ஒரு பெரிய விஷயம்
எங்களுடைய உறவினர் ஒருவருக்கு டிசம்பர் மாத வாடகையைச் செலுத்த உதவி தேவைப்பட்டது. அந்த வருட இறுதியில் அவர்கள் எதிர்பாராத சில செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அவருடைய குடும்பத்தினருக்கு இந்த தேவை ஒரு பெரிய பாரமாக இருந்தது. ஆனால், அவர்கள் தங்களுடைய சேமிப்பு எல்லாவற்றையும் தேடி எடுத்தும், தங்கள் உறவினரின் தாராள உள்ளத்தாலும், அதனை ஈடு செய்தனர். தேவன் தந்தவைகளுக்காக நன்றி செலுத்தினர்.
அவர் நன்றியறியும் வார்த்தைகளால் நிரம்பிய ஒரு நன்றி அட்டையை அவர்களுக்குக் கொடுத்தார். “நன்மையான செயல்களை செய்யும்படி தொடருங்கள், தொடர்ந்து நன்மை செய்வதை ஒரு பெரிய காரியமக நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை."
மற்றவர்களுக்கு உதவுவது தேவன் எதிர்பார்ககும் ஒரு பெரிய விஷயம். ஏசாயா தீர்க்கதரிசி இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தெரியப்படுத்துகின்றார். அந்த ஜனங்கள் உபவாசமிருக்கின்றனர், ஆனாலும் அவர்களுக்குள் வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏற்படுகின்றன. எனவே ஏசாயா தீர்க்கன் இதற்குப்பதிலாக, “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளியாமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்" என்கின்றார் (ஏசா. 58:6-7).
இத்தகைய தியாகம் தான் தேவனுடைய ஒளியை பிறருக்குக் கொடுக்கும். நம்முடைய காயங்களையும் குணப்படுத்தும் (வச. 8) என ஏசாயா சொல்கின்றார். குடும்பங்கள் தங்கள் உறவினருக்கு உதவும் போது, தங்களுடைய சொந்த பொருளாதாரத்தில் ஒரு கஷ்டத்தை உணர்வதால், அந்த வருடம் முழுவதும் மேலும் சிறந்த முறையில் தங்கள் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தும் வழியைக் கண்டு கொள்வர். இதுவே நீங்கள் தாராள குணமுள்ளவர்களாயிருக்கும்படி தேவன் தரும் வாக்குத்தத்தம். “உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்" (வச. 8) முடிவில், உன் உறவினருக்குக் கொடுப்பதால் மேலும் ஆசீர்வாதத்தைப் பெறுவாய். தேவன் என்ன தருவார்? தேவன் ஏற்கனவே தனக்குள்ளதையெல்லாம் அன்பினால் உனக்குக் கொடுத்துவிட்டார்.
மனுஷரைப் பிரியப்படுத்தல்
ஒரு கல்லூரியின் ஒரு வகுப்பு, கலைசார்ந்த களப்பயணம் சென்ற போது, ஒரு மிகச் சிறந்த மாணவியை எங்களது பயிற்சியாளரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வகுப்பறையில் அவள் எப்பொழுதும் ஆறு அங்குல உயரமுள்ள செருப்புகளையே தன்னுடைய நீண்ட கால் சட்டைக்குள் அணிந்திருப்பாள். ஆனால், நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் பூட்ஸ்சுகள் அவளை ஐந்து அடிக்கும் குறைவான உயரத்தில் காட்டியது. “என்னுடைய உயரமான செருப்புகள் நான் எப்படித் தோன்ற விரும்புகிறேனோ அப்படிக் காட்டின. ஆனால், என்னுடைய பூட்ஸ்சுகள் என்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகின்றன" எனக் கூறி சிரித்தாள்.
