அனைவருக்கும் மகிழ்ச்சி
கிறிஸ்தவ புத்தக வெளியீட்டு மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. 280 நபர்கள் 50 நாடுகளில் இருந்து வந்திருந்தனர். கடைசி நாளில் அவர்கள் அனைவரும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துகொள்ள ஹோட்டலின் வெளியே திரண்டனர். இரண்டாம் தளத்தில் இருந்த பால்கனியில் இருந்து புகைப்படக்காரர் பல புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்த பின்பு “எல்லாம் முடிந்தது” என்று சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்து ஒருவர் “ஜாய் டூ த வேர்ல்டு!” (Joy to the world) என்று கத்தினார். உடனடியாக மற்றொருவர் “த லார்ட் இஸ் கம்” (The Lord is Come) என்ற பாடலின் அடுத்தவரியை மறுமொழியாக பாடினார். உடனே குழுவாய் சேர்ந்து அக்கிறிஸ்துமஸ் பாடலை அனைவரும் அழகாய் பாடினர். மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.
லூக்கா விவரிக்கும் கிறிஸ்துமஸ் செய்தியில் ஓர் தேவ தூதன் இயேசுவின் பிறப்பை மேய்ப்பர்களுக்கு இவ்வாறு அறிவிப்பதை காணலாம். “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று காத்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11).
இது சிலருக்கான மகிழ்ச்சி அல்ல, இது எல்லோரும் அனுபவிப்பதற்கே. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை... தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா. 3:16).
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றிப்போடும் இயேசுவின் நற்செய்தியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் போது, நாம் அவர்களோடு ஒருமனப்பட்டு அவரது நீதியின் மகிமையையும் அன்பின் மகத்துவங்களையும் புகழ்ந்து பாடுகின்றோம்.
“ஆர்ப்பரிப்போம் இந்நாளில், கிறிஸ்து இன்று பிறந்தாரே!”
சிறையில் ஓர் கிறிஸ்துமஸ்
அருட்திரு. மார்டின் நீமோலர் (Rev. Martin Niemoller), ஜெர்மனியில் மிகவும் பிரசித்திப் பெற்ற போதகர். அவர் வெளிப்படையாக ஹிட்லரை எதிர்த்து பேசியதால் எட்டு வருடங்கள் நாஜி போர்க் கைதிகள் முகாமில் சிறைவாசம் அனுபவித்தார். 1944ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று நீமோலர் டாச்சோவில் (Dachau) தன்னுடன் இருந்த மற்ற சிறைக்கைதிகளை பார்த்து “என் அருமை நண்பர்களே, இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, பெத்லகேமில் குழந்தையாய்ப் பிறந்து நம்முடைய கடினமான பாரங்களை சுமக்க வந்த அந்த ஒப்பில்லாதவரைத் தேடுவோம். தேவன் தாமே நம்மையும், அவரையும் இணைக்க ஓர் பாலம் கட்டினார். பரத்திலிருந்து ஓர் விடியல் நம்மேல் உதித்தது,” என்ற விசுவாச வார்த்தைகளைக் கூறினார்.
கிறிஸ்துமஸ் நாளில் நாம் தழுவிக்கொள்ள வேண்டிய நற்செய்தி இதுவே. தேவன் கிறிஸ்துவாக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து அவருக்கும், நமக்கும் இடையேயான இடைவெளியை தகர்த்துவிட்டார். இருள் சுழ்ந்த சிறைவாழ்க்கைகுள் ஒளியாய் புகுந்துவிட்டார். நாம் சுமந்து செல்லும் துன்பம், துயரம், குற்ற உணர்வு, தனிமை ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.
இருண்ட சிறைச்சாலையில் தங்கியிருந்த நீமோலர், “அன்று ஆடு மேய்ப்பவர்கள் மேல் பிரகாசமான ஒளி உதித்தது. அது போல இன்று நம் இருளிலும் ஜீவ ஒளியின் கதிர்கள் நம்மேல் உதிக்கும்” என்ற நற்செய்தியை பகரிந்து கொண்ட அவரது வார்த்தைகள் ஏசாயா தீர்க்கதரிசனமாய் உரைத்த வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றது. “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா. 9:2).
நாம் இன்றைக்கு எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் தம்முடைய மகிழ்ச்சியோடும், ஒளியோடும் இயேசு நம்முடைய இருளான வாழ்க்கைக்குள் பரவேசித்துள்ளார்.
