அழகிய உச்சம்
நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய சங்கீதம் என்று எல்லா விதமான பாடல்களையும் ரசிக்க என் பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே மாஸ்கோ தேசிய இசைக்குழுவின் (Moscow National Symphony) இசை விருந்தைக் கேட்க, ரஷ்யாவின் புகழ்பெற்ற சங்கீத சபைகளில் ஒன்றான மாஸ்கோ கான்ஸர்வேடரியில் (Moscow Conservatory) நான் அடி எடுத்து வைத்தபோது, என் மனம் படபடத்தது. சைக்கோவ்ஸ்கி இயற்றிய ஒரு அழகிய பாடலை சங்கீத வித்துவான்கள் இசைக்கும்படி நடத்துனர் செய்தார். நிகழ்ச்சியின் மையக் கருத்துக்களின் சிறிது சிறிதாக உயர்ந்து, ஆழ்ந்த, வியப்பைத் தரக்கூடிய உச்ச ஸ்தாயினைத்தை எட்டியது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து அந்த அழகிய தருணத்தைப் பாராட்டினார்கள்.
வேத வசனங்கள், வரலாற்றின் உச்சமான சிலுவை மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நோக்கி முன்னேறுகின்றன. ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஒரு மீட்பர் வருவார் என்று கடவுள் வாக்குக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:15). பழைய ஏற்பாடு முழுவதும் இந்த மையக்கருத்து முன்னோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டியிலும் (யாத்திராகமம் 12:21), தீர்க்கதரிசிகளின் நம்பிக்கையிலும் (1 பேதுரு 1;10), கடவுளின் ஜனங்களின் வாஞ்சையிலும் இந்த வாக்குறுதியைப் பார்க்கிறோம்.
இந்தக் கருத்து முன்னோக்கிச் செல்வதை 1 யோவான் 4:14 உறுதிப்படுத்துகிறது: “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்”. எப்படி? நம்மை மன்னித்து, நம்மைப் படைத்தவரிடம் நம்மை மீட்டுக்கொடுக்க இயேசு மரித்து, உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக சிதைந்த உலகை மீட்பதாக தான் கொடுத்த வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றினார். ஒரு நாள் மீண்டும் வந்து, தன்னுடைய படைப்பு அனைத்தையும் சேர்த்துக்கொள்வார்.
கடவுளின் குமாரன் நமக்காக மரித்ததை நினைவுகூரும்போது, கடவுளின் அருள் மற்றும் மீட்பராகிய இயேசு என்ற அழகிய உச்சத்தைக் கொண்டாடுகிறோம்.
எங்கே சமாதானம்?
1984 ஆம் ஆண்டு, பாடகர் பாப் டைலனிடம் “இன்னும் சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
“சமாதானம் என்பதே கிடையாது,” என்று டைலன் பதில் கூறினார். அவர் பதில் சர்ச்சைக்குள்ளானாலும், எளிதில் கிடைக்காத அரிய விஷயமாகவே சமாதானம் இருக்கிறது.
கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான தீர்க்கதரிசிகள் சமாதானத்தை முன் அறிவித்தார்கள். ஆனால் கடவுளின் தீர்க்கதரிசி அவர்களில் ஒருவராக இருக்கவில்லை. “என் வாக்குக்குச் செவி கொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (எரேமியா 7:23) என்று கடவுள் கூறியதை எரேமியா ஜனங்களுக்கு நினைவுபடுத்தினார். கள்ளத் தீர்க்கதரிசிகள் “சமாதானம், சமாதானம்” (8:11) என்று கூறினார்கள். ஆனால் எரேமியா பேரழிவை முன் அறிவித்தார். எருசலேம் கிமு 586ல் வீழ்ந்துபோனது.
சமாதானம் என்பது அரிய விஷயம். ஆனால் பயங்கரமான தீர்க்கதரிசனங்களைக் கொண்ட எரேமியாவின் புத்தகத்தில், நம்மை இடைவிடாமல் நேசிக்கும் ஆண்டவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று கடவுள் கீழ்ப்படியாத தம் ஜனங்களிடம் கூறினார். “மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (31:3-4).
ஆண்டவர், அன்பு மற்றும் சமாதானத்தின் கடவுள். அவரை நாம் மீறும்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பாவம் உலகின் சமாதானத்தை அற்றுப்போகப்பண்ணி, நம் ஒவ்வொருவருடைய உள்ளான மனச் சமாதானத்தையும் குலைத்துப்போடுகிறது. கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கி, நமக்கு மன சமாதானத்தைத் தரும்படியாக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1) என்று பவுல் எழுதுகிறார். இதுவரை எழுதப்பட்டவற்றில், பவுலின் வார்த்தைகளே அதிக நம்பிக்கை தரும் வார்த்தைகள்.
நாம் போர் நிறைந்த பகுதியில் வாழ்ந்தாலும், போர் என்ற வார்த்தைகூட காதில் விழாத அமைதியான சூழலில் வாழ்ந்தாலும், அவரில் சமாதானம் பெற கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
பிடியில் இல்லாமல்
மெக்சிகோ வளைகுடாவில் கெய்ட்லின் தன் நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தபோது, ஒரு சுறா அவள் கால்களைக் கவ்வி, உடலை இழுத்தது. தன்னை விடுவித்துக்கொள்ள, கெய்ட்லின் சுறாவின் மூக்கில் ஓங்கிக் குத்தினாள். அந்த சுறா அவளை விடுவித்து, தோல்வியைச் சந்தித்து, நீந்திச்சென்றது. அந்த சுறா கடித்ததால் நூறு தையல்களுக்கு மேல் போடும் அளவிற்கு கெய்ட்லினுக்குக் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதனால் கெய்ட்லினை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.
இயேசு மரணத்தின் கூரை முறித்ததையும், தன்னைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்தி, தோல்வியடையச் செய்ய மரணத்திற்கு இருந்த வல்லமையை முடிவுக்குக் கொண்டுவந்ததையும் இந்த நிகழ்ச்சி எனக்கு நினைவுபடுத்துகிறது. “அவர் (இயேசு) மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” (அப்போஸ்தலர் 2:24) என்று பேதுரு கூறுகிறார்.
பேதுரு எருசலேமில் இருந்த ஒரு கூட்டத்தினரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். அவர்களில் பலர், இயேசுவைக் கண்டனம் செய்து, “சிலுவையில் அறையுங்கள்” என்று கூச்சலிட்டவர்களாக இருந்திருக்கலாம். அதன் விளைவாக ரோம போர்ச் சேவகர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவர் மரித்துவிட்டார் என்று அவர்கள் உறுதி செய்யும்வரை அவர் அந்த சிலுவையில் தொங்கினார். இயேசுவின் உடல் ஒரு கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடவுள் அவரை உயிரோடு எழுப்பும் வரை அவர் உடல் அந்தக் கல்லறையில் மூன்று நாட்கள் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவும், மற்றவர்களும் அவரோடு பேசி, அவரோடு சாப்பிட்டு, நாற்பது நாட்கள் கழித்து அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதைப் பார்த்தார்கள் (அப்போஸ்தலர் 1:9).
சரீரப் பிரகாரமான பாடுகள், மன உளைச்சல்கள் மத்தியில், இந்த உலகத்தில் இயேசுவின் வாழ்க்கை முடிவடைந்தது. ஆனால் கடவுளின் வல்லமை சாவின் கூரை முறித்தது. இதனால், மரணமோ, வேறு எந்த விதமான போராட்டமோ, அதன் பிடியில் நம்மை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. விசுவாசிகள் அனைவரும், ஒரு நாள், நித்தியமான வாழ்வையும், முழுமையையும் கடவுளின் பிரசன்னத்தில் அனுபவிப்பார்கள். இப்படிப்பட்ட எதிர்காலத்தைப்பற்றி யோசித்தால், இன்று நாம் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பாதையைத் தேர்ந்தெடுத்தல்
இலையுதிர் காலத்தில், கொலராடோ மலையில், குதிரைமேல் அமர்ந்து, தனக்கு முன் இருக்கும் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனையில் இருக்கும் ஒரு இளைஞனின் அழகிய புகைப்படம் என்னிடத்தில் இருக்கிறது. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய “தேர்வு செய்யப்படாத பாதை” (The Road Not Taken) என்ற கவிதையை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்துகிறது. தனக்கு முன் இருக்கும் இரண்டு பாதைகளைப் பற்றி ஃப்ராஸ்ட் குறிப்பிடுகிறார். இரண்டுமே அதில் செல்லத்தூண்டும்படி அழகாக இருக்கின்றன. மீண்டும் அதே இடத்துக்கு வருவாரா என்பது ஃப்ராஸ்டுக்குத் தெரியாது. ஆனால் அதில் ஒரு பாதையை அவர் தெரிவு செய்தாகவேண்டும். “காட்டில் பிரிந்த இரண்டு பாதைகளில், யாரும் அதிகம் பயணம் செய்யாத பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதுவே ஒரு பெரிய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது” என்று ஃப்ராஸ்ட் எழுதுகிறார்.
இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5-7), அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14) என்று கூறினார்.
நம் வாழ்க்கைப் பயணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்று பல சமயங்களில் குழப்பம் வரலாம். பல பாதைகள் நம்பிக்கை அளிப்பதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கைக்கான பாதை ஒன்றே ஒன்றுதான். சீஷத்துவமும், கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிதலும் கொண்ட பாதையில் பயணம் செய்யும்படி இயேசு நம்மிடம் கூறுகிறார். கூட்டத்தைப் பின்பற்றாமல், அவரைப் பின்பற்றுமாறு அழைக்கிறார்.
நமக்கு முன்பாக உள்ள பாதையைப் பற்றி நாம் சிந்திக்கையில், வாழ்க்கைப் பாதையைத் தெரிந்துகொள்ள, அவர் வழியைப் பின்பற்ற கடவுள் நமக்கு ஞானத்தையும், தைரியத்தையும் தந்தருள்வாராக!
பூசணிக்காய்க்குள் பொக்கிஷம்
ஒரு புதிய, இளம் தாயாக, என்னுடைய மகளின் முதல் ஆண்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவள் எப்படி மாறி இருக்கிறாள், எப்படி வளர்ந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளும்விதமாக, ஒவ்வொரு மாதமும் அவளைப் புகைப்படம் எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தில், உள்ளூர் விவசாயிடம் வாங்கிய பூசணிக்காயைக் குடைந்து, அதற்குள் அவள் சந்தோஷமாக உட்கார்ந்திருப்பாள். என் மனதுக்கினிய என் மகள், பெரிதாக வளர்ந்த ஒரு பூசணிக்காய்க்குள் இருந்தாள். சில வாரங்களில் பூசணிக்காய் காய்ந்துபோனது, ஆனால் என் மகளோ தொடர்ந்து வளர்ந்தாள்.
இயேசு யார் என்பதை உணர்ந்த பவுல் அதை விவரிப்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவைக்குறித்து நம் இருதயத்தில் இருக்கும் அறிவை, மண்பாண்டத்துக்குள் உள்ள பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். “எல்லா பக்கங்களிலும் நெருக்கப்பட்டாலும்” (2 கொரிந்தியர் 4:8), இயேசு நமக்காக செய்தவற்றை நினைப்பது, போராட்டங்கள் மத்தியில் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. கடவுளின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதால், “கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகாமல்”, நாம் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறோம் (வச. 9).
காய்ந்துபோன பூசணிக்காயைப்போல, நம்முடைய சோதனைகளால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனால் அந்த கடினமான சவால்களுக்கு மத்தியில், இயேசு தரும் சந்தோஷம் நம்மில் பெருக முடியும். நம்முடைய வாழ்க்கையில் செயல்படும் அவரது வல்லமை பற்றிய நமது புரிந்துகொள்ளுதல்தான் பலவீன மண்பாண்டங்களாகிய நம்முடைய உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம். நம்மில் அவர் வல்லமை செயல்படுவதால், கஷ்டங்கள் மத்தியில் நாம் செழித்து வளரமுடியும்.
என் உண்மையான முகம்
கடவுளின் பார்வைக்கு உகந்தது அல்லாத என்னுடைய பழைய வாழ்க்கையால், நான் பல ஆண்டுகளாக தகுதி இல்லாதவளாக, அவமானமாக உணர்ந்தேன். இந்த உணர்வு என்னுடைய அன்றாட வாழ்க்கையை அதிகமாக பாதித்தது. கறைபடிந்த என் பழைய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வது? ஒரு ஊழியத்தின் தலைவரை வீட்டிற்கு சாப்பிட அழைக்கும் அளவிற்கு கடவுள் எனக்கு தைரியத்தைக் கொடுத்தாலும், நான் முற்றிலும் நல்லவள் என்று காட்டிக்கொள்ள முயன்றேன். வீட்டை நன்றாக சுத்தம் செய்தேன். நல்ல உணவு சமைத்தேன். இருப்பதில் மிக நல்ல உடையை அணிந்துகொண்டேன்.
