டிசம்பர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: டிசம்பர் 2016

இப்பொழுதே அந்த நாள்

நர்சரி வகுப்பில் படிக்கும் என் பேத்தி மேகியும் கிண்டர்கார்டன் படிக்கும் அவளது சகோதரி கேட்டியும் சில போர்வைகளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றனர். அங்கு போர்வையால் கூடாரம் அமைத்து அதில் விளையாட முயன்றனர். கொஞ்ச நேரம் கழித்து மேகி தனது தாயாரை அழைக்கும் சத்தம் கேட்டது.

“அம்மா, இங்கே சீக்கிரம் வாங்க!” என கத்தினாள். “நான் இயேசுவை எனது உள்ளத்தில் அழைக்க விரும்புகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள்” என்று பின்பு கூறினாள். விளை யாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென அவள் தன் வாழ்விற்கு இயேசு மிகவும் தேவை என்பதை உணர்ந்து அவர் மேல் அவளது விசுவாசத்தை வைக்க முடிவுசெய்தாள்.

இயேசுவை விசுவாசிக்க உதவியை நாடிய மேகியின் அவசர தொனியில் ஒலித்த குரலானது
2 கொரிந்தியர் 6ல் பவுல் இரட்சிப்பை பற்றிக் கூறிய வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகிறது. மேசியாவாகிய கிறிஸ்து நிச்சயமாகவே பூமியில் வந்துவிட்டார் என்றும், அவரது மரணமும், உயிர்த்தெழுதலின் மூலமும், “அநுக்கிரக காலம்” ஆரம்பித்ததை குறித்தும் போதித்து வந்தார். நாம் அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இன்று இரட்சிப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2) என்று அவர் கூறினார். யாரெல்லாம் பாவமன்னிப்பிற்காக இயேசுவை இன்னும் விசுவாசிக்க வில்லையோ, உங்களுக்கு இதுவே சரியான நேரம் ஆகும். மிகச் சீக்கிரமாக இந்த முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் நீங்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதற்கான தேவையை உங்கள் உள்ளத்தில் தோன்றச் செய்திருக்கலாம். மேகியைப் போல் நீங்களும் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவண்டை ஓடி வாருங்கள். இன்றே அந்த நாள்.

தேவனோடு தனித்திருத்தல்

அன்றைய தினத்தில் காலைவேளையில் சபையின் ஓர் அறை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு டஜன் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு நான் உதவியாளராய் இருந்தேன். சற்று நேரத்தில் அறையின் சீதோஷண நிலைமாறி வெப்பம் அதிகரித்தது. அதனால் நான் கதவைத் திறந்து வைத்தேன். ஒரு சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் தப்பித்து ஓடினான். நானும் பின் தொடர்ந்து ஓடினேன். அப்பொழுது அவன் தன் தந்தையிடம் ஓடிச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அந்த சிறுவன் செய்ததைதான் நாமும் செய்ய வேண்டும். அதாவது அவன் தன் தந்தையிடம் சென்றான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு நேரம் செலவிடவும் ஜெபிக்கவும் வாய்ப்புகளைத் தேடினார். மாம்சத்தில் அவரது பெலனை எல்லாம் ஊழியத்திற்கு செலவிட்ட போது இப்படி தனித்திருந்து தான் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் என்று சிலர் கூறுவதுண்டு. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசு தனித்திருக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பின் தொடர்ந்தனர். அவர்களது தேவை அறிந்த இயேசு அற்புதமாய் சுகமும் உணவும் அளித்தார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).

இயேசு திரும்ப திரும்ப அநேக ஜனங்களுக்கு உதவி செய்தார். ஆனால் அவர் பரபரப்புடனோ, சோர்வுடனோ காணப்படவில்லை. அவர் தேவனோடு கொண்ட நல்லுறவை ஜெபத்தினால் எப்போதும் ஸ்திரப்படுத்திக் கொண்டேயிருந்தார். நீங்கள் எப்படி செயல்படுகின்றீர்கள்? தேவனை அநுபவித்து அவரது அன்பையும், பெலனையும், முழுமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவரோடு நேரம் செலவிடவும், தனித்திருக்கவும் செய்கிறீர்களா?

முத்திரை மோதிரம்

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நண்பரை நான் முதன் முதலாக சந்தித்த பொழுது, மிடுக்காக தொனித்த அவரது ஆங்கில உச்சரிப்பையும், அவரது சிறு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் நான் கவனித்தேன். பின்னர் அது வெறும் அலங்கார அணிகலன் அல்ல என்பதை அறிந்து கொண்டேன். அதில் பொறிக்கப்பட்ட சின்னம் அவரது குடும்பத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியது.

