வரங்கள் அநேகம் நோக்கம் ஒன்றே
மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.
கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.
நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.
சார்ந்திருத்தலை வெளிப்படுத்துதல்
லாராவின் தாயார் கேன்சர் வியாதியோடு போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் காலை லாரா தன் சிநேகிதியோடு சேர்ந்து தன் தாயாருக்காக ஜெபித்தாள். அவளுடைய சிநேகிதி மூளை பாதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருக்கின்றாள். அவள், “தேவனே, நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்துவருகின்றீர். தயவு கூர்ந்து லாராவின் தாயாருக்கும் எல்லாவற்றையும் செய்தருளும்” என ஜெபித்தாள்.
லாராவின் சிநேகிதி தான் முற்றிலும் “சார்ந்திருக்கும் நிலையை வெளிப்படுத்தியது”, லாராவின் உள்ளத்தை அசைத்தது. சிறிது நேர சிந்தனைக்குப் பின் லாரா 'என் எல்லாவற்றிற்கும் தேவன் எவ்வளவு அவசியம் என்பதை எத்தனை முறை அறிக்கை செய்கிறேன்?' என்று சொன்னாள். இது “எல்லா நாட்களிலும் நான் செய்ய வேண்டிய ஒன்று” என்றாள்.
இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் பரலோகத் தந்தையைச் சார்ந்தே வாழ்ந்ததைச் செயல்படுத்திக் காட்டினார். இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தேவனாயிருப்பதால் அவருக்குத் தேவையென்பதேயில்லை, எல்லாம் பரிபூரணமாயிருந்திருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இயேசு ஓய்வு நாளில் ஒரு மனிதனை சுகமாக்கிய போது, ஆன்மீகத் தலைவர்கள் அவரிடம் ஓய்வு நாளில் செய்யத் தகாததை செய்ததேன் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரே அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (5:16) என்றார். இயேசுவும் பிதாவைச் சார்ந்திருத்தலை வெளிப்படுத்துகின்றார்.
இயேசுவும் பிதாவைச் சார்ந்திருந்தே வாழ்ந்தார் என்பது நமக்கும், தேவனோடு நாம் எப்படி உறவு கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகின்றது. நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவு, தேவன் நம் வாழ்வு முழுமையும் அவருடைய பெலத்தால் நிறைந்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். நாம் அவரை நேசித்து, நம்முடைய ஜெபத்தின் மூலம் ஒவ்வொரு மணித்துளியிலும் அவருடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டு அவருக்குச் சேவை செய்யும் போது நம் வாழ்வு அவரையே சார்ந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
மறைந்திருக்கும் அழகு
டொபாகோ தீவின் கடற்கரையிலிருந்து சற்று உள்ளே, கரிபியன் கடலுக்குள் சென்று ஆழ்கடலை பார்வையிட செல்லும்போது சுவாசிப்பதற்கு தேவையான உடையை அணிந்துகொள்வது அவசியம் என்று கூறி, என்னுடைய குழந்தைகளை சம்மதிக்கச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் உள்ளே சென்று திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியோடு, “அங்கே ஆயிரக்கணக்கான வகைகளில் மீன்கள் இருக்கின்றன. அது மிகவும் அழகாயிருக்கின்றது. இத்தனை வண்ணமயமான மீன்களை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை” என்றனர்.
அந்தக் கடலின் மேற்பரப்பைப் பார்க்கும் போது, அது எங்கள் வீட்டினருகிலுள்ள நல்ல நீர் ஏரிபோலவேயிருந்ததால், அதன் அடியில் மறைந்திருக்கும் அந்த அழகை எங்கள் குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை.
சாமுவேல் தீர்க்கதரிசி பெத்லகேமிற்கு ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணச் சென்றார். மூத்த குமாரன் எலியாபை சாமுவேல் பார்த்த போது அவனுடைய தோற்றத்தை வைத்து, சரியான நபரைக் கண்டு கொண்டதாக எண்ணினான். ஆனால், தேவன் எலியாபைப் புறக்கணித்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, “நீ இவனுடைய முகத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். …மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கின்றார்” (1 சாமு. 16:7) என்றார்.
எனவே சாமுவேல் இன்னமும் வேறே பிள்ளைகள் இருக்கின்றனரா? எனக் கேட்டார். ஈசாயின் இளைய மகன் அப்பொழுது அங்கேயில்லை. அவர்களுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். எனவே ஆட்களை அனுப்பி அந்த மகன் தாவீதை அழைப்பித்தான். தேவன் சாமுவேலிடம் அவனை அபிஷேகம்பண்ணும்படி சொன்னார்.
