Archives: ஏப்ரல் 2018

சங்கலிகளை முறித்தல்

ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

மறுபடியும் இயேசுவை நன்றாகக் கவனியுங்கள்!

நான் பார்த்ததிலேயே உண்மையுள்ள நபர் என்று ஒருவரை சொல்லக்கூடுமானால் அது சகோதரர் ஜஸ்டிஸ் ஆகத்தான் இருக்கமுடியும். தன் குடும்பம், தன் வேலை, தன் சபை பொறுப்பு என்று எல்லாவற்றிலும் அவர் உண்மையும் பொறுப்புள்ளவருமாய் இருந்தார். சமீபத்தில் பிள்ளைப்பருவத்தில் நான் போய்க்கொண்டிருந்த ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே பியானோ கருவியின் பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த பழைய ஆலயமணியை கவனித்தேன். அந்த நாட்களில், வேதபாடம் முடியப்போகிறது என்பதை உணர்த்த சகோதரர் ஜஸ்டிஸ் அந்த மணியிலிருந்து தான் ஒலியெழுப்புவார். காலத்தை தாண்டி அந்த ஆலயமணி இன்றும் நிலைத்து நிற்கிறது. சகோதரர் ஜஸ்டிஸ் கர்த்தரோடு இருக்கும்படி சென்று பல வருடங்கள் ஆனாலும், அவர் விட்டுசென்ற உண்மைத்துவத்தின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

எபிரயேர் 3-ஆம் அதிகாரம் ஒரு உண்மையுள்ள ஊழியன் மற்றும் ஒரு உண்மையுள்ள குமாரனை நம்முடைய கவனத்தின் கீழ் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் உண்மைத்துவத்தை நாம் மறுக்கமுடியாவிட்டாலும், விசுவாசிகளின் பார்வை இயேசுவின்மீதே இருக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. “ஆகையால், பரிசுத்த சகோதரர்களே சகோதரிகளே… கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (வச. 1) சோதிக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பெரிய உற்சாகத்தைத் தருகிறது. உண்மையுள்ளவராகிய இயேசுவை பின்பற்றுவதனாலேயே இந்த சுதந்தரம் உண்டாகிறது.

சோதனையின் காற்றுகள் உங்களை சூழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து களைத்துபோய், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த வேதபகுதியில்-ஒரு விரிவுரை தொகுப்பில்-உள்ளது போல், “இயேசுவை நன்றாக உற்று கவனியுங்கள் (3:1). அவரை மறுபடியும் பாருங்கள் – மறுபடியும் மறுபடியும் பாருங்கள். இயேசுவை நாம் மீண்டும் மீண்டும் நம் பார்க்கும்போது, அவருடைய குடும்பத்திற்குள் வாழ்ந்திட அவர் நம்மை திடப்படுத்துகிறார்.

பணித்தள பயிற்சி

என் மகனின் அறிவியல் ஆசிரியர் நடத்தும் அறிவியல் முகாமுக்கு என்னை ஒரு மேற்பார்வையாளனாக இருக்கும்படி கேட்டார்கள். நான் தயங்கினேன். கடந்தகால தவறுகள் மற்றும் கெட்டப் பழக்கங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நான், எப்படி ஒரு முன்மாதிரியாக முடியும்? என் மகனை அன்புடனும் பண்புடனும் வளர்க்க ஆண்டவரே உதவினார். ஆனாலும் என்னை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு ஆண்டவரால் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகித்தேன்.

ஒரு சில சமயங்களில், சம்பூரணரும், இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவருமாகிய ஆண்டவர் ஏற்றகாலத்தில் நம்மை முழுமையாக மறுரூபமாக்குவார் என்பதை என்னால் முழுவதும் கிரகித்துக்கொள்ளமுடியவில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது வேலையில் கிடைக்கும் பயிற்சியை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவன் அவனுக்கு அளித்த வரத்தை பயன்படுத்தும்படி சொன்னதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைப்பூட்டினார் (2 தீமோ. 1:6). தன்னகத்தே உள்ள மக்களுக்கு ஊழியம் புரிந்து அவர்களை வளர்ப்பதற்கு தேவையான அன்பையும், ஒழுக்கத்தையும் (வச. 7) தன் வல்லமையின் ஆதாரமாகிய ஆண்டவர் தனக்கு தருவார் என்பதில் தீமோத்தேயு தைரியம் அடையமுடியும்.

கிறிஸ்து நம்மை இரட்சித்து நம்முடைய வாழ்க்கையின் மூலம் அவரை கனப்படுத்த நம்மை தகுதிபடுத்துகிறார். அதற்கான விசேஷ தகுதி நம்மிடம் இருப்பதினாலன்று, நாம் ஒவ்வொருவரும் அவருடைய குடும்பத்தில் மதிப்பிற்குரிய அங்கத்தினராய் இருப்பதினாலேயே (வச. 9) அது நடக்கிறது.

தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்பாய் இருப்பதே நம்முடைய பங்கு என்பதை நாம் அறிந்துகொண்டால் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நம்மை இரட்சித்து, உலகத்தை பற்றி நமக்குள்ள குறுகிய தரிசனத்தை மாற்றி நமக்கு ஒரு உன்னத நோக்கத்தை கொடுப்பதே கிறிஸ்துவின் பணி. இயேசுவை நாம் அனுதினமும் பின்பற்றுகையில், அவர் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கெல்லாம் அவருடைய அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து பிறரை உற்சாகப்படுத்தும்போது அவர் நம்மையும் மறுரூபமாக்குகிறார்.

ஞானத்தின் அழைப்பு

பிரிட்டன் நாட்டின் பிரசித்திபெற்ற பத்திரிக்கையாளரும் சமுதாய ஆர்வலருமான மால்கம் மக்ரிஜ், தன்னுடைய அறுபதாவது வயதில் விசுவாச அனுபவத்திற்குள் வந்தார். அவருடைய எழுபத்தி-ஐந்தாவது பிறந்ததினத்தில், மனித வாழ்க்கையை பற்றிய இருபத்தி ஐந்து அறிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார். அதிலே ஒன்று, “சந்தோஷமாயிருக்கிற பணக்காரனை நான் சந்தித்ததேயில்லை. ஆனாலும், பணக்காரன் ஆகவேண்டும் என்று விரும்பாத ஏழையையும் நான் மிக அபூர்வமாகத் தான் சந்தித்திருக்கிறேன்”

நம்மில் அநேகர், பணம் நமக்கு சந்தோஷத்தை தராது, என்பதை ஏற்றுக்கொள்வர். ஆனாலும், அதனை நிச்சயிக்க கூடுதலான பணத்தை சேர்த்துக்கொண்டும் இருப்பர்.

ராஜா சாலமோனுக்கு இருந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒருவேளை அவர் பெரும் செல்வந்தராக இருந்தாலும், பணத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்று அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8 அவருடைய அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று. அது எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் “ஞானத்தின் அழைப்பு”. “என் சத்தம் மனுபுத்திரருக்கு தொனிக்கும்…என் வாய் சத்தியத்தை விளம்பும் (வச. 4-7). வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல (வச. 10-11).

ஞானம் சொல்கிறது, “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (வச. 19-21).

மெய்யாகவே இவைகள் அறிய செல்வங்கள்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.