வகை  |  odb

நமது புயலின் நடுவே

பயங்கர புயல்காற்று, மிரட்டும் மின்னல், மோதியடிக்கும் அலைகள். சாவின் விளிம்பை தொட்டுவிட்ட உணர்வு. தாத்தாவுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான் அங்கேயே நெடுநேரம் தங்கிவிட்டேன். மாலையில் சூரியன் மறைந்ததும் வீசின சூரைக்காற்றினால் எங்கள் படகு பயங்கரமாய் தத்தளித்தது. படகு கவிழாமல் இருக்க அதன் முன்பகுதியில் உட்காரவேண்டும் என்று தாத்தா அறிவுறுத்தினார். திகில் உள்ளத்தை கவ்வியது. ஆனாலும், எப்படியோ, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது பதினான்கு.

தேவனுடைய ஆறுதலையும் பாதுகாப்பையும் வேண்டினேன். புயல் ஓய்ந்தபாடில்லை, ஆனாலும் நாங்கள் எப்படியோ தப்பி கரையேறினோம். அன்றைக்கு அந்த இரவு புயலில் உணர்ந்த தேவபிரசன்னத்தின் நிச்சயத்தை இன்னொருமுறை உணர்ந்தேனா என்று தெரியவில்லை.

புயல்கள் இயேசுவுக்கு புதியவைகள் அல்ல. மாற்கு 4:35-41 வசனங்களில் இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, இன்னும் சற்றுநேரத்தில் பயங்கர புயல் வீசப்போகும் ஒரு ஏரியை கடந்துபோகச் சொன்னார். அன்றைக்கு இரவு வீசின கோரப்புயல் அந்த முரட்டு மீனவர்களை ஒரு கை பார்த்தது. தாங்கள் சாகப்போகிறோம் என்றே நினைத்தார்கள். ஆனாலும் இயேசு கடலை அமரச்செய்து தம்முடைய சீடர்களை ஆழமான விசுவாச அனுபவத்திற்கு நேராக நடத்தினார்.

அதேபோல்தான் நம்முடைய புயல்களின் நடுவே அவரை நம்பும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார். சில சமயங்களில் அவர் அற்புதமாய் காற்றையும், அலைகளையும் அமைதிப்படுத்துகிறார். சில வேளைகளில் அதற்கு இணையான இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்துகிறார்: நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்தி அவரை நம்பத் துணைபுரிகிறார். “இரையாதே! அமைதலாயிரு” என்று அலைகளை பார்த்து கட்டளையிடக்கூடிய வல்லமை தம்மிடமுண்டு என்பதை நாம் விசுவாசித்து பலப்படவேண்டும் என்று விரும்புகிறார்.

ஒருவர் பாடுபட்டால், எல்லோரும் பாடுபடுவார்கள்

உடன்பணியாளர் ஒருவர் தன் சரீரத்தில் பயங்கர வலியினால் கஷ்டப்படுகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் கலங்கினர். மருத்துவமனைக்கு சென்று ஒருநாள் ஓய்வெடுத்து வேலைக்கு திரும்பினதும், அவர் தன் வலிக்கான காரணம், சீறுநீரகக் கல் என்றார். அந்த கல்லை ஞாபகார்த்தமாய் மருத்துவரிடம் பெற்றவர் என்னிடமும் காட்டினார். அதைக் கண்ட நான் அவருக்காக பரிதபித்தேன், அநேக ஆண்டுகளுக்கு முன் பித்தப்பை கல்லினால் நான் பட்ட கஷ்டம் என் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே கொடுமையான வலி அது.