நாமும் அடிக்கடி மக்களை வெளித்தோற்றமாகவே பார்க்கின்றோம். அவர்களின் உள்ளத்தினுள், மறைந்துள்ள அழகைக்காண நேரம் எடுப்பதில்லை. தேவன் மதிப்பிடுவதைப் போன்று நாம் மதிப்பிடுவதில்லை. ஆனால், நாமும் புறத்தோற்றத்திற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண நேரம் செலவிட்டால் மிகப்பெரிய பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
தேவனுடைய மிகப் பெரிய படைப்பு
சமீபத்தில் எங்களுடைய பேரக்குழந்தைகளோடு புளோரிடா சென்றிருந்த போது நாங்கள் வலைதள கேமரா மூலம் ஒரு கழுகின் குடும்பத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். நிலத்திலிருந்து மிக அதிகமான உயரத்திலுள்ள ஒரு கூட்டில் அந்தத் தாய், தந்தை, குஞ்சுப் பறவைகளின் செயலை ஒவ்வொரு நாளும் நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு நாளும் அந்தப் பெற்றோர் பறவைகள் தங்கள் குஞ்சுகளை கவனமாக பாதுகாத்துக் கொண்டேயிருந்தன. அருகிலிருந்த நதியிலிருந்து மீன்களைக் கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்தன.
சங்கீதம் 104ல் சங்கீதக்காரன் தேவனுடைய படைப்பின் காட்சிகளையும், தேவனுடைய கரத்தின் கிரியைகளின் மகிமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சிறிய கழுகின் குடும்பமும் தேவனுடைய வியத்தகு படைப்பின் ஒரு சிறிய பகுதியாகும்.
தேவனுடைய இராஜ கெம்பீரத்தை அவருடைய படைப்பாகிய இந்த அண்டத்தில் காண்கின்றோம் (வச. 2-4). அவருடைய படைப்பாகிய தண்ணீரையும், மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் இப்புவியில் நாம் அனுபவிக்கின்றோம் (வச. 5-9). அவருடைய படைப்பின் ஈவாகிய விலங்குகளையும், பறவைகளையும், செடிகளையும் நாம் கண்டு மகிழ்கின்றோம் (வச. 10-18). இந்த உலகில் அவர் படைத்த இரவும், பகலும், இருளும் வெளிச்சமும், வேலையும் ஓய்வும் மாறி மாறி வருவதைப் பார்த்து அதிசயிக்கின்றோம் (வச. 19-23).
எத்தனை மகிமையான உலகத்தை தேவன் தம் கரத்தினால், நம்முடைய மகிழ்ச்சிக்கென உருவாக்கித் தந்து அவர் மகிமைப்பட்டுள்ளார். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி” (வச. 1) நாம் ஒவ்வொருவரும் பூரித்து மகிழும்படி தேவன் நமக்குத் தந்துள்ள அனைத்துக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுவோம்.
நேர்த்தியான உலகம்
“என்னுடைய நேர்த்தியான உலகம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிவருமாறு கேற்றியின் பள்ளியில் ஒரு வேலை கொடுத்திருந்தனர். அவள் தன்னுடைய கட்டுரையில் “என்னுடைய நேர்த்தியான உலகில்… ஐஸ் கிரீம்கள் இலவசம், எவ்விடத்திலும் லாலிப்பாப்கள் கிடக்கின்றன, வித்தியாசமான வடிவங்களில் அமைந்த ஒரு சில மேகங்களோடு வானம் எப்பொழுதும் நீல நிறமாகவேயிருக்கும்” என ஆரம்பித்த அவளுடைய கட்டுரை திடீரென ஒரு தீவிர மாற்றம் பெற்றது. “அந்த உலகில் ஒருவர் வீட்டிற்கும் துயரச் செய்தி வருவதில்லை. அப்படியொரு செய்தியை யாரும் கொண்டு செல்லத் தேவையேயில்லை” எனத் தொடர்ந்தாள்.
ஒருவர் வீட்டிலும் துயரச்செய்தியேயில்லை என்பதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இந்த வார்த்தைகள் நம்மை வல்லமையாக இயேசுவின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நேராகத் திருப்புகின்றது. அவர், “சகலத்தையும் புதிதாக்குகின்றார்”, நம்முடைய துயரை அகற்றி, இவ்வுலகை மாற்றுகின்றார் (வெளி. 21:5).
பரதீசில் துன்பங்கள் இல்லை, மரணமில்லை, புலம்பலில்லை, வேதனையில்லை, கண்ணீர் இல்லை (வச. 4). அது, நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு நேர்த்தியான இடம். தேவன் தம் அன்பினால் தம் விசுவாசிகளை விடுவித்து தனக்கென்று சேர்த்துக் கொண்ட இடம். எத்தனை அற்புதமான மகிழ்ச்சி நமக்குக் காத்திருக்கின்றது!
