எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கென்னத் பீட்டர்சன்கட்டுரைகள்

“இருக்கிறேன் என்பவர்”

தத்துவம் மற்றும் இலக்கியப் பேராசிரியரான ஜாக், புத்திசாலியும் கூட. தனது பதினைந்து வயதில் தன்னை நாத்திகராக அறிவித்தார், மேலும் இளமைப் பருவத்தில் தனது "நாத்திக நம்பிக்கையை" பிடிவாதமாக பற்றியிருந்தார். கிறிஸ்தவ நண்பர்கள் அவரிடம் விளக்க முயன்றனர். ஜாக் கூறியது போல், "அனைவரும், அனைத்தும் மறுபுறம் சேர்ந்திருந்தன" ஆனால் வேதாகமம் மற்ற இலக்கியங்கள் மற்றும் புராணங்களிலிருந்து வேறுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நற்செய்திகளைப் பற்றி அவர், "ஒரு கட்டுக்கதை எப்போதாவது உண்மையாகி, மனித உருவேற்பேற்றால் அது இப்படித்தான் இருக்கும்" என்றெழுதினார்.

ஒரு வேதாகம பகுதி ஜாக்கை மிகவும் பாதித்தது; யாத்திராகமம் 3. தேவன் மோசேயை எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த அழைத்தார். மோசே தேவனிடம், " பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்" (வ.11) என்றான். தேவன், "இருக்கிறவராக இருக்கிறேன்" (வ.14) என பதிலளித்தார். இந்த பத்தி, வார்த்தைகள் மற்றும் பெயர்கள் குறித்த சற்று கருகலாக இருப்பினும் ஆதியிலிருந்திருக்கும் தேவனின் நித்திய பிரசன்னத்தை பிரதிபலிக்கிறது. சுவாரஸ்யமாக, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" (யோவான் 8:58) என்று இயேசு சொன்னபோது அதையே எதிரொலித்தார்.

சி.எஸ். லூயிஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜாக், இந்தப் பத்தியால் ஆழமாக தொடப்பட்டார். ஒரே மெய்யான தேவன் சொல்ல வேண்டியது இதுதான்; அவர் "இருக்கிறவர்" என்று மட்டுமே. வாழ்க்கையை மாற்றும் ஒரு தருணத்தில், லூயிஸ் "தன்னை விட்டுக்கொடுத்து, தேவனே கடவுள் என்று ஒப்புக்கொண்டார்." லூயிஸ் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக இது இருந்தது.

ஒருவேளை நாம் லூயிஸ் போல் நம்ப இயலாமல் போராடலாம் அல்லது ஒரு மந்தமான நம்பிக்கையுடன் இருக்கலாம். தேவன் உண்மையிலேயே நம் வாழ்வில் "இருக்கிறவரா?" என்று நம்மை நாமே ஆராயலாம்.

இயேசுவின் இரத்தம்

சிவப்பு நிறம் எப்போதும் நாம் செய்யும் பொருட்களில் இயற்கையாகவே இருக்காது. ஆப்பிளின் கவர்ச்சியான நிறத்தை உதட்டுச் சாயத்திலோ, சட்டையிலோ எப்படிக் கொண்டுவருவது? ஆரம்பத்தில், சிவப்பு வண்ணத்துகள்கள் களிமண் அல்லது சிவப்பு பாறைகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1400 களில், ஆஸ்டெக் மக்கள் சிவப்பு சாயத்தை தயாரிப்பதற்கு "காச்சினியல்" பூச்சிகளைப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தனர். இன்று, அதே சிறிய பூச்சிகள் சிவப்பு நிறத்தை உலகிற்கு வழங்குகின்றன.

வேதம் சிவப்பு நிறத்தை ராஜ மேன்மைக்கு ஒப்பிடுகிறது, மேலும் இது பாவத்தையும் அவமானத்தையும் குறிக்கிறது. மேலும் இது ரத்தத்தின் நிறம். போர் வீரர்கள் "இயேசுவின் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தினாா்கள் " (மத்தேயு 27:28). சிவப்பு நிறத்தின் இந்த மூன்று அடையாளங்களும் இனைந்து இதயத்தை உடைக்கும் ஒரே உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இயேசு யூதரின் ராஜா என்று பரியாசம் செய்யப்பட்டார். அவர் அவமானத்தால் மூடப்பட்டார், அவர் விரைவில் சிந்தப்போகும் இரத்தத்தின் நிறத்திலான மேலங்கியால் உடுத்தப்பட்டார். ஆனால் ஏசாயாவின் வார்த்தைகள், நம்மை கறைப்படுத்தும் சிவப்பிலிருந்து நம்மை விடுவிப்பதாக இந்த சிவந்த இயேசுவின் வாக்கை முன்னறிவிக்கிறது: "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்" (1:18).

