வகை  |  odb

மன்னித்து மறபோம்

மனம் பொருந்துதல் பற்றி ஒரு வட்ட மேசை விவாதத்தை ஆரம்பித்தபோது, ஒரு பங்காளர், “மக்கள் குற்றங்களை காலத்தில் உறையச் செய்யாதீர்கள்” என ஞானமாய் கூறினார். நாம் மக்கள் செய்யும் தவறுகளை நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் மாற்றமடைய வாய்ப்பு கொடுப்பதில்லை என அவர் கூறினார்.

பேதுருவின் வாழ்க்கையில் எத்தனையோ வேளைகளில் தேவன் அவரைப் “புறக்கணித்திருக்கலாம்.” ஆனால், தேவன் அவ்வாறு செய்யவில்லை. துடிப்பான சீடனான பேதுரு இயேசுவைத் “திருத்துகின்றான்”, விளைவாக இயேசுவிடமிருந்து வன்மையான கடிந்து கொள்ளலைச் சந்திக்கின்றான். (மத். 16:21-23). அவன் யாவருமறிய இயேசுவை மறுதலிக்கின்றான் (யோவா. 18:25-27). பின்னர், மனம்வருந்தி மீண்டெழுகிறான் (21:15-19). ஒரு முறை சபையில் ஜாதிபிரிவினைக்குக் காரணமாகிறான்.

கேபா என்றழைக்கப்படும் பேதுரு தன்னை புறஜாதியாரிடமிருந்து பிரித்து, விலக்கிக் கொண்டபோது இந்தக் காரியம் நிகழ்ந்தது (கலா. 2:11-12). சமீபத்தில் அவன் புறஜாதியாரோடே தன்னை ஐக்கியப்படுத்தியிருந்தான். ஆனால், சில யூதர்கள் வந்து, கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கும் விருத்தசேதனம் அவசியம் என்று போதித்த போது, விருத்தசேதனமில்லாத புறஜாதியாரை பேதுரு தவிர்த்தான். இது மோசேயின் நியாயப்பிரமாணத்தை நோக்கி, அவரது அபாயகரமானத் திரும்புதலைக் குறிக்கிறது. போதுருவின் இந்த நிலையை “மாய்மாலம்” என பவுல் குறிப்பிடுகின்றார் (வச. 13). பவுல் தைரியமாக எதிர்த்ததால், இந்தக் காரியம் தீர்க்கப்பட்டது. தேவன் நமக்களித்துள்ள அழகிய ஒரு மனதின் ஆவியைக் பெற்றவனாகப் பேதுரு தேவப் பணியைத் தொடர்ந்தான்.

ஒருவரும் தங்களுடைய மோசமான நேரங்களால் புறக்கணிக்கப்படுவதில்லை. தேவ கிருபையால் நாம் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டு, தேவைப்படும் இடங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து தேவ அன்பில் இணைந்து வளர்வோம்.

தாராளமாய்க் கொடுப்பவர்கள்

எங்களுடைய ஆலயச் சரித்திரத்தில், தேவன் தந்துள்ளவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து, எங்கள் சபைத் தலைவர், ஒரு புது தேவையை முன்வைத்தார். அது ஓர் உடற்பயிற்சிக் கூடம். எங்களுடைய சமுதாயத்தினருக்கு இன்னும் அதிகமாகச் சேவைசெய்ய, அது உதவியாக இருக்கும் என்றார். அந்தக் கட்டுமானத் தொகைக்காக, தலைவர்களின் அணி தங்கள் வாக்குறுதித் தொகையை முதலாவது எழுதினர். தன்னலம் என் இருதயத்தை நெருட, நான் ஏற்கனவே கொடுக்க நினைத்ததைத் தவிர அதிகமாக கொடுக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு ஜெபித்தேன். ஆனால், நானும் என் கணவனும் இத்திட்டத்திற்காக ஜெபிப்பதாக ஒத்துக் கொண்டோம். ஆனால், தேவன் எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதை நினைத்து, நாங்கள் மாதந்தோறும் ஒரு தொகையை இத்திட்டத்திற்குக் கொடுக்கத் தீர்மானித்தோம். எங்கள் சபையிலுள்ள குடும்பத்தினரின் கொடைகளால், அந்த முழுகட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவின்போது, கர்த்தருடைய ஊழியத்திற்கென்றே திறந்த போதிலும் அதனை பல்வேறு சமுதாய நிகழ்வுகளுக்கும் தேவன் பயன்படுத்தி வருவதைக் குறித்து நன்றியோடிருக்கிறோம். மற்றொரு தாராளமான கொடையாளர், தாவீது அரசனைக் குறித்து நினைவுகூருகின்றேன். தேவன் அவரைத் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படித் தெரிந்து கொள்ளவில்லையெனினும், தாவீது தன்னுடைய வருமானம் அனைத்தையும் அத்திட்டத்திற்கென சேமித்தான் (1 நாளா. 29:1-5) அவனோடு பணிபுரிந்த பிரபுக்களும், ஜனங்களும் மனப்பூர்வமாய் கொடுத்தனர் (வச. 6-9). நம்மைப் படைத்தவரும், தாங்கி வழி நடத்துபவரும், எல்லாவற்றிற்கும் சொந்தக்காரருமான தேவன், முன்பு தங்களுக்குக் கொடுத்ததிலிருந்து, மனப்பூர்வமாய் கொடுத்ததை ராஜா சேகரித்தான் (வச. 10-16).