இந்த முழுமையின் உண்மையை நாம் இங்கேயே அனுபவிக்கலாம். நாம் தேவனோடு அனுதினம் ஐக்கியப்படும்போது அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் (கொலோ. 1:12-13). நாம் பாவத்தை எதிர்த்துப் போராடும் போது, பாவத்தையும், மரணத்தையும் முற்றிலும் ஜெயம் பெற்ற கிறிஸ்து நமக்குத் தருகின்ற வெற்றியை அனுபவிப்போம் (2:13-15).
நான் உன்னைப் பார்க்கின்றேன்
எங்களடைய மகன் சேவியர் இரண்டு வயதாயிருந்த போது ஒரு செருப்புக் கடை ஒன்றின் ஒவ்வொரு இடைபாதையிலும் வேகமாக ஓடி, செருப்பு பெட்டிகளின் அடுக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தான். என்னுடைய கணவன் ஆலன் அவனைப் பார்த்து, “நான் உன்னைப் பார்க்கின்றேன்” எனக் கூறியதும், அவன் சிரித்து மகிழ்ந்தான்.
சில கணங்களுக்குப் பின்னர் என் கணவன் ஆலன் பதற்றத்தோடு ஒவ்வொரு இடைபாதையிலும் சேவியர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருக்கக் கண்டேன். நாங்கள் வேகமாக அக்கடையின் முன்பக்கக் கதவையடைந்தோம். அங்கு எங்கள் குழந்தை சிரித்துக் கொண்டே, கூட்டம் நிறைந்த ஒரு தெருவிற்குச் செல்லும் கதவிற்கு நேராக ஓடிக் கொண்டிருந்தான்.
நொடிப் பொழுதில் ஆலன் அவனை அப்படியே தூக்கிக் கொண்டார். நாங்கள் அவனை அணைத்துக் கொண்டு தேவனுக்கு நன்றி கூறிக் கொண்டு, ஏக்கத்தோடு அச்சிறுவனின் கன்னங்களில் முத்தமிட்டோம்.
ஓராண்டிற்கு முன்பு, சேவியர் என் கருவில் உண்டாயிருந்த போது நான் என்னுடைய முதல் குழந்தையை இழந்துவிட்டேன். தேவன் இந்த மகனைத் தந்து எங்களை ஆசீர்வதித்தபோது, நான் சற்று பயமுள்ள பெற்றோராகி விட்டேன். ஆனால், அந்த செருப்புக் கடை அநுபவம் நாம் நம் குழந்தையை எப்பொழுதும் பார்த்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது என்பதை விளக்கிவிட்டது. ஆகையால் நான் கவலையோடும், பயத்தோடும் போராடிக் கொண்டிருக்கும் போது எனக்குள்ள ஒரே உதவியான என் தேவனை நோக்கிப்பார்க்கக் கற்றுக்கொண்ட போதுதான் எனக்கு சமாதானம் கிடைத்தது.
நம்முடைய பரலோகத் தந்தை தன்னுடைய பிள்ளைகளின் மீது எப்பொழுதும் கண்ணோக்கமாயிருக்கிறார் (சங். 121:1-4) நம்முடைய சோதனைகளையும், மனவேதனைகளையும், இழப்பையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், எப்பொழுதும் நமக்குதவி செய்பவரும், நம்மைக் காப்பவரும், நம் வாழ்வைக் கண்காணிப்பவருமாகிய தேவனைச் சார்ந்து, அவர் மீதுள்ள உறுதியான நம்பிக்கையோடு வாழமுடியும் (வச. 5-8).
நாம் இழந்து போனவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் எண்ணும்படியான நாட்களையும் எதிர்நோக்கலாம். நாம் நேசிக்கின்றவர்களை நாம் பாதுகாக்க முடியாத வலிமையற்றவர்களாக உணரலாம். ஆனால், எல்லாம் அறிந்த தேவன் அவருடைய விலையேறப்பெற்ற அன்புப் பிள்ளைகளின் மீதுள்ள பார்வையை என்றுமே நீக்குவதில்லை என்பதை நாம் நம்புவோம்.
பிறர் கேட்கும்படி வாழ்தல்
நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டினிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, என்னுடைய அறையிலிருந்த மேசையின் மீது ஓர் அட்டையைக் கண்டேன். அதில், உங்களை வரவேற்கிறோம், உங்களுக்காக நாங்கள் செய்யும் ஜெபம்.
“இங்கு நீங்கள் தங்கியிருக்கும் போது நல்ல ஓய்வுகிடைக்கட்டும், உங்களுடைய பயணங்கள் பயனுள்ளவையாயிருக்கட்டும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களைப் பாதுகாத்து, தன்னுடைய முகப்பிரகாசத்தை உங்கள் மீத வீசச் செய்வாராக” என்றிருந்தது.
இந்த விடுதியை நடத்தும் நிறுவனம் இந்த அட்டையை வைத்திருந்தது. எனவே நான் அவர்களைக் குறித்து மேலும் அறிய ஆவல்கொண்டு, அவர்களுடைய வலைதளத்திற்குச் சென்று அவர்களுடைய கலாச்சாரம், வலிமை, மற்றும் அவர்களின் பண்புகளைக் குறித்துக் தெரிந்து கொண்டேன். மக்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் நேர்த்தியை எட்டிவிட முயற்சித்திருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையை தங்களின் வேலைத்தளங்களிலும் வெளிக்காட்டியுள்ளனர்.
இவர்களுடைய இந்த அணுகுமுறை, ஆசியா முழுமையிலும் சிதறடிக்கப்பட்ட இயேசுவின் சீடர்களுக்கு பேதுரு எழுதிய வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர்களைப் பேதுரு ஊக்கப்படுத்துகின்றார். கர்த்தராகிய தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்கள் வாழுகின்ற சமுதாயத்தினரிடையே விளக்கிக் காட்டும்படி கூறுகின்றார். அவர்கள் அச்சுறுத்தலையும், பாடுகளையும் அனுபவிக்க நேர்ந்தாலும் பயப்படாமல், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேது. 3:15) என்று கூறுகின்றார்.
என்னுடைய நண்பர் ஒருவர் இதனையே “உங்கள் வாழ்க்கை முறைக்கான விளக்கத்தைத் தாருங்கள் என்று கேட்குமளவிற்கு வாழ்ந்துகாட்டுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நாம் எங்கு வேலை செய்தாலும், வாழ்ந்தாலும் அங்கு தேவ பெலத்தோடு தேவன் மீதுள்ள நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவோம். நம்முடைய நம்பிக்கையைக் குறித்து நம்மிடம் கேட்பவர்களுக்கு மரியாதையோடும், நிதானத்தோடும் பதிலளிக்க எப்பொழுதும் தயாராக இருப்போமாக.
தேவன் யாரைப் போன்றிருப்பார்?
ஒரு சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக என்னுடைய கணவன் என்னை அருகிலுள்ள கலை அரங்கத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வண்ணந்தீட்டப்பெற்ற படங்களில் ஏதாவது ஒன்றினை அவருடைய பரிசாக வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய நீரோடை காட்டினூடே ஓடுகின்ற காட்சியைக் கொண்ட படத்தினைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நீரோடையின் பரப்பு அந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டபடியால் வானத்தின் காட்சி இப்படத்தில் காட்டப்படவில்லை. ஆனால், அந்த நீரின் பிரதிபலிப்பில் சூரியன் இருந்த வான் பகுதியையும், மரங்களின் மேற்பகுதியையும், மங்கலான சுற்றுச் சூழலையும் காணமுடிந்தது. வானத்தைக் காட்டக்கூடிய ஒரேயிடம் அந்த நீரின் மேற்பரப்புமட்டும் தான்.
ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இயேசுவும் அந்த நீரோடையைப் போன்றே, தேவன் யாரைப் போன்றிருப்பார் என்பதை நமக்கு பிரதிபலிக்கின்றார். எபிரெயரை எழுதியவர் “குமாரன் தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார்” (1:3) என எழுதுகின்றார். தேவனைக் குறித்த உண்மைகளை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “தேவன் அன்பாயிருக்கிறார்” என்பது போன்ற சில நேரடியான கூற்றுக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தாலும், நாம் இவ்வுலகில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை தேவன் சந்திக்க நேரிட்டால் அவர் எவ்வாறு செயல்படுவார் என்று நாம் சிந்தித்தோமேயாயின் நம்முடைய புரிந்துகொள்ளல் இன்னும் சற்று ஆழமாக இருக்க முடியும். தேவன் மனிதனாக இவ்வுலகில் இருந்தால் எவ்வாறு செயல்படுவார் என்பதையே இயேசு நமக்குச் செயல்படுத்திக் காண்பித்தார்.
சோதனை நேரங்களில் இயேசு, தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தினார். ஆவியின் இருளை எதிர்நோக்கும்போது தேவனுடைய அதிகாரத்தை இயேசு காட்டினார். ஜனங்களின் பிரச்சனைகளோடு போராடும் போது தேவனுடைய ஞானத்தை நமக்குக் காட்டினார். அவருடைய மரணத்தின் மூலம் தேவனுடைய அன்பை விளக்கினார்.
தேவனைக் குறித்த அனைத்துக் காரியங்களையும் நம்மால் கிரகிக்கக் முடியாது. நம்முடைய குறுகிய சிந்தனையில் அவருடைய பரந்த எல்லையைக் காணமுடியாது. ஆனால், தேவனுடைய குணாதிசயங்களைக் கிறிஸ்துவைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடியும்.
உலகத்திற்கு ஒளி
இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.
இந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”
அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.
யார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.
உன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.