வகை  |  odb

மறைந்திருக்கும் தேவனுடைய கரம்

என்னுடைய நண்பன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிஷனரி குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு, கானாவில் வளர்க்கப்பட்டான். அவனுடைய குடும்பம் மீண்டும் அமெரிக்கா சென்ற போது அங்கு அவன் தன்னுடைய கல்லூரி படிப்பை ஆரம்பித்தான். ஆனால், அதனை அவனால் தொடரமுடியவில்லை. பின்னர் அவன் இராணவத்தில் சேருவதற்கு ஒப்புதல் கொடுத்தான், அது அவனுடைய கல்லூரி படிப்பைத் தொடர பண உதவி செய்ததோடு உலகம் முழுவதும் செல்லும் வாய்ப்பையும் கொடுத்தது. அவன் ஒரு சிறப்பான செயலைச் செய்வதற்கு அவனைப் பயிற்றுவிக்கும்படி இவையெல்லாவற்றின் மூலமாகவும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவன் உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு கிறிஸ்தவ நூலின் எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவனுடைய மனைவியின் கதையும் சற்று ஆர்வமானது. அவள் தன்னுடைய கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தன் வலிப்பு வியாதிக்காக வீரியம் மிகுந்த மருந்துகளை சாப்பிட்டதின் விளைவாக வேதியியல் தேர்வில் தோல்வியுற்றாள். பின்னர் தன்னுடைய உடல்நிலைக்கேற்றவாறு அறிவியல் துறையை விட்டு, காது கேளாதவர்களுக்கான அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக் கொள்ளும்படி சேர்ந்தாள். இந்துறையின் சுமை சற்று குறைவாகயிருக்கும் என கருதினாள். அந்த அநுபவங்களைப் பற்றி சிந்தித்த அவள், “ஒரு பெரிய நோக்கத்திற்காக தேவன் என் வாழ்வை திசை திருப்பினார் என்றாள். இப்பொழுது, அவள் வாழ்வு மாற்றம் தரும் வார்த்தைகளைக் காது கேளாதோருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கி;றாள்.

நீயும் சில வேளைகளில் தேவன் ஏன் என்னை இத்தகைய பாதை வழியே நடத்திக் செல்கின்றார் என யோசித்ததுண்டா? தேவனுடைய வல்லமையுள்ள கரம் நம் வாழ்வில் இருக்கிறது என சங்கீதம் 139:16 சொல்கின்றது. “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என காண்கின்றோம். நம் வாழ்வின் சூழ்நிலைகளை தேவன் எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை நாம் அறியோம். ஆனால், தேவன் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிவார். அவர் நம் நடையைத் திருப்புகின்றார், என்பதை அறிந்து அமர்ந்திருப்போம். அவருடைய வல்லமையுள்ள கரங்கள், நாம் காணக் கூடாதபடி மறைவாயிருப்பதால், அவர் செயல்படவில்லையோ என சந்தேகிக்காதே.

தனிமையான கிறிஸ்மஸ்

கானாவின் வட பகுதியிலுள்ள சகோகு என்ற இடத்திலிருக்கும் என்னுடைய தாத்தாவின் வீட்டில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடியபோது நான் தனிமையையுணர்ந்தேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. என்னுடைய பெற்றோரும், உடன் பிறந்தோரும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தனர். முந்திய வருடங்களில் நான் அவர்களோடும், என்னுடைய கிராமத்தின் நண்பர்களோடும் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிய போது, அது மிக அதிகமாகவும் நினைவு கூறத்தக்கதாகவுமிருக்கும். ஆனால், இந்த கிறிஸ்து பிறப்பு பண்டிகை அமைதியாகவும், தனிமையிலும் இருந்தது. கிறிஸ்மஸ் அன்று காலை நான் எனது தரைப் படுக்கையில் படுத்திருந்தபோது ஒரு பாடல் என் நினைவுக்கு வந்தது. வருடம் முடிந்து விட்டது, கிறிஸ்து பிறப்பு வந்து விட்டது. தேவக் குமாரன் பிறந்து விட்டார், அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும்… என்பதான அப்பாடலை நான் முணுமுணுத்து எனக்குள்ளாகவே திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பாட்டியம்மா என்னிடம், “அது என்ன பாடல்?” எனக் கேட்டார். என்னுடைய பாட்டி, தாத்தாவிற்கு கிறிஸ்து பிறப்பு பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும் தெரியவில்லை. எனவே நான் கிறிஸ்துவைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அந்தக் கணமே என்னுடைய தனிமை மறைந்து ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன்.

