எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜோ ஸ்டோவெல்கட்டுரைகள்

இயேசுவோடு ஐக்கியம்

நான் ஒரு முறை இரவு உணவின் போது பில்லி கிரஹாமின் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பைப் பெற்றேன். அது மறக்கமுடியாத ஓர் அனுபவமாயிருந்தது. நானும் கனப்படுத்தப்பட்டேன். ஆனால், அவரோடு என்ன பேசுவது பொருத்தமாயிருக்கும் என சிந்தித்துச், சற்று பதட்டமாக உணர்ந்தேன். பல ஆண்டுகளான அவருடைய ஊழியப்பாதையில் எது மிகவும் விரும்பக்கூடியதாக இருந்தது என்ற ஒரு கேள்வியோடு என்னுடைய உரையாடலை ஆரம்பித்தால் சரியாக இருக்குமென எண்ணினேன். ஆனால், நான் அநாகரீகமாக அதற்குத் தகுந்த விடைகளையும் எடுத்துரைக்கலானேன். அது ஜனாதிபதியைச் சந்தித்ததா? அல்லது இராஜாக்களையும், ராணிகளையும் சந்தித்தக் கணங்களா? அல்லது உலகெங்கும் பல லட்சம் மக்களுக்குச் சுவிசேஷம் அறிவித்த நேரங்களா?

நான் என்னுடைய கருத்துக்களைக் கூறி முடிப்பதற்குள் மதிப்பிற்குரிய கிரஹாம் அவர்கள் என்னை நிறுத்திவிட்டார். ஒரு தயக்கமுமின்றி அவர், “அது நான் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம்தான். அவருடைய பிரசன்னத்தை உணர்வதும், அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்வதும் அவருடைய வழிகாட்டலைக் கண்டு கொண்டு அதன்படி நடந்துகொள்வதுமே என்னுடைய மிகப் பெரிய மகிழ்ச்சி” என்றார். இந்த பதில் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று எண்ணச் செய்தது, ஒரு சவாலைச் சந்திக்கவும் என்னைத் தூண்டியது. இவருடைய பதிலைப் போன்று என்னுடைய பதிலும் இருக்குமா என நான் குத்தப்பட்டேன். நானும் அவரைப் போன்று தேவனைச் சார்ந்து வாழ்வதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன்.

இதனை மனதில் கொண்டுதான் பவுலும் “ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைகாக” தன்னுடைய மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் குப்பையென்று சொல்லுகின்றார் (பிலி. 3:8). நம் வாழ்விலும் இயேசுவும், இயேசுவோடுள்ள ஐக்கியமுமே பிரதானமானதாக இருப்பின் நம் வாழ்வும் எத்தனை விலையேறப் பெற்றதாக இருக்குமென நினைத்துப்பார்.

நன்றியுள்ள இருதயத்தை உருவாக்கல்

எங்களது திருமண நாளன்று நானும் மார்டியும் மகிழ்ச்சியோடு வாழ்விலும், தாழ்விலும், சுகவீனத்திலும், சுகத்திலும், செல்வத்திலும், வறுமையிலும் உண்மையாயிருப்போம்” என வாக்குக் கொடுத்தோம். ஒரு மகிழ்ச்சியான திருமண நாளில் இருண்ட கெட்ட நேரத்தையும், சுகவீனத்தையும், வறுமையையும் வாக்குறுதியில் சேர்த்திருப்பது சற்று விகர்ப்பமாகத் தோன்றலாம். ஆனால் அது, வாழ்க்கையென்பது கெட்ட நேரங்களையும் அடிக்கடி கொண்டு வரும் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுகின்றது.

எனவே, வாழ்வில் தவிர்க்க முடியாத கஷ்ட நேரங்களை நாம் சந்திக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பதை பவுல், ‘‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (1 தெச. 5:18) என வலியுறுத்துகின்றார். அதிகமான கஷ்டங்களை நாம் சந்திக்கின்ற போது, நன்றியுள்ள ஓர் ஆவியைக் கொண்டிருக்குமாறு தேவன் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நன்றியுணர்வு என்பது நம் தேவன் நல்லவர் என்பதில் பிறக்கிறது. அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 118:1) தேவன் நம்மோடிருந்து நம் துன்பங்களின் மத்தியில் நம்மை பெலப்படுத்துகின்றார் (எபி. 13:5-6). மேலும் அவர் நம்முடைய குணத்தை மாற்றி அவரைப் போலாக்க, நம்முடைய பெலவீனங்களை, அன்போடு பயன்படுத்துகின்றார் (ரோம. 5:3-4).

