விளம்பரப்படுத்தியது போல
ஒரு விடுமுறையின் போது என் கணவனும், நானும் ஜார்ஜியாவிலுள்ள சட்டஹீச்சி நதியில், தட்டையான படகில் பயணம் செய்ய பதிவு செய்தோம். அந்த பயணத்திற்கும், சூரிய வெளிச்சத்திற்கும் ஏற்ற உடைகளையணிந்து, ஓர் அகலமான தொப்பியையும் வைத்துக்கொண்டேன். விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக, இந்த பயணத்தில் பாறைகளில் செங்குத்தாக விழுகின்ற நீரிலும் பயணம் செய்யவுள்ளோம் எனத் தெரிந்ததும் நான் மறுப்பு தெரிவிக்க ஆரம்பித்தேன். ஆனால் நல்ல வேளையாக, இத்தகைய பயணத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு தம்பதியினரோடு நாங்கள் பயணம் செய்தோம். அவர்கள் என்னுடைய கணவணுக்கு பயணித்தலின் அடிப்படையைக் கற்றுக் கொடுத்ததோடு, எங்களைப் பத்திரமாக கரை சேர்ப்பதாகவும் வாக்களித்தனர். எனக்குத் தரப்பட்ட உயிர்காப்பு உடைக்காகவும் (Life Jacket) நன்றி சொல்லிக் கொண்டேன். நாங்கள் அந்த நதியின் சகதியான கரையை அடையும் வரை நான் பதறிக்கொண்டு அந்தப் படகிலிருந்த பிளாஸ்டிக் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டேன். நான் கரையில் கால் வைத்ததும் என்னுடைய உடையிலிருந்த நீரைப் பிழிந்து வெளியேற்றினேன். என்னுடை கணவனும் எனக்குதவினார். இந்த பிரயாணம் அவர்கள் விளம்பரத்தில் கொடுத்தது போல இல்லாமலிருந்தாலும் நாங்கள் நன்கு மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டோம்.
அந்த பிரயாணக் குறிப்பில், ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றிய அறிவிப்பு விடுபட்டிருந்ததைப் போலில்லாமல், இயேசு தன் சீடர்களுக்கு வரப்பேகிற கடினமான பயணத்தைக் குறித்து வெளிப்படையாக எச்சரித்திருந்தார். இயேசு அவர்களிடம் துன்பப்படுத்தப்படுவீர்கள். சாவுக்கும் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள் எனவும், இயேசு மரிக்கப்போகின்றார், மீண்டும் உயிர்தெழுவார் எனவும் தெரிவித்திருந்தார். அவர் தம்மைக் குறித்து நம்பிக்கைக்குரிய வார்த்தைகளைக் கொடுத்ததோடு, தான் அவர்களை ஒருவரும் மேற்கொள்ள முடியாத வெற்றிக்கும், அழியாத நம்பிக்கைக்கும் நேராக வழிநடத்துவதாகவும் உறுதியளித்தார் (யோவா. 16:33).
நாம் இயேசுவைப் பின்பற்றும் போது வாழ்வு எளிதாக இருக்குமாயின், அது மிகச் சிறந்ததாயிருக்குமே. ஆனால், அவர் சீடர்களிடம், அவர்களுக்கு உபத்திரவம் உண்டு என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்களித்துள்ளார். துன்பங்கள் ஒருபோதும் தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை வரையறுக்கவோ, குறைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது ஏனெனில், இயேசுவின் உயிர்தெழுதல் நம்மை அழியாத வெற்றிக்கு நேராக வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.
“நேசிக்கத்தகுந்தது!”
“நேசிக்கத் தகுந்தவள்!” என்ற வார்த்தைகளை, காலையில் எழுந்து தயாராகிக்கொண்டிருந்த என் மகளிடமிருந்து வந்தன. எனக்கொன்றும் புரியவில்லை. தன்னுடைய உறவினர் ஒருவரிடமிருந்து பெற்ற தன்னுடைய மேல் சட்டையைத் சுட்டிக் காட்டினாள். அந்தத்ச் சட்டையின் முன் பகுதியில் இந்த வார்த்தைகளிருந்தன. “நேசிக்கத்தகுந்தவள்” என்று நான் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டேன். அவளும் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டாள். “நீ நேசிக்கத்தகுந்தவள்” என நான் மீண்டும் கூறினேன். அவளுடைய சிரிப்பு இன்னும் அதிகரித்தது. அவள் நகர்ந்து சென்றபோது இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே சென்றாள்.
