எங்களது திருமண நாளன்று நானும் மார்டியும் மகிழ்ச்சியோடு வாழ்விலும், தாழ்விலும், சுகவீனத்திலும், சுகத்திலும், செல்வத்திலும், வறுமையிலும் உண்மையாயிருப்போம்” என வாக்குக் கொடுத்தோம். ஒரு மகிழ்ச்சியான திருமண நாளில் இருண்ட கெட்ட நேரத்தையும், சுகவீனத்தையும், வறுமையையும் வாக்குறுதியில் சேர்த்திருப்பது சற்று விகர்ப்பமாகத் தோன்றலாம். ஆனால் அது, வாழ்க்கையென்பது கெட்ட நேரங்களையும் அடிக்கடி கொண்டு வரும் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுகின்றது.

எனவே, வாழ்வில் தவிர்க்க முடியாத கஷ்ட நேரங்களை நாம் சந்திக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பதை பவுல், ‘‘எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (1 தெச. 5:18) என வலியுறுத்துகின்றார். அதிகமான கஷ்டங்களை நாம் சந்திக்கின்ற போது, நன்றியுள்ள ஓர் ஆவியைக் கொண்டிருக்குமாறு தேவன் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நன்றியுணர்வு என்பது நம் தேவன் நல்லவர் என்பதில் பிறக்கிறது. அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங். 118:1) தேவன் நம்மோடிருந்து நம் துன்பங்களின் மத்தியில் நம்மை பெலப்படுத்துகின்றார் (எபி. 13:5-6). மேலும் அவர் நம்முடைய குணத்தை மாற்றி அவரைப் போலாக்க, நம்முடைய பெலவீனங்களை, அன்போடு பயன்படுத்துகின்றார் (ரோம. 5:3-4).

நம்முடைய வாழ்வு கடினமான வேளைகளைச் சந்திக்கும்போது நாம் நன்றியோடிருக்கத் தேர்ந்து கொண்டு, தேவன் நல்லவர், அவர் நம்முடைய போராட்டங்களைக் கடந்து செல்ல பெலனளிக்கிறார் என்று நம்பி நம் கவனத்தை அவர் மீது வைப்போம். சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் பாடுவோம், ‘‘கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபையென்றுமுள்ளது” (சங். 118:29).