நன்மை, தீமை மற்றும் அருவருப்பு!
என்னுடைய நெருங்கிய தோழி, “நம்முடைய நன்மை, தீமை மற்றும் அருவருப்பான காரியங்கள் அனைத்தையும் நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்!” என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். அநேக வருடங்கள் நண்பர்களாக இருக்கும் நாங்கள், எங்களுடைய சந்தோஷங்களையும், ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ள கற்றுக்கொண்டோம். நாங்கள் பூரணமற்றவர்கள் என அறிந்திருந்தபடியால் எங்களுடைய போராட்டங்களை பகிர்ந்து கொண்டோம். கூடவே எங்களுடைய வெற்றிகளை எண்ணி களிகூர்ந்து மகிழ்ந்தோம்.
தாவீது கோலியாத்தை வெற்றிசிறந்த நாள் முதற்கொண்டு தாவீதுக்கும், யோனத்தானுக்கும் இடையே வலுவான நட்பு உண்டாயிற்று (1 சாமு. 18:1-4). தாவீதின் மீது யோனதானுடைய தகப்பன் பொறாமை கொண்ட அந்த மோசமான நாட்களில் தங்களுடைய பயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள் (18:6-11,20:1-2). இறுதியாக சவுல் தாவீதைக் கொல்ல திட்டம் தீட்டிய அந்த மகா மோசமான நாட்களில் அவர்கள் ஒன்றாக துன்புற்றார்கள் (20:42).
நம்முடைய சூழ்நிலைகள் மாறும் பொழுதும், உண்மையான நண்பர்கள் ஒருபொழுதும் நம்மைக் கைவிடமாட்டார்கள். நன்மையான காலத்தில் மட்டுமல்லாது மோசமான நாட்களிலும் நம்முடனே கூட இருப்பார்கள். மிக மோசமான காலக்கட்டத்தில் நாம் தேவனை விட்டுப்பின்வாங்கிச் செல்லும் படியாய் சோதிக்கப்பட்டால் அவர்கள் தேவனை நோக்கி நம்மைத் திருப்புவார்கள்.
உண்மையான நட்பு தேவனிடமிருந்து நமக்கு கிடைத்த ஈவு, ஏனெனில் அது முற்றிலும் பூரண நண்பனாகிய தேவனையே எடுத்துரைக்கிறது. ஏனெனில் அவர் ஒருவரே நன்மையான நாட்களிலும், மோசமான நாட்களிலும் மற்றும் மிகவும் மோசமான நாட்களிலும் மாறாதவராய் என்றும் நமது நண்பராய் இருக்கிறார். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக்கைவிடுவதுமில்லை” (எபி. 13:5) என நமக்கு நினைவூட்டுகிறார்.
இது சந்தோஷத்தை தூண்டுகிறதா?
ஒரு இளம் ஜப்பானியப் பெண் தேவையில்லாத பொருட்களை அகற்றி ஒழுங்குபடுத்துவதைக் குறித்து எழுதிய புத்தகம் உலகமெங்கும் 20 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் மேரி கோன்டோவின் (Marie Kondo) மையக்கருத்து என்னவெனில், தங்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும் பொருட்களை தங்கள் அலமாரிகளிலிருந்தும், வீடுகளிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பதே. “ஒவ்வொரு பொருளையும் எடுத்து, ‘இது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிறதா?’ என உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள். பதில் ஆமாம் என்றால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அதை யாருக்கேனும் கொடுத்து விடுங்கள்.
பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுடனான தங்களுடைய உறவிலே சந்தோஷத்தை நாடித் தேடும்படியாய் அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்,” (பிலி. 4:4) என்று கூறுகிறார். கவலைகளினால் நிறைந்த வாழ்க்கை வாழாமல், தேவ சமாதானம் நம்முடைய மனதையும், இருதயத்தையும் காக்க, எல்லாவற்றையும் குறித்து ஜெபம் பண்ணும்படி உற்சாகப்படுத்தினார் (வச. 6-7).
நம்முடைய அன்றாட வாழ்வின் வேலைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் மகிழ்ச்சி கரமானதாக இருப்பதில்லை. அப்படியிருக்க ‘இது தேவனுடைய இருதயத்திலும் நம்முடைய இருதயத்திலும் எப்படி சந்தோஷத்தை உண்டாக்க முடியும்?’ என நாம் கேட்கலாம். எதற்காக நாம் ஒரு வேலையை செய்கிறோம் என்கிற சரியான வெளிப்பாடு, அதைக்குறித்ததான ஒரு மனமாற்றத்தை நம்மில் உண்டாக்கும்.