நான் மிகச் சிறந்த தந்தையல்ல ஆனால் அந்த நேரத்தில் நான் சரியான தந்தையாகச் செயல்பட்டேன். தற்செயலாய் நடந்த அந்த அழகிய உரையாடலின் போது, என்னுடைய நிபந்தனையற்ற அன்பைப் பெற்ற என் மகளின் பிரகாசமான முகத்தைக் கவனித்தேன். அது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சித்திரம் போலிருந்தது. அவளுடைய சட்டையிலிருந்த வார்த்தைகளும், அவளுடைய தந்தை அவளைக் குறித்து எண்ணியிருப்பதும் பொருந்தியிருக்கிறது என்பதை அவள் அறிவாள்.
நாம் அளவற்ற அன்பினைக் கொண்டுள்ள ஒரு தந்தையால் நேசிக்கப்படுகிறோம் என்பதை நம்மில் எத்தனை பேர் நம் இருதயத்தில் உணர்ந்திருக்கின்றோம்? சிலவேளைகளில் இந்த உண்மையோடு நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். இஸ்ரவேலரும் அப்படியே உணர்ந்தனர். அவர்களுடைய சோதனைகளின் போது தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்று எண்ணினர். ஆகையால், எரேமியா 31:3ல் தீர்க்கதரிசி, தேவன் அவர்களுக்கு முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்துகின்றார். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று தேவன் விளம்பியுள்ளார். நாமும் இத்தகைய நிபந்தனையற்ற அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நம்முடைய காயங்கள், ஏமாற்றங்கள், தவறுகளினால் நாம் நேசிக்கப்பட முடியாதவர்கள் என்று நினைக்கிறோம். தேவனுடைய கரங்கள் ஒரு நேர்த்தியான தந்தையின் கரங்கள், அவருடைய அன்பிற்குள் இளைப்பாறும்படி நம்மை அழைக்கின்றன.
விமர்சனம் செய்வோரை அமைதிப்படுத்துதல்
வருடாந்திர சமுதாய நிகழ்வுகளை நடத்தும் ஒரு குழுவில் இணைந்து நான் வேலை செய்தேன். அந்த நிகழ்வுகள் வெற்றியாக முடியவேண்டும் என்பதற்காக பதினொரு மாதங்களாக அநேகக் காரியங்களைத் திட்டமிட்டோம். நாங்கள் நாளையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தோம். நுழைவுக் கட்டணத்தை நிர்ணயித்தோம். உணவு பரிமாறுவதிலிருந்து ஒலிபெருக்கி வல்லுனர்வரையும் அனைத்தையும் தேர்ந்தெடுத்தோம். அந்நாள் நெருங்குகையில் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களை வழிநடத்தவும் முயன்றோம். நிகழ்வுக்குப் பின்னர் கருத்துக்களைச் சேகரித்தோம். சிலர் பாராட்டினர். சிலவற்றைக் கேட்பதற்கே கடினமாயிருந்தது. அதில் பங்குபெற்றவர்களில் உற்சாகத்தையும் கண்டோம், குறைகளையும் கேட்டறிந்தோம். எதிர்மறையான கருத்துக்களைக் கேட்கும்போது ஊக்கமிழந்து இந்த வேலையையே விட்டுவிடலாமா என்று கூட எண்ணினோம்.
நெகேமியா ஒரு குழுவை ஏற்படுத்தி எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியபோது அவரையும் விமர்சனம் செய்தனர். அவரையும் அவரோடு பணி செய்தவர்களையும் பரியாசம் செய்தனர். “ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” (நெகே. 4:3) எனப் பரியாசம் செய்தனர். அதற்கு நெகேமியாவின் பதில், என்னைப் பரியாசம் செய்பவர்களைக் கையாளுவதற்கு எனக்குதவியது. பரியாச வார்த்தைகளைக் கேட்டுச் சோர்வடையவோ அல்லது அவர்களுடைய வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவோ முயற்சிக்காமல், நெகேமியா தேவனுடைய உதவியைக் கேட்கின்றான். பரியாச வார்த்தைகளுக்கு நேரடியாக பதிலுரைப்பதை விட்டுவிட்டு, தேவனிடம் தன் ஜனங்கள் அவமதிக்கப்படுவதைக் கேட்டு அவர்களைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார் (வச. 4) அவமதிப்புக்குள்ளான தன் ஜனங்களை தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு, அவனும் அவனோடிருந்தவர்களும் தொடர்ந்து “முழுமனதோடு” அலங்க வேலையில் ஈடுபட்டனர் (வச. 6).