எதை நான் தருவேன்?
கிறிஸ்துமஸிற்காக தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கும் பொறுப்பை பெற்ற சிலர் அந்த வருடம் ஓர் புதுமையான வழியை கையாண்டனர். “கிறிஸ்துமஸ் பட்டியல்” என்ற கருப் பொருளின் அடிப்படையில் அலங்கரித்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்காமல், ஒவ்வொரு நபரிடமும் ஓர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒரு சீட்டை கொடுத்தனர். இயேசுவிடத்திலிருந்து என்ன பரிசு வேண்டும் என்று ஒரு பக்கத்திலும், பின்பக்கத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாடி அங்கீகரிக்கும் விதத்தில் அவருக்கு என்ன பரிசு கொடுக்க போகின்றனர் என்றும் எழுதவேண்டும். அதை வைத்து ஆலயத்தை அலங்கரிக்க எண்ணினர்.
நீங்கள் இதை செய்வீர்களானால் என்ன பரிசைக் கேட்பீர்கள், எதைக் கொடுப்பீர்கள்? வேதாகமத்தில் அநேக யோசனைகளைக் காணலாம். தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பதாக வாக்களித்துள்ளார். அதனால் நாம் ஓர் புதிய வேலையைக் கேட்கலாம், பணத் தேவைகளை சந்திக்கும்படியாகவும், நம்முடைய அல்லது மற்றவருடைய சரீர சுகத்திற்காகவும், குடும்பங்களில் நல்லுறவு மேம்படவும் நாம் வேண்டிக்கொள்ளலாம். மேலும் தேவனுடைய பணியைச் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பரிசு என்ன என்று நாம் எண்ணலாம். அவற்றில் பல ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் ஆவியின் கனி நம்வாழ்வில் இன்னும் அதிகமாக வெளிப்பட விரும்புவோம் (கலா. 5:22-23).
அவரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகச்சிறந்த பரிசு - தேவனின் ஈவாகிய குமாரனும் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து தான். அவரின் மூலம் பாவ மன்னிப்பையும், மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கையையும், சதாகாலமும் நீடிக்கும் நித்திய வாழ்வின் வாக்குறு தியையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே அவருக்கு நம்மால் தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்னவென்றால் நம்முடைய இருதயம் தான்.
மிகச் சிறந்த பரிசு
நியூ இங்கிலாந்தில் வடக்கே உள்ள ஓர் குளிர்கால ஒடுக்கக் கூட்ட (retreat) மையத்தில் ஒருவர், “நீங்கள் பெற்ற மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எது?” என்ற கேள்வியை கேட்டார்.
அப்பொழுது விளையாட்டு வீரர் ஒருவர் ஆர்வத்துடன் பதில் அளித்தார். “எளிமையான கேள்வி. சில வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படிப்பை முடிக்கும் போது நிச்சயமாக நான் கால்பந்து வீரனாவேன் என்று எண்ணினேன். அது நடக்கவில்லை. அதனால் கோப மடைந்தேன். வாழ்க்கை கசந்துபோனது. அது என்னை வாட்டியது. அக்கசப்பை எனக்கு உதவிசெய்ய வந்தவர்களிடம் கூட காட்டினேன்” என்று அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரை பார்த்தவாறு கூறினார்.
“இரண்டு வருடங்கள் கால்பந்து இல்லாமல் ஓடியது. அப்போது கிறிஸ்துமஸ் நாட்களில், இவருடைய சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நாடகத்தை காணச் சென்றேன்” என்று அவரின் நண்பரை சுட்டிக்காட்டினார். “இயேசுவை நான் தேடிப்போகவில்லை. என்னுடைய சகோதரியின் மகள் அந்த நாடகத்தில் இருந்தாள். அவளை காணச் சென்றேன். ஆனால் நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது, தீடீரென எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. இது சற்று வேடிக்கையான விஷயமாக தோன்றும்; ஆனால் திடீரென எனக்கு இயேசுவை சந்திக்க வேண்டும் போல் இருந்தது. அந்த மேய்ப்பர்களோடும், தூதர்களோடும் சேர்ந்து கொள்ள மனம் துடித்தது. அப்பொழுது அனைவரும் ‘சைலன்ட் நைட்’ (Silent Night) பாடலை பாடி முடித்தனர். நானோ கண்ணீர் மல்க அழுதுகொண்டு அமர்ந்திருந்தேன்.