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் (பிலி. 4:8).
பவுலுடைய இறுதி வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்கு உணவாகவும், சந்தோஷத்திற்கு வழிமுறையாகவும் உள்ளது.
சோதித்து சுத்திகரிக்கப்பட்டு
பாடகரும், பாடலாசிரியருமான மெரிடித் ஆண்டுரூஸ் (Meredith Andrews) ஒரு பேட்டியின் பொழுது, தன்னுடைய ஊழியம், கலைப் படைப்புகள், திருமண வாழ்க்கை மற்றும் தாய்மையை சரியான விதத்தில் நடத்திச் செல்ல திணறியதாக கூறினார். “என்னை முற்றிலுமாக நொறுக்கக்கூடிய ஒர் செயல் முறையின் மூலம் தேவன் என்னை ஒரு சுத்திகரிப்பின் காலத்திற்குள்ளாய் நடத்திச் செல்வதைப் போல உணர்ந்தேன்,” என்று அக்கடினமான காலக் கட்டத்தைக் குறித்து நினைவு கூர்ந்தார்.
யோபு தன்னுடைய வாழ்வாதாரத்தை, சுகத்தை மற்றும் குடும்பத்தை இழந்த பொழுது செய்வதறியாது திணறினான். தினந்தோறும் தேவனை நோக்கி ஏறெடுத்த விண்ணப்பங்களையெல்லாம் அவர் அசட்டை செய்வதாக எண்ணினான். தன்னுடைய வாழ்வின் எல்லை எங்கிலும் தேவன் இல்லாதவாறு அவனுக்கு தோன்றியது. கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் எங்கு நோக்கினாலும், தேவனைக் காணவில்லை எனக் கூறினான் (யோபு 23:2-9).
ஆனால், இந்த விரக்தியின் மத்தியிலும் ஒரு நொடிப்பொழுது தெளிவாக சிந்தித்தான். ஒரு இருட்டறையில் சிறு ஒளிக்கீற்றுடன் ஒளி வீசும் மெழுகுவர்த்திப் போல அவனுடைய விசுவாசம் துளிர்க்க ஆரம்பித்து. “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தப்பின் நான் பொன்னாக விளங்குவேன்,” எனக்கூறினான் (வச. 10). தேவன் கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கை, பெருமை மற்றும் உலகப்பிரகாரமான ஞானம் ஆகியவற்றை, அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைமைகளை கொண்டு சோதித்து, அவைகளின்று அவர்களை சுத்திகரிக்கிறார். இந்த சுத்திகரிப்பின் காலகட்டத்தில் அவரின் உதவியை எதிர்பார்த்து நாம் ஏறெடுக்கும் கூக்குரலுக்கு அவர் மவுனமாய் இருப்பது போல தோன்றும். ஆனால், நாம் விசுவாசத்தில் இன்னும் அதிகமாய் பெலப்பட அது நமக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமாக இருக்கலாம்.
கஷ்டங்கள் மற்றும் வலி வேதனைகளுக்கு மத்தியில் நம்முடைய வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையில் தேவனை விசுவாசிக்கும் பொழுது, நிலையான தேவ சாயல் நம்மில் பிரகாசிக்கும்.
நீ இருக்கும் இடத்திலிருந்தே துவங்கு
இன்று, பரந்த புல்வெளியில் தனிமையாக பூத்திருந்த ஒரு சிறிய ஊதா நிற பூவைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கவிஞர் தாமஸ் கிரேயின் “பாலைவனக் காற்றிலே தன் நறுமணத்தை வீணடித்துக்கொண்டிருந்த...” என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. கண்டிப்பாக இந்த பூவை எனக்கு முன் யாராவது பார்த்திருக்கக் கூடும் என எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை, இதை இனி ஒருவரும் பார்க்கக் கூடாமலும் போகலாம். பிறகு எதற்கு இந்த அழகிய படைப்பு இவ்விடத்தில் என எண்ணினேன்.
இயற்கை ஒருபொழுதும் வீணாகக் கடந்து போவதில்லை. அது தன்னைப் படைத்தவருடைய உண்மையையும், நன்மையையும், அழகையும் விவரிக்கின்றது. இயற்கையானது, ஒவ்வொரு நாளும், தேவனுடைய மகிமையை புதிது புதிதாய் அறிவிக்கிறது. நான் அவரை இயற்கையின் அழகில் காண்கிறேனா அல்லது அதின் மேல் ஒரு சிறு பார்வை வீசிவிட்டு அலட்சியமாய் சென்று விடுகிறேனா?
