வகை  |  odb

நேருக்கு நேராக (முகமுகமாய்)

முன் ஒரு பொழுதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது உலகம் மின்னணுவியல் தொழில் நுட்பத்தால் இணைக்கப்பட்டிருந்தாலும், மனிதர்கள் கூடிவரும்பொழுது ஏற்படும் உணர்வை எதினாலும் ஈடுகட்ட இயலாது. நாம் ஒருவரொடொருவர் சிரித்து மகிழும்பொழுது நம்மை அறியாமலேயே மற்ற மனிதரின் முகத்தில் தோன்றும் அசைவுகள்மூலம் அவரது உள் உணர்வுகளை உணர்ந்து கொள்ளுகிறோம். ஒருவரையொருவர் நேசிக்கும் குடும்ப அங்கதினர்களோ அல்லது சினேதிதர்களோ யாராக இருந்தாலும், நேருக்கு நேர் சந்தித்துத் தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.

தேவன் அவரது ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திசெல்வதெற்கென்று தெரிந்தெடுத்த மோசேக்கும் அவருக்கும் இடையே இந்த நேருக்கு நேரான உறவை காணலாம். அநேக ஆண்டுகளாக மோசே தேவனை பின்பற்றுவதில் மிகவும் உறுதியோடும், நம்பிக்கையோடும் இருந்தான். அவன் வழி நடத்தி வந்த ஜனங்கள் விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டு, அவனுக்கு விரோதமாக எழும்பின பொழுதும்கூட அவன் தொடர்ந்து தேவனைப் பின்பற்றினான். தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக இஸ்ரவேல் ஜனங்கள் பொன்னிலான ஒரு கன்றுக்குட்டியை ஆராதனை செய்தபொழுது (யாத். 32) தேவனை சந்திக்க பாளயத்திற்கு வெளியே மோசே ஒரு கூடாரத்தைப் போட்டான். ஜனங்களோ தூரத்திலிருந்து அக்காட்சியைக் காண வேண்டும் (யாத். 33:7-11). தேவ பிரசன்னத்தின் அடையாளமாக கூடாரத்தின் மேல் அக்கினி ஸ்தம்பம் இறங்கின பொழுது, மோசே ஜனங்கள் சார்பில் தேவனோடு பேசினான். தேவனது பிரசன்னம் அவர்களோடு செல்லும் என்று தேவன் வாக்குப் பண்ணினார் (வச. 14).

இயேசுவின் சிலுவை மரணத்தினாலும், உயிர்த்தெழுதலினாலும், இப்போது நமக்காக தேவனோடு பேச மோசேயைப் போன்ற ஆட்கள் நமக்கு தேவை இல்லை. பதிலாக சீஷர்களோடு இயேசு கொண்டிருந்த உறவைப்போல நாமும் கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு அன்பான உறவு கொள்ளலாம் (யோவா. 15:16). இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஒருவன் அவனது சினேகிதனோடு பேசுவது போல நாமும் தேவனோடு பேசலாம்.

மிகவும் நுணுக்கமான விபரங்கள்

இந்த அண்டசராசரம் வியக்கத்தக்க அற்புதமாக உள்ளது. இந்த நேரத்தில்தானே மணிக்கு 2300 மைல் வேகத்தில் சந்திரன் நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது; நமது பூமி மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாகவும், நமது பால் வழியிலுள்ள எண்ணிக்கைக்கு அடங்காத கோள்களில் ஒன்றாகவும் நமது சூரியன் உள்ளது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பால் வெளிகளில் நமது பால் வழியும் ஒன்று. என்ன ஆச்சரியம்!

இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நமது சிறிய பூமி, ஒரு சிறிய கூழாங்கல்லைப் போன்றுள்ளது. நாம், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு மணல் துகளைவிட பெரிதல்ல. ஆனால், வேதாகமத்தின்படி அண்டசராசரங்களின் தேவன் மிகச் சிறியவர்களாகிய நம்மில் ஒவ்வொருவருடைய நுணுக்கமான விபரங்களையும் அறிந்திருக்கிறார். நாம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே அவர் நம்மை அறிந்திருக்கிறார் (சங். 139:13-16). அவர் நமது போக்கையும், வரத்தையும் அறிந்திருக்கிறார். நம்முடைய ஒவ்வொரு நினைவையும் அவர் அறிந்திருக்கிறார் (வச. 1-6).

சில சமயங்களில் இது நமக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். இந்தச் சிறிய கூழாங்கல் போன்ற நமது பூமியில் யுத்தம், பஞ்சம் போன்ற மிகப் பெரிய பிரச்சனைகள் உண்டு. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நேரங்களில், நாம் தேவனுடைய கரிசனையோடு கூடிய கண்காணிப்பைப்பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்கலாம். ஆனால், தாவீது ராஜா 139ம் சங்கீதத்தை எழுதிய பொழுது பல் வேறு துன்பங்கள் ஊடாகத் சென்று கொண்டிருந்தான் (வச. 19,20). நமது தலையிலுள்ள முடிகளெல்லாம் தேவனால் எண்ணப்பட்டிருக்கிறது என்று இயேசு கூறிய பொழுது (மத். 10:30) அவர் சிலுவையில் அறையப்பட இருந்த காலக்கட்டத்தில் இருந்தார். தேவனுடைய கரிசனையோடு கூடிய கண்காணிப்பைப்பற்றி வேதம் கூறுவது, ஓர் அனுபவ முதிர்ச்சியற்ற கூற்றல்ல அது உலகிலுள்ள உண்மையான சத்தியமாகும்.

அண்ட சராசரங்களை சுழலவைக்கும் தேவன் நம்மைப்பற்றிய நுணுக்கமான விபரங்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்.

தேவனை அணுகுதல்

ஜெபிக்க விரும்பிய ஒரு பெண் காலியாக இருந்த ஒரு நாற்காலியைப், பிடித்து இழுத்து அதன் முன் முழங்கால்படியிட்டாள். பின் கண்ணீரோடுகூட அவள் “எனது அன்பின் பரம தகப்பனே, இந்த நாற்காலியில் உட்காரும், நீங்களும், நானும் பேச வேண்டியது உள்ளது” என்று கூறினாள். பின்பு அந்தக் காலியான நாற்காலியைப் பார்த்து ஜெபித்தாள். அந்தக் காலியான நாற்காலியில் தேவன் அமர்ந்து அவளது ஜெபத்தைக் கேட்பதாக அவள் கற்பனை பண்ணியதின்மூலம், தேவனண்டை நெருங்கி வருவதாக அவன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தாள்.

சர்வ வல்லமையுள்ள தேவனோடு ஈடுபாடு கொண்டு அவரோடு செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. நாம் அவரை நெருங்கும்பொழுது அவர் நம்மண்டை நெருங்கி வருவார் (யாக். 4:8). “சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று (மத். 28:20)  அவர் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார். நம்முடைய பரமபிதா நாம் அவரண்டை நெருங்கி வரவேண்டுமென்று எப்பொழுதும் காத்திருப்பதோடு, நமது விண்ணப்பங்களுக்கு செவி சாய்க்கவும் ஆயத்தமாக இருக்கிறார்.

நாம் களைப்பாக உணரும் பொழுதோ, துக்க உணர்வால் மேற்கொள்ளப்படும் பொழுதோ, சுகவீனமாக பெலவீனமாக இருக்கும் பொழுதோ, ஜெபம் பண்ணுவதற்கு நமக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நாம் பெலனற்று இருக்கும் பொழுது, அல்லது சோதனைகளை சந்திக்கும் பொழுது, இயேசு நமக்காக இரங்குகிறார். “ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற சமயத்தில் சகாயம் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16).