நம்முடைய வாழ்வு கடினமான வேளைகளைச் சந்திக்கும்போது நாம் நன்றியோடிருக்கத் தேர்ந்து கொண்டு, தேவன் நல்லவர், அவர் நம்முடைய போராட்டங்களைக் கடந்து செல்ல பெலனளிக்கிறார் என்று நம்பி நம் கவனத்தை அவர் மீது வைப்போம். சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் பாடுவோம், ‘‘கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபையென்றுமுள்ளது” (சங். 118:29).

தீவிர நடவடிக்கை

சில வருஷங்களுக்கு முன் என் சிநேகிதியின் சின்ன மகன் (சிக்காகோவிலுள்ள யூனியன் ஸ்டேஷன்) ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டத்தில் தொலைந்துபோனான். அது ஒரு பயங்கரமான அனுபவம் என்று சொல்லத் தேவையில்லை. செய்வதறியாமல் தன் மகனின் பெயரை உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே தானியங்கி படிக்கட்டில் ஏறி அங்கும் இங்கும் ஒடினாள். வினாடிகள் யுகம்போல் தோன்றியது. கடைசியில் அவள் மகன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து தாயின் கைகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்தான்.

தன் பிள்ளையைக் கண்டுபிடிப்பதற்காக என் சிநேகிதி என்ன வேண்டுமானாலும் செய்திருப்பாள் என்பதை நினைக்கும்பொழுது, தேவன் நம்மை இரட்சிக்க செய்த ஆச்சரியமான காரியங்களை நினைத்து, புத்துணர்வுடன் நன்றியுணர்வால் நிரம்புகிறோம். முதலாவது தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து தேவனைவிட்டு விலகிப்போனது முதல், தேவன் தம்முடைய பிள்ளைகளோடிருந்த உறவை இழந்துபோனதற்காய் புலம்பினார். அந்த உறவை மறுபடியும் மீட்டெடுக்க ஒரு தீவிர முயற்சியாகத் தம்முடைய ஒரேபேறான ஏகசுதனை, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும்” (லூக். 19:10). அனுப்பினார். இயேசு பிறக்காமலும், நம்முடைய பாவத்தின் கிரயமாக தம்மை பலியாக ஒப்புக்கொடாமலும் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இருந்திருக்காது.

தேவன் தீவிர நடவடிக்கை எடுத்துத் தம் குமாரனை அனுப்பி நம்மை அவரோடு ஒப்புரவாக்கினதை இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களில் நினைத்து நன்றி சொல்லக் கடவோம். ஓர் காலத்தில் நாம் காணாமற்போயிருந்தாலும் இயேசுவால் கண்டுபிடிக்கப்பட்டோம்!

வேறுவகையான அன்பு

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட ஒரு சபை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏனெனில் அந்த சபை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த கைதிகள், மீண்டும் சமுதாயத்தில் நன்முறையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உதவிகள் செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த திருச்சபையில் அனைத்து பிரிவு மக்களும் பங்கெடுக்கின்றனர். அந்தத் திருச்சபை பரலோகத்திற்கு மாதிரியாக இருக்கிறது. ஏனென்றால் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட பாவிகளாக, இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இணைக்கப்பட்டவர்களாக, இருப்பதினால் தான் அச்சபையை அதிகமாக நேசிக்கிறேன்.