நம்முடைய புறத்தோற்றம் நம்முடைய உண்மை நிலைமையை வெளிக்காட்டுவதில்லை. நம்முடைய இருதயமே நம்மை யாரெனக் காட்டும். வெளித் தோற்றத்தில் மிகச் சிறப்பாகக் காட்சி தரும் மதப்பற்றுடைய பரிசேயர்களுக்கும், வேதபாரகருக்கும் இயேசு ஆழமான வார்த்தைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் இயேசுவிடம், தங்களுடைய பாரம்பரியத்தின்படி அவருடைய சீடர்கள் போஜனம் பண்ணுமுன் ஏன் கை கழுவுவதில்லையெனக் கேட்கின்றார்கள் (மத். 15:1-2). இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் பாரம்பரியத்தினால் தேவனுடைய கட்டளையை மீறி நடக்கின்றீர்கள்? (வச. 3) எனக் கேட்கின்றார். அவர்கள் தங்களுடைய தகப்பனையும், தாயையும் பாதுகாப்பதற்குப்பதிலாக தங்களுக்குச் சாதகமாக ஒரு சட்டத்தை உருவாக்கிவைத்துக் கொண்டு, தங்களுடைய செல்வத்தை காத்துக் கொள்கின்றனர் (வச. 4-6). இவ்வாறு தங்கள் பெற்றோரை கனம் பண்ணாமல் ஐந்தாவது கட்டளையை மீறுகின்றனர் (யாத். 20:12) என இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.
தேவனுடைய தெளிவான கட்டளைகளிலிருந்து மீறுவதற்கு ஒரு வழிமுறையாக வெளிப்புற தோற்றத்தைக் கொள்வோமாயின். கட்டளையைத் தந்தவரை மீறுகிறவர்களாகிறோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்" (மத். 15:19). தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நீதியின்படி, தேவனே ஒரு தூய இருதயத்தைத் தர முடியும்.
எப்பொழுதும் தேவனுடைய பிள்ளை
நான் என் பெற்றோருடன் பங்கு பெற்ற ஓர் ஆலய ஆராதனையில் வழக்கப்படி, கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லும் போது, நாங்கள் ஒருவரோடொருவர் கரங்களைப் பற்றிக் கொள்வோம். நான் என்னுடைய ஒரு கரத்தை எனது தந்தையின் கரத்தோடும் மற்றொரு கரத்தை என்னுடைய தாயின் கரத்தோடும் பிணைத்திருந்தேன். அப்பொழுது நான் எப்பொழுதுமே இவர்களின் மகள்தான் என்ற எண்ணம் எனக்குள்ளே தோன்றியது. நான் எனது மத்திய பருவத்தில் இருந்த போதிலும் நான் என்னை லியோ, பைலிஸ் என்பவர்களின் மகளாகவே எப்பொழுதும் கருதுவேன். நான் அவர்களின் மகள் மட்டுமல்ல, எப்பொழுதும் தேவனுடைய பிள்ளையாகவும் இருக்கிறேன் என்பதை சிந்;தித்துப் பார்த்தேன்.
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபைகளின் ஜனங்கள் தங்களை தேவனுடைய குடும்பத்தின் நபர்களாக இருப்பதையே தங்களின் அடையாளமாகக் கருத வேண்டுமென விரும்புகின்றார்கள் (ரோம. 8:15). ஏனெனில், அவர்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்கள் (வச. 14). எனவே அவர்கள் இனியும் ஒன்றுக்கும் உதவாத காரியங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டாம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார் (வச. 16). நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே" (வச. 17).
கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றவர்களுக்கு இது என்ன வேறுபாட்டைக் காட்டுகின்றது? எளிதாகச் சொன்னால், எல்லாவற்றிலும் நாம் மாறுபட்டவர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளம் நமக்கு ஒரு உறுதியான அஸ்திபாரத்தைத்தருகிறது. நாம் உலகத்தையும் நம்மையும் பார்க்கின்ற முறையை சீர்ப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, நாம் தேவனுடைய குடும்பத்தின் நபர்களாகையால் நாம் அவரைப் பின்பற்றுகின்றோம். அது நம்மை நம்முடைய வசதியான வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கு உதவுகிறது. நாம் பிறரைப் பிரியப்படுத்தும்படி வாழும் நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
இன்று நீ தேவனுடைய பிள்ளையாக எப்படி வாழ்வதென்பதைக்குறித்து சிந்தனை செய்.