வயல் வெளிகளில் தனிமையில் தன் ஆடுகளுடன் அவ்வவ்போது சில கொடிய விலங்கினங்களை மட்டும் சந்தித்துக் கொண்டிருந்த மேய்ப்பனான தாவீதும் தனிமையை உணர்ந்தான். அந்த ஒரு நேர மட்டுமல்ல, பிற்கால வாழ்விலும் அவன், “நான் தனித்தவனும், சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்” (சங். 25:16) என்கின்றான். ஆனால், தாவீது தனிமையை உணர்ந்த போதிலும், கைவிடப்பட்டவனாக தன்னைக் கருதவில்லை. அதனால் அவன், “நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன். நான் உமக்குக் காத்திருக்கின்றேன்” (வச. 20-21) எனப் பாடுகின்றான்.

அவ்வப்போது நாமும் தனிமையை எதிர் கொள்கிறோம். இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பை நீ எங்கிருந்து கொண்டாடினாலும், தனிமையிலோ அல்லது கூட்டத்தோடோ, நீ கிறிஸ்து தரும் சந்தோஷத்தோடு கொண்டாடு.

உதவும் கரம்

இடாகோ என்ற இடத்தில் குளிர்காலத்தில், எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள பனிசறுக்கு தளத்தில் விளையாடுவதை என்னுடைய குழந்தைகள் அநுபவித்து மகிழ்வர். அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பனிச்சறுக்கலைக் கற்றுக் கொள்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அவர்களை மனமிணங்கச் செய்து, அவர்களுடைய கால்களை அந்த கடினமான குளிர் தளத்தில் பதியவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், கீழே விழுந்தால் அது எத்தனை வலியைத் தருமென அவர்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் கால் வழுக்கி கீழே விழ ஏதுவாகும் போது நான் அல்லது என்னுடைய கணவர் அவர்களைத் தாங்கி பிடித்து மீண்டும் அவர்கள் தங்கள் கால்களில் உறுதியாக நிற்கும்படியும் அவர்கள் தங்களின் சட்டத்தை நிலையாக பிடித்துக் கொள்ளும்படியும் உதவுவோம்.

நாம் கீழே விழும்போது யாரோ ஒருவரின் உதவும் கரங்கள் அங்குவந்து தாங்கிக் கொள்ளுவதை குறித்து பிரசங்கி புத்தகம் வெளிப்படுத்துகின்றது. பிறரோடு இணைந்து வேலை செய்வது நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் (4:9). ஒருவர் வாழ்வில், உற்சாகத்தைக் கொண்டு வருபவன் அவருடைய நண்பன். நாம் சவால்களைக் சந்திக்கும் போது யாரேனும் நம்மருகிலிருந்து, நம்முடைய செயலுக்கும் மனதிற்கும் உறுதுணையாக இருந்தால் அது நன்மைபயக்கும். இத்தகைய உறவுகள் நமக்கு பெலனையும், ஒரு நோக்கத்தையும் ஆறுதலையும் தரும்.

நம் வாழ்வின் கடினமான பனிபோன்ற சோதனைகளில் நாம் விழுந்து கிடக்கும்போது, அருகில் உதவும்படி யாரேனும் இருப்பார்களா? அப்படியிருந்தால் அது தேவனி;டமிருந்து வரும் உதவி, அல்லது யாருக்காயினும் நண்பனின் உதவி தேவையாயிருந்தால், தேவன் அனுப்பும் நண்பனாக நாம் அவர்களைத் தூக்கி விடுவோமா? நம்முடைய துணையாளராக எப்போதும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே. ஒருவேளை நம்மைத் தூக்கி நிறுத்த நம்மருகில் யாருமேயில்லையென உணரும்போது, தேவன் நமக்கு உதவும்படி எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலைத் தருவதாகவுள்ளது (சங். 46:1). நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நம்மைத் தூக்கி நிலை நிறுத்த, அவருடைய கரம் நம்மை உறுதியாகப் பற்றுகிறது.

