எமிலி ப்ராண்ட் எழுதிய உதரிங் ஹைட்ஸ் (Wuthering Heights) என்ற கதையில் அடுத்தவர்களை குறை சொல்லுவதற்கு அடிக்கடி வேதாகமத்தை மேற்கோள் காட்டும், முரணாகப் பேசும் ஒரு கதாபாத்திரம் உண்டு. “வேதாமத்தைத் துருவி ஆராய்ந்து, அதன் வாக்குறுதிகளைத் தனக்கென்று எடுத்துக்கொண்டு, சாபங்களை அடுத்தவர்கள் மீது எடுத்தெறியும், சலிப்பைத்தரும், சுய நீதி கொண்ட பரிசேயன்” என்று அந்த கதாபாத்திரம் விவரிக்கப்படுகிறது.

முந்திய வாக்கியம் நமக்கு சிரிப்பை வரவழைக்கும்; நமக்குத் தெரிந்த சில மனிதர்களை ஒருவேளை நம் நினைவுக்குக் கொண்டுவரும். ஆனால் ஒருவிதத்தில் நாம் அனைவரும் இதேபோல்தானே இருக்கிறோம் –  அடுத்தவர்கள் தோல்வியை கண்டனம் செய்து நமது குறைகளுக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம் அல்லவா?

வேதாகமத்தில் குறிப்பிடப்படும் சிலர் இதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார்கள். மற்றவர்களை காப்பாற்ற முடியும் என்றால் தங்களுக்குத் தேவன் கொடுத்த வாக்குறுதிகளை விட்டுக்கொடுத்து, சாபத்தைக் கூட ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. இஸ்ரவேலரின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதற்கு பதிலாக தன் பெயரை கர்த்தரின் புஸ்தகத்திலிருந்து நீக்குமாறு மோசே கூறுவதைப் பார்க்கிறோம் (யாத்திராகமம் 32:32). தன் இனத்தார் தேவளைக் கண்டுகொள்ள, கிறிஸ்துவை விட்டு தான் சபிக்கப்படுவதை விரும்புவதாக பவுல் கூறினார் (ரோமர் 9:3).

இயற்கையாகவே சுய நீதி கொண்டவர்களாகிய நமக்கு, தங்களை விட மற்றவர்களை அதிகமாக நேசித்தவர்களை வேதாகமம் எடுத்துக்காட்டுகிறது.  

ஏனென்றால் இத்தகைய அன்பு இறுதியில் இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று இயேசு கற்பித்தார். நாம் இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பாகவே, நமக்கு வாழ்வளிப்பதற்காக, சாவைத் தெரிந்துகொண்டு, இயேசு “முடிவு பரியந்தம்” நம் மேல் அன்புவைத்தார் (யோவான் 13:1).

இதேபோல் நாமும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், தேவனின் குடும்பத்திற்கு அழைக்கப்படுகிறோம் (யோவான் 15:9-12). கற்பனை செய்ய முடியாத ஆண்டவரின் அன்பை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த உலகம் அவரைக் காணும்.