நமக்குள்ளதெல்லாம் தேவனுக்கே சொந்தமானதென நாம் உணரும் போது, நன்றியோடும், தாராளமாயும், உண்மையாயும் மற்றவர் நலனுக்காகக் கொடுக்க முன்வருவோம். தேவன் மீண்டும் தருவார் என நம்புவோம். இந்த மனப்பூர்வமான கொடையால், நம்முடைய தேவைகளையும் பிறர் தாங்குவார்கள் என்பதையும் நம்புவோம்.

நாம் இயேசுவைக் காண்போம்

நான் எனது பிரசங்க பீடத்திலிருந்து அடக்க ஆராதனைக்கான ஜெபங்களைச் சொல்லிக் கொண்டே கீழே நோக்கிய போது ஒரு பித்தளை தகட்டில் யோவான் 12:21ல் உள்ள வாசகம் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன், “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்பதே அந்த வாசகம். நாம் கண்ணீரோடும், புன்னகையோடும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண், இதற்கு எத்தனைப் பொருத்தமானவள், நாம் இயேசுவை அவளில் கண்டோமே என நான் நினைத்துப்பார்த்தேன். அவள் தன் வாழ்வில், அநேக ஏமாற்றங்களையும், சவால்களையும் சந்தித்த போதும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதேயில்லை. தேவனுடைய ஆவியானவர் அவளில் வாசம் பண்ணியதாலேயே நாம் இவளில் இயேசுவைக் காண முடிந்தது.

இயேசு எருசலேமிற்குள் பயணம் செய்த போது, நடந்தவற்றை, யோவான் நினைவிற்குக் கொண்டுவருகிறான் (யோவா. 12:12-16). சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடனான பிலிப்புவிடம் வந்து, “ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம்” (வச. 21). என்றனர். அவர்கள் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையும், அவர் செய்த அற்புதங்களையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே அவரைக் காண ஆவலாய் இருந்தனர். அவர்கள் யூதரல்லாததால் தேவாலயத்தின் உட்பிரகாரத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய வேண்டுதல் இயேசுவை அடைந்த போது, அவர் நான் மகிமைப்படும் நேரம் வந்துவிட்டது என தெரிவிக்கின்றார் (வச. 23). இதன் மூலம் அவர் அநேகருடைய பாவங்களுக்காக மரிக்கப் போகிறார் எனபதைக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பணியை நிறைவேற்றுவது யூதர்களுக்காக மட்டுமல்ல,
புறஜாதியினருக்காகவும் தான். (வச. 20). அப்பொழுது அவர்கள் இயேசுவைக் காண்பார்கள்.

இயேசு மரித்தபின்பு, அவரைப் பின்பற்றுபவர்களில் வாசம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் (14:16-17). அவர் நம்மில் வாசம் பண்ணி, செயல்படுவதாலேயே அவரில் அன்புகூரவும், அவருக்குப் பணி செய்யவும் முடிகிறது. நம்மைச் சுற்றியிருப்பவரும் நம்மில் இயேசுவைக் காண்கின்றனர். என்ன ஆச்சரியம்!