படைப்புகளின் பாடல்
ஒலி வானியலைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் வளிமண்டலத்திற்கு அப்பாலிருந்து வரும் ஒலியையும், துடிப்புகளையும் கண்காணிக்கவும், கேட்கவும் முடிகிறது. நாம் இரவில் காணும் வினோதமான வான்வெளியில் விண்மீன்கள் அமைதியாக சுழல்வதில்லை, அவை ஒருவகை இசையை எழுப்புகின்றன என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கூன்முதுகு திமிங்கலங்கள் நாம் கேட்க முடியாத ஒலியை எழுப்புவது போல, விண்மீன்களின் ஒலியும் மனித செவிகளால் கேட்கக் கூடாத அலை நீளத்திலும், அதிர் வெண்ணிலும் இருக்கின்றது. விண்மீண்களும், திமிங்கலங்களும் மற்றும் படைப்புகள் யாவும் இணைந்து, பல அங்கங்களைக் கொண்ட, ஒரு கலவை இசையை எழுப்பி தேவனுடைய மகத்துவங்களை தெரிவிக்கின்றன.
சங்கீதம் 19:1-4ல், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்கு பேச்சுமில்லை; வார்த்தையுமில்லை அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும், அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்" எனக் காண்கின்றோம்.
புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன், “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும்... சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16) என இயேசு கிறிஸ்துவைக் குறித்து வெளிப்படுத்துகின்றார். அதற்குப் பதிலாக இயற்கை உலகின் உயரமும், ஆழமும் தன்னுடைய படைப்பாளியைப் பாடுகின்றன. நாமும் படைப்புகளோடு இணைந்து “வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்த" (ஏசா. 40:12) அவருடைய மகத்துவங்களைப் பாடுவோம்.
எதை நோக்கிச் செல்கின்றாய்?
நம்முடைய வாழ்வின் திசையை எது தீர்மானிக்கின்றது? இந்தக் கேள்விக்கான விடையை நான் ஒரு எதிர்பாராத இடத்தில் பெற்றேன். அது ஒரு மோட்டார் வாகன பயிற்சிமையத்தில். நானும் என்னுடைய சில நண்பர்களும் மோட்டார் வாகனத்தை ஓட்ட விரும்பினோம். எனவே நாங்கள் அதனைக் கற்றுக்கொள்ள ஒரு வகுப்பில் சேர்ந்தோம். எங்களுடைய பயிற்சியின் ஒருபகுதி, இலக்கினை நிர்ணயித்தலைப் பற்றியிருந்தது.
எங்களுடைய பயிற்சியாளர், “கடைசியாக, நீங்கள் எதிர்பாராத ஒரு தடையை சந்திக்கப் போகின்றீர்கள்.” நீங்கள் தடையையே நினைத்து கவனித்தால், உங்களுடைய இலக்கு அதுவாகிவிட்டால், நீங்கள் அதற்கு நேராக ஓட்டிச் செல்வீர்கள், ஆனால், நீங்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டு, அதனை வேகமாகக் கடந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கிப்பார்த்தால் தடையில் மோதுவதை தவிர்த்து விடலாம். அத்தோடு, “நீங்கள் எங்கு பார்க்கின்றீர்களோ, அங்குதான் நீங்கள் போய் சேர்வீர்கள்" என்று கூறினார்.
இந்த எளிமையான, ஆனால், ஆழமான தத்துவம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது. நாம் நம்முடைய கவனத்தை ஒரு காரியத்தில் நிலைப்படுத்தும்போது - நம்முடைய பிரச்சனைகளிலோ, போராட்டங்களிலோ முழு கவனத்தையும் செலுத்தும் போது நம்முடைய வாழ்வும் தானாகவே அதனைச் சுற்றியேயிருக்கும்.