இயற்கை தன்னைப் படைத்தவருடைய அழகை முழுவதும் அறிவிக்கிறது. ஒரு சூரியகாந்திப் பூவின் அழகைக் காணும் பொழுதும், காலை கதிரவனின் பிரகாசத்தை காணும் பொழுதும், ஒரு மரத்தின் வடிவத்தைக் காணும் பொழுதும் அவற்றைப் படைத்தவரை நாம் ஆராதிக்கலாம், பக்தியுடன் தொழுது கொள்ளலாம் அல்லது நன்றி தெரிவிக்கலாம்.
ஒரு சுட்டெரிக்கும் கோடை நாளில் காட்டுப் பகுதியில் நண்பனோடு நடைபயணம் சென்றதை சி. எஸ். லூயிஸ் இவ்வாறு விவரிக்கிறார். அவர் தன் நண்பனிடம், தேவனை நோக்கிய நன்றியுள்ள இருதயமாக தன் இருதயம் விளங்க, அதை எவ்வாறு பண்படுத்துவது எனக் கேட்டதற்கு, அவருடைய நண்பர் அருகில் இருந்த ஒடையை நோக்கி திரும்பி, அதிலிருந்து கொட்டிய சிறிய அருவியிலிருந்து நீரை தன் முகத்திலும், கைகளிலும் தெளித்துக் கொண்டு, “இதிலிருந்து ஏன் துவங்கக்கூடாது?” என கூறினார். அப்பொழுதுதான்,
“நீ இருக்கும் இடத்தில் இருந்தே துவங்கு,’ என்கிற மகத்தான கோட்பாட்டை கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
மெதுவாய் கசியும் ஒரு சிறிய அருவி, வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்று, ஒரு சிட்டுக் குருவிக் குஞ்சு, ஒரு சிறிய மலர், இவற்றிற்காக நன்றி செலுத்தத் துவங்கலாமே.
எல்லாச் சூழ்நிலைகளிலும்
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் குறித்து நாங்கள் குறைகூறுவது வழக்கம். ஒரு வாரத்தில் சுமார் மூன்று முறை ஏற்படும் இம்மின்தடை, 24 மணி நேரம் கூட நீடிக்கும். அப்பொழுது எங்கள் சுற்று வட்டாரம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இம்மின் தடையினால் அடிப்படை வீட்டுப்பொருட்களைக் கூட உபயோகப்படுத்த முடியாத நிலையை ஏற்றுக்கொளவது மிகவும் கடினமான ஒன்று.
இந்நிலையைக் குறித்து, கிறிஸ்தவரான எங்கள் அண்டைவீட்டார் “இக்காரியத்தைக் குறித்து கூட தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமா?” என்று, 1 தெசலோனிக்கேயா 5:18 “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்ற வசனத்தின் அடிப்படையில் அடிக்கடி கேட்பார். நாங்களும் ஒவ்வொரு முறையும், “ஆம், கண்டிப்பாக நாங்கள் எல்லாவற்றிலேயும் தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரஞ் செய்கிறோம்,” என்று கூறுவோம். ஆனால் அரைமனதுடன் நாங்கள் கூறும் இப்பதில், ஒவ்வொரு முறையும் மின்தடை ஏற்படும் பொழுது நாங்கள் முறுமுறுப்பதற்கு எதிர்மறையாக உள்ளது.
ஆனால் ஒருநாள், எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்கிற எங்கள் நம்பிக்கைக்கு ஒரு புதிய அர்த்தம் உண்டாயிற்று. அன்று நான் வேலை முடித்து வீடு திரும்பிய பொழுது, என் அண்டை வீட்டார், “இன்றைக்கு மின் தடை ஏற்பட்டதற்கு இயேசுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் எங்கள் வீடு தீப்பற்றி நாங்களும் அதோடு கூட சேர்ந்து எரிந்து சாம்பலாகியிருப்போம்,” என நடுநடுங்கியபடி கூறினார். என்ன நடந்ததெனில் அன்றைய தினம் ஒரு குப்பை லாரி அவர்கள் வீட்டு முன்பு இருந்த மின்கம்பத்தில் மோதியதால் உயர் மின் அழுத்த கம்பிகள் அங்குள்ள அநேக வீடுகளின் மேல் விழுந்தது. ஒருவேளை அன்று மின்சார தடை ஏற்படாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.
நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் “தேவனே, உமக்கு நன்றி,” எனக் கூறுவது கடினமாக இருக்கலாம். ஆனால் அவருடைய சித்தத்தை அறியாதிருந்தும், நம்முடைய எல்லா நிலைகளிலும் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு நன்றி சொல்லும் சந்தர்ப்பங்களாக அவற்றை மாற்ற வல்ல தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தக்கடவோம்.
நான் உன்னைக் காண்கிறேன்
இணையதளத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் உற்சாகப்படுத்தி எழுதும் எழுத்தாளர்கள் உண்டு. இணையதளத்தில் ஓர் நாள் என் தோழி, “நான் உன்னைக் காண்கிறேன்,” என்று கூறினாள். கவலையோடு மனஅழுத்தத்திலிருந்த எனக்கு அவளுடைய வார்த்தைகள் சமாதானத்தையும், நல்லுணர்வையும் ஏற்படுத்தியது. ‘அவள் என்னைக் கண்டாள்’. அதாவது என்னுடைய எதிர்பார்ப்புகள், பயங்கள், போராட்டங்கள் மற்றும் கனவுகளையும் கண்டாள். கண்டு, அவள் என்னை நேசித்தாள்.
நான் என்னுடைய தோழியின் சாதாரணமான, ஆனால் மிக வல்லமையான ஊக்கத்தை கேட்டபொழுது, ஆபிரகாம் வீட்டில் அடிமையாய் இருந்த ஆகாரை நினைவு கூர்ந்தேன். பல வருடங்களாக ஒரு வாரிசுக்காக காத்திருந்த சாராளும், ஆபிரகாமும் பின்பு அவர்களுடைய கலாச்சார வழக்கத்தின்படி ஆகாரின் மூலம் ஒரு குழந்தை பெறும்படி தன் கணவரிடம் கூறினாள். ஆகார் கருவுற்ற பிறகு சாராளை அற்பமாக எண்ணினாள். ஆகவே சாராள், ஆகாரை கடினமாக நடத்தினாள். இதனால் ஆகார் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்.
வேதனையோடும், குழப்பத்தோடும் இருந்த ஆகாரை தேவன் கண்டு, அவள் அநேக சந்ததியருக்கு தாயாக இருப்பாள் என வாக்குப்பண்ணி ஆசீர்வதித்தார். அந்த சந்திப்பிற்குப் பிறகு ஆகார் தேவனை “எல் ரோயீ” என அழைத்தாள். அதற்கு “என்னைக் காண்கிற தேவன்” (ஆதி. 16:13) என அர்த்தம். ஏனெனில் அவள் தனிமையாகவோ, கைவிடப்பட்டவளாகவோ இல்லை என்பதை அறிந்தாள்.
ஆகாரைக் கண்டது போல, நேசித்தது போல தேவன் நம்மையும் காண்கிறார், நேசிக்கிறார். ஒருவேளை நாம் நம்முடைய நண்பர்களால் அல்லது குடும்பத்தினர்களால் உதாசீனப் படுத்தப்படுவது போல அல்லது நிராகரிக்கப்படுவது போல உணரலாம். அப்படியிருக்க நாம் இந்த உலகத்திற்கு காட்டும் நம்முடைய முகத்தை மட்டுமல்ல, நம்முடைய எல்லா ரகசிய உணர்வுகளையும், பயங்களையும் நம்முடைய பிதா காண்கிறார். கண்டு ஜீவனளிக்கும் வார்த்தைகளைப் பேசுகிறார்.
என்ன விசேஷம்?
நான்கு வயதுள்ள ராஜூவின் மகிழ்ச்சியான முகம், அவன் அணிந்திருந்த தலைக் கவசம் கொண்ட டீ-ஷர்ட்டின் உள்ளிருந்து எட்டிப் பார்த்தது. அத்தலைக் கவசம் ஒரு முதலை தன் கூர்மையான பற்களுடைய வாயைப் பிளந்து, அவன் தலையை விழுங்குவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது! அவனை அவ்வுடையில் பார்த்ததும், அவன் தாயின் உள்ளம் சோர்ந்து போயிற்று. ஏனெனில் நீண்ட நாட்களுக்குப்பின் தாங்கள் சந்திக்கப் போகும் ஒரு குடும்பத்தின் முன் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த விரும்பினாள்.