நிலைத்திருக்கும் மகிழ்ச்சி

நம்முடைய சொந்த வழியில் செயல்களைச் செய்வதாலேயே மகிழ்ச்சி கிடைக்கும் என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அது உண்மையல்ல. அப்படிச் செய்வது வெறுமையையும், பதட்டத்தையும், தலைவலியையுமே தரும்.

மக்கள், தாங்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்துக் கொள்வதே மகிழ்ச்சி எனக் கருதுவதாகக் கவிஞர் W.H. ஆடன் கூறுகின்றார். “பேய்கள் நிறைந்த காட்டில் தொலைந்து போனவர்கள், இரவைக் கண்டு பயந்த குழந்தைகள், இது வரை மகிழ்ச்சியையும், நல்லதையும் காணாதவர்கள்” என இவர்களைப் பற்றி எழுதுகின்றார்.

நம்முடைய பயத்திற்கும், மகிழ்ச்சியின்மைக்கும் தீர்வு என்ன என்பதை சங்கீதக்காரன் தாவீது பாடலாகத் தருகின்றார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவி கொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்” (சங். 34:4). தேவன் விரும்பும் வகையில் காரியங்களைச் செய்வதே மகிழ்ச்சியாகும். இந்த உண்மையை நாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க முடியும். “அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;” என தாவீது எழுதுகின்றார் (வச. 5). இதனை நீ முயற்சி செய்து பார், நீயே தெரிந்து கொள்வாய். இதனையே “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (வச. 8) என தாவீது கூறுகின்றார்.

“காண்பவை நம்பக் கூடியவை” என நாம் சொல்கின்றோம். இப்படித்தான் இவ்வுலகக் காரியங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம். அதற்கான நிரூபணத்தைக் காட்டு, நான் நம்புகிறேன் என்கின்றோம். ஆனால், தேவன் அதனை மாற்றிச் சொல்கின்றார். நம்புகிறவற்றையே நாம் காண்கின்றோம். “ருசிபார் அப்பொழுது உனக்குத் தெரியும்” என்கின்றார் தேவன்.

தேவனுடைய வார்த்தையை நம்பு, தேவன் உனக்கு என்ன கட்டளையிடுகிறாரோ, அதைச் செய், அப்பொழுது காண்பாய். சரியானவற்றைச் செய்ய அவருடைய கிருபையைத் தருகின்றார். அதற்கும் மேலாக அவர் உனக்காகத் தம்மையே தந்தார். அது ஒன்றுதான் நன்மைக்கெல்லாம் ஊற்று. அதிலிருந்துதான் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.

தேவன் நம்மைப் பராமரிக்கின்றார்

என்னுடைய சிறிய பேரன்கள் தாங்களாகவே உடையணிந்து கொள்ள விரும்புவர். சில வேளைகளில் அவர்கள் சட்டையை பின்புறமாக போட்டுக்கொள்வர், இளையவன் அடிக்கடி தன்னுடைய ஷ_வை மாற்றி போட்டிருப்பான். நான் எப்பொழுதுமே அதனைச் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால். நான் அவர்களின் கபடமற்ற செயலை நேசிப்பேன்.

நான், அவர்களுடைய கண்களின் வழியே இவ்வுலகைக் காண விரும்புவேன். அவர்களுக்கு எல்லாமே வினோதமாகத் தெரியும். கீழே விழுந்த மரத்தின் மீது நடப்பதும், ஒரு கட்டையின் மீதமர்ந்து சூரியக் கதிரைப் பெறும் ஒரு ஆமையைக் கண்டுபிடிப்பதும், தீ அணைப்பு வாகனம் உறுமிக் கொண்டு செல்வதை ஆர்வத்தோடு கவனிப்பதும் அவர்களுக்கு வினோதமானவை. ஆனால், என்னுடைய சிறிய பேரன்கள் முற்றிலும் கபடற்றவர்களல்ல. அவர்கள் இரவில் தங்கள் படுக்கையிலிருந்து இறங்குவதற்கும், அடுத்தவனின் விளையாட்டுச் சாமானைப் பறித்துக் கொள்வதற்கும் ஒரு டஜன் காரணங்களைக் கூறுவர், ஆனாலும் நான் அவர்களை அதிகம் நேசிக்கின்றேன்.