ஆனால், நம்முடைய பிரச்சனைகளையும் தாண்டி, நம்முடைய பிரச்சனைகளில் உதவக் கூடிய ஒருவரையே நாம் நோக்கிப் பார்க்கும் படி வேதாகமம் நம்மை ஊக்கப்படுத்துகின்றது. சங்கீதம் 121ல், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" எனக்குப் பதில் எங்கிருந்து வரும் என்பதையும் அதே சங்கீதத்தில் காண்கின்றோம். “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்... கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்" (வச. 1-2,8).
சில வேளைகளில் நமக்கு ஏற்படுகின்ற தடைகள் மேற்கொள்ள முடியாதவைகளாகத் தோன்றலாம். அவை நம்முடைய பார்வை கோணத்தை முற்றிலும் மறைத்து விடாதபடி, நம்முடைய பிரச்சனைகளுக்கப்பால் தேவனை நோக்கிப் பார்க்கும்படி தேவன் நம்மையழைக்கின்றார்.
அன்பின் அழகு
“ஐராபே டப்பாஷியோ" என்பது மெக்ஸிகோவின் தொப்பி நடனம், அது காதலைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நடனத்தின் உச்சக்கட்டத்தில் அந்த மனிதன் தன்னுடைய அகன்ற தொப்பியை தரையில் வைப்பான். நடன முடிவில் அந்தப் பெண் அத்தொப்பியை எடுக்க, இருவரும் அத்தொப்பியின் பின்னால் மறைந்து தங்களுடைய காதல் முத்தத்தோடு நடனத்தை முடிப்பர்.
திருமணத்தில் உண்மையாயிருப்பதின் முக்கியத்துவத்தை இந்த நடனம் எனக்கு நினைவுபடுத்தியது. நீதிமொழிகள் 5ல், கெட்ட நடத்தையின் விளைவுகளைப் பற்றி கூறியபின், திருமணம் இருவருக்கிடையேயுள்ள உறவு என்பதை உறுதிப்படுத்துவதை வாசிக்கின்றோம். “உன் கிணற்றிலுள்ள தண்ண்ரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு (வச. 15). பத்து ஜோடிகளுக்கு மேலாக ஜராபே நடனமாடினாலும் ஒவ்வொருவரும் தன்னுடைய துணையின் மீதே கவனம் செலுத்துவர். நாமும் ஆழமான பிரிக்கமுடியாத அர்ப்பணத்தை நம்முடைய துணையிடம் கண்டு மகிழ்வோம் (வச. 18).
நம்முடைய காதலும் கவனிக்கப்படுகிறது. அந்த நடனக் கலைஞர்கள் தங்களுடைய துணையோடேயே மகிழ்கின்றனர். தங்களை ஒருவர் கவனிக்கின்றார் என்ற உணர்வுடனேயே நடனமாடுவார். இதேப் போன்று இந்த அதிகாரத்திலும், “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்" (வச. 21). தேவன் நம்முடைய திருமணத்தை பாதுகாக்க விரும்புகிறார். எனவே அவர் தொடர்ந்து கவனித்தக் கொண்டேயிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பதன் மூலம் அவரை பிரியப்படுத்துவோம்.
ஐராபேயிலுள்ள தாளத்தைப் போன்றே நம் வாழ்விலும் நாம் தாளத்தைப் பின் தொடரவேண்டியுள்ளது. நம்முடைய திருமண வாழ்வு அல்லது தனிவாழ்வு தாளத்தோடு இசைந்திருந்தால், அதாவது நாம் நம்முடைய படைப்பாளிக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களையும், சந்தோஷங்களையும் பெற்றுக்கொள்வோம்.