இயேசுவிற்கு இடம் கொடுத்தல்

இப்ஸ்விச், மாசசூட்டஸ் மலையின் அருகிலிருந்த ஓர் ஆலயத்தின் பக்கத்தில் ஒரு கருங்கலில் மனித காலடித் தடம் போன்ற பதிவு காணப்படுகிறது. உள்ளுர் மக்கள் அந்த தடத்தை “பிசாசின் காலடித் தடம்” என்று கூறுகிறார்கள். 1740ல் இலையுதிர் காலத்தில் ஜார்ஜ் ஒயிட்பீல்டு என்ற பெயர் பெற்ற சுவிசேஷகர் அந்த ஊரில் மிகுந்த வல்லமையோடு பிரசங்கித்தார். அவருடைய வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட பிசாசானவன், அந்த ஆலயத்தின் கோபுர உச்சியிலிருந்து அந்த மலைப் பாறையில் குதித்து அந்த ஊரைவிட்டு வெளியே ஒடிப்போனான். அப்பொழுது அந்தக் கல்லில் ஏற்பட்ட பிசாசின் காலடி தடம் தான் அது என்று உள்ளுர் மக்கள் கூறுகிறார்கள்.

அது ஒரு புனைக் கதையாக இருந்தாலும் அந்தக் கதை தேவனுடைய வார்த்தையிலிருந்து ஊக்கமளிக்கக்கூடிய ஓர் உண்மையை நமக்குக் கூறுகிறது. “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.” என்று யாக்கோபு 4:7 நமக்கு நினைப்பூட்டுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளையும், நமது எதிராளியாகிய சாத்தானையும் எதிர்த்து நிற்கத் தேவையான பெலனை தேவன் நமக்கு கொடுத்துள்ளார். தேவனுடைய அன்பின் கிருபையினால் இயேசு கிறிஸ்துவின்மூலமாக அவருடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”, என்று ரோமர் 6:14ல் வேதம் நமக்குக் கூறுகிறது. சோதனை வரும்பொழுது, நாம் இயேசுவண்டை ஓடினால் அவர் தம்முடைய பெலத்தை நமக்கு அருளி சோதனையை எதிர்த்து நிற்க பெலன் தருகிறார். “அவர் உலகத்தை ஜெயித்ததினால்”, (யோவா. 16:33) இந்த உலக வாழ்வில் நம்மால் எதிர்த்து நிற்க இயலாத சோதனைகள் எதுவுமே கிடையாது.

நமது இரட்சகருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்பொழுது, நாம் நமது சித்தத்தை உடனே முழுவதுமாக அவருக்கு ஒப்புவித்து, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்பதால் அவர் நமக்கு உதவி செய்கிறார். சோதனைகளுக்கு இடங்கொடுப்பதற்குப் பதிலாக, அவரே நமது சோதனையை எதிர்த்து நமக்காக யுத்தம்பண்ணுகிறார்.

அதிலிருந்து தப்பித்தல்

2004 ஜூன் மாதத்தில் வேன்கூவரிலுள்ள கலைக் கூடத்தில், கனடாவைச் சேர்ந்த வீரர் பெக்கிஸ்கார்டுக்கு திறந்த வெளிய பனிச் சறுக்கு போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

அச்செயல் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. ஏனென்றால் 2002ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி உட்டாவில் நடந்தது. அதில் ஒருவர் தங்கப் பதக்கமும், மற்றொருவர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஸ்காட் வெண்கல பதக்கம் வென்றாள். தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இருவரும் தடைபண்ணப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவர்கள் இருவரும் பதக்கப் பட்டியலிருந்து நீக்கப்பட்டார்கள்.

அதன் விளைவாக, பெக்கிஸ்கார்ட் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ஆனால், ஒலிம்பிக் பதக்கம் அணிவிக்கப்படும் மேடையில் நிற்கும் பொழுது, அவளது தேசத்தின் தேசீய கீதத்தை கேட்கக்கூடிய தருணத்தை அவள் இழந்துவிட்டாள். அவளுக்கு நடந்த அந்த அநீதி சரிசெய்யப்படக் கூடாதாக இருந்தது.

எந்த விதமான அநீதியும் நமக்கு சஞ்சலத்தை அளிக்கிறது. கடினப்பட்டு உழைத்து பெற்ற பதக்கம் மறுக்கப்பட்ட அநீதியைவிட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அநேக தவறுகள் நடை பெறுகின்றன. காயீன், ஆபேல்பற்றிய கதை, அநீதியின் உச்சகட்டத்தை விளக்குகிறது (ஆதி. 4:8). முதல் பார்வையில், காயீன் அவனது சகோதரனை கொலை செய்ததிலிருந்து தப்பிவிட்டதுபோலக் காணப்பட்டது. எப்படியெனில் அவன் நீண்ட ஆயுள் உள்ளவனாக வாழ்ந்து ஒரு பட்டணத்தைக் கூட கட்டினான் (வச. 17).

ஆனால், தேவனோ காயீனுக்கு எதிர்த்து நின்றார். “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என்றார் (வச. 10). பிற்காலத்தில் புதிய ஏற்பாட்டில் பொல்லாங்கானவனான காயீனைப்போல இருக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது (1 யோவா. 3:12; யூதா 11). ஆனால், ஆபேலைக் குறித்தோ “அவன் மரித்தும் இன்னமும்; பேசுகிறான்” என்று (எபி. 11:4) நாம் வாசிக்கிறோம்.

தேவன் நீதியைக் குறித்தும், தவறுகளை திருத்திக் கொள்வதைக் குறித்தும், பெலனற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பது குறித்தும், மிகவும் கரிசனையுடனும், அக்கறையுடனும் இருக்கிறார். அநீதியான செயல் செய்த எவரும் ஒருகாலும் தப்ப இயலாது. அதைப் போலவே தேவனுக்காக நாம் விசுவாசத்துடன் செய்யும் பணிகளுக்குத்தக்கதான பலனை, அவர் நமக்கு அருளாமல் இருக்கமாட்டார்.

மகிழ்ச்சியான இருதயம்

எனது பேத்திக்கு ஜான் பிலிப் சௌசா அணிவகுப்பு ராகங்களில் ஒன்று மிகவும் பிடிக்கும். சௌசா அமெரிக்க ஐக்கிய நாட்டில் 19ம் நூற்றாண்டின் பின் பகுதியில் வாழ்ந்த இசை அமைப்பாளர், அணிவகுப்புப் பாடல்களை இயற்றுவதில் மன்னன் என்று கருதப்பட்டார். எனது பேத்தி மோரியா எந்த ஒரு அணிவகுப்பிலும் இல்லை. அவள் 20 மாதக் குழந்தைதான்; அவளுக்கு அந்த ராகம் மிகவும் பிடிக்கும். அதிலுள்ள சில வரிகளின் ராகத்தைப் போன்று வாயினால் ஓசையும் எழுப்புவாள். அந்த ராகத்தை மகிழ்ச்சியான நேரங்களோடு அவள் சம்பந்தப்படுத்தி சிந்திப்பாள். நாங்கள் குடும்பமாகக் கூடி வரும்பொழுது அனேக சத்தங்களின் ஊடாக, கரங்களைத் தட்டி, இந்தப் பாடலை வாய் திறவாமல் பாடுவோம். எங்களது ஓசைக்கு தகுந்தவாறு பேரக் குழந்தைகள் வட்டமாக நின்று நடனமாடுவார்கள். அது எப்பொழுதுமே மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கும், குழந்தைகளின் சிரிப்பொலியுடன் முடிவு பெறும்.