“அன்றைக்கு தான் எனக்கு மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுகிடைத்தது.” திரும்பவும் அவரது நண்பரைச் சுட்டிக்காட்டி, “இந்த மனிதன் அவருடைய குடும்பத்தை தனியே அனுப்பி விட்டு என்னோடு நற்செய்தியை பகிர்ந்து, நான் இயேசுவை சந்திப்பதற்காக நேரம் செலவிட்டார்” என்றான்.
அப்போது அவரது நண்பன் குறுக்கிட்டு “நண்பர்களே, அது தான் நான் பெற்ற மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாகும்!” என்று கூறினார்.
இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றின இந்த எளிமையான கதையை மற்றவருடன் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.
என் வாழ்வின் கதை
நியூயார்க் நகரில் உள்ள ஓர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் உள்ள மாட்டுத்தொழுவத்தில், பிறந்த பச்சிளம் குழந்தையை யாரோ விட்டுவிட்டுச் சென்றனர். நிச்சயமாக கண்டெடுக்கப்படுவான் என்ற நம்பிக்கையில் துணியில் சுற்றி அக்குழந்தையை ஓர் இளம் பெண் மனம் நொந்து விட்டுவிட்டிருக்க வேண்டும். அவளை நாம் எளிதில் நியாயம் தீர்க்கலாம், ஆனால் அக்குழந்தைக்கு வாழ ஓர் வாய்ப்பளிக்கப் பட்டிருப்பதை எண்ணி நன்றி கூறலாம்.
என் வாழ்வில் இச்சம்பவம் வெறும் கதையல்ல. நான் ஒரு தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை. என் பிறப்பை பற்றிய சம்பவங்கள் எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒரு போதும் கைவிடப்பட்டவனாக உணரவேயில்லை. எனக்கு இரண்டு தாயார். இருவரும் நான் நன்கு வாழவேண்டும் என்று எண்ணினர். ஒரு தாய் எனக்கு உயிர் கொடுத்தார்கள்; மற்றவர் அவரது வாழ்க்கையை எனக்குள் விதைத்தார்கள்.
யாத்திராகமத்தில் இப்படிப்பட்ட ஓர் அன்பான தாயாரை நாம் பார்க்கலாம். இஸ்ரவேலரில் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிடும் படி பார்வோன் ராஜா கட்டளையிட்டான் (1:22). அதனால் மோசேயுடைய தாயார் அவளால் இயன்ற வரை அக்குழந்தையை ஒளித்து வைத்தாள். ஆனால் மூன்று மாதம் ஆன பின்பு குழந்தையை ஒர் தண்ணீர் புகாத கூடையில் வைத்து நைல் நதியில் விட்டுவிட்டாள். இளவரசியால் அக்குழந்தை மீட்டெடுக்கப்பட்டு, பார்வோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டு, பின்னர் யூத மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும்படியான தேவ திட்டம் நன்றாகவே நிறைவேறியது.
செய்வதறியாது தவிக்கும் ஓர் இளம் தாய் தன் குழந்தை வாழும்படியாக முயற்சித்தால், தேவன் அங்கிருந்து செயல் படத் தொடங்குவார். ஏனெனில் எண்ணி முடியாத மிகவும் ஆச்சரியப்படதக்க வழிகளில் செயல்படுவது தேவனுடைய இயல்பு.
மகிழ்ச்சியைப் பரப்புதல்
ஜேனட் (Janet), ஆங்கில ஆசிரியராக வெளிநாட்டிலுள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் படி சென்றாள். அங்கு உற்சாகமற்ற சோர்வான சூழ்நிலை காணப்பட்டது. அவரவர் அவர்களுடைய வேலையை செய்தார்கள், ஆனால் ஒருவரும் சந்தோஷமாக காணப்படவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யவோ, உற்சாகப்படுத்தவோ இல்லை. ஆனால், தேவன் தனக்கு செய்த எல்லாவற்றையும் நினைத்து, தான் செய்த எல்லாவற்றிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். அவள் எப்பொழுதும் புன்னகையோடேயிருந்தாள். அவள் தோழமை உணர்வோடு தானாகவே மற்றவருக்கு உதவி செய்தாள். அவள் பாடல்களையும், பாமாலைகளையும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.
