என்னுடன் பணிபுரியும் டாம் தன்னுடைய மேசையின் மீது 8’’க்கு12’’ அளவு கொண்ட கண்ணாடியினாலான சிலுவையொன்றறை வைத்திருக்கின்றார். அவனுடைய நண்பன் பில்லும் டாமைப் போன்று புற்று நோயிலிருந்து மீண்டவன். அவன் இந்தச் சிலுவையை, அதன் வழியே எல்லாவற்றையும் பார்க்க உதவியாயிருக்கும் எனக் கூறி, அதை டாமுக்குக் கொடுத்தான். அந்தக் கண்ணாடியினாலான சிலுவை அவனுக்கு தேவனுடைய அன்பையும், தேவன் அவனுக்கு வைத்திருக்கும் நல்ல நோக்கங்களையும் நினைவுபடுத்துவதாகக் கூறினான்.

இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் தங்களுடைய கஷ்டமான நேரங்களில் இது ஒரு சவாலானத் திட்டமாக இருக்கின்றது. தேவனுடைய அன்பின் மீது நமது நோக்கத்தைச் செலுத்துவதைவிட நம்முடைய பிரச்சனைகளின் மீது நம் எண்ணங்களைச் செலுத்துவது யாவருக்கும் எளிதானது.

பவுல் அப்போஸ்தலனின் வாழ்வு சிலுவை வடிவிலான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவர் துன்பப்படும் நேரங்களில் தான், “துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”
(2 கொரி. 4:9) என்கின்றார். மேலும் “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” (வச. 17-18) என்கின்றார்.

காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு என்பது நம்முடைய பிரச்சனைகளை குறைத்துக் கொண்டோம் என்பதல்ல. பவுல் பார்நெட் என்பவர் இப்பகுதியைக் குறித்து “தேவன் நமக்கு வைத்திருக்கும் உறுதியான நோக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ வேண்டும் அல்லது நாம் அமைதலோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய வேதனையை நம்பிக்கை கலந்த வலியோடு வெளிப்படுத்த வேண்டும்” என விளக்குகின்றார்.

இயேசு அவருடைய வாழ்வையே நமக்காகத் தந்தார். அவருடைய அன்பு ஆழமும், தியாகமும் நிறைந்தது. நாம் நம் வாழ்க்கையை சிலுவையின் வழியாய் பார்க்கும் போது அவருடைய அன்பையும், உண்மையையும் காண முடியும். அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் வளரும்.