இந்த மகிழ்ச்சியின் சத்தம் “கர்த்தரை மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்யுங்கள்” சங்கீதம் 100:2 என்ற சங்கீதத்தை நினைவுகூர என்னை வலியுறுத்துகிறது. சாலொமோன் ராஜா தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தபொழுது இஸ்ரவேல் மக்கள் துதியுடன் ஆராதனை செய்தார்கள் (2 நாளா. 7:5,6). அவர்கள் பாடிய பாட்டுகளில் சங்கீதம் 100ம் ஒன்றாக இருந்திருக்கலாம்: “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்; மகிழ்ச்சியுடன் கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்” (சங். 100:1,3,4) என்று அந்த சங்கீதம் அறிவிக்கிறது. “கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை என்றென்றைக்கும் உள்ளது” (வச. 5).

நமது தேவன் நம்மை நேசிக்கிறார். அதற்கு மாறுத்தரமாக நாமும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுவோம் (சங். 100:1).

ஒய்வெடுக்க ஒருநாள்

ஒரு ஞாயிற்றுக்கிழமை வடக்கு லண்டன் பகுதியின் வழியாக சல, சல வென்று ஓசையோடு ஓடிக்கொண்டிருந்த ஓர் ஓடையின் அருகில் நான் நின்று கொண்டு, கட்டடங்களால் நிறைந்திருந்த எங்கள் பகுதிக்கு அந்த ஓடை எவ்வளவு அழகைக் கொண்டு வருகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தேன். அலை, அலையாய் விழும் அந்த ஓடை நீரை பார்த்தபொழுதும், பறவைகள் பாடல்களைக் கேட்ட பொழுதும் எனது சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றேன். நமது ஆத்துமாக்களுக்கு ஓய்வு கொடுக்க இப்படியாக நமக்கு உதவி செய்யும் தேவனுக்கு நான் நன்றி கூறினேன்.

ஆதிகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து வந்த அவருடைய ஜனங்களுக்கு ஓய்வு கொடுக்கவும், அதன்மூலம் அவர்கள் புது பெலன் அடையவும், ஓய்வு நாளை ஆசரிக்கும்படி தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஏனெனில், அவர்கள் செழிப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். யாத்திராகமத்தில் நாம் பார்ப்பதுபோல், அவர்களது வயல் வெளிகளில் ஆறு ஆண்டுகள் பயிரிடவும், ஏழாம் ஆண்டு ஓய்வு கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். அதுபோலவே ஜனங்கள் ஆறு நாட்கள் வேலை செய்யவும், ஏழாம் நாள் ஓய்ந்திருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். இந்த விதமாக தேவன் கட்டளையிட்ட வாழ்க்கை முறையினால் இஸ்ரவேல் மக்கள் மற்ற தேச மக்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்கள். அவரது சொந்த ஜனங்கள் மட்டுமல்லாது, அவர்களது மத்தியில் வசிக்கும் அந்நியரும், அடிமைகளும்கூட அதே வாழ்க்கை முறையைக் கையாள அனுமதிக்கப்பட்டார்கள்.

நமது ஓய்வு நாளை எதிர்பார்ப்போடும், செயல் திறமையோடும், நமது ஆத்துமாக்களை போஷிக்கத்தக்கதான காரியங்களைச் செய்து தேவனை ஆராதிப்பதற்கு நமக்கு கிடைக்கக் கூடிய தருணங்களை பயன்படுத்த ஆயத்தமாக இருப்போம். இவைகள் நமது விருப்பத்தைப் பொறுத்தது. சிலர் விளையாட விரும்புவார்கள். சிலர் தோட்ட வேலைகள் செய்ய விரும்புவார்கள். சிலர் அவர்களது சினேகிதரோடும், குடும்பத்தாரோடும் சேர்ந்து உணவு உண்டு மகிழ விரும்புவார்கள்.

நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட தருணங்கள் இல்லாதிருந்தால், ஓய்வெடுப்பதற்காக ஒர் நாளை ஒதுக்குவதினால் கிடைக்கக்கூடிய சிறப்பையும், மகிழ்ச்சியையும் நாம் எவ்வாறு மறுபடியும் பெற்று கொள்ள இயலும்?