ஜேனட் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக் கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக அப்பள்ளியின் சூழ்நிலை மாறியது. ஒவ்வொருவராக புன்னகைக்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஆரம்பித்தனர். அப்பொழுது பள்ளியை பார்வையிட வந்த நிர்வாகி, தலைமை ஆசிரியரை பார்த்து ஏன் அப்பள்ளி வித்தியாசமாக உள்ளது என்று கேட்டதற்கு, விசுவாசி அல்லாத அத்தலைமை ஆசிரியர், “இயேசு மகிழ்ச்சியை கொண்டு வருகிறார்” என்று பதிலளித்தார். ஜேனட் பொங்கி வழியும் கிறிஸ்துவின் சந்தோசத்தை கொண்டிருந்தாள், அதை தன்னை சுற்றி இருந்தவர்களின் மீதும் தெளித்தால்.
சாதாரண மேய்ப்பர்களிடம் ஒரு அசாதாரண பிறப்பை பற்றிய செய்தியை அறிவிக்க தேவன் ஒரு தேவதூதனை அனுப்பினார் என்று லூக்கா சுவிசேஷம் கூறுகிறது. புதிதாகப் பிறந்த அக்குழந்தை, “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும்” என்று வியப்பூட்டும் விதத்தில் அதிகாரப்பூர்வமாக அத்தூதன் அறிவித்தார் (லூக். 2:10). அது அப்படியே நிறைவேறிற்று.
நூற்றாண்டுகளைக் கடந்து அப்பொழுதிலிருந்து இச்செய்தி பரவி, இன்று நாம் கிறிஸ்துவின் மகிழ்ச்சியை உலகிற்கு பறைசாற்றும் தூதர்களாக இருக்கிறோம். நம்முன் வாசம் செய்யும் ஆவியானவரின் உதவியோடு இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் அவருடைய மகிழ்ச்சியைத் தொடர்ந்து பரவ செய்வோம்.
எதிரியின் மேல் அன்பு
1950ஆம் ஆண்டு, யுத்தம் தொடங்கிய பொழுது, கிம் சின் கியூங் தன் தேசத்திற்காக போரிட தென் கொரிய படையிலே சேர்ந்தான். ஆனால், போரின் பயங்கரங்களுக்கு தான் தயாராகவில்லை என்பதை சீக்கிரத்திலேயே அறிந்துகொண்டான். போரிலே தன்னோடு இருந்த வாலிப நண்பர்கள் இறந்து மடிந்ததைக் கண்ட பொழுது, தன்னுடைய ஜீவனுக்காக தேவனிடம் மன்றாடினான். ஒரு வேளை உயிர் தப்பினால், தன் எதிரிகளை நேசிக்க கற்றுக்கொள்வதாக உறுதியளித்தான்.
65 ஆண்டுகள் கழித்து டாக்டர் கிம் அந்த ஜெபத்தை எண்ணிப்பார்த்தார். அநேக ஆண்டுகளாக வட கொரியா மற்றும் சீன தேசத்திலுள்ள அனாதைகளைப் பராமரித்தும், கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து உதவியதின் மூலமூம், முன்பு எதிரிகளாகக் கருதியவர்கள் மத்தியில் அவர் அநேக நண்பர்களை சம்பாதித்தார். இன்று, அவர் எல்லாவித அரசியல் அடையாளங்களையும் தவிர்த்து, இயேசு கிறிஸ்துவிலுள்ள தன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன்னை ‘அன்பன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
யோனா தீர்க்கதரிசியோ வேறு விதமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். மீனின் வயிற்றிலிருந்து காப்பாற்றப் பெற்ற வியத்தகு செயல் கூட அவர் மனதை மாற்றவில்லை. இறுதியாக அவர் தேவனுக்கு கீழ்ப்படிந்தாலும், தேவன் அவன் எதிரிகளுக்கு இரக்கம் பாராட்டுவதை காண்பதை விட செத்து மடிவதே மேல் என்று கூறினான் (யோனா 4:1-2,8).
நினிவே தேசத்தார் மீது யோனா தீர்க்கதரிசி எப்பொழுதாவது அன்பு செலுத்தக் கற்றுக்கொண்டானோ என்று நம்மால் யூகிக்க மாத்திரமே முடியும். ஆனால் நம்மைக் குறித்து நாம் ஆழ்ந்து சிந்திப்போமானால், நாமும் யோனாவின் மனப்பான்மையை நாம் பயப்படுகிறவர்களிடமும், வெறுப்பவர்களிடமும் செலுத்துவோமா, அல்லது அவர் நம்மேல் இரக்கம் பாராட்டினது போலவே நம்முடைய எதிரிகள் மேல் அன்பு செலுத்த தேவ பெலனை நாடுவோமா?