கிறிஸ்மஸ்ஸைக் குறித்தக் கேள்விகள்

நாள் காட்டியில் டிசம்பர் மாதத்திற்குத் திருப்புவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே, கிறிஸ்மஸ் மகிழ்ச்சி எங்கள் வடக்கு பட்டணத்தில் வெளிப்படத் துவங்கி விடும். ஒரு மருத்துவ அலுவலகத்திலுள்ள மரங்களும், செடிகளும் வண்ண விளக்குகளாலும், மின் விளக்குகளின் சரங்களாலும் வெவ்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டன. இரவு நேரத்தில் அந்தப் பகுதியின் ஒளிமயம் அனைவரையும் பிரமிக்கச் செய்வதாயிருந்தது. மற்றொரு வர்த்தக நிறுவனம் தங்கள் கட்டடங்களை ஆடம்பரமாகப் பொதியப் பெற்ற கிறிஸ்மஸ்  பரிசுபோல அலங்கரித்துள்ளது. எங்கு திரும்பினாலும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. கிறிஸ்மஸ்கால விற்பனைகளும் துவங்கியிருந்தன.

சிலர் இத்தகைய ஆடம்பர வெளிப்படுத்துதலை விரும்புகின்றனர். வேறுசிலர் இதனை அதிருப்பியோடு பார்க்கின்றனர். ஆனால், மற்றவர்கள் கிறிஸ்மஸை எப்படிப் பார்க்கின்றனர். என்பது கேள்வியல்ல. நாம் ஒவ்வொருவரும் இந்த கொண்டாட்டத்தை எப்படி கருதுகிறோம் என்பதே நமது சிந்தனை.

இயேசுவின் பிறப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இயேசு தன்னடைய சீடர்களிடம், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார் (மத். 16:13). அதற்கு அவர்கள், சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்க தரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறதார்கள் என்று பதிலளித்தனர். அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று தனிப்பட்ட கருத்தைக் கேட்கின்றார் (வச. 15). அதற்குக் பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (வச. 16).

இந்த ஆண்டும் அநேகர் இந்தக் குழந்தையாரென்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாமலே கிறிஸ்மஸைக் கொண்டாடலாம். நாம் மற்றவர்களோடு உரையாடும் போது அவர்களிடம் அக்கேள்வியைக் கேட்பதன் மூலம் அவர்களும் இயெசுவைத் தெரிந்துகொள்ள உதவுவோம். கிறிஸ்மஸ் என்பது மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரு குழந்தையைப் பற்றி மகிழ்ச்சிதரும் கதையா? அல்லது நம்மைப் படைத்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளைப் பார்க்கும்படி நம்மில் ஒருவராக வந்துள்ளரா?

அது நீயாக இருப்பதால் நன்றி

கேன்சர் சிகிச்சை மையத்தில் என்னுடைய தாயாரோடு தங்கியிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, எங்களுக்கருகில் தங்கியிருந்து தன்னுடைய கணவன் பிராங்க்-ஐ கவனித்துக் கொண்டிருந்த லாரியின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. நான் அங்குள்ள போது அறையில் லாரியுடன் சம்பாஷித்து, சிரித்து, பெருமூச்செடுத்து, அழுது, ஜெபித்து என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தாங்கி, மகிழ்ந்து நாங்கள் நேசிக்கின்ற நபரையும் கவனித்துக் கொண்டோம்.

