ஒவ்வொரு வருடமும், இலையுதிர் காலத்தில், எங்கள் கார்னர்ஸ்டோன் (Cornerstone) பல்கலைக்கழக வளாகத்திலே சுவைமிக்க நன்றிகூறுதல் விருந்து வைப்போம். எங்கள் மாணவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். சென்ற வருடம் சில மாணவர்கள், தாங்கள் அமர்ந்து உணவருந்திய இடத்திலேயே ஒரு விளையாட்டை விளையாடினார்கள். அதாவது, அதிகப்படியாக மூன்று நொடிகளுக்குள், தாங்கள் நன்றி தெரிவிக்க விரும்பிய காரியத்தைப் பெயரிட வேண்டும். மேலும் மற்றொருவர் சொன்னதை திருப்பிச் சொல்லக் கூடாது. அதிக நேரம் எடுத்தால், விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தேர்வுகள், காலக்கெடு, விதிமுறைகள் மற்றும் அநேக கல்லூரி சார்ந்த காரியங்களை மாணவர்கள் குறைகூற கூடும். ஆனால் அந்த மாணவர்கள் நன்றி கூறுவதை தெரிந்து கொண்டார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால், இந்த விளையாட்டின் முடிவிலே அந்த மாணவர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் குறைகூறுவதை தேர்வு செய்திருந்தால் அந்த மனநிறைவு அவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

நாம் குறைகூறும்படியான காரியங்கள் எப்பொழுதும் இருந்தாலும், நாம் கவனமாய் பார்த்தால், நாம் நன்றி தெரிவிக்கும்படியான ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டியைக் குறித்து பவுல் விவரிக்கும் பொழுது, “நன்றியறிதல்” என்கின்ற பண்பே ஒன்றிற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. “நன்றியறிதல் உள்ளவர்களாயுமிருங்கள்” என்று கொலோசெயர் 3:15ல் கூறுகிறார். “இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி,” (வச. 16) என்று நன்றியுணர்வை பக்தி பாடலாய் வெளிப்படுத்துகிறார். மேலும், “நீங்கள் எதைச் செய்தாலும்… பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்,” (வச. 17) என்று கூறுகிறார். நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கும்படியான அறிவுரையை பவுல், சிறைச் சாலையிலிருந்து எழுதியுள்ளார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது.

இன்று நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் தேர்வு செய்வோம்.