வகை  |  odb

அறிவதும் அன்பு கூர்வதும்

“இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன். ஏனெனில் வேதாகமம் அப்படிச் சொல்லுகிறது” என்று அர்த்தங்கொள்ளும் ஓர் ஆங்கிலப்பாடல், நீண்ட நாட்களாக நிலைத்திருக்கும் சிறுவர்களுக்கான ஒரு கிறிஸ்தவப் பாடல். (Jesus loves me this I know)

பதினெட்டாம் நூற்றாண்டில் அன்ணா பி. வார்னர் என்பவரால் எழுதப்பட்ட இப்பாடலின் வார்த்தைகள் தேவனோடு நமக்குள்ள உறவை மென்மையாக உறுதிப்படுத்துகிறது. நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம்.

யாரோ ஒருவர் என் மனைவிக்கு, வீட்டில் தொங்கவிடக்கூடிய ஒரு அட்டையைக் கொடுத்தார். அதில் உள்ள வார்த்தைகள், இந்த எளிய கருத்தைத் திருப்பி, ஒரு புதிய மாற்றத்தைக் கொடுத்துள்ளன. அது, “இயேசு என்னை அறிந்துள்ளார், அதை நான் நேசிக்கிறேன் என்பது. இது தேவனோடு நமக்குள்ள உறவில் ஒரு புது முன்னோக்குப் பார்வையைத் தருகிறது. நாம் தேவனால் அறியப்பட்டிருக்கிறோம்.

பழங்கால இஸ்ரவேலரிடையே ஆடுகளை அன்பு செய்தல், அறிந்து கொள்ளல் என்பவை உண்மையான மேய்ப்பனை கூலி மேய்ப்பனிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. மேய்ப்பன் தன் ஆடுகளோடு அதிக நேரம் செலவிட்டு, அவைகளோடிருந்து கவனிப்பவனாகவும் தன் ஆட்டுக்குட்டிகளைக் குறித்து ஆழ்ந்து அறிந்தவனாகவும் இருப்பான். இயேசுவும் தன் சொந்த ஜனங்களிடம் ஆச்சரியப்படும் வகையில்”, நானே நல்ல மேய்ப்பன்,… நான் என் ஆடுகளை அறிந்தும், என்னுடைய ஆடுகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்… என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்கிறது” (யோவா. 10:14,15,27) என்று கூறுகிறார்.

அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை நேசிக்கிறார்! இயேசு நமக்கு வைத்துள்ள நோக்கத்தையும், அவர் நம்மை கவனிக்கிறார் என்ற வாக்கையும் நம்பி, அவர் மீது சாய்ந்திளைப்பாறுவோம். ஏனெனில், “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” (மத். 6:8). இன்றைய வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளோடு போராடுகிற நீ, அமர்ந்திரு. உன் இருதயத்தின் மேய்ப்பனால் நீ அறியப்பட்டு, அன்பு செய்யப்படுகிறாய்.

கோபமுள்ள தேவனா?

கல்லூரி படிப்பில் நான் கிரேக்க, ரோம புராணங்களைக் கற்கும்போது, அந்தக் கதைகளில் வரும் தெய்வங்களெல்லாம் மோசமான மனநிலையோடு எளிதில் கோபப்படுபவர்களாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அந்த கோபத்தைச் சந்திக்கின்ற மக்களின் வாழ்வும் அழிக்கப்பட்டது. சில வேளைகளில் ஒரு கணப்பொழுதில் இது நடைபெற்றது.

இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி ஒருவரால் நம்ப முடிகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படியானால் உண்மையான தெய்வத்தைக் குறித்த எனது கருத்து இவற்றைவிட முற்றிலும் வேறுபட்டதா? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டேன். நான் எப்பொழுதெல்லாம் அவரைச் சந்தேகிக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நானும் அவரை எளிதில் கோபப்படுகிறவராகப் பார்க்கவில்லையா? வருத்தத்தோடு ஆமோதித்தேன்.