அங்கு தங்கியிருப்போர் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கும் படி அழைத்துச் செல்லும் இலவச வாகனத்தை நான் விட்டு விட்ட போது, அன்று மாலை லாரி தன்னுடைய காரில் என்னை அந்த கடைக்கு அழைத்துச் சென்றாள். நன்றி கலந்த கண்ணீரோடு அவளுடைய உதவியை நான் ஏற்றுக் கொண்டேன். “நீயாக இருப்பதற்காக நன்றி” என்றேன். எனக்கு ஒரு சிநேகிதியாக எனக்குதவியதற்காக அல்ல, அவளுடைய உண்மையான குணாதிசயத்திற்காக அவளைப் பாராட்டினேன்.

சங்கீதம் 100, தேவன் செய்த காரியங்களுக்காக மட்டுமல்ல, தேவன் எப்படிப்பட்டவர் என்பதைப் பாராட்டி போற்றுகின்றது. பூமியிலுள்ள அனைவரையும் கர்த்தரை மகிழ்ச்சியோடு ஆராதனை செய்யும்படி சங்கீதக்காரன் அழைக்கின்றார் (வச. 1-2). “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்” (வச. 3) என்று உறுதியோடிருக்கச் சொல்கின்றார். நம்மைப் படைத்தவர் நம்மை அவருடைய பிரசன்னத்திற்குள் அழைக்கின்றார். “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத்துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் என்கிறார் (வச. 4). நம்முடைய நன்றியைத் தெரிவிப்பதற்கு அவரே தகுந்தவர், ஏனெனில் “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும் அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.” (வச. 5).

இந்த உலகத்தைப் படைத்து அதைப் பாதுகாக்கின்ற இந்த தேவன், நம்மை மிகவும் நேசிக்கும் தேவன். நம்முடைய உண்மையான, மகிழ்ச்சி கலந்த நன்றியைச் செலுத்தத் தகுந்தவர் அவரே.

ஒரு பாதுகாப்பான இடம்

மேற்கு வெர்ஜீனியாவில், ஒரு காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் என்னுடைய சகோதரரும், நானும் வளர்ந்தோம். அது ஒரு வளமான நிலப்பகுதி. டார்சானைப் போன்று கொடி விட்டு கொடி தாண்டியும், சுவிஸ் குடும்பம் ராபின்சனைப் போன்று மரவீடுகளை அமைத்தும், கதைகளில் வாசிப்பதைப் போன்றும், படங்களில் காணும்  காட்சிகளையும் கொண்ட ஓர் இடத்தில் நாங்கள் விளையாடினோம். வசிப்பிடங்களைக் கட்டுவதும் எதிரியின் தாக்குதலிலிருந்து நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என அதில் தங்கி விளையாடுவதும் எங்களுக்கு மிகவும் விருப்பமானவை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் என்னுடைய குழந்தைகளும் போர்வைகளாலும், கம்பளிகளாலும், தலையணைகளாலும் ஒரு வசிப்பிடத்தையமைத்து தங்களுடைய கற்பனையில், எதிரியிடமிருந்து “பாதுகாப்பாக ஓர் இடத்தை” ஏற்படுத்திக் கொண்டதாக எண்ணிக்கொள்வர். நாமும் பாதுகாப்பாக நம்பி ஒளிந்து கொள்ள ஓர் இடம் தேவை என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவரிடமும் உண்டு.

இஸ்ரவேலின் கவிஞரும் பாடகருமான தாவீது தனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிய போது அது தேவனிடம் மட்டுமேயுள்ளது என்பதைக் கண்டு கொண்டான். சங்கீதம் 46:1-3 வலியுறுத்துவது போல “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்… ஆகையால் நாம் பயப்படோம்.” பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, அவன் தொடர்ந்து அச்சுறுத்தலைச் சந்திக்கின்றான். ஆனாலும் இச்சங்கீதத்தின் வார்த்தைகள் தாவீது தேவன் மீது வைத்துள்ள அற்புதமான நம்பிக்கையைக் காட்டுகின்றது. எத்தகைய அச்சுறுத்தல் இருந்த போதும், அவன் தேவன் தரும் பாதுகாப்பைக் குறித்து உறுதியாயிருந்தான்.

இத்தகைய உறுதியை நாமும் பற்றிக்கொள்வோம். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள (எபி. 13:5) தேவனையே நம் அநுதின வாழ்வில் நாம் நம்பியுள்ளோம். நாம் ஒரு பயங்கரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதும், தேவன் நமக்குச் சமாதானத்தையும், உத்தரவாதத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் நமக்களிக்கின்றார். அவரே நாம் பாதுகாப்பாகத் தங்குமிடம்.

தேவன் கேட்கின்றார்

தம் வாழ்வில் சவால்களையும், சுகவீனத்தையும் சந்திக்கின்ற குடும்ப நபர்கள், நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி அந்தக் குழுவிலுள்ள மற்ற அனைவரும் ஜெப விண்ணப்பங்களைக் கொடுக்க, தயான் மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்ப நபர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால். தயான் தன்னுடைய வேண்டுதலை வெளிப்படுத்தவில்லை. அவள் இதனைக் குறித்துச் சொன்னால், பிறரின் முகபாவனையையும், அவர்களின் கேள்விகளையும் ஆலோசனைகளையும் அவளால் சகித்துக் கொள்ள முடியாதென நினைத்தாள். எனவே அவள் இந்த வேண்டுதலை வெளியில் சொல்லாமலிருப்பதே மேல் என எண்ணினாள். தான் நேசிக்கும் இந்த நபர் இயேசுவின் விசுவாசியாயிருந்தும் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்றெண்ணினாள்.

தயான் இந்த ஜெப வேண்டுதலை இந்தக் குழுவிலுள்ள மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாவிடினும், அவள் நம்பும் சில சிநேகிதிகளிடம் தன்னோடு ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்வாள். அவர்களோடு சேர்ந்து, தான் நேசிக்கும் இந்த நபரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமாறும், அவரும் கிறிஸ்து தரும் விடுதலையை அநுபவிக்க உதவுமாறும், தயானுக்குத் தேவையான பொறுமையையும் சமாதானத்தையம் தருமாறும் ஜெபிப்பாள். அவ்வாறு ஜெபிக்கும்போது அவள் ஆறுதலையும், தேவன் தரும் பெலனையும் பெற்றுக் கொண்டாள்.

நம்மில் அநேகர் உண்மையாகவும், தொடர்ந்தும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சில விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கப்படாமலிருக்கலாம். ஆனால், தேவன் நம்மீது கரிசனையுள்ளவர், அவர் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார் என்பதை உறுதியாக நம்புவோம். அவர் நம்மை இன்னும் அவரோடு நெருங்கி நடக்க விரும்புகின்றார். நாமும், நம்பிக்கையிலே சந்தோஷமாயும், உபத்திரவத்திலே பொறுமையாயும், ஜெபத்திலே உறுதியாயும் தரித்திருந்து (ரோம. 12:12) அவரையே சார்ந்து வாழ்வோம்.

நன்றியால் தேவனை கனப்படுத்துதல்

என்னுடைய கணவருக்கு புற்றுநோய் என்று வந்திருந்த மருத்துவ அறிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், அந்த பெண் மருத்துவரின் முகத்தில் கவலைக்கான அறிகுறி இல்லை. புன்முறுவலோடு அவர் ஒரு யோசனை சொன்னார்: ஒவ்வொரு நாளையும் நன்றி சொல்லியபடி தொடங்குங்கள். “குறைந்தபட்சம் மூன்று விஷயங்களுக்காக,” என்றார். ஸ்தோத்திரம் சொல்வது தேவனின் நற்பண்புகளில் ஊக்கம் கிடைக்க உதவும் என்று தெரிந்ததால் டான் ஒத்துக்கொண்டார். இதனால் டான் ஒவ்வொரு நாளையும் துதிகளோடு தொடங்குகிறார். இரவு நல்ல தூக்கத்தைத் தந்ததற்காக நன்றி ஆண்டவரே. சுத்தமான படுக்கைக்காக. சூரிய வெளிச்சத்திற்காக. காலை உணவிற்காக. என் உதடுகளின் புன்முறுவலுக்காக நன்றி.