தேவனுடைய முதல் மக்களான ஆதாமையும், ஏவாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களும் தேவனுக்கு என்னுடைய பேரப்பிள்ளைகளைப் போன்றேதான் இருந்திருப்பர். அவர்கள் தேவனோடு உலாவந்தபோது அந்தத் தோட்டத்தில் கண்ட ஒவ்வொன்றும் அவர்களுக்கு அதிசயமாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால், ஒரு நாள் அவர்கள் மனமறிய, தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்படியாதவராயினர். அவர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியை உண்டனர் (ஆதி. 2:15-17, 3:6). அந்த கீழ்படியாமை அவர்களைப் பொய்க்கும், மற்றவரைக் குற்றப்படுத்தவும் வழிவகுத்தது (3:8-13).

அப்படியிருந்தும் தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது கரிசனை கொண்டார். அவர்களை உடுத்துவிப்பதற்காக மிருகங்களை பலியாக்கினார் (வச. 21). பின்னர், தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்து அதன் மூலம் எல்லா பாவிகட்கும் ஒரு மீட்பின் வழியைக் கொடுத்தார் (யோவா. 3:16). அவர் நம்மை அவ்வளவு நேசிக்கின்றார்!

நம்முடைய வீட்டிற்கு வழிநடத்தும் ஜெபம்

“தேவனே, என்னுடைய ஆன்மாவை உம்மிடம் வைத்துக் கொள்ளும், நான் இப்பொழுது படுத்து உறங்குவேன்” என்பது நான் சிறுவனாக இருந்தபோது கற்றுக் கொண்ட முதல் ஜெபம். என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்த ஜெபம். நான் இதனை என்னுடைய மகனும், மகளும் சிறியவர்களாயிருக்கும் போதே கற்றுக் கொடுத்தேன். நான் குழந்தையாயிருந்த போது நான் தூங்குவதற்கு முன்பு என்னை தேவனுடைய கரத்தில் கொடுப்பது மிகவும் ஆறுதலாக இருக்கும்.

இதேப் போன்று மற்றொரு அருமையான ஜெபம் வேதாகமத்திலுள்ள “ஜெப புத்தகம்” என்றழைக்கப்படும் சங்கீதங்களின் புத்தகத்தில் காணப்படுகிறது. “உமது கையில் என் ஆவியை ஒப்பிவிக்கிறேன்” (சங். 31:5) என்ற வாக்கியம் ஒரு படுக்கை நேர ஜெபம். இது இயேசுவின் காலத்தில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட ஜெபம் என சில வேத வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த ஜெபத்தையே இயேசுவும் சிலுவையில் கடைசியாகச் சொன்னார் என்பதை நாமறிவோம். ஆனால், இயேசு அதனோடு “பிதாவே” என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறினார் (லூக். 23:46) இந்த வார்த்தைகளை, இயேசு மரிக்குமுன் ஜெபித்தார். இயேசு, தனக்கும் பிதாவுக்குமுள்ள நெருங்கிய உறவை இந்த வார்த்தைகளால் நமக்குக் காண்பித்து, அவரை விசுவாசிக்கின்ற நமக்கு பிதாவின் வீட்டையடைய வழியையும் காண்பித்தார் (யோவா. 14:3).

இயேசு சிலுவையில் மரித்ததின் மூலம், நாமும் நம்முடைய பரலோகத் தந்தையாம் பிதாவோடுள்ள அற்புதமான உறவில் வாழும்படி செய்தார். இயேசு நமக்காகச் செய்த தியாக அன்பினாலேயே நாம் தேவனுடைய பராமரிப்பில் அவருடைய பிள்ளைகளாக அமர்ந்திருக்கின்றோம், என்பது எத்தனை ஆறுதலாக இருக்கின்றது. நாம் நம் கண்களை பயமின்றி மூடித் தூங்கலாம், ஏனெனில்ஸ்ர, நம் தந்தை நம்மை விழிப்போடு கவனிக்கின்றார். அவரோடுகூட நாம் வாழும்படி ஒரு நாள் நம்மை எழுப்புவேன் என வாக்களித்துள்ளார்
(1 தெச. 4:14).

செயலிலிருக்கிறதா அல்லது முடிவடைந்துவிட்டதா?