அதன் பின் முற்றத்தில் தண்ணீர் பாய்ச்ச உபயோகித்த தெளிப்பானை அணைக்கச் சென்றேன். தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்த குழாயைத் திருப்பியபோது, ஏதோ தவறாகி, தண்ணீர் என் மீது தெறித்து, என் உடை முழுவதும் நனைந்துபோனது. வீட்டிற்குள் போய் தலையைத் துவட்டி, வீட்டில் அணியும் ஒரு சாதாரண உடைக்கு மாறியபோது, சரியாக அழைப்பு மணி ஒலித்தது. சலித்துப்போய், உடைமாற்றும்படி நடந்த சம்பவத்தையும், எதற்காக எல்லாம் நல்ல முறையில் காட்சி அளிக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டேன். என் புது தோழி, தன் பழைய வாழ்க்கையினால் தனக்கு ஏற்படும் பயம், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றுடனான போராட்டங்களைப் பற்றிக்கூறினாள். நாங்கள் ஜெபித்தபிறகு, குறைபாடுள்ள கடவுளின் ஊழியக்காரரைக் கொண்ட தன் குழுவில் சேரும்படி என்னை அழைத்தாள்.
பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்துவுக்குள்ளான புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபோது, தன்னுடைய பழைய வாழ்க்கையை மறைக்கவும் இல்லை, ஆண்டவரை சேவிப்பதற்கு அதை ஒரு இடையூறாகவும் கருதவில்லை (1 தீமோத்தேயு 1:12-14). சிலுவையில் கிறிஸ்துவின் மரணம், பாவிகளில் பிரதான பாவியாகிய தன்னை இரட்சித்ததையும், மாற்றியதையும் அவர் அறிந்தார். அதனால் அவர் கடவுளைத் துதித்ததோடு, அவரைக் கனம்பண்ணவும், அவருக்குக் கீழ்ப்படியவும், மற்றவர்களையும் ஊக்குவித்தார் (வச. 15-17).
கடவுளின் கிருபையையும், மன்னிப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய பழைய வாழ்க்கையில் இருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். குறைபாடுள்ளவர்களானலும், அதிகமாக நேசிக்கப்படும் நாம், கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளுடன் மற்றவர்களை சேவிக்கும்போது, நம்முடைய உண்மையான முகங்களைக் குறித்து அவமானப்படவேண்டிய அவசியம் இல்லை.
எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுதல்
பல ஆண்டுகளாக தன் பாடங்களைப் படிக்க அதிக சிரமப்பட்ட ஏஞ்சி அவள் படித்துக்கொண்டிருந்த மிகச்சிறந்த, பிரத்தியேக பள்ளியில் இருந்து, ஒரு “சாதாரண” பள்ளிக்கு மாற்றப்பட்டாள். அதிக போட்டி மிகுந்த சிங்கப்பூரின் பள்ளிக்கல்வியில், “நல்ல” பள்ளியில் படிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றாலும், இந்த சம்பவத்தை பலர் ஒரு தோல்வியாகக் கருதுவார்கள்.
ஏஞ்சியின் பெற்றோர் அதிக ஏமாற்றம் அடைந்தார்கள். ஏஞ்சியும் தன் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டதாக உணர்ந்தாள். ஆனால் புதிய பள்ளியில் சேர்ந்த சில நாள்களிலேயே சாதாரண பிள்ளைகள் மத்தியில் படிப்பது எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். “அம்மா, இதுதான் எனக்கு ஏற்ற இடம்,” என்றாள். “இங்குதான் என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!”
இயேசு சகேயுவின் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தபோது, அந்த ஆயக்கார தலைவர் எப்படி உணர்ந்திருப்பார் (லூக்கா 19:5) என்பதை ஏஞ்சி குறித்த சம்பவம் எனக்கு நினைவுபடுத்தியது. தங்களிடம் குறை உண்டு என்றும் தங்களுக்கு கடவுளின் கிருபை பெற தகுதி இல்லை என்றும் உணர்ந்தவர்களுடன் சாப்பிடுவதை கிறிஸ்து விரும்பினார். நம்மைக் கண்டுகொண்டு, நாம் இருக்கிறபடியே நம்மை நேசிக்கும் இயேசு, அவரின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின்மூலம் பூரணத்துவத்தைத் தருவதாக நமக்கு உறுதி அளிக்கிறார். அவர் கிருபையினால் மட்டுமே நாம் மாசற்ற முழுநிறைவைப் பெறமுடியும்.
கடவுளின் நேர்த்தியான தன்மையிலிருந்து நான் குறைவாகவே காணப்படுகிறேன் என்பதை நான் அறிவதால், பல வேளைகளில் என் ஆவிக்குரிய பயணம் ஒரு கடினமான பயணமாகவே இருக்கிறது. நாம் இருக்கிறபிரகாரமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம். ஏனென்றால், நாம் இயேசுவைப் போல மாற, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பண்படுத்துகிறார்.