நம்முடைய வேலையை விமர்சிக்கும் வார்த்தைகளால் நாம் குழப்பமடையத் தேவையில்லை என்பதை நெகேமியாவிடமிருந்து கற்றுக் கொள்கின்றோம். நாம் நிந்திக்கப்படும்பொழுது அல்லது கேலி செய்யப்படும்போது, காயப்பட்டதாலோ அல்லது கோபத்தாலோ அவர்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக ஜெபத்தோடு தேவனிடம் சோர்ந்துபோகாதிருக்க பெலன் தருமாறு கேட்போமாகில் முழுமனதோடு நம் வேலையைத் தொடரமுடியும்.
பணிவான அன்பு
பெஞ்சமின் பிராங்க்ளின் வாலிபனாக இருந்தபோது, பன்னிரண்டு நற்குணங்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தயாரித்தார். தன்னுடைய வாழ்க்கையில் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் விரும்பினார். இந்தப் பட்டியலைத் தன் நண்பனிடம் காண்பித்தபோது, அவன் அதனோடு பணிவையும் சேர்த்தான். பிராங்க்ளினுக்கு அது விருப்பமாயிருந்தது. அத்தோடு அவருடைய நண்பன் அந்தப் பட்டியலிலுள்ள ஒவ்வொரு நற்பண்பையும் அடைய சில வழிமுறைகளையும் கொடுத்து உதவினான். பிராங்க்ளினுடைய சிந்தனையில் பணிவிற்கு தனக்கு மாதிரியாக இயேசுவையே பின்பற்ற வேண்டும் எனத் தோன்றியது.
பணிவிற்கு முழுமையான எடுத்துக் காட்டாக இயேசு விளங்கினார். தேவனுடைய வார்த்தைகள் சொல்வது, “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலி. 2:5-7)
இயேசு மிக உன்னதமான ஒரு பணிவைச் செயல்படுத்தினார். பிதாவோடு என்றும் இருப்பவராயிருந்தும் அன்பினால் சிலுவைமட்டும் தன்னைத் தாழ்த்தினார். தன்னுடைய சாவின் மூலம், தன்னை ஏற்றுக் கொள்ளுபவர் எவரையும் அவருடைய சமுகத்தின் மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்வதையே அவர் தேர்ந்து கொண்டார்.
தேவனுடைய பணியை நாம் பின்பற்றுபவர்களாயின், பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் நம் பரலோகத்தந்தைக்குப் பணிவிடை செய்கிறவர்களாவோம். பிறரின் தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவும்படி நம்மை அர்ப்பணிக்கும் பிரமிக்கதக்க அழகினை நாம் பற்றிக் கொள்ளும்படி இயேசுவின் இரக்கம் நமக்குதவுகிறது. “நான் முதலில்” என்றிருக்கின்ற இந்த உலகில் பணிவோடு வாழ்வது என்பது எளிதானதல்ல. ஆனால், நாம் நமது இரட்சகரின் அன்பினைச் சார்ந்து இருப்போமாகில், அவரைப் பின்பற்றத் தேவையான யாவற்றையும் அவர் நமக்குத் தருவார்.
பெயர் சொல்லி அழைத்தார்
மிக அதிகமாக பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் வார்த்தையென்னவெனின், அது அவர்களுடைய பெயரே என்பது விளம்பரதாரர்களின் முடிவு. எனவே இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு நிறுவனம், தனிப்பட்ட நபரின் பேரில் அவர்களுடைய நேரடி வர்த்தக சேவை மூலம் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளது.
நாம் நம்முடைய பெயரை டெலிவிஷனில் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஆனால், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்மை அன்போடு அழைப்பதைப் போலல்லாமல், இங்கு பெயர்கள் அழைக்கப்படுகின்றன.
சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசுவின் உடலை வைத்திருந்த கல்லறையின் அருகில் மகதலேனா மரியாள் பெயரைச் சொல்லி இயேசு அழைத்தபோது (யோவா. 20:16) அவளுடைய கவனமெல்லாம் ஒரு கணம் நின்று போனது. அந்த ஒரே வார்த்தையில், தான் நேசித்துப் பின்பற்றிய போதகரை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் நம்ப முடியாத மகிழ்ச்சியோடு திரும்பிப்பார்க்கின்றாள். ஏற்கனவே தெரிந்திருந்த அனுபவத்தோடு அவளுடைய பெயரை அவர் சொன்னபோது,அவளுக்குச் சந்தேகமின்றி அவள் நன்கு அறிந்திருந்த இயேசு உயிரோடிருக்கிறார். மரித்தோரிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
மரியாள் இயேசுவோடு ஓர் அரிதான, சிறப்பான நேரத்தைப் பகிர்ந்து கொண்டாலும் ஒவ்வொருவரும் தனித்தனியே தேவனால் நேசிக்கப்படுகின்றோம். இயேசு மரியாளிடம் தான் தன் தந்தையிடம் ஏறிப்போவதாகக் கூறுகின்றார் (வச. 17) மேலும் அவர் தன் சீடர்களிடம் நான் அவர்களைத் தனியே விட்டுவிடுவதில்லை (யோவா. 14:15-18) என்கின்றார். தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்குள்ளே வாசம்பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அவர்களுக்கு அனுப்புகின்றார் (அப். 2:1-13).
தேவனைப் பற்றிய உண்மை மாறுவதில்லை. அன்றும் இன்றும் தேவன் தான் நேசிக்கின்றவர்களை அறிந்திருக்கின்றார் (யோவா. 10:14-15) அவர் நம்மை பெயர் சொல்லி அழைப்பவர்.
என் தந்தையின் ஆலோசனை
ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வேலையிலிருந்து நான் நிறுத்தப்பட்ட பின்பு, தேவனை நோக்கி ஒரு புதிய வேலை கிடைக்க உதவுமாறு ஜெபித்தேன். வாரங்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வலைதளங்களில் தேடுவதிலும், விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதிலும் சலிப்படைந்து, “எனக்கொரு வேலைமிக முக்கியமானது என்பது உமக்குத் தெரியாதா?” என தேவனைக் கேட்டேன். என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் தேவனுக்கு நேராக நீட்டப்பட்ட என்கரங்களை மடக்கி கொண்டேன்.
நான் என்னுடைய தந்தையோடு பேசிக்கொள்ளும் போதெல்லாம், அவர் அடிக்கடி தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கையோடிருக்கச் சொல்வார். என்னுடைய வேலையைக் குறித்து அவர், “தேவன் என்ன சொல்கின்றாரோ அதன் மீது நம்பிக்கையோடிருக்கும்படி நான் உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
என்னுடைய தந்தையின் ஆலோசனை எனக்கு நீதிமொழிகள் 3ஆம் அதிகாரத்தை நினைவுபடுத்தியது. அது ஒரு தந்தை தன் அன்பு மகனுக்கு கொடுக்கும் ஞானமுள்ள ஆலோசனைகள். இந்தப் பகுதி என்னுடைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. “உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைக் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5-6) உன்பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்பது தேவன் நாம் வளரும்படி நம்மை அவருடைய சித்தத்திற்கு நேராக வழிநடத்துவார் என்பதும், அவருடைய முழுமையான இலக்கு எதுவெனின் நான் அவரைப் போல மாற வேண்டும் என்பதுவுமே.
அப்படியானால் அவர் தேர்ந்தெடுக்கும் பாதைகள் வெகு இலகுவானவை என்பதல்ல. ஆனால், அவருடைய வழிநடத்துதலும், அவருடைய நேரமும் எனக்கு முற்றிலும் நன்மையாகவே இருக்கும் என நான் அவரையே நம்பியிருக்கத் தேர்ந்துகொண்டேன்.
நீயும், தேவன் உனக்கு பதிலளிக்க வேண்டுமென காத்திருக்கின்றாயா? தேவனையே நம்பி அவர் உன்னை வழி நடத்துவார் என்ற உறுதியோடு அவரோடு நெருங்கி செல்ல தேர்ந்து கொள்.