சில சமயங்களில் திருச்சபை என்பது மன்னிக்கப்பட்ட பாவிகள் கூடும் பாதுகாப்பான அடைக்கலம் போல இல்லாத பொழுதுபோக்குக் குழு கூடும் இடம் போல இருந்துவிடுமோ என்று எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத்தரம் உடைய மக்கள் ஒரே குழுவாகக் கூடுவது இயற்கையான காரியமாகும். எப்படிப்பட்ட மக்களோடு அவர்கள் இலகுவாக இணைந்து செயல்பட முடியுமோ, அப்படிப்பட்ட மக்கள் மட்டும் இணைந்து கொள்வது இயற்கையானது. இப்படிச் செய்வதால் விடப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக உணர்வார்கள். “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்” (யோவா. 15:12) என்று இயேசு கூறிய பொழுது, அப்படிப்பட்ட பிரிவினையை மனதில் எண்ணவில்லை. அவருடைய திருச்சபையில் உள்ள மக்கள் அனைவரும், தேவனுடைய அன்பை எல்லாரோடும் பகிர்ந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒதுக்கப்பட்ட மக்கள் மனம் பாதிப்படைந்தால், அன்பான அடைக்கலத்தையும், ஆறுதலையும், மன்னிப்பையும் இயேசுவில் பெற்றுக் கொள்ளலாம். இதைத்தான் அப்படிப்பட்ட மக்கள் திருச்சபையில் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நாம் சந்திக்கும் அனைவரிடமும் இயேசுவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அதிலும் விசேஷமாக நம்முடைய தரத்திலே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் காட்ட வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களை, நம்மூலமாக நேசிக்க இயேசு விரும்புகிறார். மக்கள் அனைவரையம் அன்பினால் இணைத்து ஆராதனை செய்வது எவ்வளவு மகிழ்ச்சியானது! அது பரலோகத்தின் ஒரு பகுதியை பூமியிலே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது போன்றதாகும்.

கொந்தளிக்கும் தண்ணீர்களைக் கடந்து

முதல் முறையாக காற்றடைக்கப்பட்ட படகில் சவாரி செய்தபோது, கொந்தளிக்கும் நீரோட்டத்தின் கர்ஜனையை கேட்கும்வரை சந்தோஷமாக அத்தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். உரத்த அச்சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் என்ன நடக்குமோ என்ற ஐயமும், பயமும், பாதுகாப்பின்மையையும் ஒரே சமயத்தில் உணர்ந்தேன். கொந்தளிக்கும் தண்ணிரீல் கடந்து வந்தது, இரத்தத்தை உறைய வைக்கும் ஓர் அனுபவமாகும். ஒரு வழியாக திடீரென அக்கொந்தளிப்பு நின்றது. படகிலிருந்த எங்கள் வழிகாட்டி படகை செவ்வையாய் செலுத்தி எங்களை வழிநடத்தி வந்தார். ஆகவே அடுத்த கொந்தளிப்பு ஏற்படும் வரையேனும் நான் பத்திரமாக உணர்ந்தேன்.

இப்படகு சவாரி போல நம்முடைய வாழ்வில் ஏற்படும் நிலைமாறுதல்களும் கொந்தளிப்பாக காணப்படலாம். கல்லூரியிலிருந்து வேலைக்கு, ஒரு வேலையிலிருந்து வேறொரு வேலை, பெற்றோரோடு வாழ்ந்த காலம் முடிந்து தனியாகவோ அல்லது நம்முடைய துணையோடு வாழ்தல், பணியிலிருந்து ஓய்வு, இளமை காலத்திலிருந்து வயது முதிர்ந்து போனது ஒரு காலக்கட்டத்திலிருந்து இன்னொரு காலக்கட்டத்திற்கு நாம் பாய்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்று. இந்நிலை மாறுதல்கள் அனைத்திலும் நிச்சயமின்மையும் பாதுகாப்பின்மையும் காணப்படுகின்றன. 

பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிலைமாற்றம், சாலொமோன் தாவீதின் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக்கொண்டதாகும். நிச்சயமாக சாலொமோன் தன் எதிர்காலத்தைக் குறித்து கலங்கியிருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தன் தந்தையிடமிருந்து அவன் பெற்ற ஆலோசனை என்ன? “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி... தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்”, என்று தாவீது கூறினான் (1 நாளா. 28:20). 