உங்கள் படகுகளைக் கொண்டு வாருங்கள்
ஹார்வி என்ற சூறாவளிப்புயல் 2017ல் வந்தபோது, பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் கிழக்கு டெக்சஸைச் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பலர் வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல், தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாகாணத்திலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் தனிப்பட்ட முறையில் தங்கள் படகுகளில் வந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவினர். இவர்களை மக்கள் “டெக்சஸ் கப்பற்படை” என்று அழைத்தனர்.
தைரியம் மற்றும் தயாள குணம் கொண்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்கள், நீதிமொழிகள் 3:27 ல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவும்படி நாம் அறிவுறுத்தப்படுவதை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தங்கள் படகுகளைக் கொண்டுவந்து மற்றவர்களுக்கு உதவ அவர்களுக்கு செயல்திறன் இருந்தது. அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். தங்களிடம் இருந்த சாதனங்களையும், செயல்திறன்களையும் மற்றவர்களின் நலனுக்காக உபயோகிக்கும் மனோபாவத்தை அவர்கள் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.
சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்கு நமக்கு போதிய சாமர்த்தியம் இல்லை என்று நாம் நினைக்கலாம். மற்றவர்களுக்கு உதவ நமக்கு திறமை, சாமர்த்தியம், அனுபவம், அல்லது நேரம் இல்லை என்று நினைத்து நாம் பயப்படுகிறோம். இதுபோன்ற சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கு எந்த வகையில் நாம் உதவ முடியும் என்று கவனிக்கத் தவறுகிறோம். டெக்சஸ் கப்பற்படையினால் வெள்ளம் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரசு உதவி செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியவில்லை. ஆனால் சக மனிதர்களைக் காப்பாற்ற, தங்களிடம் இருந்த ஒன்றை உபயோகித்தனர் – அவை படகுகள்! மேலான இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல நம்மிடம் இருக்கும் “படகுகளை” – அது எதுவாக இருந்தாலும் – உபயோகிப்போமாக..
ஊடுருவக் குத்தும் முள்
ஒரு முள் என் ஆள்காட்டி விரலைக் குத்தியதில் ரத்தம் வந்தது. நான் வலியில் சத்தமிட்டதோடு, தன்னிச்சையாக என் கையை இழுத்துக்கொண்டேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தோட்ட வேலைக்கான கையுறை அணியாமல், முள் செடியை கத்தரித்தால் இதுதானே நடக்கும்.
என் விரலில் இருந்த வலியையும், அதிலிருந்து வழிந்த ரத்தத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டியதிருந்தது. காயத்தைக் கட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக, என் இரட்சகரைப் பற்றி சிந்தித்தேன். ஏனென்றால், போர்ச்சேவகர் இயேசுவுக்கு முழுவதும் முட்களினால் ஆன கிரீடத்தை அணியச் செய்தார்களே (யோவான் 19:1-3). ஒரு முள் இவ்வளவு வலியைக் கொடுத்தால், முட்களால் ஆன ஒரு கிரீடம் எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனுபவித்த சரீரப் பிரகாரமான வலியில் அது ஒரு சிறு பகுதியே. அவர் முதுகை ஒரு வார் தாக்கியது. ஆணிகள் அவர் மணிக்கட்டுகளையும், கணுக்கால்களையும் ஊடுருவின. ஒரு ஈட்டி அவர் விலாவை ஊடுருவியது.
ஆனால் இயேசு ஆவிக்குரிய வலியையும் சகித்தார். ஏசாயா 53ல், ஐந்தாம் வசனம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” என்று நமக்குச் சொல்கிறது. மன்னிப்பு பற்றி வேறு விதமாக எடுத்துச் சொல்வதே ஏசாயா குறிப்பிடும் “சமாதானம்”. நாம் கடவுளோடு ஆவிக்குரிய சமாதானத்தைப் பெறும்படி, தான் ஈட்டி, ஆணிகள், முள் கிரீடம் ஆகியவற்றால் குத்தப்பட, இயேசு அனுமதித்தார். அவருடைய தியாகம், நமக்காக மரிக்க தயாராக இருந்தது ஆகியவை நாம் பிதாவுடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவின. அவர் அதை எனக்காகவும், உங்களுக்காகவும் செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது.