போதும் என்பது எவ்வளவு? வளர்ந்த நாடுகள் பல பொருட்களை வாங்குவதற்கென்றே ஒதுக்கப்பட்ட அந்த நாளில் இந்தக் கேள்வியை கேட்டால் நலமாயிருக்கும். அமெரிக்க நன்றியறிதல் விடுமுறை நாளுக்கு அடுத்த நாளாகிய கருப்பு வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகிறேன். அன்று அநேக கடைகள் சீக்கிரமே திறக்கப்பட்டு தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார்கள்; இது அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது. குறைந்த அளவு பணமுடையவர்கள், தங்களால் இயன்றதை வாங்க முற்படுவார்கள். ஆனால் வருந்ததக்கவிதமாக, ஒரு சிலருக்கோ பேராசையே தூண்டுகோளாக இருப்பதால் பேரம் பேசுவதினால் ஏற்படும் சண்டையில் வன்முறை வெடிக்கிறது.

பிரசங்கி (பிர. 1:1) என்று அழைக்கப்படும் பழைய எற்பாட்டு ஆசிரியருடைய ஞானத்தின் மூலம், வெறிபிடித்தது போல கடைகளில் பொருள் வாங்குவதற்கு ஒரு மாற்று மருந்தை அறிந்துகொள்ளலாம். இது நம் இருதயத்திற்கும் பொருந்தும். பணத்தை நேசிப்பவர்கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. ஆகவே அவர்களுடைய உடைமைகளால் அவர்கள் ஆளப்படுவார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும், அவர்கள் இறக்கும் பொழுது ஒன்றையும் கொண்டு செல்வதில்லை. “வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்” (5:15). பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது. ஆகவே “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை,” (1 தீமோ. 6:6-10) முயன்று நாட வேண்டுமென்று, பிரசங்கியின் கூற்றை திமோத்தேயுவுக்கு எழுதும் கடிதத்தில் பவுல் எதிரொலிக்கிறார்.

நம்முடைய நிறைவிலும் சரி குறைவிலும் சரி, நம் இருதயங்களில் தேவன் இல்லாத காலி இடத்தை முறையற்ற வழிகளிலே நாம் நிரப்ப முயற்சிக்கலாம். ஆனால் நம்முடைய சமாதானம் மற்றும் சுகத்திற்காக தேவனையே நோக்கினால், அவர் நம்மை அவருடைய நன்மையினாலும் அன்பினாலும் நிரப்புவார்.