நம்முடைய வாழ்விலும் அநேக கடினமான நிலைமாற்றங்கள் ஏற்படும். ஆனால் நம்முடைய படகில் தேவன் இருப்பதால் நாம் ஒருபோதும் தனிமையாக இல்லை. ஆகவே கொந்தளிக்கும் தண்ணீர்கள் ஊடாய் நம்மை நடத்திச்செல்லும் தேவன் மீது நமது கண்களை பதிய வைக்கும்பொழுது, நமக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஏனெனில் நமக்கு முன்பே அவர் அநேகரைப் பத்திரமாக வழிநடத்திச் சென்றுள்ளார்.

நீண்ட நிழல்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் இங்கிலாந்து தேசத்திலுள்ள யார்க்ஷைர் டேல்ஸ் (Yorkshine Dales) என்னும் மாகணத்தின் தொலைக்கோடியில் உள்ள ஒரு கிராமத்து விடுதியில் தங்கியிருந்தோம். அங்கு எங்களைத் தவிர இன்னும் நான்கு தம்பதியினர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்நாட்டை சேர்ந்த, ஆங்கிலேயர்கள். முன்பின் அறியாத அவர்களோடு இரவு உணவிற்கு பின் கொஞ்சம் காபி குடித்தவாறு விடுதியின் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுடைய உரையாடல் ஒவ்வொருவருடைய தொழிலை குறித்து திசை மாறியபொழுது, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்ற கேள்வி எழும்பியது. அச்சமயத்தில் நான் சிக்காகோவில் (Chicago) உள்ள மூடி வேதாகம நிறுவனத்தின் (Moody Bible Institute) தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தைப் பற்றியோ அதன் நிறுவனர் டிவைட். எல். மூடியைப் (Dwight. L. Moody) பற்றியோ அவர்கள் ஒருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என எண்ணினேன். ஆனால் அக்கல்லூரியின் பெயரை சொன்ன மாத்திரத்தில் வந்த அவர்களுடைய பதில்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “மூடி மற்றும் சான்கி (Sankey) என்பவர்களா... அந்த மூடியா?” என்று ஒருவரும், “எங்களிடம் சான்கி தொகுத்த பாடல் புத்தகம் உள்ளது. அடிக்கடி நாங்கள் குடும்பமாக ஒன்று கூடி பியானோ (Piano) வாசிப்போடு அப்புத்தகத்தில் உள்ள பாடல்களை பாடுவோம்,” என்று மற்றொருவரும் கூறினார். அதைக்கேட்டு நான் மிகுந்த வியப்புற்றேன்! சுவிசேஷகரான டிவைட் மூடியும் இசைக் குழு நடத்துபவரான இரா சான்கியும் (Ira Sankey) 120 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் சுவிசேஷ கூட்டங்களை நடத்தினார்கள். அவர்களுடைய தாக்கத்தை, ஊழியத்தின் பயனை இன்றும் உணர முடிந்தது.

அன்று இரவு அவ்வறையை விட்டு கடந்து சென்ற பொழுது, தேவனுக்காக நம் வாழ்விலும் நீண்ட நிழல்களின் தாக்கத்தை எவ்வாறெல்லாம் வீசச் செய்ய முடியும் என எண்ணிக் கொண்டிருந்தேன். அது, ஒரு ஜெபிக்கும் தாய் தன் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கமாகவும் இருக்கலாம், ஒரு ஆசிரியர் அல்லது வழிகாட்டியினுடைய தைரியப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம், அல்லது ஒரு நண்பனின் அன்பு நிறைந்த சீர்ப்படுத்தும் வார்த்தைகளாகவும் இருக்கலாம்.

“அவருடைய கிருபை... தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங் 100:5) என்னும் அற்புதமான வாக்குத்தத்தத்தில் நாமும் பங்களிக்க முடியும் என்பது நமக்கு கிடைத்த மகிமையான சிலாக்கியம்.