எனவேதான் மோசே தேவனிடம், “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” (யாத். 33:18) எனக் கேட்டதை நான் பாராட்டுகிறேன். தனக்கு எதிராக அடிக்கடி முறுமுறுக்கின்ற, அதிக எண்ணிக்கையிலுள்ள ஒரு மக்கள் கூட்டத்தை வழிநடத்தும்படி தெரிந்து கொண்ட மோசே, இந்த பெரிய வேலையைச் செய்ய தேவன் தன்னோடிருந்து உதவுவாரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினான். எனவே தேவன் மோசேயின் விண்ணப்பத்தை அங்கிகரித்து அவருடைய மகிமையைக் காண்பித்தார். தேவன் மோசேக்கு தன்னுடைய பெயரையும், குணாதிசயங்களையும் தெரிவித்தார். “கர்த்தர், இரக்கமும், கிருபையும் நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத். 34:6).

இந்த வார்த்தைகள், தேவன் உடனடியாகக் செயல்பட்டு கோபத்தில் அடிக்கிறவர் அல்ல என்பதைக் காட்டுகின்றன. நான் எனது கோபத்தில் பொறுமையின்றி அவர்மீது சாடுகின்ற வேளைகளில், இந்தவார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. தேவன் என்னை அவரைப் போல மாற்றுவதற்கு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் தேவனையும், அவருடைய மகிமையையும் அவர் நம்மிடம் காட்டும் பொறுமையிலும், ஒரு நண்பனின் ஊக்கமளிக்கும் வார்த்தையிலும், அழகிய சூரிய மறைவிலும் எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்தாவியானவர் நமக்குள்ளே பேசுகின்ற மெல்லிய குரலிலும் காணலாம்.

சரியாகப் பொருந்துதல்

லீ என்பவர் விடாமுயற்சியும் நம்பிக்கைக்குரியவருமான ஒரு வங்கி ஊழியர். அவர் தன் நம்பிக்கையில் வாழ்வதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தார் என்பதை நடைமுறையில் வெளிப்படுத்தினார். எடுத்துக்காட்டாக தன்னுடைய கருத்துக்களுக்கு பொருத்தமில்லாத உரையாடல் நடந்து கொண்டிருந்தால் அந்த அறையை விட்டு வெளியேறிவிடுவார். ஒரு வேத ஆராய்ச்சிக் கூட்டத்தில் ஒரு நாள் தன்னுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார், நான் எனது பதவி உயர்வு வாய்ப்புகளை இழக்க நேரிடுமோ என பயப்படுகிறேன், ஏனெனில் நான் இன்னமும் சரியாகப் பொருந்தி வரவில்லை என்றார்.

தீர்க்கன் மல்கியா காலத்து விசுவாசிகள் இத்தகைய சவாலைச் சந்தித்தனர். அவர்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தனர், தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது. ஆனாலும் அவர்களுக்குள்ளே தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது. சில இஸ்ரவேலர், “தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினால்… என்ன பிரயோஜனம்? இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம். தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள். அவர்கள் தேவனைப் பரிட்சை பார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே” (மல். 3:14-15). என்று சொன்னார்கள்.

உலகக் காரியங்களோடு நாம் சரியாகப் கலவாவிடில் நாம் அதனை இழந்துவிடுவோம் என்று சொல்லப்படுகின்ற கலாச்சாரத்தில், நாம் எப்படி தேவனுக்காக உறுதியாக நிற்கப் போகின்றோம்? மல்கியா காலத்திலிருந்த உண்மையுள்ளவர்கள் இத்தகைய சவால்களைக் சந்திக்கும் போது, தங்களைப் போன்ற மனதுடைய விசுவாசிகளைச் சந்தித்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினர். இந்த முக்கியமான செய்தியை மல்கியா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். “கர்த்தர் கவனித்துக் கேட்பார்” (வச. 16).