ஒரு வேலையை முடித்துவிட்டால் அது திருப்தியைத் தரும். ஒவ்வொரு மாதமும் என்னுடைய வேலை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாறும். அதாவது “செயலிலிருக்கிறது” லிருந்து “முடிக்கப்பட்டது” என மாறும். “முடிக்கப்பட்டது” என்ற பொத்தானை அமுக்குவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால், சென்ற மாதம் நான் அந்த பொத்தானை அமுக்கிய போது சிந்தனைக்குள்ளானேன். நான் எனது விசுவாச வாழ்விலும் கடினமான இடங்களை இத்தனை இலகுவாக மேற்கொள்ள முடியுமா? கிறிஸ்தவ வாழ்வு எப்பொழுதும் செயலிலேயே இருக்கின்றது, அது ஒருநாளும் “முடிக்கப்பட்டது” என்ற நிலையை அடையாது.

அப்பொழுது நான் எபிரெயர் 10:14ஐ நினைத்துப் பார்த்தேன். கிறிஸ்துவின் தியாகம் எப்படி நம்மை முற்றிலுமாக விடுவிக்கின்றது என்பதை விளக்குகின்றது. ஆனால், ஒரு முக்கியமான செய்தியென்னவெனில் அந்த “முடிக்கப்பட்டது” என்ற பொத்தான் நமக்காக அமுக்கப்பட்டுவிட்டது. நம்மால் செய்ய முடியாத ஒன்றை இயேசுவின் மரணம் நமக்காக நிறைவேற்றிவிட்டது. நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும் போது, கிறிஸ்து நம்மை தேவனுடைய பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களாக மாற்றிவிடுகின்றார். இயேசு “முடிந்தது” என்று சொல்கின்றார் (யோவா. 19:30) அவருடைய தியாகம் முழுமையாக நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாம் நம்முடைய எஞ்சிய நாட்களை அவருடைய ஆவியின் முழுமையாக்கலால் “பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக” வாழலாம் என எபிரெயரை ஆக்கியோன் குறிப்பிடுகின்றார்.

இயேசு கிறிஸ்து ஒன்றை முடித்தார் என்ற உண்மை நம் வாழ்வில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நம்மால் புரிந்து கொள்ள சற்றுக் கடினமாயிருக்கிறது. நாம், நம் ஆவியில் போராடிக் கொண்டிருக்கும் போது இயேசு எனக்காக, உனக்காக தன்னைத் தியாகம் செய்து முடித்துவிட்டார் என்ற செய்தி நம்மை ஊக்குவிப்பதாகவுள்ளது. அவருடைய சாயலை நம் வாழ்வின் மூலம் நாம் காண்பிக்கின்றோம். இது ஒரு செயலிலிருக்கும் வேலை. நாம் அவரைப் போல மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனை நிறைவேற்றி முடிப்பது அவருடைய கரத்திலுள்ளது. நாம் முற்றிலும் அவரைப் போல மாற்றப்படும் போது, இந்த வேலையை அவர் முடிக்கின்றார்
(2 கொரி. 3:18).

அற்புதமான படைப்பாளர்

பணத்திற்காக அல்ல, என்னுடைய ஆர்வத்தினால், நான் ஒரு போட்டோகிராபர் ஆனேன். நான் தேவனுடைய படைப்பின் காட்சிகளை என்னுடைய கேமராவில் படம் எடுத்து மகிழ்பவன். நான் தேவனுடைய விரல் பதிவுகளை ஒவ்வொரு மென்மையான பூவிதழிலும், வண்ணமயமான சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவிலும், கலர் பூசப்பட்ட மேகங்களிலும், வானமென்ற விரிப்பில் புள்ளியிட்டுள்ள நட்சத்திரங்களிலும் காண்கின்றேன்.

என்னுடைய கேமராவிலுள்ள வலிமையான ஜூம் பண்பினால், தேவனுடைய படைப்பாகிய அனைத்து உயிரினங்களையும் படமெடுக்க முடிகிறது. மலர்கள் நிறைந்த செரி மரங்களில் அணில்களின் தாவலையும், வண்ணத்துப் பூச்சிகள் மலர் விட்டு மலர் நகர்வதையும், பாறைகள் நிறைந்த கரும் கடற்கரையில் ஆமைகளின் சூரிய குளியலையும் நான் படமாக்கினேன். ஓவ்வொரு படமும், அதனைப் படைத்த அற்புதரைப் போற்றத் தூண்டியது.

