வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நண்பரை நான் முதன் முதலாக சந்தித்த பொழுது, மிடுக்காக தொனித்த அவரது ஆங்கில உச்சரிப்பையும், அவரது சிறு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் நான் கவனித்தேன். பின்னர் அது வெறும் அலங்கார அணிகலன் அல்ல என்பதை அறிந்து கொண்டேன். அதில் பொறிக்கப்பட்ட சின்னம் அவரது குடும்பத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியது.

சொல்லப்போனால், ஆகாய் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட முத்திரை மோதிரம் போல அதை எண்ணலாம். இந்த சிறிய பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசி தேவ ஜனத்தை மீண்டுமாய் ஆலயத்தை கட்டும்படி அழைக்கிறார். அகதிகளாய் இருந்தவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பிய பின் அவர்கள் மீண்டும் தேவாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போது, எதிரிகள் மூலமாய் பிரச்சனை கிளம்பியது. அவர்களது எதிர்ப்பால் கட்டும் பணிகள் முடங்கியது. அப்போது ஆகாய் தீர்க்கதரிசி செருபாபேலை நோக்கி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் தலைவராகவும், தேவனுடைய முத்திரை மோதிரமாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதை அவர் செருபாபேலுக்கு நினைப்பூட்டினார்.

ஆதிகாலத்தில் முத்திரை மோதிரம் ஓர் அடையாளச் சின்னமாக விளங்கியது. அவர்களது கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகிலோ அல்லது மிருதுவான களிமண்ணிலோ அழுத்தி அதன் அடையாளத்தை எடுப்பார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும் போதும், அவரது கிருபையை நம்மை சுற்றியுள்ள அயலானிடத்தில் வெளிப்படுத்தும் போதும், தீமையின் கட்டுகளில் இருந்து மக்களை விடுவிக்க போராடும் போதும் நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளான அடையாளத்தை இவ்வுலகத்தில் முத்திரை பதிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நமது தாலந்துகளையும், ஆசைகளையும், ஞானத்தையும் நாம் வெளிப்படுத்தும் போது அது மற்றவரைப் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாய் அமைகின்றது. அப்படி செய்கையில் நாம் தேவனின் சாயலை புதுமையான விதத்தில் வெளிப்படுத்துகின்றோம். இந்த பூமியில் தேவனுடைய முத்திரை மோதிரமாய் விளங்குவது நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிலாக்கியமாகும்.