அவரை யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?
1929ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை மாலை எனும் இதழில் “சிறு பிள்ளையாக வேதாகமத்திலிருந்தும், தால்முட்டிலிருந்தும் (Talmud – நியாயப் பிரமாண விளக்கவுரை) அறிவுரை பெற்றேன். நான் ஒரு யூதனாக இருந்தாலும் அந்த பிரகாசமான நசரேயனால் பரவசமடைந்தேன். சுவிசேஷத்தை படிக்கும் பொழுது, இயேசுவின் பிரசன்னத்தை உணராமல் ஒருவனாலும் இருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் ஜீவிக்கிறார். எந்தப் புராணக்கதையிலும் அப்படிபட்ட ஜீவன் இல்லை” என்று ஆல்பர்ட் கூறினார்.
இயேசுவை பின்பற்றினவர்கள், அவர் விசேஷமானவர் என்று உணர்ந்திருந்ததைக் குறித்து புதிய ஏற்பாட்டிலே கூறியுள்ளனர். தன்னைப் பின்பற்றினவர்களை நோக்கிப் பார்த்து இயேசு, “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் ஏரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் பதில் கூறினார்கள்” (மத். 16:13-14). இஸ்ரவேல் தேசத்தின் தலைசிறந்த தீர்கக்தரிசிகளோடு ஒப்பிடப்படுவது மிகப் பெரிய பாராட்டுதான். ஆனால், இயேசு பாராட்டுதல்களை தேடவில்லை. அவர் அவர்களுடைய புரிதலை ஆராய்ந்து விசுவாசத்தை தேடினார். ஆகவே அவர் இரண்டாவதாக ஒரு கேள்வி கேட்டார் “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்” (16:15).
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (வச. 16) என்று பேதுரு உரைத்த வார்த்தைகளில் இயேசுவின் உண்மையான அடையாளம் முழுமையாக வெளிப்பட்டது. இயேசு அவரையும், நம்மை காப்பாற்றும் அவருடைய அன்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் வாஞ்சிக்கிறார். ஆகவே தான் “இயேசு யாரென்று நீ நினைக்கின்றாய்?” என்ற கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் இறுதியாகப் பதில் கூற வேண்டும்.
அவராலே நாம் மூடப்பட்டிருக்கிறோம்
கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை குறித்து பேசும் பொழுது, சில சமயம் நமக்கு விளங்காமலேயே அல்லது சரியாக விளக்காமல் சில வார்த்தைகளை உபயோகிக்கிறோம். அதில் ஒரு வார்த்தை தான் நீதிமான்! நம் தேவன் நீதிபரராயிருப்பதினால், அவர் நம்மை நீதிமானாக்குகிறார் என்கிறேன். ஆனால் இக்காரியத்தை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.
நீதி என்னும் வார்த்தை சீன மொழியில் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் நமக்கு மிக உதவியாக இருக்கும். அவ்வார்த்தை, இரண்டு வார்த்தைகளை ஒருங்கிணைத்த ஒரு வார்த்தையாக உள்ளது. மேலே உள்ள வார்த்தை ‘ஆட்டுக்குட்டி’ கீழே உள்ள வார்த்தை ‘நான்’. ஆட்டுக்குட்டியானது அந்நபரை மூடிக்கொள்கிறது அல்லது அவனுக்கு மேல் உள்ளது.
இயேசு இப்பூமிக்கு வந்த பொழுது, யோவான் ஸ்நானகன் அவரைப் பார்த்து, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா. 1:29) என்று கூறினார். தேவனுடைய பண்பும், வழிகளும் எப்பொழுதும் சரியானதாகவும், நேர்த்தியாகவும் இருப்பதனால் நம்முடைய பாவம் அவரிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது. ஆகவே நம்முடைய பாவத்தை நீக்க வேண்டும். தேவன் நம்மை மிகவும் நேசித்ததினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி. 5:21). ஜீவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு தன்னுடைய இரத்தத்தை சிந்தி தன்னையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அவராலே நாம் மூடப்பட்டிருக்கிறோம். அவர் நம்மை நீதிமானாய் மாற்றியதால், தேவனோடு நல்லுறவு கொள்ளும்படி உதவியுள்ளார்.
தேவன் முன் நீதியாய் இருப்பது என்பது அவராலே நமக்கு கிடைத்த ஈவு.