தேவன் தமக்கு பயந்து தம்மை கனம்பண்ணுகிறவர்களை கவனித்து பாதுகாக்கிறார். நம்மை “பொருந்தி வாழ்வதற்கு அவர் அழைக்கவில்லை. ஆனால், நாம் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதன் மூலம் அவரோடு நெருங்கி வாழ்வதற்காகவே அழைத்தார். நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாயிருப்போம்.

உள்ளே என்ன இருக்கிறது

“உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்புகிறாயா?” என என் சிநேகிதி கேட்டாள். அவளுடைய மகளின் சிறிய கரங்களிலிருந்த மிகப் பழங்கால முறையில், பழைய துணியால் தைக்கப்பட்ட ஒரு பொம்மையை, நான் பாராட்டியிருந்தேன். உடனே ஆர்வத்துடன் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண விரும்பி, ஆம் என பதிலளித்தேன். அவள் அந்த பொம்மையை, தலைகீழாகப் பிடித்து, அதன் பின்புறம் தைக்கப்பட்டிருந்த நளினமான இணைப்பானைத் திறந்தாள். அந்த துணியால் ஆன உடம்பிலிருந்து எமிலி ஒரு பொக்கிஷத்தை வெளியேயெடுத்தாள்; அது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அவளுடைய குழந்தைப் பருவத்தில் அவள் நேசித்து வைத்திருந்த பழைய துணியால் ஆன ஒரு பொம்மை. வெளியேயுள்ள பொம்மை வெறும் கூடுதான். உள்ளேயுள்ள இந்த முக்கிய உட்பகுதி தான் அந்த பொம்மைக் கூட்டிற்கு உறுதியையும் வடிவத்தையும் கொடுத்துள்ளது.

கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்த உண்மையை ஒரு பொக்கிஷமாக விளக்குகிறார் அப்போஸ்தலனாகிய பவுல். இந்த பொக்கிஷம் தேவனுடைய ஜனங்களின் பெலவீனமான மனிதத்துவத்தில் சுமக்கப்படுகிறது. இந்த பொக்கிஷம் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நினைக்க முடியாத துன்பங்களிலும் அவருடைய பணியைத் தொடர்வதற்குப் பெலனளிக்கிறது. அப்படிச் செய்யும் போது அவருடைய ஒளியும், அவருடைய வாழ்வும் மனிதனின் பெலவினங்களாகிய உடைப்புகள் வழியே பிராகாசிக்கிறது. பவுல், நாம் சோர்ந்து போகாதிருக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றார்
(2 கொரி. 4:16).

அந்த ‘உள்ளான’ பொம்மையைப்  போன்று நம்பிக்கையுள்ள சுவிசேஷமாகிய பொக்கிஷம் நமது வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும் மன பெலத்தையும் கொடுக்கிறது. தேவனுடைய பெலன் நம்மூலம் வெளிப்படும்போது, இது தேவனுடைய “உள்ளே என்ன இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்கச் செய்யும். அப்பொழுது நாம் நம் உள்ளத்தைத் திறந்து, உள்ளேயிருக்கிறது வாழ்வு தரும் கிறிஸ்துவின் இரட்சிப்பாகிய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்துவோம்.

பணிவிடைக்காரன் உள்ளத்தை வளர்த்துக்கொள்ளல்

அது ஒரு நீண்ட வேலைநாள். நான் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு நல்ல தந்தையாக மற்ற வேலைகளைத் துவக்குவதற்கான நேரம் அது. என் மனைவி, குழந்தைகளின் வரவேற்பு, அப்பா இரவு உணவுக்கு என்ன செய்வது? அப்பா, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தரமுடியுமா? அப்பா, நாம் கால்பந்து விளையாடலாமா? என்பதாக அமைந்தது.

