1950ஆம் ஆண்டு, யுத்தம் தொடங்கிய பொழுது, கிம் சின் கியூங் தன் தேசத்திற்காக போரிட தென் கொரிய படையிலே சேர்ந்தான். ஆனால், போரின் பயங்கரங்களுக்கு தான் தயாராகவில்லை என்பதை சீக்கிரத்திலேயே அறிந்துகொண்டான். போரிலே தன்னோடு இருந்த வாலிப நண்பர்கள் இறந்து மடிந்ததைக் கண்ட பொழுது, தன்னுடைய ஜீவனுக்காக தேவனிடம் மன்றாடினான். ஒரு வேளை உயிர் தப்பினால், தன் எதிரிகளை நேசிக்க கற்றுக்கொள்வதாக உறுதியளித்தான்.

65 ஆண்டுகள் கழித்து டாக்டர் கிம் அந்த ஜெபத்தை எண்ணிப்பார்த்தார். அநேக ஆண்டுகளாக வட கொரியா மற்றும் சீன தேசத்திலுள்ள அனாதைகளைப் பராமரித்தும், கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து உதவியதின் மூலமூம், முன்பு எதிரிகளாகக் கருதியவர்கள் மத்தியில் அவர் அநேக நண்பர்களை சம்பாதித்தார். இன்று, அவர் எல்லாவித அரசியல் அடையாளங்களையும் தவிர்த்து, இயேசு கிறிஸ்துவிலுள்ள தன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன்னை ‘அன்பன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

யோனா தீர்க்கதரிசியோ வேறு விதமான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார். மீனின் வயிற்றிலிருந்து காப்பாற்றப் பெற்ற வியத்தகு செயல் கூட அவர் மனதை மாற்றவில்லை. இறுதியாக அவர் தேவனுக்கு கீழ்ப்படிந்தாலும், தேவன் அவன் எதிரிகளுக்கு இரக்கம் பாராட்டுவதை காண்பதை விட செத்து மடிவதே மேல் என்று கூறினான் (யோனா 4:1-2,8).

நினிவே தேசத்தார் மீது யோனா தீர்க்கதரிசி எப்பொழுதாவது அன்பு செலுத்தக் கற்றுக்கொண்டானோ என்று நம்மால் யூகிக்க மாத்திரமே முடியும். ஆனால் நம்மைக் குறித்து நாம் ஆழ்ந்து சிந்திப்போமானால், நாமும் யோனாவின் மனப்பான்மையை நாம் பயப்படுகிறவர்களிடமும், வெறுப்பவர்களிடமும் செலுத்துவோமா, அல்லது அவர் நம்மேல் இரக்கம் பாராட்டினது போலவே நம்முடைய எதிரிகள் மேல் அன்பு செலுத்த தேவ பெலனை நாடுவோமா?