மனமார்ந்த வரவேற்பு
யார் அனைவரையும் கட்டித் தழுவுவார்?”
என்னுடைய நண்பன் ஸ்டீவ் தனக்குப் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டபோது, சில நாட்களுக்குத் தன்னால் ஆலயத்திற்கு வரமுடியாது என்று எண்ணியபோது இக்கேள்வியைக் கேட்டான். ஸ்டீவ் அனைவரையும் அன்போடு வரவேற்பவர், நட்புணர்வோடு வாழ்த்துபவர், உள்ளார்ந்த அன்போடு கைகுலுக்கி, சிலரை பரிசுத்த கட்டிப்பிடித்தலோடும் வரவேற்று ரோமர் 16:16ல் குறிப்பிட்டுள்ள, “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்” என்ற வார்த்தையைச் செயல்படுத்திக் காட்டுபவராக காணப்பட்டார்.
இப்பொழுது நாங்கள் ஸ்டீவ் குணமடைந்து விட வேண்டுமென ஜெபிக்கின்றோம். தான், அறுவை சிகிச்சை, மேலும் சில சிகிச்சைகளுக்குட்பட வேண்டியுள்ளதால் சிலகாலம் ஆலயத்திற்கு வரமுடியாது எனக் கூறியுள்ளார். அவருடைய மனமார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.
நம்மில் அனைவரும் ஸ்டீவைப் போன்று வெளிப்படையாக ஒருவரையொருவர் வாழ்த்த முன் வருவதில்லை. ஆனால், பிறர்மீதுள்ள அவருடைய கரிசனை நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியை நினைவுபடுத்துகின்றது. பேதுரு சொல்வதைக் கனிப்போமாகில், “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” (1 பேது. 4:9; பிலிப். 2:16) என்கின்றார். இவையாவும் அன்பையே அடிப்படையாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டின் உபசரணையில், வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்கு இடமளித்து வரவேற்று வாழ்த்தினர்.
நாம் பிறரோடு அன்போடு உறவாடும்போதும், அன்போடு அரவணைக்கும் போதும் அல்லது ஒரு புன்முறுவல் செய்யும் போதும், “எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (1 பேது. 4:11) என்பதை நிறைவேற்றுபவர்களாவோம்.
சம்பூரண தந்தை
கூட்டம் நிறைந்த ஒரு கடையின் நடைப்பாதையில் நின்று கொண்டு, தந்தையர் தினத்திற்கு பொருத்தமான வாழ்த்து அட்டை ஒன்றை கண்டுபிடிக்கப் போராடிக் கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாக இருந்த உடைக்கப்பட்ட உறவை சரி செய்து, மீண்டும் நாங்கள் மனம் பொருந்தியிருந்தாலும் நான் என் தந்தையோடு மிக நெருக்கமான உறவை உணர்ந்ததில்லை.
என்னருகில் நின்ற ஒரு பெண்மணி முனகிக் கொண்டே தான் வாசித்துக் கெண்டிருந்த அட்டையை மீண்டும் அது இருந்த இடத்திலேயே தள்ளினாள். “தங்கள் தந்தையோடு சரியான உறவிலில்லாமல், ஆனால், அதைச் சரி செய்ய முயற்சிக்கும் மக்களுக்கென்று பொருத்தமான அட்டையை ஏன் இவர்கள் செய்யவில்லை?”
அவளை நான் சமாதானப்படுத்த முயற்சிக்குமுன் வெளியேறிவிட்டாள். எனவே நான் அவளுக்காக ஜெபித்தேன். தேவன் ஒருவரே சம்பூரணத் தந்தையாக இருப்பதற்காக நன்றி கூறிவிட்டு, என்னுடைய தந்தையோடுள்ள உறவை வலுப்படுத்தித் தருமாறு தேவனிடம் கேட்டேன்.