நான் சற்று நேரம் உட்கார எண்ணினேன். நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க சிறிது விரும்பியபோதும் என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிபுரிய நான் விரும்பவில்லை. எங்கள் ஆலயத்திலுள்ள ஒருவரிடமிருந்து என் மனைவி பெற்றிருந்த ஒரு நன்றி அட்டையை அப்பொழுது நான் பார்த்தேன். அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு துவாலை, அழுக்கான செருப்புகள் அடங்கிய ஒரு படம் இருந்தது. அதன் அடிப்பகுதியில் லூக்கா 22:27ல் உள்ள வாசகம், “ நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறனே;” இருந்தது.

தாம் தேடவும் ரட்சிக்கவும் (லூக். 19:10) வந்தவர்களுக்குப் பணிவிடைக்காரனைப் போலிருந்தார் என்ற வார்த்தைகளே என்னுடைய அப்போதையத் தேவையாயிருந்தது. இயேசுவே தன்னுடைய சீடர்களின் அழுக்கடைந்த கால்களைக் கழுவுதலாகிய இழிவான வேலையைச் செய்ய சம்மதிக்கும் போது,
(யோவான். 13:1-17) நான் என் மகனுக்கு ஒரு குவளைத் தண்ணீரை முறுமறுக்காமல் கொடுக்கலாம். அந்நேரமே என் குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிசெய்தவை ஒரு கடமையாகயல்ல, இயேசுவின் பணிவிடைகாரனின் உள்ளத்தை பிரதிபலிப்பவனாகச் செய்தேன். நம்மிடம் உதவிகள் கேட்கப்படும்போது, அவைகளை, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பணிவிடை செய்து, தன்னுடைய ஜீவனையே நமக்காகத் தந்தவரைப் போல மாறுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளாகக் கருதுவோம்.

நினைவு கற்கள்

சில காலை வேளைகளில் நான் ஆன்லைனில் செல்லும் போது, முகநூல் என்னுடைய “நினைவுகள்” பகுதியில் முந்திய ஆண்டு அதே நாளில் நான் பதிவு செய்தவற்றைக் காட்டும். இந்த நினைவுகளில் என்னுடைய சகோதரனின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள், என் மகள் என்னுடைய பாட்டியோடு விளையாடும் காட்சிகள், இவை பொதுவாக எனக்குள் ஒரு புன்னகையைத் தரும். சில வேளைகளில் ஆழ்ந்த உணர்வுகளையும் தருவனவாக அமையும். என்னுடைய மைத்துனரின் கீமோதெரபி சிகிச்சையைக் குறித்த ஒரு குறிப்பையோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயாரின் மூளை அறுவைசிகிச்சையால் தலையில் ஏற்பட்ட இணைப்பு தழும்புகளையோ நான் பார்க்கும் போது, கடினமான சூழ்நிலைகளில் தேவனுடைய உண்மையான பிரசன்னம் இருந்ததை நினைவுப்படுத்தின. இந்த முகநூல் நினைவுகள் என்னை ஜெபத்திற்கும் நன்றியறிதலுக்கும் நேராக உந்தித்தள்ளின.

தேவன் நமக்குச் செய்தவற்றை மறந்து போவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. நமக்கும் நினைப்பூட்டுதல் தேவை, தேவனுடைய ஜனங்களை அவர்களுடைய புதிய இருப்பிடத்திற்கு யோசுவா வழிநடத்தின போது யோர்தான் நதியைக் கடக்க நேர்ந்தது (யோசுவா 3:15-16). தேவன் தண்ணீரைப் பிரிக்க, அவருடைய ஜனங்கள் உலர்ந்த தரை வழியாக நடந்து சென்றனர் (வச. 17). இந்த அற்புதத்தை நினைவுகூரும் வகையில் அவர்கள் பன்னிரெண்டு கற்களை நதியின் மையப்பகுதியிலிருந்து எடுத்து நதியின் மறுகரையில் சேர்த்து வைத்தனர் (4:3,6-7). இந்த கற்கள் ஏதென்று பிறர் கேட்கும்போது தேவனுடைய பிள்ளைகள் தேவன் அவர்களுக்கு அன்று செய்ததை அவர்களுக்குச் சொல்லுவார்கள்.