ஒவ்வொரு வார்த்தையும் மனப்பூர்வமானது. ஆனால் அது அற்பமாக தோன்றுமா? வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நன்றி சொல்வது மகத்துவமான கர்த்தருக்கு முக்கியமா? தாவீதின் முதன்மை சங்கீதக்காரர் ஆசாப் சங்கீதம் 50ல் தெளிவான பதிலைத் தருகிறார். “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும்” ஆண்டவர் கேட்கவில்லை (வச. 9). முன்பு இஸ்ரவேலரின் ஸ்தோத்திர பலிகளாக இருந்த இவற்றை விரும்பாமல், நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும் நன்றியோடு கொடுக்க விரும்புகிறார் (வச. 14, 23).

என் கணவர் அனுபவித்ததுபோல, மனப்பூர்வமான நன்றி, நாம் ஆவியில் உற்சாகமாக இருக்க உதவும். அப்போது “ஆபத்துக் காலத்தில்” நாம் கூப்பிடும்போது, அவர் நம்மை “விடுவிப்பார்” (வச. 15). அப்படியென்றால் ஆவியில், சரீரத்தில் டான் இரண்டு வருட சிகிச்சையில் சுகமாகி விடுவார் என்று அர்த்தமா? அல்லது அவர் வாழ்நாள் முழுவதும் சுகம் கிடைக்காதா? நமக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு, தேவனின் அன்புக்காக, அவர் மீட்பராக, சுகம் அளிப்பவராக, நண்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி சொல்வதில் டான் சந்தோஷமடைகிறார். “உங்களுக்கு நன்றி” என்ற அழகிய வார்த்தைகளைக் கேட்பதில் நண்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இத்தருணத்தின் ஆண்டவர்

சில மாதங்களுக்கு முன், மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் என் மகன் வீட்டில் ஒரு கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நினைத்ததை விட அந்த வேலை முடிய அதிக நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலை முடித்துவிட வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும், முடிவடையாத வேலைகள் இருந்தன.

ஏன் என்று யோசித்தேன். தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று யோசித்தேன். அதற்கான விடை அடுத்த நாள் காலையில் கிடைத்தது. காலையில் வேலைக்கான உபகரணத்தை எடுக்கும்போது, என் தொலைபேசி ஒலித்தது. தெரியாத நபர் “உங்கள் மகள் ஒரு விபத்தில் அடிபட்டிருக்கிறாள். நீங்கள் உடனே வரவேண்டும்” என்றார்.

அவள் வீடு என் மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் பதினான்கு நிமிடங்களில் அவள் அருகில் இருந்தேன். நான் என் வீட்டில் இருந்திருந்தால், வந்து சேர மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். நான் மருத்துவ ஊர்தியின் பின்னாலேயே சென்று, அறுவை சிகிச்சைக்கு முன் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆறுதலாக அவள் கையைப் பிடித்து அமர்ந்திருந்த வேளையில், அந்த கட்டட வேலை தாமதம் ஆகாதிருந்தால், என்னால் அவளோடு இருந்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.

நம் தருணங்கள் தேவனுக்குச் சொந்தமானவை. எலிசாவின்மூலம் ஆண்டவர் உயிர்ப்பித்த சிறுவனின் தாயின் அனுபவமும் இதைப்போன்றதே (2 ராஜாக்கள் 4:18-37). பஞ்சத்தின் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற அவள், ராஜாவிடம் தன் நிலத்தைக் கேட்க, பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். அதே நேரத்தில், தீர்க்கதரிசியின் பணியாள் கேயாசியோடு ராஜா பேசிக்கொண்டிருந்தார். “செத்துப் போனவனை (எலிசா) உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது,” எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாய் உள்ளே வந்தாள் (8:5). அவள் வேண்டுதல் கேட்கப்பட்டது.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையையும் நன்மைக்காக பயன்படுத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தர் இன்று நமக்கு முன்குறித்திருக்கும் வேலைகளுக்கு, அவரோடு நடக்க கிருபை செய்வாராக.