Archives: ஏப்ரல் 2018

சங்கலிகளை முறித்தல்

ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

மறுபடியும் இயேசுவை நன்றாகக் கவனியுங்கள்!

நான் பார்த்ததிலேயே உண்மையுள்ள நபர் என்று ஒருவரை சொல்லக்கூடுமானால் அது சகோதரர் ஜஸ்டிஸ் ஆகத்தான் இருக்கமுடியும். தன் குடும்பம், தன் வேலை, தன் சபை பொறுப்பு என்று எல்லாவற்றிலும் அவர் உண்மையும் பொறுப்புள்ளவருமாய் இருந்தார். சமீபத்தில் பிள்ளைப்பருவத்தில் நான் போய்க்கொண்டிருந்த ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே பியானோ கருவியின் பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த பழைய ஆலயமணியை கவனித்தேன். அந்த நாட்களில், வேதபாடம் முடியப்போகிறது என்பதை உணர்த்த சகோதரர் ஜஸ்டிஸ் அந்த மணியிலிருந்து தான் ஒலியெழுப்புவார். காலத்தை தாண்டி அந்த ஆலயமணி இன்றும் நிலைத்து நிற்கிறது. சகோதரர் ஜஸ்டிஸ் கர்த்தரோடு இருக்கும்படி சென்று பல வருடங்கள் ஆனாலும், அவர் விட்டுசென்ற உண்மைத்துவத்தின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

எபிரயேர் 3-ஆம் அதிகாரம் ஒரு உண்மையுள்ள ஊழியன் மற்றும் ஒரு உண்மையுள்ள குமாரனை நம்முடைய கவனத்தின் கீழ் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் உண்மைத்துவத்தை நாம் மறுக்கமுடியாவிட்டாலும், விசுவாசிகளின் பார்வை இயேசுவின்மீதே இருக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. “ஆகையால், பரிசுத்த சகோதரர்களே சகோதரிகளே… கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (வச. 1) சோதிக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பெரிய உற்சாகத்தைத் தருகிறது. உண்மையுள்ளவராகிய இயேசுவை பின்பற்றுவதனாலேயே இந்த சுதந்தரம் உண்டாகிறது.

சோதனையின் காற்றுகள் உங்களை சூழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து களைத்துபோய், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த வேதபகுதியில்-ஒரு விரிவுரை தொகுப்பில்-உள்ளது போல், “இயேசுவை நன்றாக உற்று கவனியுங்கள் (3:1). அவரை மறுபடியும் பாருங்கள் – மறுபடியும் மறுபடியும் பாருங்கள். இயேசுவை நாம் மீண்டும் மீண்டும் நம் பார்க்கும்போது, அவருடைய குடும்பத்திற்குள் வாழ்ந்திட அவர் நம்மை திடப்படுத்துகிறார்.

பணித்தள பயிற்சி

என் மகனின் அறிவியல் ஆசிரியர் நடத்தும் அறிவியல் முகாமுக்கு என்னை ஒரு மேற்பார்வையாளனாக இருக்கும்படி கேட்டார்கள். நான் தயங்கினேன். கடந்தகால தவறுகள் மற்றும் கெட்டப் பழக்கங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நான், எப்படி ஒரு முன்மாதிரியாக முடியும்? என் மகனை அன்புடனும் பண்புடனும் வளர்க்க ஆண்டவரே உதவினார். ஆனாலும் என்னை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு ஆண்டவரால் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகித்தேன்.

ஒரு சில சமயங்களில், சம்பூரணரும், இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவருமாகிய ஆண்டவர் ஏற்றகாலத்தில் நம்மை முழுமையாக மறுரூபமாக்குவார் என்பதை என்னால் முழுவதும் கிரகித்துக்கொள்ளமுடியவில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது வேலையில் கிடைக்கும் பயிற்சியை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவன் அவனுக்கு அளித்த வரத்தை பயன்படுத்தும்படி சொன்னதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைப்பூட்டினார் (2 தீமோ. 1:6). தன்னகத்தே உள்ள மக்களுக்கு ஊழியம் புரிந்து அவர்களை வளர்ப்பதற்கு தேவையான அன்பையும், ஒழுக்கத்தையும் (வச. 7) தன் வல்லமையின் ஆதாரமாகிய ஆண்டவர் தனக்கு தருவார் என்பதில் தீமோத்தேயு தைரியம் அடையமுடியும்.

கிறிஸ்து நம்மை இரட்சித்து நம்முடைய வாழ்க்கையின் மூலம் அவரை கனப்படுத்த நம்மை தகுதிபடுத்துகிறார். அதற்கான விசேஷ தகுதி நம்மிடம் இருப்பதினாலன்று, நாம் ஒவ்வொருவரும் அவருடைய குடும்பத்தில் மதிப்பிற்குரிய அங்கத்தினராய் இருப்பதினாலேயே (வச. 9) அது நடக்கிறது.

தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்பாய் இருப்பதே நம்முடைய பங்கு என்பதை நாம் அறிந்துகொண்டால் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நம்மை இரட்சித்து, உலகத்தை பற்றி நமக்குள்ள குறுகிய தரிசனத்தை மாற்றி நமக்கு ஒரு உன்னத நோக்கத்தை கொடுப்பதே கிறிஸ்துவின் பணி. இயேசுவை நாம் அனுதினமும் பின்பற்றுகையில், அவர் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கெல்லாம் அவருடைய அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து பிறரை உற்சாகப்படுத்தும்போது அவர் நம்மையும் மறுரூபமாக்குகிறார்.

ஞானத்தின் அழைப்பு

பிரிட்டன் நாட்டின் பிரசித்திபெற்ற பத்திரிக்கையாளரும் சமுதாய ஆர்வலருமான மால்கம் மக்ரிஜ், தன்னுடைய அறுபதாவது வயதில் விசுவாச அனுபவத்திற்குள் வந்தார். அவருடைய எழுபத்தி-ஐந்தாவது பிறந்ததினத்தில், மனித வாழ்க்கையை பற்றிய இருபத்தி ஐந்து அறிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார். அதிலே ஒன்று, “சந்தோஷமாயிருக்கிற பணக்காரனை நான் சந்தித்ததேயில்லை. ஆனாலும், பணக்காரன் ஆகவேண்டும் என்று விரும்பாத ஏழையையும் நான் மிக அபூர்வமாகத் தான் சந்தித்திருக்கிறேன்”

நம்மில் அநேகர், பணம் நமக்கு சந்தோஷத்தை தராது, என்பதை ஏற்றுக்கொள்வர். ஆனாலும், அதனை நிச்சயிக்க கூடுதலான பணத்தை சேர்த்துக்கொண்டும் இருப்பர்.

ராஜா சாலமோனுக்கு இருந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒருவேளை அவர் பெரும் செல்வந்தராக இருந்தாலும், பணத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்று அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8 அவருடைய அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று. அது எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் “ஞானத்தின் அழைப்பு”. “என் சத்தம் மனுபுத்திரருக்கு தொனிக்கும்…என் வாய் சத்தியத்தை விளம்பும் (வச. 4-7). வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல (வச. 10-11).

ஞானம் சொல்கிறது, “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (வச. 19-21).

மெய்யாகவே இவைகள் அறிய செல்வங்கள்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.