நன்றி கூறும் விளையாட்டு

ஒவ்வொரு வருடமும், இலையுதிர் காலத்தில், எங்கள் கார்னர்ஸ்டோன் (Cornerstone) பல்கலைக்கழக வளாகத்திலே சுவைமிக்க நன்றிகூறுதல் விருந்து வைப்போம். எங்கள் மாணவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். சென்ற வருடம் சில மாணவர்கள், தாங்கள் அமர்ந்து உணவருந்திய இடத்திலேயே ஒரு விளையாட்டை விளையாடினார்கள். அதாவது, அதிகப்படியாக மூன்று நொடிகளுக்குள், தாங்கள் நன்றி தெரிவிக்க விரும்பிய காரியத்தைப் பெயரிட வேண்டும். மேலும் மற்றொருவர் சொன்னதை திருப்பிச் சொல்லக் கூடாது. அதிக நேரம் எடுத்தால், விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தேர்வுகள், காலக்கெடு, விதிமுறைகள் மற்றும் அநேக கல்லூரி சார்ந்த காரியங்களை மாணவர்கள் குறைகூற கூடும். ஆனால் அந்த மாணவர்கள் நன்றி கூறுவதை தெரிந்து கொண்டார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால், இந்த விளையாட்டின் முடிவிலே அந்த மாணவர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் குறைகூறுவதை தேர்வு செய்திருந்தால் அந்த மனநிறைவு அவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

நாம் குறைகூறும்படியான காரியங்கள் எப்பொழுதும் இருந்தாலும், நாம் கவனமாய் பார்த்தால், நாம் நன்றி தெரிவிக்கும்படியான ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டியைக் குறித்து பவுல் விவரிக்கும் பொழுது, “நன்றியறிதல்” என்கின்ற பண்பே ஒன்றிற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. “நன்றியறிதல் உள்ளவர்களாயுமிருங்கள்” என்று கொலோசெயர் 3:15ல் கூறுகிறார். “இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி,” (வச. 16) என்று நன்றியுணர்வை பக்தி பாடலாய் வெளிப்படுத்துகிறார். மேலும், “நீங்கள் எதைச் செய்தாலும்… பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்,” (வச. 17) என்று கூறுகிறார். நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கும்படியான அறிவுரையை பவுல், சிறைச் சாலையிலிருந்து எழுதியுள்ளார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது.

இன்று நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் தேர்வு செய்வோம்.

உன் ஆத்துமாவை அமரப்ண்ணுதல்

ஒரு கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய கவனம் திசைமாறி தேவைப்பட்ட ஒரு பிரச்சனைக்குரிய காரியத்திற்கு நேராய் கச்சேரியிலிருந்து வழிமாறி என் மனம் சென்றது. நல்ல வேளையாக, சிறிது நேரத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்திற்குள் ஒரு அழகான பாடல் கடந்து வந்த பொழுது அக்கவனச்சிதைவு விலகியது. ஒரு ஆண்கள் அகப்பெல்லா குழுவினர் (வாத்தியங்கள் இல்லாமல் பாடுபவர்கள்) “என் ஆத்துமாவே, நீ அமர்ந்திரு”, (Be Still My Soul) என்னும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த வார்த்தைகளை கேட்டவாறு, தேவனாலே மாத்திரம் கொடுக்கக்கூடிய சமாதானத்தைக்…

நாம் விட்டுச்செல்லும் சொத்து

ஒரு சிறிய நகரத்தில் ஒரு உணவு விடுதியில் நான் தங்கி இருந்தபொழுது, சாலைக்கு மறுபக்கம் இருந்த ஓர் ஆலயத்தில் ஆராதனை நடந்ததைக் கவனித்தேன். சிறியோர், பெரியோர் என அதிக மக்கள் ஆலயத்தின் பக்கவாட்டிலுள்ள இடத்தில் நிற்கத்தக்கதாக ஆலயம் மக்களால் நிரம்பி வழிந்தது. வந்துகொண்டிருந்த ஒரு சவ வாகனத்தை நான் பார்த்தபொழுது, அது ஓர் அடக்க ஆராதனை என்பதை அறிந்தேன். ஆலயத்திலிருந்த கூட்ட நெரிசலை நான் பார்த்தபொழுது, அது அந்த ஊரிலிருந்த ஒரு முக்கியமான நபரின் அடக்க ஆராதனையாக இருக்கலாமென்று நினைத்தேன். ஒருவேளை அவர் ஒரு…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.  

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: கரினா நெபுலாவின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது" என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று சாகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4). 

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும்.