தலை சிறந்த மேன்மை

நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .

பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.

இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.

முதன்மையாகச் செயல்படுதல்

எங்களது மகன், அவனது குழந்தைபருவத்தில் ஓர் அனாதை இல்லத்தில் வளர்ந்ததால் ஏற்பட்ட பேரதிர்ச்சியினால், மனம் நிலைகுலைந்து காணப்பட்டான். அதனால் அவன் எதையும் எதிர் மறையாக சிந்திக்கவும், செயல்படவும் செய்தான். ஆகவே, அவன் எங்கள் குடும்பத்தோடு இணைந்து ஒத்துப்போக, அவனை பழக்கப்படுத்துவதற்காகவும், அவனது மனநிலை சரியாவதற்கும் நாங்கள் பொறுமையோடு அவனுக்கு உதவி செய்தோம். அவனது குழந்தை பருவத்தில், அவன் கடந்து வந்த கடினமான வாழ்க்கையைக் குறித்து, நான் மிகவும் கரிசனைப்பட்டாலும், அவனது எதிர்மறை நடவடிக்கை காரணமாக, உணர்வளவில் நான் அவனை விட்டு தூரமாக விலக ஆரம்பித்தேன். மன நோய் சிகிச்சை அளிப்பவரிடம் என் மனப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன். “நீங்கள் முதலாவது அன்பைக் காட்டுவது அவனுக்கு தேவையாக உள்ளது. அவன் நேசிக்கப்படத் தகுதியானவன் என்று நீங்கள் அவனுக்கு காண்பித்தால், அவனும் அதற்கு ஏற்றபடி தகுதியாக நடந்து கொள்வான்” என்ற அவரது அன்பான ஆலோசனை என் மனதில் ஆழமாக பதிந்தது.

தேவனுடைய அன்பே ஒருவர் மேல் ஒருவர் அன்புகூருவதற்கு வழி நடத்துகிற மூல ஆதாரமாகவும், காரணமாகவும் உள்ளதென்று அப்போஸ்தலனாகிய யோவான் அவரது நிருபத்தை வாசிக்கும் மக்கள் ஒருவரோடொருவர் ஆழமாக அன்புகூரத்தக்கதாக வழிநடத்துகிறார் (1 யோவா. 4:7,11). எனது சினேகிதர்களோ, எனது சொந்த பிள்ளைகளோ அல்லது எனக்கு அறிமுகமாகாதவர்களோ, யாராக இருந்தாலும், அப்படிப்பட்ட உண்மையான அன்பை அவர்கள்மீது காண்பிக்கவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆயினும், யோவானுடைய வார்த்தைகள் பிறரை உண்மையோடு நேசிக்க வேண்டுமென்ற ஆவலை எனக்குள் தூண்டி எழுப்புகிறது. தேவன் முதலாவது நம்மில் அன்பு கூர்ந்தார். தேவன் அவருடைய பரிபூரண அன்பை நம் ஒவ்வொருவர் மேலும் செயல்படுத்தி காண்பிக்க, அவரது ஒரே பேரான குமாரனை அனுப்பினார். நாம் செய்வதுபோல அவர் அவரது இருதயத்தை நம்மை விட்டு விலக்கிக்கொள்ளாததை எண்ணி நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.

நமது பாவச் செயல்கள் தேவனுடைய அன்பு நம்மீது வெளிப்பட தடையாக இருந்தாலும், அவர் அவரது அன்பை நம்மீது பொழிவதில் தயக்கம் காட்டாமல் மன உறுதியுடன் இருக்கிறார் (ரோம. 5:8). அவர் முதலாவது நம்மை நேசித்ததால், அந்த அன்பின் பிரதிபலிப்பாக நாமும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று அவருடைய அன்பு வலியுறுத்துகிறது.