கேள்விகளோடு ஆராதித்தல்
ஒரு நீண்ட அல்லது குறுகிய பயணம் எதுவாக இருந்தாலும், அந்தக் குழுவில் பயணம் செய்யும் யாரேனும் “இன்னும் அந்த இடம் வரவில்லையா? “அல்லது" இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?" போன்ற கேள்விகளைக் கேட்பது வழக்கம் தான். இத்தகைய கேள்விகள் குழந்தைகளின் உதட்டிலிருந்து வருவதை எல்லாருமே கேட்டிருப்போம். பெரியவர்களும் நம்முடைய இலக்கினை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேள்விகளைக் கேட்கின்றனர். எல்லா வயதினரும், தாங்கள் சோர்வடையும் போது இத்தகைய கேள்விகளைக் கேட்க தூண்டப்படுவர், ஏனெனில், வாழ்க்கையில் சவால்கள் ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.
இதேப்போன்ற நிலையில்தான் தாவீதும் இருந்தார் என்பதை சங்கீதம் 13ல் காண்கின்றோம். இதிலுள்ள இரு வசனங்களில் நான்கு முறை (வச. 1-2) தாவீது தான் மறக்கப்பட்டவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், தோற்;கப்பட்டவனாகவும், இவையெல்லாம் எவ்வளவு காலத்திற்கு? எனப் புலம்புகிறான். இரண்டாவது வசனத்தில் அவன் எதுவரைக்கும் என் எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பேன்? எனக் கேட்கின்றான். இவ்வாறு புலம்பலை கொண்ட சங்கீதங்கள் மறைமுகமாக, நம்முடைய கேள்விகளோடு தேவனை ஆராதிக்க வருமாறு அனுமதிக்கின்றன. இத்தகைய கவலையும், வேதனையும் நிறைந்த நீண்ட காலங்களில் நாம் பேசுவதற்கு தேவனைத் தவிர வேறு சிறந்த நபர் யார் இருக்க முடியும்? நம்முடைய வியாதியின் போராட்டங்களையும், துயரங்களையும், நாம் விரும்பும் மனிதர்களின் தன்னிஷ்டப் போக்கினையும், உறவினரிடையேயுள்ள கஷ்டங்களையும் நாம் தேவனிடம் கொண்டு வரலாம்.
நமக்குக் கேள்விகளிருந்தாலும் நாம் தேவனை ஆராதிப்பதை விட்டுவிடத் தேவையில்லை. சர்வவல்ல, பரலோக தேவன் நம்முடைய கவலை நிரம்பிய கேள்விகளை அவரிடம் கொண்டு வரும்படி அழைக்கின்றார். ஒருவேளை தாவீதைப் போன்று, சரியான வேளையில் நம்முடைய கேள்விகள் வேண்டுதல்களாகவும், நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், தேவனைப் போற்றும் துதிகளாகவும் மாறிவிடும் (வச. 3).
உன்னால் எதை விட முடியவில்லை?
“உன்னால் விட முடியாத ஒன்று எது?" என வானொலி தொகுப்பாளர் கேட்டார். கேட்போர் சிலர் ஆர்வத்தோடு பதிலளித்தனர். சிலர் தங்கள் குடும்பங்களைக் குறிப்பிட்டனர். ஒரு கணவன், மரித்துப்போன தன் மனைவியின் நினைவுகளைக் குறிப்பிட்டார், வேறுசிலர் இசையின் மூலம் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவையும், ஒரு தாயாகும் கனவையும் பகிர்ந்தனர். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைப் பொக்கிஷமாக வைத்துள்ளோம். ஒரு நபர், ஒன்றை நிறைவேற்றல், ஒன்றை அடைதல் என நாம் ஏதோ ஒன்றை விட முடியாமல் வைத்திருக்கின்றோம்.