அவருடைய படைப்பின் தனிச்சிறப்பினை வியந்து, அவரைத் துதிக்கும் மக்களில் நான் முதலானவனல்ல. 104 ஆம் சங்கீதத்தில், தாவீது தேவனுடைய கலைத்திறனை வியந்து பாடியுள்ளார் (வச. 24). “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது. அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அவருடைய மிகச்சிறந்த படைப்புகளுக்கு ஏற்ற வேளையில் உணவளித்து, அவற்றை முழுமையாக பராமரிக்கின்றார் (வச. 27-31). தேவன் படைத்த அத்தனை ஜீவன்களையும் தன்னைச் சுற்றியிருக்கக் காணும்போது, சங்கீதக்காரனின் உள்ளம் நன்றியால் நிரம்பி வழிந்து அவரைப் போற்றுகின்றது. “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன். நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (வச. 32) என்கின்றார்.

தேவனுடைய மிகப்பெரிய, எண்ணிலடங்காத படைப்புகளை நாம் காணும் போது, அவருடைய படைப்பின் நோக்கத்தையும், அவர் அவற்றை பராமரிக்கும் விதத்தையும் தெரிந்துகொள்ளலாம். சங்கீதக்காரனைப் போன்று நாமும் நம்மை உருவாக்கியவரைப் பாடுவோம். அவருடைய வல்லமை, மாட்சிமை, அன்பினை நினைத்து நன்றியோடு பாடி, அவர் இன்றும் போற்றப்படுபவர், இனிமேலும் போற்றப்படுபவர் எனப்பாடுவோம். அல்லேலூயா.

ஆகாயத் தோட்டம்

நாங்கள் லண்டனிலிருந்த போது, நானும் என் மனைவி மார்லென்னும் ஆகாயத் தோட்டத்தைப் பார்க்க ஒரு நண்பன் ஏற்பாடு செய்திருந்தார். லண்டனின் வர்த்தக மாவட்டத்தில் முப்பத்தைந்து அடுக்கு கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியால் சூழப்பட்ட ஒரு தளம் முழுவதும் மரங்கள், செடிகள் மற்றும் பூக்களால் நிறைந்துள்ளது. ஆனால், அந்த உயர்ந்த இடம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. நாங்கள் அந்த உயரத்திலிருந்து 500 அடி கீழே பார்க்கும் போது பரிசுத்த பவுலின் கதீட்ரல், லண்டன் கோபுரம், மற்றும் அநேகக் காட்சிகளைப் பார்த்து வியந்தோம். அந்த தலைநகரின் முழு அழகும் எங்களை பிரமிக்கச் செய்து, சரியான கண்ணோட்டத்தைக் குறித்து கற்றுக்கொள்ள எங்களுக்குதவியது.

நாம் அநுபவிக்கும் யாவற்றையும் தேவன் சரியான கோணத்தில் காண்கின்றார். சங்கீதக்காரன், “கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்கைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின் மேல் கண்ணோக்கமானார்” (சங். 102:19-20) எனக் கூறுகின்றார்.

சங்கீதம் 102ல் குறிப்பிட்டுள்ள வருத்தப்பட்ட ஜனங்களைப் போன்று, நாமும் தற்பொழுதுள்ள போராட்டங்களில் இழுத்து அடைக்கப்பட்டு, உதவியற்ற நிலையில் முனகிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், தேவன் நம் வாழ்வை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை காண்கின்றார். நம்முடைய கண்களை மறைக்கின்ற காரியங்களால் தேவன் ஒருபோதும் மறைக்கப்படுவதில்லை. சங்கீதக்காரன் எதிர்பார்ப்பது போல அவருடைய நேர்த்தியான கண்ணோட்டம் விடுதலைக்கு நேராக சென்று, கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களையும் விடுதலையாக்குகின்றது (வச. 19, 27-28).

கடினமான நேரங்களில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அடுத்துவருவது என்னவென்று நமக்குத் தெரியாது, ஆனால், தேவன் அறிவார். நமக்கு முன்பாகவுள்ள ஒவ்வொரு மணித்துளியிலும் நாம் தேவனை நம்பி வாழ்வோம்.