தன் மகனிடம், “ராஜூ இந்த உடை இவ்விசேஷத்திற்கு ஏற்றதல்ல,” எனக் கூறினாள்.
ஆனால் ராஜூவோ, “அப்படி ஒன்றும் இல்லை. இது பொருத்தமான உடைதான்” என்றான்.
“அப்படியா, இந்த உடைக்குப் பொருத்தமான அந்த விசேஷம் என்ன?” என அவள் கேட்டதற்கு, “உங்களுக்கு தெரியுமே, அவ்விசேஷம் நம் வாழ்க்கைதான்” என்றான். இப்படி ஒரு பதிலுக்கு கட்டாயம் அவன் அந்த டீ-ஷர்ட் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
“மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமே அல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை” (பிர. 3:12) என்கிற வசனத்தின் சத்தியத்தை அம்மகிழ்ச்சிகரமான சிறுவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். பிரசங்கியின் புத்தகம்
மனுஷக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகமே அன்றி, தேவனுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகம் அன்று. இதை அறியாமல் அப்புத்தகத்தை தவறாய் புரிந்துகொண்ட அநேகர் சோர்ந்து போவதும் உண்டு. அப்புத்தகத்தை எழுதிய சாலொமோன் ராஜா, “வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?”
(வச. 9) என்கிறார். ஆனாலும் அப்புத்தகம் முழுவதிலும் நம்பிக்கையின் ஒளி வீசக் காணலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” (வச. 13) என்றும் சாலொமோன் எழுதியுள்ளார்.
நாம் மகிழ்ந்து களிகூரும்படி நமக்கு நன்மையானவற்றை அருளுகிற தேவனையே நாம் சேவிக்கிறோம். அவர் செய்வதெல்லாம் “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). நாம் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பான கட்டளைகளை கைக்கொண்டால், ஒரு நோக்கமுள்ள அர்த்தமுள்ள மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ கிருபையளிப்பார்.
எப்பொழுதும் அவருடைய அரவணைப்பில்
என்னுடைய இளைய மகள், மியூனிச் (Munich) நகரத்திலிருந்து பார்ஸலோனாவுக்கு பயணித்த அன்று, எனக்கு மிகவும் பிடித்தமான விமானக் கண்காணிப்பு வலைத்தளத்தில் அவள் சென்று கொண்டிருந்த விமானத்தின் வழித்தடத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நான் அவள் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் எண்ணைப் பதிவு செய்தவுடன், அவ்விமானம் ஆஸ்திரியா தேசத்தை கடந்து, இத்தாலிய தேசத்தின் வடக்கு பகுதியை கடந்து கொண்டிருந்ததை கணினி திரையில் காணமுடிந்தது. அங்கிருந்து அது பிரான்ஸ் நாட்டின் தெற்கே மத்தியதரைக் கடல் பகுதியை கடந்து, குறித்த நேரத்தில் ஸ்பெயின் நாட்டை வந்தடையும். விமானப் பணிப் பெண்கள் மதிய உணவிற்கு என்ன வழங்க இருக்கிறார்கள் என்பதை மாத்திரமே நான் அறியாதது போல் உணர்ந்தேன்!
என்னுடைய மகள் இருக்கும் இடத்தை குறித்தும், சூழ்நிலையைக் குறித்தும் நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏனெனில் நான் அவளை நேசிக்கிறேன். அவள் மீதும், அவள் செய்கைகள் மீதும், அவளுடைய வாழ்க்கைப் பயணத்தின் மீதும் எனக்கு அக்கறை உண்டு.
சங்கீதம் 32ல் தாவீது தேவனுடைய அற்புதமான மன்னிப்பையும், வழிநடத்துதலையும், அக்கறையையும் குறித்து ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறான். இப்பூமிக்குரிய தகப்பனைப் போல் அல்லாமல் நம்முடைய வாழ்வை முற்றிலும் அறிந்தவராய், நம்முடைய இருதயத்தில் புதைந்திருக்கும் தேவைகளையும் அறிந்தவராய் இருக்கிறார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (வச. 8) என்று தேவன் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார்.
இன்று நம்முடைய சூழ்நிலை எதுவாக இருப்பினும், தேவனுடைய பிரசன்னத்தின் மீதும், அவருடைய அரவணைப்பின் மீதும் நாம் நம்பிக்கை கொள்ளலாம். ஏனெனில், “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்” (வச. 10).
பேசும் மரம்
ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.
ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).
இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.