எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் உல்ப்கட்டுரைகள்

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.

எது வரைக்கும்?

எனக்கு திருமணம் ஆனவுடனேயே எனக்கு குழந்தைகள் பிறந்துவிடும் என்று எண்ணினேன். உடனே குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தை பெறுவதற்கு இயலாத என்னுடைய நிலைமையினால் ஏற்பட்ட மனவேதனை குழந்தை பேற்றுக்காக தேவனிடம் மன்றாட எனக்கு வழிவகுத்தது. நான் அடிக்கடி தேவனிடம் “எவ்வளவு காலம்?” என்று முறையிடுவேன். எனது சூழ்நிலைகளை தேவனால் மாற்றி அமைக்க இயலும். என்று அறிவேன். ஆனால், அவர் ஏன் மாற்றவில்லை?

நீங்கள் தேவனுக்கு காத்திருக்கிறீர்களா? நாம் வாழும் இப்பூமியிலே நியாயம் நிலை நிறுத்தப்பட எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா? கேன்சர் நோய் சுகமாகக் கூடிய காலம் எப்பொழுது வரும் என்று கேட்கிறீர்களா? நான் கடனில் விழுந்து விடாமல் இருக்க எவ்வளவு காலம் ஆகுமென்று கேட்கிறீர்களா?

ஆபகூக் என்ற தீர்க்கன் அதுபற்றி தெளிவான எண்ணம் கொண்டிருந்தான். “கர்த்தாவே நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் கேளாமல் இருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எது வரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன். நீர் என்னை இரட்சியாமல் இருக்கிறீரே. நீர் எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினையை பார்க்கப் பண்ணுகிறது என்ன?” (ஆப. 1:2-3) என்று அவன் தேவனை நோக்கிக் கதறினான். நீதியும் வல்லமையுமுள்ள தேவன், பொல்லாப்பு அநீதி, சீர்கேடு ஆகியவற்றை எவ்வளவு காலம் தொடர தேவன் அனுமதிப்பார் என்று அவன் அங்கலாய்த்தான். ஏன் தேவன் இடைப்படவில்லை. ஏதும் செயல்படவில்லை என்ற கேள்விகளைக் குறித்து ஆபகூக் அதிகமாக சிந்தித்தான்.

நாமும் இவ்விதமாக தேவன் ஏன் செயல்படாமலிருக்கிறாரென்று எண்ணுகிற நாட்கள் உண்டு. ஆபகூக்கைப் போல “எது வரை?” என்று தேவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆயினும் நான் தனிமையாக இல்லை. ஆபகூக்கின் குரலைக் கேட்டவர் நம்முடைய பாரங்களைப் பற்றியும் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியினால் நமது பாரங்களை அவர்மேல் வைத்துவிட வேண்டும். தேவன் நமது விண்ணப்பங்களை கேட்கிறார். அவரது நேரத்தில் அவர் அவைகளுக்குப் பதிலளிப்பார்.

தடைகளை அகற்றுதல்

முன்னால் கைதிகள் மீண்டும் சமுதாயத்தோடு இணைந்து வாழ உதவும் ஒரு அமைப்பாகச் செயல்படும் அந்த இல்லத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நான் மேரியைப் பார்ப்பதுண்டு. என்னுடைய வாழ்வு அவளுடைய வாழ்க்கையை விட வித்தியாசமானது. அவள் இப்பொழுதுதான் சிறையை விட்டு வெளியே வந்தவள். போதையிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மகனிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டாள். இப்படியாக அவள் சமுதாயத்தின் ஓர் ஓரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

மேரியைப் போன்று சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வதென்றால் என்னவென்று அடிமையான ஒநேசிமுக்குத் தெரியும். ஒநேசிமு தன்னுடைய கிறிஸ்தவ எஜமான் பிலேமோனுக்குத் துரோகம் இழைத்த காரணத்தினால், இப்பொழுது சிறையில் இருக்கிறான். அங்கிருக்கையில் அவன் பவுலைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையுள்ளவனாகிறான் (வச. 10). மனம்மாறியவனாக இருந்த போதிலும் ஒநேசிமு ஒரு அடிமை. பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் ஒரு கடிதத்தோடு அனுப்புகிறான். அதில் ஒநேசிமுவை “இனிமேல் அவன் அடிமையானவனாக அல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவும் இருக்கும்படிக்கு (பிலே. 1:15) ஏற்றுக் கொள்ளும்படி எழுதுகிறான்.

பிலேமோன் இப்பொழுது ஒநேசிமுவை அடிமையாகவா? அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாகவா? எதைத் தேர்வு செய்யப் போகிறான்? நானும் இப்பொழுது எதைத் தேர்ந்து கொள்ளப் போகிறேன்? மேரியை ஒரு முன்னாள் குற்றவாளி, போதையின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டு வருபவளாகவா? அல்லது இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் முழுவதும் மாற்றப்பட்டவளாகவா? மேரி கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரி எங்களுடைய விசுவாசப் பயணத்தில் இருவரும் இணைந்து நடக்கும் பாக்கியம் பெற்றவள்.

நம்முடைய சமுதாய பொருளாதார நிலைகள், பரிவுகள், கலாச்சார வேறுபாடுகள் நம்மை எளிதில் பிரித்துவிடலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த அனைத்துத் தடைகளையும் அகற்றி நம் வாழ்வையும் உறவுகளையும் நிரந்தரமாக மாற்றி நம்மைப் புதிப்பிக்கும்.

பயத்திலிருந்து விசுவாசத்துக்கு!

மருத்துவரின் சொற்கள் அவளது இருதயத்;தை அதிரவைத்தது. அது புற்று நோய். அவளது கணவரையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவளது உலகமே நின்றது போலிருந்தது. வேறு விதமான முடிவை வேண்டி அவர்கள் கருத்தாய் ஜெபித்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும்? கன்னங்களில் நீர் கொட்ட அவள் மென்மையாய் ஜெபித்தாள், “தேவனே, இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது தயவுசெய்து நீர் எங்கள் பெலனாயிரும்.”

நமது முன்கணிப்பு, நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவும் நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு மீறினதாகவும் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? நமது எதிர்காலம் நம்பிக்கையற்றதாய்த் தோன்றும்போது நாம் எங்கே நோக்குகிறோம்?

தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் நிலைமை அவரது கட்டுப்பாட்டில் இல்லை, அவர் மிகவும் திகிலடைந்தார். வருகின்ற நியாயத்தீர்ப்பு பேரழிவைக் கொண்டுவருவதாயிருந்தது (ஆபகூக் 3:16-17) என்ற போதிலும், வரப்போகின்ற குழப்பங்களின் மத்தியில் தன் விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க (ஆபகூக் 2:4) ஆபகூக் தெரிந்துகொண்டார். தேவனில் மகிழத் தீர்மானித்தார் (3:18). தனது சூழ்நிலைகளின் மேல் தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையம் வைக்காமல், தேவனுடைய நற்குணம் மற்றும் வல்லமையைச் சார்ந்துகொள்ள முடிவு செய்தார். தேவன் மேலுள்ள தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (3:19)

வியாதிகள், குடும்பப் பிரச்சனை, நிதி நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நாம் நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவனில் வைக்க வேண்டும். அவர் எந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிறார்.

தலை சிறந்த மேன்மை

நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .

பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.

இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.