சிவப்பு சாயத்திற்குப் பயன்படுத்தப்படும் காச்சினியல் பூச்சிகளைப் பற்றிய மற்றொரு விஷயம் - அவை உண்மையில் வெளிப்புறத்தில் பால் வெள்ளை நிறம் கொண்டவை. அவை நசுக்கப்படும்போது சிவப்பான ரத்தத்தைத் தருகின்றன. இந்த சிறிய உண்மை ஏசாயாவின் தீர்க்கரிசன வார்த்தைகளில் எதிரொலிக்கிறது: "[இயேசு] நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;" (ஏசாயா 53:5).

பாவம் அறியாத இயேசு, பாவத்தால் சிவந்த நம்மை இரட்சிக்க வந்திருக்கிறார். பாருங்கள், அவர் நசுங்கிய மரணத்தில், இயேசு அதிக சிவப்பு நிறங்கொண்டார்,  அதனால் நீங்கள் பனியைப் போல வெண்மையாக மாற முடியும்.

தேவனிடம் சரணடைதல்

ஒரு பண்ணை வீட்டில் பிறந்த ஜட்சன் வான் டிவென்டர் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், ஓவியக் கலை பயின்று, ஒரு கலை ஆசிரியரானார். ஆனால், தேவன் அவருக்கு வைத்திருந்த திட்டம் வேறாயிருந்தது. திருச்சபையில் அவரது பனியின் அருமை அறிந்த நண்பர்கள் அவரை சுவிசேஷ பணிசெய்ய உற்சாகப்படுத்தினர். ஜட்சனும் தேவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார், ஆனால் ஓவிய பணிக்கான ஈடுபாட்டை விடுவது கடினமாக இருந்தது. அவர் தேவனோடு போராடினார். இறுதியில் அவர், "என் வாழ்க்கையின் முக்கியமான நேரம் வந்தது, நான் அனைத்தையும் தேவனிடம் ஒப்படைத்தேன்" என எழுதினார்.

தேவன் ஆபிரகாமை தன் மகன் ஈசாக்கை பலியாக அர்ப்பணிக்க அழைத்தபோது அவர் மனம் பட்டபாடுகளை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. "அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்" (ஆதியாகமம் 22:2). தேவன் நம்மைப் பலியிட அழைக்கும் விலைமதிப்பற்ற பொருள் எது என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்? தேவன் இறுதியில் ஈசாக்கைக் காப்பாற்றினார் என நாம் அறிவோம் (வ.12). ஆனால் நோக்கம் நிறைவேறிற்று: "தனக்கு மிகவும் விலைமதிப்புள்ளதை ஆபிரகாம் ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தார்". மிகவும் கடினமான அழைப்பின் மத்தியில் தேவன் வழங்குவார் என்று அவர் நம்பினார்.

தேவன் மீது அன்பு கூறுகிறோம் என்கிற நாம், நமக்கு மிகவும் பிடித்ததை தியாகம் செய்ய ஆயத்தமாக இருக்கிறோமா? சுவிசேஷ பணிக்காகத் தேவனின் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜட்சன் வான் டிவென்டர் பின்னர் "இயேசுவுக்கே அர்ப்பணித்தேன்" என்ற அற்புதமான பாடலை எழுதினார். பிற்காலத்தில், தேவன் ஜட்சனை மீண்டும் ஆசிரியரான பணியாற்ற வாய்ப்பளித்தார். அவரது மாணவர்களில் ஒருவர்தான் இளம் பில்லி கிரஹாம்.

நம் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம் நாம் கற்பனை செய்ய முடியாத நோக்கங்களைக் கொண்டுள்ளது. நமக்குப் பிரியமானதைக் கொடுக்க நாம் விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். நாம் செய்யக்கூடியது இது தான் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம்முடைய ஒரே மகனைப் பலியிட்டார்.

மன்னித்தல் மறத்தல்

ஜில் பிரைஸ், ஹைப்பர் தைமேசியா என்னும் மனோநிலையுடன் பிறந்தார். அதாவது, தனக்கு நேரிட்ட அனைத்துக் காரியங்களையும் அசாதாரணமாக விரிவாய் நினைவில் வைத்திருக்கும் திறன். அவள் தன் வாழ்நாளில் அனுபவித்த எந்த சம்பவத்தின் சரியான நிகழ்வையும் அவள் மனதிலிருந்து மீண்டும் இயக்கக்கூடும்.

“மறக்கமுடியாதவைகள்” என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, நடைபெற்ற குற்றங்களை நேர்த்தியாய் நினைவில் வைத்து கண்டறியும் ஹைப்பர் தைமேசியா மனோநிலைகொண்ட ஒரு பெண் போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தியது. இது ஒருவகையில் நன்மையாகத் தெரிந்தாலும், ஜீல்லுக்கு அப்படி தோன்றவில்லை. அவள் விமர்சிக்கப்பட்ட, இழப்பை அனுபவித்த அல்லது அவளை ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாக்கிய அவள் மறக்கவேண்டும் என்று நினைக்கிற சம்வங்களை அவளால் மறக்க முடியவில்லை. அவள் அந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டு கவலைப்படுகிறாள்.

நம் தேவன் சகலமும் அறிந்தவர் (ஒருவேளை ஒருவகையான தெய்வீக ஹைப்பர் தைமேசியாவாக இருக்கலாம்): அவருடைய புரிதலுக்கு வரம்பு இல்லை என்று வேதம் சொல்கிறது. ஆயினும் ஏசாயா புத்தகத்தில், “நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” (ஏசாயா 43:25) என்று தேவன் சொல்லுவதை நாம் பார்க்கக்கூடும். எபிரெயர் நிருபத்தில், “நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்... அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை” (எபிரெயர் 10:10,17) என்று சொல்லுகிறார்.

நம் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதின் மூலம், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து கவலைப்படுவதை நாம் தவிர்க்கலாம். தேவன் செய்வதைப் போலவே நாமும் அவற்றை விட்டுவிடவேண்டும்: “முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம்” (ஏசாயா 43:18). தம்முடைய மிகுந்த அன்பின் நிமித்தம், அவருக்கு விரோதமாக நாம் செய்த பாவங்களை தேவன் நினைவுகூர விரும்புவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

சாம்பலுக்கு சிங்காரம்

கொலராடோ வரலாற்றில் மிகவும் அழிவுகரமான தீவிபத்தான மார்ஷல் தீவிபத்திற்கு பிறகு, அதில் விலைமதிப்பு மிக்க பொருட்களை இழந்தவர்களுக்கு அதை சாம்பலில் தேடித்தருவதற்காக ஒரு குழுவினர் முன்வந்தனர். விலைமதிப்பற்ற பொருட்கள் இன்னும் அப்படியே பாதுகாக்கப்பாக இருக்கும் என்று குடும்ப உறுப்பினர்கள் நம்பினர். ஆனால் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு நபர் தனது திருமண மோதிரத்தைப் பற்றி மென்மையாக பேசினார். அவர் அதை மாடி படுக்கையறையில் தனது அலமாரியில் வைத்திருந்திருக்கிறார். வீடு இப்போது இல்லை, அவை அப்படியே எரிந்து சாம்பலாக இருந்தது. தேடுபவர்கள் படுக்கையறை இருந்த அதே மூலையில் மோதிரத்தைத் தேடினார்கள். அவர்களுக்கு மோதிரம் கிடைக்கவில்லை.  

ஏசாயா தீர்க்கதரிசி எருசலேம் தரைமட்டமாக்கப்படப்போகிறது என்னும் அதின் அழிவைக் குறித்து மிகுந்த துக்கத்துடன் எழுதுகிறார். அதேபோல், நாம் கட்டியெழுப்பிய வாழ்க்கை சாம்பலாகிவிட்டதாக சில சமயங்களில் உணர்கிறோம். உணர்ச்சி ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் எங்களிடம் எதுவும் இல்லை என்று உணர்கிறோம். ஆனால் ஏசாயா நம்பிக்கை அளிக்கிறார்: “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலை” அளிக்கவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார் (ஏசாயா 61:1-2). தேவன் நம் சோகத்தை மகிமையாக மாற்றுகிறார்: அவர்  “சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தை” கொடுக்கிறார் (வச. 3). “அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்” (வச. 4) என்று வாக்களிக்கிறார். 

அந்த மார்ஷல் தீவிபத்து தளத்தில், ஒரு பெண் எதிர் பக்கத்தில் சாம்பலைத் தேடினார். அங்கு, அவரது கணவரின் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்தார். உங்கள் விரக்தியில், உங்கள் சாம்பலில் தேவன் சிங்காரத்தை கண்டுபிடித்துக்கொடுக்கிறார். அது நீங்களே!

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள். 

இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25).

நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.

ஆயிரம் புள்ளிகள் விளக்கு

அமெரிக்காவின் வடமேற்கு அலபாமாவில் உள்ள டிஸ்மல்ஸ் கேன்யன் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்க்கிறது. இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒருவகையான புழுக்கள் குஞ்சுபொரித்து, பளபளக்கும் புழுக்களாக மாறி, இரவில் இந்த பளபளப்பான புழுக்கள் ஒரு நீலநிறமான ஒளியை பிரதிபலிக்கின்றன. மேலும் அதுபோன்று ஆயிரக்கணக்கான புழுக்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான ஒளியை தோற்றுவிக்கின்றன.

பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்தவர்களை அவ்விதமாய் ஒளிரும் புளுக்காய் கருதுகிறார். “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:8). ஒருசில வேளைகளில் என்னுடைய இந்த சிறிய விளக்கு எவ்விதம் ஒளிதரமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு தனிநபரின் விளக்கு அல்ல என்று பவுல் சொல்லுகிறார். அவர் நம்மை “வெளிச்சத்தின் பிள்ளைகள்” என்று அழைக்கிறார் (வச. 8). மேலும் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு,” தேவன் நம்மை தகுதியுள்ளவர்களாய் மாற்றியிருக்கிறார் என்றும் சொல்லுகிறார் (கொலோசெயர் 1:12). உலகத்திற்கு ஒளியாயிருப்பது என்பது கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையாய் இணைந்து செயல்படுத்துகிற ஒரு கூட்டு முயற்சி. அதை ஒளிரும் புளுக்களாய், “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” (எபேசியர் 5:19) தேவனை மகிமைப்படுத்தும்படியாய் பவுல் வலியுறுத்துகிறார்.

நாம் சோர்ந்துபோகும்போது, நம்முடைய ஜீவியத்தின் சாட்சியை நினைவுகூருவது என்பது இருண்ட சூழ்நிலையில் ஒளிரும் ஒரு விளக்கைப் போன்று தெரியலாம். ஆனால் நாம் தனியாள் இல்லை. தேவனுடைய வழிநடத்துதலின்பேரில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பிரயாசப்படுவோம். ஒளிகொடுக்கும் புளுக்கள் ஒன்றாக இணைந்து, மற்றவர்களை வெளிச்சத்திற்கு ஈர்ப்போம்.

மாறா தேவன்

புகழ்பெற்ற உருவப்புகைப்படம் ஒன்று ஒரு நபரின் காலணிச்சுவடுகளை சாம்பல் பின்னணியில் காட்டியது. இது விண்வெளி வீரர் “பஸ் ஆல்ட்ரின்” 1969 இல் சந்திரனில் விட்டுச் சென்ற கால்தடமாகும். கால்தடங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனில் காற்று மற்றும் நீர் இல்லாததால், எதுவும் அரிக்கப்படுவதில்லை. எனவே சந்திர நிலப்பரப்பில் என்ன நடந்தாலும் அது அப்படியே இருக்கும்.

 

தேவனின் நிலையான பிரசன்னத்தை பற்றி நினைக்கும் போது அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. யாக்கோபு எழுதுகிறார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17). அப்போஸ்தலன் இதை நம்முடைய சொந்த போராட்டங்களின் அடிப்படையில் எழுதுகிறார்: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (வ. 2,3) ஏனென்றால் நாம் ஒரு உன்னதமான மற்றும் மாறாத தேவனால் நேசிக்கப்படுகிறோம்!

 

கஷ்டநேரங்களில், தேவனின்  மாறா உதவியை நினைவில் கொள்ளலாம். ஒரு மகத்தான பாமாலையை நினைவுபடுத்தலாம்: "நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர், நீர் ஐஸ்வர்யமுள்ளவர், சதா காலமும் நீர் மாறாதவர்". ஆம், நம் தேவன் தம்முடைய நிரந்தர காலடியை இவ்வுலகில் விட்டுவிட்டார். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார். அவருடைய உண்மை பெரிது.                                                        

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.