பவுல் உறுதியளிக்கிறார் (1 கொரி. 15:43). மேலும், கிறிஸ்தவுக்குள் மரித்தோர் மீண்டுமாய் உயிர்த்தெழுவார்கள் என தேவன் வாக்குபண்ணியுள்ளதால், அவர் நம்முடைய ஒவ்வொரு
காணிக்கையையும், எல்லா பிரயாசங்களையும் அவருடைய ராஜ்ஜியத்தைக் கட்ட பயன்படுத்துவார் (58).

பலவிதமான நபர்களைக் கொண்ட கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே நாம் ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதினால், நாம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், நம் சரீர இயக்கம் குறைந்துபோயிருந்தாலும், சோதனை வேளையிலும் நாம் வெளிப்படுத்தும் விசுவாசம், ஒரு புன்னகை, உற்சாகமூட்டும் வார்த்தை அல்லது ஒரு ஜெபம் யாவும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும், நாம் செய்யும் எவ்வித பணியும் சாதாரணமானதுமன்று, பயனற்றதுமன்று.