நான் என் பரலோகத் தந்தையோடு ஆழ்ந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். தேவனுடைய மாறாத பிரசன்னத்தையும், அவருடைய வல்லமையையும், பாதுகாப்பையும் தாவீது பெற்றுக் கொண்டது போல நானும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன் (சங். 27:1-6)
தாவீது தேவனை நோக்கி உதவிக்காகக் கூப்பிட்டபோது, அவன் தேவனிடமிருந்து உத்தரவை எதிர்பார்த்தான் (வச. 7-9) உலகப்பிரகாரமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தள்ளிவிடவும், கைவிட்டு விடவும் அல்லது நிராகரித்தும் விடும்போது, தேவன் நம்மை நிபந்தனையற்று சேர்த்துக் கொள்வதை தாவீது வெளிப்படுத்துகின்றார் (வச. 10) தேவன் தன்னை செவ்வையான பாதையில் நடத்துகின்றார். என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார் (வச. 10) தேவன் தன்னை செவ்வையான பாதையில் நடத்துகின்றார் என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார். (வச. 11-13) நம்மில் அநேகரைப் போன்று தாவீதும் சிலவேளைகளில் போராடினார். ஆனால், பரிசுத்த ஆவியானவர், அவரை அவருடைய நம்பிக்கையிலும் தேவனைச் சார்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கும்படி உதவினார் (வச. 14)
அந்த நடைப்பாதையில் நான் சந்தித்தப் பெண்மணியைப் போன்று, நாமும் நம்முடைய நித்திய வாழ்வுக்கு நேரானப் பாதையில் கடினமான உறவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், மக்கள் நம்மை விழத்தள்ளி, கைவிட்டு, காயப்படுத்தினாலும் நம்முடைய சம்பூரணத் தந்தை இன்னமும் நம்மை முழுமையாக நேசிக்கின்றார், பாதுகாக்கின்றார்.
முகங்கள்
எங்களுடைய பேத்தி சாரா மிகவும் சிறியவளாக இருந்தபோது, நாம் மரித்தபின் என்ன நடக்கும் என்று எனக்கு விளக்கினாள். “உங்களுடைய முகம் மட்டும்தான் மோட்சத்திற்குச் செல்லும். உங்கள் சரீரம் செல்வதில்லை. அங்கு உங்களுக்கு ஒரு புதிய சரீரம் கொடுக்கப்படும். ஆனால், அதே முகம்தான் இருக்கும்: என்றாள்.
நித்திய வாழ்வினைக் குறித்து சாராவின் புரிந்து கொள்ளல் குழந்தைத்தனமானது. ஆனாலும், அவள் உள்ளான ஓர் உண்மையை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றாள். ஒரு வகையில் நம்முடைய முகங்கள்தான், காணப்படாத நம் ஆன்மாவின் ஒரு பிரதிபலிப்பாகும்.
நம்முடைய தொடர்ச்சியான கோபமான பார்வை சில நாட்களில் நம் முகத்தில் படிந்துவிடும் என்று என் தாயார் சொல்வதுண்டு. அவர்கள் ஞானத்தோடுதான் கூறியிருக்கிறார்கள். கவலை தோய்ந்த புருவங்கள், கோபம் நிறைந்த வாய், அலட்சியப்பார்வை ஆகியவை பரிதாபநிலையிலிருக்கின்ற ஆன்மாவை வெளிப்படுத்துகின்றன. மாறாக, வெளிப்புற சுருக்கங்களும், தழும்புகளும், மற்ற தோற்றத்தில் மாற்றங்கள் யாவும் இருப்பினும், கனிவான கண்களும், மென்மையான தோற்றமும், மலர்ந்த வரவேற்கும் புன்னகையுமே உள்ளார்ந்த மாற்றத்தின் வெளிப்பாடுகளாகும்.
நாம் பிறக்கும் போதிருந்த முகத்தை மாற்ற முடியாது. ஆனால், நாம் எத்தகைய மனிதனாக வளர்கிறோம் என்பதை மாற்ற முடியும். நாம் தாழ்மை, பொறுமை, இரக்கம், சகிப்புத்தன்மை, நன்றியுணர்வு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் அன்பு (கலா. 5:22-26) ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.
தேவனுடைய கிருபையினால் அவருடைய சித்தமான நேரத்தில் நானும் நீயும் அவரைப் போல உள்ளான மாற்றத்தைப் பெற்றுக்கொள்வோம். அவருடைய தன்மையை நம்முடைய வயதான முகங்கள் பிரதிபலிக்கும் என்று ஜான்டோன் (1572-1631) என்ற ஆங்கில கவிஞர் “நம்முடைய வயதான நாட்களிலேயே நம்முடைய அழகு வெளிப்படும்” என்று கூறினார்.