சொல்லப்போனால், ஆகாய் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட முத்திரை மோதிரம் போல அதை எண்ணலாம். இந்த சிறிய பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசி தேவ ஜனத்தை மீண்டுமாய் ஆலயத்தை கட்டும்படி அழைக்கிறார். அகதிகளாய் இருந்தவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பிய பின் அவர்கள் மீண்டும் தேவாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போது, எதிரிகள் மூலமாய் பிரச்சனை கிளம்பியது. அவர்களது எதிர்ப்பால் கட்டும் பணிகள் முடங்கியது. அப்போது ஆகாய் தீர்க்கதரிசி செருபாபேலை நோக்கி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் தலைவராகவும், தேவனுடைய முத்திரை மோதிரமாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதை அவர் செருபாபேலுக்கு நினைப்பூட்டினார்.

ஆதிகாலத்தில் முத்திரை மோதிரம் ஓர் அடையாளச் சின்னமாக விளங்கியது. அவர்களது கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகிலோ அல்லது மிருதுவான களிமண்ணிலோ அழுத்தி அதன் அடையாளத்தை எடுப்பார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும் போதும், அவரது கிருபையை நம்மை சுற்றியுள்ள அயலானிடத்தில் வெளிப்படுத்தும் போதும், தீமையின் கட்டுகளில் இருந்து மக்களை விடுவிக்க போராடும் போதும் நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளான அடையாளத்தை இவ்வுலகத்தில் முத்திரை பதிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நமது தாலந்துகளையும், ஆசைகளையும், ஞானத்தையும் நாம் வெளிப்படுத்தும் போது அது மற்றவரைப் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாய் அமைகின்றது. அப்படி செய்கையில் நாம் தேவனின் சாயலை புதுமையான விதத்தில் வெளிப்படுத்துகின்றோம். இந்த பூமியில் தேவனுடைய முத்திரை மோதிரமாய் விளங்குவது நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிலாக்கியமாகும்.

அன்பிற்குள் அடைக்கப்பட்டு

ஜூன் 2015ல் பாரீஸ் நகரில் உள்ள பான்ட் டெஸ் ஆர்ட்ஸ் (Pont des Arts) நடைபாலத்தில் உள்ள கம்பிகளில் இருந்து 45டன் எடை கொண்ட பூட்டுகளை நீக்கினர். அன்பின் நினைவுச்சின்னமாக தம்பதிகள் தங்களது பெயர்களை ஓர் பூட்டில் எழுதி, பாலத்தின் கம்பியில் அதை பூட்டி சாவியை கீழே ஓடும் சியன் (River Seine) ஆற்றில் போட்டுவிடுவர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இச்செயலில் ஈடுபட்டத்தினால், அந்த “அன்பின்” கனத்தை அப்பாலத்தினால் தாங்க முடியவில்லை. கடைசியில் நகர நிர்வாகம், பாலத்தை பாது காப்பதற்காக இந்த “அன்பு பூட்டு” களை நீக்கியது.

முடிவில்லா அன்பின் அடையாளச் சின்னமாக அந்த பூட்டுகள் எண்ணப்பட்டது. ஆனால் உலகப்பிரகாரமான அன்பு கடைசி வரை நீடிப்பதில்லை. நெருங்கிய நண்பர்களுக்கு இடையே கூட மனக்கசப்பு ஏற்பட்டு மன்னிக்காமல் கூட இருந்தும் விடலாம். குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதங்கள் முளைக்கலாம். அவர்கள் மற்றொருவரை மன்னிக்காமலேயே இருந்து விடலாம். எதற்காக திருமணம் செய்தோம் என்ற எண்ணத்தையே மறந்துபோன நிலையில் மனதளவில் பிரிந்த நிலையில் கணவனும், மனைவியும் வாழலாம். காரணம் மனிதனின் அன்பு நிலையற்றது.

ஆனால் சகலத்தையும் தாங்கும் நிலையான அன்பு ஒன்று உள்ளது-அதுதான் தேவனின் அன்பு. “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை (அன்பு) என்றுமுள்ளது.” நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் முடிவில்லாத தேவனின் அன்பை எடுத்துரைக்கும் வாக்குத்தத்தங்கள் வேதம் முழுவதிலும் நிறைந்திருப்பதைக் காணலாம். அவரது அன்பின் மிகச்சிறந்த அடையாளச் சின்னமாய் விளங்குவது அவரது குமாரனின் சிலுவை மரணம் தான். அதைக் கண்டு அவர்மேல் விசுவாசம் வைப்பவர் நித்திய வாழ்வை பெறுவர். அதன் பின்னர் ஒருவராலும் அவரது அன்பை விட்டு நம்மை பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).

அன்பான விசுவாசிகளே, நித்தியத்திற்கும் நாம் தேவனின் அன்பிற்குள் ‘பூட்டப்பட்டிருக்கிறோம்.’

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாவங்களை களையெடுத்தல்

எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.

நாம் தனியாக இல்லை

ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.

நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.

நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார்.  ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.