என்னுடைய நண்பன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிஷனரி குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு, கானாவில் வளர்க்கப்பட்டான். அவனுடைய குடும்பம் மீண்டும் அமெரிக்கா சென்ற போது அங்கு அவன் தன்னுடைய கல்லூரி படிப்பை ஆரம்பித்தான். ஆனால், அதனை அவனால் தொடரமுடியவில்லை. பின்னர் அவன் இராணவத்தில் சேருவதற்கு ஒப்புதல் கொடுத்தான், அது அவனுடைய கல்லூரி படிப்பைத் தொடர பண உதவி செய்ததோடு உலகம் முழுவதும் செல்லும் வாய்ப்பையும் கொடுத்தது. அவன் ஒரு சிறப்பான செயலைச் செய்வதற்கு அவனைப் பயிற்றுவிக்கும்படி இவையெல்லாவற்றின் மூலமாகவும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவன் உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு கிறிஸ்தவ நூலின் எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவனுடைய மனைவியின் கதையும் சற்று ஆர்வமானது. அவள் தன்னுடைய கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தன் வலிப்பு வியாதிக்காக வீரியம் மிகுந்த மருந்துகளை சாப்பிட்டதின் விளைவாக வேதியியல் தேர்வில் தோல்வியுற்றாள். பின்னர் தன்னுடைய உடல்நிலைக்கேற்றவாறு அறிவியல் துறையை விட்டு, காது கேளாதவர்களுக்கான அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக் கொள்ளும்படி சேர்ந்தாள். இந்துறையின் சுமை சற்று குறைவாகயிருக்கும் என கருதினாள். அந்த அநுபவங்களைப் பற்றி சிந்தித்த அவள், “ஒரு பெரிய நோக்கத்திற்காக தேவன் என் வாழ்வை திசை திருப்பினார் என்றாள். இப்பொழுது, அவள் வாழ்வு மாற்றம் தரும் வார்த்தைகளைக் காது கேளாதோருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கி;றாள்.

நீயும் சில வேளைகளில் தேவன் ஏன் என்னை இத்தகைய பாதை வழியே நடத்திக் செல்கின்றார் என யோசித்ததுண்டா? தேவனுடைய வல்லமையுள்ள கரம் நம் வாழ்வில் இருக்கிறது என சங்கீதம் 139:16 சொல்கின்றது. “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என காண்கின்றோம். நம் வாழ்வின் சூழ்நிலைகளை தேவன் எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை நாம் அறியோம். ஆனால், தேவன் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிவார். அவர் நம் நடையைத் திருப்புகின்றார், என்பதை அறிந்து அமர்ந்திருப்போம். அவருடைய வல்லமையுள்ள கரங்கள், நாம் காணக் கூடாதபடி மறைவாயிருப்பதால், அவர் செயல்படவில்லையோ என சந்தேகிக்காதே.