இவ்வளவு சிறிய ஒரு பொருள் சரீரமுழுவதிலும் ஒரு மோசமான வேதனையை கொடுக்கமுடியும் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? ஆனாலும், ஒருவிதத்தில் 1 கொரிந்தியர் 12:26-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதனையே குறிப்பிடுகிறார்: “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்...”. பன்னிரெண்டாம் அதிகாரம் முழுவதும் பவுல் சரீரத்தை உருவகப்படுத்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்குகிறார். “தேவனே சரீரத்தின் அவயவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து அமைத்துள்ளார்” என்று சொல்லுகையில் அவர் கிறிஸ்துவின் சரீரத்தை குறிப்பிடுகிறார் – அனைத்து கிறிஸ்தவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான வரங்களும் பொறுப்புகளும் உண்டு. ஆனாலும், நாமெல்லாரும் ஒரே சரீரத்தைச் சேர்ந்த அவயங்களாக காணப்படுவதால், ஒருவர் பாடுபடும்போது, எல்லோரும் பாடுபடுகிறோம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி உபத்திரவம், துக்கம் மற்றும் போராட்டங்களை சந்திக்கும்போது, நாமும் அந்த வேதனையை அனுபவிப்பதால் நாமும் பாடுபடுகிறோம்.

என் சகபணியாளரின் வலி தன் சரீரம் சுகமடைவதற்கு தேவையான உதவியை பெற அவரைத் துரத்திற்று. கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒருவருடைய வலி நம்முடைய மனதை உருக்கி பாதிக்கப்பட்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்கின்ற மனதுருக்கத்தை நமக்குள் மூட்டிவிடுகிறது. நாம் ஜெபிக்கலாம், உற்சாகமூட்டக்கூடிய வசனத்தை சொல்லலாம் அல்லது குணப்படுத்தும் வழிமுறையில் உதவக்கூடிய எதையாகிலும் செய்யலாம். அப்படித்தான் சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்.

விசுவாசம், அன்பு மற்றும் நம்பிக்கை

பத்தாண்டுகள் என்னுடைய அத்தை அவர்களுடைய அப்பாவை (என் தாத்தாவை) தன் வீட்டில் வைத்து பராமரித்தார். அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே அவருக்கு சமைத்து, சுத்தம் செய்து அவருடைய எல்லா காரியங்களையும் பார்த்துக்கொண்டார். அவருடைய ஆரோக்கியம் குன்றியபோதும், அவருக்கு ஒரு செவிலியராக இருந்து தேவையான பணிவிடைகளைச் செய்தார்.

“உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும்…நினைவுகூர்ந்து தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்” (1 தெச. 1:2,4) என்று தெசலோனிக்கேயர் சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின வார்த்தைகளுக்கு இந்த பெண்ணின் சேவை ஒரு நவீன முன்மாதிரி என்று சொல்லலாம்.

அன்புடனும் விசுவாசத்துடனும் என்னுடைய அத்தை பணியாற்றினார். அனுதினமும் அவர் காண்பித்த கரிசனை, இந்த அரிய பணிக்கு தேவன் தன்னை அழைத்துள்ளார் எனும் நம்பிக்கையில் விளைந்த பிரதிபலன். அவர்களது பிரயாசம், தகப்பன்மேலும் தேவன்மேலும் வைத்திருந்த அன்பினால் பிறந்த கனி.

நம்பிக்கையிலும் அவர்கள் பொறுமையாய் சகித்தார்கள். என் தாத்தா மிகவும் அன்பானவர், அவருடைய நலம் குன்றுவதை பார்க்க இயலாமல், அவரை பராமரித்திட, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து தன் போக்குவரத்தையும் குறைத்துக்கொண்டார். தேவன் அவர்களை அனுதினமும் பெலப்படுத்துவார் என்கின்ற விசுவாசமும், தாத்தாவுக்கு காத்திருக்கும் பரலோக நம்பிக்கையுமே அவர்கள் சகிப்பதற்கு உதவியது.

ஒரு உறவினரை கவனிக்கின்ற, பக்கத்து வீட்டாருக்கு உதவிசெய்கின்ற அல்லது தன்னார்வத்துடன் நேரத்தை கொடுக்கின்ற எந்தவொரு காரியமாக இருந்தாலும் தேவன் உங்களைச் செய்யும்படி சொன்ன காரியத்தில் நீங்கள் திடப்படுங்கள். உங்களுடைய பிரயாசமே விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வல்லமையான சாட்சியாக வெளிப்படும்.

எதுவரைக்கும்?

லூயிஸ் காரோல் படைத்த (Alice in wonderland)) “அற்புததேசத்தில் ஆலிஸ்” எனும் கற்பனைக் கதையில் நாயகி ஆலிஸ் “என்றென்றும் என்றால் எதுவரையில்?” என்றதொரு கேள்வி எழுப்புவாள். அதற்கு அக்கதையில் வரும் வெள்ளை முயல், “சிலவேளைகளில் அது ஒரேயொரு வினாடியாகவும் இருக்கும்” என்று கூறும்.

என்னுடைய சகோதரன் டேவிட் திடீரென்று மரித்தபோது என் காலம் ஸ்தம்பித்ததாகவே உணர்ந்தேன். மரணத்திலிருந்து அவனுடைய நினைவுகூறலின் நாள்மட்டும், இழப்பும் துக்கவுணர்வும் அதிகரிக்கும் விதத்தில், நாட்கள் ஆமையைப் போல் நகர்ந்தன. ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாய் தோன்றியது.

மற்றுமொரு டேவிட் (தாவீது) இதே உணர்வுகளை தன் பாட்டினில் பதியவைக்கிறார். “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? (சங். 13:1-2). இரண்டு வசனங்களிலே நான்கு தடவை அவர் ஆண்டவரை பார்த்து “எது வரைக்கும்?” என்று வினவுகிறார். சில சமயம், வாழ்க்கையில் நாம் படும் பாடுகளுக்கு முடிவே இல்லையா என்றுகூட தோன்றும்.

இந்த மனவேதனையின் நடுவில்தான் நம் பரம தந்தையின் சமூகமும் கரிசனையும் நம்மை தாங்குகிறது. தாவீது ராஜாவைப்போல் நாமும் நம்முடைய வேதனை மற்றும் இழப்புகளுடன், கர்த்தர் நம்மைவிட்டு விலகுவதில்லை, நம்மைக் கைவிடுவதில்லை (எபி. 13:5) எனும் வாக்குத்தத்தின்மேல் நம்பிக்கை வைத்து அவரை அணுகலாம். சங்கீதக்காரனும் இதை அறிந்திருந்ததினால், தன் புலம்பலின் பாடலை நம்பிக்கையின் வெற்றிமுழக்கமாக மாற்றுகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும் (சங். 13:5).

முடிவுக்கே வராது என்று தோன்றும் போராட்ட பாதைதனில் அவருடைய அளவில்லா அன்பு நம்மை சுமந்து செல்லும். அவருடைய இரட்சிப்பில் நாம் களிகூரலாம் (சங். 13:5).

ஜெபத்தினாலேயன்றி…

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த என் சிநேகிதி ஒருமுறை நள்ளிரவில் என்னை தொடர்புகொண்டாள். தேம்பிதேம்பி அழுத அவளுடைய கண்ணீருடன் என் கண்ணீரையும் சேர்த்து அமைதியாக அவளுக்காக வேண்டினேன்.: நான் என்ன செய்யட்டும் ஆண்டவரே?

அவளுடைய குமுறல்கள் என் உள்ளத்தை கசக்கி பிழிந்தன. அவளுடைய வேதனையை போக்கவோ, சூழ்நிலையை மாற்றவோ, அவளை தைரியப்படுத்தவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் யார் அவளுக்கு உதவமுடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். என்னுடைய சிநேகிதியுடன் இணைந்து நானும் கண்ணீர்விட்டு என் ஜெபத்தில் திரும்ப திரும்ப “இயேசு, இயேசு” என்றே முனகிக்கொண்டிருந்தேன்.

அவளுடைய அழுகுரல் மெல்லக் குறைந்து விசும்புலாக மாறி பின்பு அமைதி நிலவியது. “அவள் உறங்கிவிட்டாள்” என்று சொன்ன அவளுடைய கணவன். “நாளை மறுபடியும் அழைக்கிறோம்” என்றார்.

தொலைபேசியை வைத்துவிட்டு, என் தலையணையை கண்ணீர் ஜெபத்தால் நனைத்தேன்.

சுவிசேஷகனாகிய மாற்கு, தனக்கன்பான ஒருவருக்கு உதவிசெய்ய விரும்பினவரைப் பற்றி எழுதுகிறார். கலங்கிய தகப்பன் கஷ்டப்படும் தன் மகனை இயேசுவண்டை அழைத்துவந்தார் (மாற். 9:17). சூழ்நிலைகளின் அகோரத்தை (வச. 20-22) விவரிக்கும்போதே, தன்னுடைய அவநம்பிக்கையை அறிக்கைசெய்து, இயேசு தன் அவிசுவாசத்தை போக்கவேண்டும் என்று கேட்டார் (வச. 24). இயேசு காரியங்களைத் தன் கையில் எடுத்த அந்த வேளையில்தானே தகப்பன், மகன் இருவரும் ஒரு விடுதலை, நம்பிக்கை மற்றும் சமாதானத்தை அனுபவித்தனர் (வச. 25-27).

நமக்கு அன்பானவர்கள் பாடுபடும்போது, அவர்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும், சரியான வார்த்தைகளைக் கூறவேண்டும் என்று விரும்புவது இயல்புதான் ஆனாலும், உண்மையாய் நமக்கு உதவிசெய்யக்கூடிய ஒருவர் உண்டானால், அது இயேசு கிறிஸ்து மாத்திரமே. இயேசுவை நோக்கி அபயமிடும்போது, அவரை விசுவாசிக்கவும் அவருடைய வல்லமையின் பிரசன்னத்தில் நம்பிக்கையாய் இருக்கவும் நமக்கு அவர் உதவுகிறார்.

விட்டுச்செல்லும் மாதிரி

சில ஆண்டுகளுக்கு முன்பாக, எங்களுடைய மகன்களுடன் சால்மன் ஆற்றங்கரையில் உள்ள “திரும்பி வரமுடியாத ஆறு” (“River of No Return”) எனும் பெயர் கொண்டகைவிடப்பட்ட பண்ணை ஒன்றில் ஒரு வாரமளவும் தங்கினோம்.

ஒரு நாள், பண்ணையை சுற்றிப்பார்க்கையில், மரப்பலகையில் பெயர்பதிந்திருந்த பழம்பெரும் கல்லறை ஒன்றைக் கண்டேன். காலப்போக்கில், பலகையில் இருந்த குறிப்புகள் முற்றுமாய் அழிந்திருந்தது. யாரோ ஒருவர் வாழ்ந்தார், மரித்தார் – இப்போது மறக்கப்பட்டார். அந்த கல்லறை காட்சி ஒருவிதத்தில் எனக்கு கவலையளித்தது. வீட்டுக்குத் திரும்பியதும், அந்த இடம் மற்றும் பண்ணையின் வரலாற்றை வாசிக்கலானேன். ஆனாலும், அந்த கல்லறையில் புதைக்கப்பட்ட நபரைப் பற்றிய எந்த தகவலையும் பெறமுடியவில்லை.

நம்மில் சிறப்புற வாழ்ந்தவர்கள் நூறாண்டு காலம் நினைவுகூறப்படுவார்கள் என்று சொல்வதுண்டு. எஞ்சினோர் எளிதில் மறக்கப்படுவர். கடந்த தலைமுறையினரை குறித்த நினைவுகள், குறிப்பாக அந்த மரப்பலகை எழுத்துகளை போல் சீக்கிரம் மறைந்துபோகும். ஆனாலும் நம்முடைய மரபு தேவனுடைய குடும்பத்தின் மூலமாகத் தொடர்ந்துகொண்டே வருகிறது. நம் வாழ்நாட்களிலே நாம் தேவனையும், மற்றவர்களையும் அன்புகூர்ந்த சரித்திரம் தொடர்கிறது. மல்கியா 3:16-17, நமக்கு சொல்வது,
“…கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

தாவீதைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், “தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து.. (அப். 13:36) என்று சொல்லப்பட்டுள்ளது. அவரைப் போலவே, நாமும் தேவன்மேல் அன்புகூர்ந்து நம்முடைய தலைமுறையில் நாம் தேவனுக்கு ஊழியம் செய்துவிட்டு நினைக்கப்படுவதை அவரிடம் விட்டுவிடுவோம். “அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பாடுகள் தரும் பெலன்

பதினெட்டு வயது வாலிபன் ஒருவன் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றதினால், வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த அவனுடைய குடும்பத்தினர் அவனை விரட்டிவிட்டார்கள். இருப்பினும், கிறிஸ்தவ சமுதாயம் அவனை வரவேற்று அவனுடைய படிப்பைத் தொடர்வதற்கு அவனுக்கு உற்சாகமளித்தது, அவனுடைய பொருளாதார தேவைகளையும் சந்தித்தது. பின்நாட்களில், அவனுடைய சாட்சி ஒரு பத்திரிக்கையிலே வந்ததால், அவன் கூடுதலாய் உபத்திரவப்பட்டான்.

ஆனாலும், அந்த வாலிபன் தன் குடும்பத்தினரை கவனியாமலில்லை. உடன்பிறந்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவன் குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாது என்று சட்டம்போட்டாலும், அவன் அப்பாவை பார்த்துப்பேச தவறியதில்லை. அப்பா நோயுற்றபோது, உறவினரின் அவமதிப்பை பொருட்படுத்தாமல், அவரை கவனித்துக் கொண்டான், விரைவில் குணமடையவும் ஜெபித்தான். அப்பா பூரண குணமடைந்ததும், அந்த மகன்மேல் குடும்பத்தார் அக்கறை காட்டத் தொடங்கினர். காலப்போக்கில், அவனுடைய அன்பான சாட்சி அவர்களுடைய உள்ளத்தை உருக்க ஆரம்பித்தது – குடும்பத்தில் சிலர் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ளவும் விரும்பினர்.

கிறிஸ்துவை பின்பற்றவேண்டும் என்று நாம் எடுக்கின்ற தீர்மானம் நமக்கு சங்கடங்களை கொண்டுவரலாம். “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். என பேதுரு எழுதியிருக்கிறார்.,
(1 பேது. 2:19). நம்முடைய விசுவாசத்தின் காரணமாக பேதுரு கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்திடும்போது, “…கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் (வச. 21) என்பதினாலேயே அப்படி செய்கிறோம்.

மற்றவர்கள் இயேசுவை அவமதித்தபோதும், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
(வச. 23). நம்முடைய பாடுகளில் இயேசுவே நமக்கு மாதிரியாக இருக்கிறார். பாடுகளில் பெலனடைய நாம் இயேசுவை அண்டலாம்.

நேர்மையான வெற்றி

கிழக்காசிய விளையாட்டுகளின் மாரத்தான் போட்டியில் சிங்கப்பூர் வீரர் ஆஷ்லி லூயி எல்லோரையும் முந்திக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார். ஆனால், ஏதோ தவறு நடந்துவிட்டதாக உணர்ந்த அவர் தனக்கு முன் இருந்த வீரர்கள் தவறான திருப்பத்தை எடுத்ததால் பின்தங்கியதை உணர்ந்தார். அவர்களுடைய பிழையை தனக்கு சாதகமாக்கிகொண்டு ஆஷ்லி தொடர்ந்திருக்கலாம், ஆனாலும், அவருக்குள் காணப்பட்ட போட்டி நேர்மை மனப்பான்மை அப்படி வெல்வது ஒரு உண்மையான வெற்றியாய் இராது என்று உணர்த்திற்று. மற்றவர்களைவிட வேகமாய் ஓடி ஜெயிக்கவேண்டுமேயன்றி மற்றவர்களின் பிழையின் காரணமாக ஜெயிக்கக்கூடாது என்று நினைத்தார். தனக்குள் எழுந்த இவ்வுணர்வின் நிமித்தமாக தன்னுடைய ஓட்டத்தின் வேகத்தை சற்றே குறைத்து பின்னே வருபவர்கள் இணைந்துகொள்ள இடங்கொடுத்தார்.

பந்தயத்தின் முடிவில் தோல்வியை சந்தித்த ஆஷ்லி பதக்க வாய்ப்பை இழந்தாலும். தன் நாட்டு மக்களின் உள்ளத்தை வென்றார். அவருடைய நேர்மையுணர்வை பாராட்டி அவருக்கு ஒரு சர்வதேச விருதும் வழங்கப்பட்டது. கிறிஸ்தவன் என்பதற்கு இவருடைய ஒரு செயல் ஒரு சான்றாக அமைந்ததோடு, “இவரால் எப்படி இதைச் செய்யமுடிந்தது?” என்ற கேள்வியையும் அநேகருடைய மனதில் எழுப்பியிருக்கும்.

ஆஷ்லியின் இச்செயல் என்னுடைய நம்பிக்கையை, கிரியைகளின் மூலமாக வெளிப்படுத்த எனக்கு ஒரு சவாலாக அமைகின்றது. நல்லெண்ணத்துடன் அன்பையும் மன்னித்தலையும் வெளிப்படுத்தச் செய்யப்படும் சின்னசின்ன காரியங்களும் தேவனை மகிமைப்படுத்தும். இதனைத்தான் பவுல் எளியநடையில் உரைக்கிறார்: “…உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக (தீத்து 2:8).

பிறருக்கு நாம் செய்யும் நன்மையான கிரியைகள், ஆவியானவர் நமக்குள் இருப்பதால் நம்மால் வேறுபட்டு வாழமுடியும் என்பதை, உலகிற்கு வெளிப்படுத்தும். அவபக்தியையும் லெளகீக இச்சைகளையும் வெறுத்து, மக்களை தேவன்பால் திருப்பக்கூடிய ஒரு உத்தமமான வாழ்க்கை வாழ்ந்திட தேவன் நமக்கு கிருபையளிப்பார்”

பகிர்ந்திட்ட ஆறுதல்

“எனக்காகவே தேவன் இன்று உங்களை அனுப்பினார்”

சிக்காகோவில் விமானம் தரையிறங்கிய பின் இந்த வார்த்தைகளை சொல்லி அந்தப் பெண் என்னிடமிருந்து விடைபெற்றாள். விமானத்தில் என்னுடன் பயணித்த அவள் அன்றைக்கு மட்டும் பல விமானங்கள் மாறி கடைசியாக தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாள். “நீங்க தப்பா எடுக்கலேனா, இத்தனை விமானங்கள் மாறி வரவேண்டிய அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாமா?” என்றேன். சற்றே யோசித்த அவள் வருத்தத்துடன், “போதைக்கு அடிமையான என் மகளை சீர்திருத்த மையத்தில் அனுமதித்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

தொடர்ந்து அவளுடன் பேச்சுகொடுத்த நான், என் மகனும் எப்படி ஹெராயினுக்கு அடிமையாக இருந்தான், இயேசு அவனை எப்படி விடுவித்தார் என்பதை பகிர்ந்தேன். கண்ணீர்மல்க அதனை கேட்டவளின் முகத்தில் ஒரு புன்னகை. விமானம் தரையிறங்கிய பின் இருவருமாக இணைந்து அந்த மகளின் சங்கிலிகள் அறுபடவேண்டும் என்று ஜெபித்தோம்.

அன்று மாலையில் நான் 2 கொரிந்தியர் 1:3-4-ல் “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்” என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன்.

தேவனால் வரும் ஆறுதலினால் பெலப்படவேண்டிய மக்கள் நம்மைச் சுற்றிலும் உள்ளனர். நம்மேல் அவர் கூர்ந்த அன்பை, மனதுருக்கத்துடன் நாம் மற்றவருக்கு பகிர்ந்திடவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றும், அவரால் வரும் ஆறுதல் யாருக்குத் தேவையோ அவர்களிடமாய் தேவன் நம்மை அனுப்பட்டும்!