வெளிப்புறமான நினைப்பூட்டிகள், கடந்த காலங்களில் தேவன் நமக்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதை நினைப்பதற்கும், இப்பொழுதும் எதிர்காலத்திலும் அவர் மீது நம்பிக்கை வைக்கவும் உதவுகின்றன.

கடனை நீக்குபவர்

என்னுடைய மருத்துவ கட்டணத்தைப் பார்த்தபோது, என் கண்ணீரை நான் அடக்க முடியவில்லை. என் கணவர் நீண்ட நாட்கள் வேலையில்லாமல் இருந்து, பின்னர் மிகவும் குறைக்கப்பட்ட சம்பளத்தில் வேலைபார்க்கும் நிலையில் இருக்கிறார். இந்த மருத்துவச் செலவில் பாதியினைக் கூட மாதத் தவணையாக அநேக வருடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். நான் மருத்துவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, என்னுடைய சூழ்நிலையை விளக்கி, பணத்தைச் செலுத்தக் கூடிய ஒரு திட்டத்தைக் குறித்துக் கேட்பதற்கு முன்னர் ஜெபம் பண்ணினேன்.

தொலைபேசியில் சிறிது நேரம் என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அந்த வரவேற்பாளர், என்னுடைய மருத்துவக்கணக்கு அத்தனையையும் மருத்துவர் நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

நான் எனது நன்றியைத் தெரிவித்தேன். தாராளமான இந்த நன்கொடையால் என் உள்ளத்தில் நன்றியுணர்வு மேற்கொண்டது. தொலைபேசியை வைத்தவுடன் நான் தேவனைத் துதித்தேன். நான் அந்த கட்டணச்சீட்டைப் பத்திரப்படுத்த எண்ணினேன். நான் எவ்வளவு கடன்பட்டிருந்தேன் என்பதை நினைவுபடுத்த அல்ல, தேவன் எனக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளவே.

என்னுடைய மருத்துவர் என் கடன் முழுவதையும் மன்னித்துவிட்டதைப் போல, தேவன் என்னால் செலுத்த முடியாத கடனாகிய பாவத்தை மன்னிக்கத் தெரிந்து கொண்டார் என்பதை நினைத்துக் கொண்டேன். தேவன், “கரிசனையுள்ளவர், கிருபையுள்ளவர், மாறாத அன்புடையவர்” (சங். 103:8). அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்கு செய்யாமல் இருக்கிறார் (வச. 10), “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்” (வச. 12) என வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது. நாம் மனம் திரும்பி இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவருடைய தியாகம் நம்முடைய பாவத்திற்கான கடனை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது.

ஒருமுறை மன்னிப்பைப் பெற்ற பின்பு, நாம் நமது முந்திய கடனைக் குறித்து குற்றப்படுத்தப்படமாட்டோம். நம்முடைய தேவனின் மனப்பூர்வமான பரிசுக்கும் அவர் நமக்கு செய்த யாவற்றிற்கும் ஈடாக நம்முடைய அர்ப்பணிப்போடுள்ள ஆராதனையையும், நன்றியுள்ள பாசத்தையும் அவருக்குக் கொடுத்து, அவருக்காக வாழ்ந்து அவரின் அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.

ஒரு பெயர்

கிளியோப்பெட்ரா, கலிலியோ, ஷேக்ஸ்பியர், எல்விஸ், பீலே ஆகிய இவர்கள் பிரசித்திப் பெற்வர்களாகையால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள ஒரேயொரு பெயரே போதுமானது. சரித்திரத்தில் இவர்கள் முக்கிய இடத்திலிருக்கக் காரணம், அவர்கள் யார் எதைச் செய்தார்கள் என்பதே. ஆனால், இவைகளுக்கும் மற்ற எந்த பெயருக்கும் மிகவும் மேலாக நிற்கும் ஒரு பெயர் உண்டு.

தேவகுமாரன் இந்த உலகில் பிறப்பதற்கு முன் தேவதூதன் மரியாளுக்கும் யோசேப்புக்கும் அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத். 1:21), “அவர் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார்” (லூக். 1:32) எனக் கூறினார். இயேசு பிரபலமானவராக இவ்வுலகிற்கு வரவில்லை. ஆனால், ஒரு பணிவிடைக்காரனாகத் தன்னைத் தாழ்த்தி, சிலுவையில் மரித்தார். எனவே யார் யார் அவரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை அவர் மன்னித்து, அவர்களைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுதலையாக்குகின்றார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகின்றார், “ ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கை பண்னும்படிக்கு எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9-11).

நம்முடைய மிகப் பெரிய மகிழ்ச்சியிலும் அவசரமானத் தேவைகளிலும் நாம் பற்றிக் கொள்ள வேண்டிய நாமம் இயேசு என்பதே. அவர் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார். அவருடைய அன்பு ஒருபோதும் மாறாதது.

ஞானிகளின் பரிசு

ஒரு இளம் தம்பதியினரிடம் பணத்தைக் காட்டிலும் அன்பே அதிகமாயிருந்தது. கிறிஸ்துமஸ் நெருங்கியபோது இருவருமே ஒருவர் மீது ஒருவர் எத்தனை கரிசனை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டும்படியாக ஒரு பரிசுப் பொருளைக் கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருந்தனர். கடைசியாக கிறிஸ்துமஸ் மாலையில், டெல்லா தன்னுடைய முழங்கால் அளவு நீண்ட கூந்தலை விற்று, தன் கணவன் ஜிம் தன் தாத்தவும், தந்தையும் பயன்படுத்திக் கொடுத்த கைக்கடிகாரத்திற்கு பிளாட்டினத்தால் ஆன சங்கிலியை வாங்கினாள். ஜிம் தன்னுடைய கைக்கடிகாரத்தை விற்று தன் மனைவியின் கூந்தலுக்கு விலையேறப்பெற்ற சீப்புகளை வாங்கியிருந்தான்.

எழுத்தாளர் ஓ. ஹென்றி இந்த இளம் தம்பதியினரின் கதையை ‘ஞானிகளின் பரிசு’ என அழைத்தான். அவர்களுடைய பரிசு வீணாகி, கிறிஸ்துமஸ் காலைப் பொழுதில் அவர்களை முட்டாள்களாகக் காண்பித்த போதும் பரிசு கொடுத்தவர்களின் அன்பு அவர்களை ஞானிகளாக்கியது.

முதல் கிறிஸ்துமஸ் அன்று பெத்லகேமிற்கு பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருட்களோடு வந்த ஞானிகளும் சிலர் பார்வையில் முட்டாள்களாகவே காட்சியளித்தனர் (மத். 2:11) அவர்கள் யூத குலத்தவர் அல்ல. அவர்கள் வெளியிலிருந்து வந்த புறஜாதியினர். அவர்கள் தாங்கள் புதிதாகப் பிறந்துள்ள யூத ராஜாவைக் காண வந்துள்ளோம் எனக் கூறியது எருசலேமின் சமாதானத்தை எவ்வளவாய் பாதிக்கும் என்பதை அறியாதிருந்தார்கள் (வச. 2).

ஜிம், டெல்லாவின் அனுபவத்தைப் போலவே ஞானிகளின் பரிசுத் திட்டம் அவர்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. ஆனால், அவர்கள் பணத்தால் வாங்க முடியாத ஒன்றைக் கொடுத்தனர். ஞானிகள் பரிசுப் பொருட்களோடு வந்தனர். ஆனால், அவர்களுக்கும் நமக்கும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த அன்பின் தியாகத்தைப் பணிந்து வணங்கினர்.