ஓசியா புத்தகத்தில். தேவன் தான் தெரிந்துகொண்ட ஜனங்களை கைவிடுவதில்லையெனவும், அவர்களைத் தனது விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றார். இஸ்ரவேலின், நேச மணவாளனான தேவன் அவளுக்குத் தேவையான யாவற்றையும், நிலம், ஆகாரம், தண்ணீர், உடை மற்றும் பாதுகாப்பையும் கொடுத்தார். ஆனால், இஸ்ரவேலோ வேசித்தனம் பண்ணி தேவனைப் புறக்கணித்து தங்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வேறு இடத்தில் தேடினர். தேவன் அவளை எவ்வளவுக்கு அதிகமாய் தேடினாரோ அவ்வளவு தூரமாய் அவள் சோரம் போனாள் (ஓசியா 11:2) எப்படியிருந்தாலும், அவள் தேவனை மிகவும் வேதனைப்படுத்தினாலும் தேவன் அவர்களைக் கைவிடுவதில்லை (வச. 8). அவர் இஸ்ரவேலை சீர்ப்படுத்தி, விடுவிப்பார். அவருடைய விருப்பமெல்லாம் அவளோடு தன்னுடைய உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதே (வச. 11).
இன்று தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் இந்த உறுதியைத் தருகின்றார். அவர் நம்மீது வைத்துள்ள அன்பு நம்மை ஒருபோதும் கைவிடும் அன்பல்ல (ரோம. 8:37-39). நாம் அவரை விட்டு அலைந்து திரிந்தோமேயானால், அவர் நாம் மீண்டும் அவரிடம் வரும்படி ஏங்குகின்றார். அவர் நம்மை சீர்ப்படுத்தும் போது, நாம் தேற்றப்படுவோம், அதுவே அவர் நம்மை சேர்த்துக் கொள்வதின் அடையாளம், அவர் நம்மைத் தள்ளிவிடுபவரல்ல. நாம் அவருடைய பொக்கிஷம், அவர் நம்மைக் கைவிடுவதில்லை.
பொருளைவிட பகிர்தல் மேலானது
“ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை" எனக் கதறினான் என்னுடைய இளைய மகன். அவன் தன்னுடைய வீகோ துண்டுகளில் ஒன்றையாகிலும் கொடுக்கனேரிடும் என எண்ணி, உள்ளம் உடைந்தான். நான் அவனுடைய முதிர்ச்சியின்மையை வியந்து பார்த்தேன். ஆனால், உண்மையில் இந்த குணம் குழந்தைகளிடம் மட்டும் தானுள்ளதா? எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கொடுப்பதற்கு விடாப்பிடியான மறுப்பைத் தெரிவிக்கும் குணம் மனிதருக்கு உள்ளது என்பதை என்னுடைய வாழ்வின் அனுபவத்தில் கண்டுள்ளேன்.
இயேசுவின் விசுவாசிகளான நாம் நம்முடைய வாழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இதனையே ரூத் தன்னுடைய மாமியோடு செய்தாள். கைவிடப்பட்ட விதவையான நகோமியிடம் ரூத்துக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ரூத் தன் வாழ்வை தன் மாமியாரோடு இணைத்துக் கொண்டாள். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிப்போம், மரணம் வரை சேர்ந்தே வாழ்வோம் என்கின்றாள். அவள் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" (ருத். 1:16) என்கின்றாள். அவள் தனக்குள்ளதையெல்லாம் தாராளமாக அந்த முதிய பெண்மணிக்குக் கொடுத்தாள், தன்னுடைய அன்பையும், கரிசனையையும் காட்டினாள்.
நம்முடைய வாழ்வை இத்தகைய முறையில் பகிர்ந்துகொள்வதென்பது சற்று கடினமானதுதான். ஆனால், அந்த தாராள குணத்தின் விளைவு என்ன என்பதை நாம் நினைவு கூரவேண்டும். ரூத் தன் வாழ்வை நகோமியோடு பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவன்தான் தாவீது அரசனின் தாத்தா. இயேசு தம்முடைய சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நிராகரிக்கப்பட்ட போதும் பிதாவினால் அவர் மகிமைப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து அரசாட்சி செய்கின்றார். நாமும் நம் வாழ்வை பிறரோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக ஓர் நாள் ஒரு பெரிய வாழ்வை அனுபவிப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை.