வகை  |  odb

நீ அல்ல

தாவீது ஆலயத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் வகுத்து முடித்தான். அதற்கு தேவையான மரச்சாமான்களையும், அலங்கார பொருட்களையெல்லாம் கூட வடிவமைத்து, அவைகள் எல்லாவற்றையும் சேகரித்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான் (1 நாளா. 28:11-19). ஆனாலும் முதலில் கட்டப்பட்ட ஆலயம் சாலொமோனின் ஆலயம் என்றே அழைக்கப்பட்டது. தாவீதின் ஆலயமாக அழைக்கப்படவில்லை.

ஏனெனில் தேவன் ஏற்கனவே நீ எனக்கு ஆலயத்தைக் கட்ட மாட்டாய் (1 நாளா. 17:4) என்று சொல்லியிருந்தார். தேவன் தாவீதின் குமாரனாகிய சாலொமோனை அதற்காக தேர்வு செய்திருந்தார். தேவனின் மறுப்புக்கு தாவீதின் மாறுத்தரம் ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது. அவனால் செய்யமுடியாத காரியத்தை குறித்து எண்ணிக்கொண்டிருக்காமல், தேவனால் செய்ய நினைத்த காரியத்தில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான் (வச. 16-25). நன்றியுள்ள இருதயத்துடன் எப்போதும் காணப்பட்டான். அவனால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து, ஆலயத்தைக் கட்டப்போகும் சாலொமோனுக்கு உதவியாக இருக்கும்படியாக சரியான நபர்களைத் தேர்வு செய்து அணி திரட்டினான் (1 நாளா. 22).

இதைக் குறித்து வேதாகம வர்ணனையாளர் ஜே. ஜி. மெக்கான்வில் (J.G. McConville) “பல நேரங்களில், கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் ஆவலுடன் செய்ய விரும்பும் வேலைக்கு மிகவும் தகுதியானவராகவோ, பொருத்தமுள்ளவராகவோ இருக்கமாட்டோம், அதற்கான அழைப்பை கூடத் தேவனிடமிருந்து பெற்றிருக்கவும் மாட்டோம். ஆனால் அது தாவீதின் வேலையைப் போன்று ஆயத்தப்படுத்தும் பணியாக இருக்கலாம், முடிவில், அதன் வாயிலாக பிரம்மாண்டமான ஓர் காரியம் வெளிப்படலாம்” என எழுதியுள்ளார்.

தாவீது தேவனுடைய மகிமையைத் தேடினான், தனது மகிமையை நாடவில்லை. தேவனுடைய ஆலயத்தை கட்டும்படியாக தன்னால் முடிந்தவரையில் உண்மையுடன் வேலை செய்தான். வேலையை எளிதாக முடிக்க, அவனுக்குப் பின்னால் வருபவருக்கு ஓர் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தான். அவனைப்போலவே, நாமும், தேவன் நமக்காக தேர்ந்தெடுத்து வைத்துள்ள காரியங்களை ஏற்றுக்கொண்டு, நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு ஊழியம் செய்யலாம்! நம்முடைய அன்பான தேவன் நிச்சயமாகவே “மிக பிரமாண்டமானதை” செய்து கொண்டிருக்கிறார்.

அவரது அற்புதமான முகம்

என் நான்கு வயது மகன் கேள்விகளால் நிறைந்து, எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். அவனோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான காரியம். ஆனால் சில நேரங்களில் முகம் கொடுத்துப் பேசாமல் முதுகை காண்பித்துக் கொண்டே கேள்விகளை கேட்கும் பழக்கத்திற்குள் சென்றுவிட்டான். ஆகவே “நீ பேசுவதை என்னால் கேட்க முடியவில்லை. தயவுசெய்து பேசும்போது என்னைப் பார்த்து பேசு” என அடிக்கடி அவனுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

சில நேரங்களில், தேவனும் இதை தான் நம்மிடம் சொல்ல விரும்புகிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரால் நாம் சொல்வதைக் கேட்க முடியாத காரணத்தினாலல்ல, நாம் அவரை “பார்க்காமலேயே” பேசிக்கொண்டிருப்பதினால்தான் அப்படி எண்ணத் தோன்றுகிறது. நாம் ஜெபிக்கிறோம், ஆனால் நமது கேள்விகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு, நமது கவனத்தை அவர் மீது வைக்காமல் நம்மீதே வைக்கிறோம். அவரது குணாதிசயத்தை மறந்து ஜெபித்துக்  கொண்டிருக்கிறோம். என்னுடைய மகனைப்போல, நிறைய கேள்விகளை கேட்டுவிட்டு, யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்த நிலையில்தான் ஜெபிக்கிறோம்.

தேவன் யார் என்றும், அவர் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கின்றார் என்பதையும் நாம் நினைவில் கொண்டாலே நமது பல கவலைகள் ஒன்றுமில்லாமல் போவதை பார்க்கலாம். தேவன் மீது நமது எண்ணங்களை திசைதிருப்பினால், அவரது குணாதிசயத்தினால் ஆறுதலைடைவோம். ஏனெனில் அவர் அன்பானவர், மன்னிப்பவர், ஆளுகைசெய்பவர், கிருபை நிறைந்தவர்.

தேவனுடைய முகத்தை நாம் எப்போதும் தேட வேண்டும் என்றே சங்கீதக்காரன் சொல்கிறான் (சங் 105:4). தேவனை ஆராதிக்கவும், ஜெபங்களை ஏறெடுக்கவும் தலைவர்களை தாவீது நியமித்தான். மக்கள் தேவனின் குணாதிசயத்தை போற்றிப் பாட வேண்டும் என்றும், தேவன் உண்மையுள்ளவர் என்பதை விவரிக்கும் விதத்தில் தேவனைப் பற்றிய கதைகளைக் கூறுமாறும் உற்சாகப்படுத்தினான் ( 1 நாளா. 16:8-27).

நம் கண்களை தேவனுடைய அழகான முகத்திற்கு நேராக நாம் திருப்பினால், பதிலளிக்கப்படாத கேள்விகளின் மத்தியிலும், பெலத்தினையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.

பாதுகாப்பான அரவணைப்பில்

பிறந்து நான்கே நாளான தனதருமை மகளை ஏந்திக்கொள்ளும் பாக்கியத்தை என்னை நம்பி என் தோழி என்னிடம் தந்தாள். குழந்தையை நான் கையில் ஏந்திக்கொண்ட சிறிது நேரத்திலேயே அவள் அழத்தொடங்கினாள். அவளை நெருக்கமாக அணைத்து, அவளது தலையில் என் கன்னத்தை வைத்து அழுத்தி, லேசாக அசைத்து, மெல்லிய பாடலை பாடி அவளை அமைதிப்படுத்த முயன்றேன். அக்கறையுடன் நான் செய்த எந்த முயற்சியும் எடுபடவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக பெற்றோராக இருந்த எனது அனுபவம் கைகொடுக்கவில்லை. அவளை என்னால் சமாதானப்படுத்த முடியாமல் போகவே, ஆவலுடன் காத்திருந்த அவளது தாயாரின் கரத்திற்குள் அவளை வைத்தேன். அந்த நிமிடமே அமைதியானாள். அவளது அழுகுரல் ஓய்ந்தது, புதிதாய் பிறந்த அவளது பிஞ்சு உடலும் கலக்கம் மறந்து, பாதுகாப்பான இடத்திற்குள் வந்ததினால் தளர்ந்து நிம்மதியடைந்தது. தனது மகளை எப்படி சரியாக பிடித்து, தட்டிக்கொடுத்து தேற்றுவது என்று எனது தோழிக்கு நன்றாக தெரிந்திருந்தது.

மென்மையாக, நம்பகத்தன்மையுடனும், அக்கறையுடனும் ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தையை தேற்றுவாளோ, அதைப்போல்தான் தமது பிள்ளைகளை ஆறுதல்படுத்த தேவனும் தமது உதவிக்கரத்தை நீட்டுகிறார். சோர்ந்து போய் வருத்தத்துடன் இருக்கும்போது, அவர் நம்மை தமது கைகளில் அன்புடன் ஏந்திக்கொள்கிறார். நம் பிதாவும் சிருஷ்டிகருமான அவர் நம்மை முற்றிலும் அறிந்திருக்கிறார். ஆதலால், அவரை “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் (அவரையே) நம்பியிருக்கிறபடியால், (அவர்) அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்” (ஏசா. 26:3).

இந்த உலகத்தின் பிரச்சனைகள் நமது இருதயத்தை போட்டு அழுத்தும்பொழுது, ஒரு அன்பான தகப்பனாக இருக்கும் அவர், தம் பிள்ளைகளான நம்மைக் காத்து, நமக்காக யுத்தம் செய்து நம்மை வழிநடத்துகிறார் என்பதை அறிந்து, அவருக்குள் ஆறுதலடைவோமாக.

நீங்கள் எதற்காக அறியப்பட்டவர்கள்?

சீனாவில் முற்காலத்தில் இருந்த ஜப்பானிய சிறைமுகாம் ஒன்றில், 1945ஆம் ஆண்டு மரித்த ஒருவரின் நினைவுக் கல் உள்ளது. “1902 ஆம் ஆண்டு தியான்ஜினில், ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு மகனாக எரிக் லிட்டல் (Eric Liddell) பிறந்தார். அவர் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்று, புகழின் உச்சியை தொட்டார். அவர் சீனாவிற்கு திரும்பி, தியான்ஜினில் ஒரு ஆசிரியராக வேலை செய்தார். மனிதகுலத்தின் நலனுக்காக சிறந்த பங்களிப்பை செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதிலேயே அவரது முழு வாழ்வையும் கழித்தார்” என்று அந்நினைவுகல்லில் எழுதப்பட்டிருந்தது.

எரிக் விளையாட்டுத் துறையில் செய்த சாதனையைத் தான் பலரும் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆயினும் அவர் பிறந்த நாட்டில், அவர் நேசித்த சீனாவில், தியான்ஜினின் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆற்றிய தொண்டையும், பங்களிப்பையும் கூட பலர் நினைவுகூருகின்றனர். விசுவாசத்தினால் அவர் வாழ்ந்தும், சேவை செய்தும் வந்தார்.

நாம் எதற்காக நினைவுகூரப்படுவோம்? நம்முடைய கல்வி சாதனைகளும், வேலையின் நிலையும், பொருளாதார வெற்றியும் பிறருடைய அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தரலாம். ஆனால் பலரது வாழ்வில் நாம் செய்த அமைதியான சில காரியங்கள்தான் நாம் சென்ற பிறகும் நம்மை பற்றி எடுத்துரைத்து வாழ்ந்து கொண்டிருக்கும். விசுவாசத்தின் அதிகாரம் என்று சொல்லப்படும் எபிரெயர் 11ல் மோசேயைக் குறித்து எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம். எகிப்தியரின் பொக்கிஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டார் (வச. 26). விசுவாசத்தினால் தேவனுடைய மக்களுக்காக ஊழியம் செய்து அவர்களை வழிநடத்தினார்.

புத்துணர்வளிக்கும் வசந்தகால மழை

சற்று இடைவெளி தேவைப்பட்டதால், பக்கத்தில் இருந்த பூங்காவில் நடக்கச் சென்றேன். ஓர் பாதையில் நடந்து கொண்டிருந்தபொழுது, பச்சை நிறம் அதிகமாய் என் கண்களில் தென்பட்டது. ஜீவனை எடுத்துரைக்கும் விதத்தில் பூமியிலிருந்து துளிர்த்த சில செடிகள் என் கவனத்தை ஈர்த்தது. இன்னும் சில வாரங்களில் அவை பூத்துக்குலங்கும் டாஃபோடில்களாக (Daffodil) வளர்ந்து விடும். நாம் மற்றொரு குளிர்காலத்தை வெற்றிகரமாக கடந்து விட்டோம் என்பதையும், வரப்போகும் வசந்த காலத்தையும் அவை பறைசாற்றுகின்றன.

ஓசியாவின் புத்தகத்தைப் படிக்கும்போது, ஜீவனற்ற, வறண்ட குளிர்காலத்தைப் போல அநேக பகுதிகளில் உணருவோம். ஏனெனில் தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு யாரையும் பொறாமைக்குள் ஆழ்த்தாத ஓர் வேலையைத் தந்தார். நேர்மையற்ற, துரோகம் செய்யும் ஒரு பெண்ணை மணந்துகொள்ளுமாறு தேவன் கூறினார். அதன் வாயிலாக தாம் படைத்த தமது ஜனமாகிய இஸ்ரவேலின் மீது தமக்கிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்த விரும்பினார் (1:2-3). ஓசியாவின் மனைவியாகிய, கோமேர், திருமண வாக்குறுதியை மீறினாள், அவற்றை உடைத்தெறிந்தாள். அவள் தன்னை அர்ப்பணிப்புடன் நேசித்து வாழ்வாள் என்ற விசுவாசத்தினால் ஓசியா அவளை திரும்பவும் அழைத்துக் கொண்டான். அதைப் போலவே தேவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பும், மூடுபனியைப் போல கலைந்து போய் விடாமல், வல்லமையோடும், அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.

நமக்கும், தேவனுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கின்றது? கொண்டாட்டங்களின் பொழுது அவரை அலட்சியம் செய்து விட்டு பிரச்சனையின் பொழுதும், துயரத்தில் இருக்கும் பொழுதும் மாத்திரம் அவரைத் தேடுகிறோமா? இஸ்ரவேலர்களை போல நாமும் பரபரப்பு, வெற்றி மற்றும் செல்வாக்கு என்னும் விக்கிரகங்களினால் ஆட்டிவைக்கப்படுகிறோமா?

இன்றைக்கு மீண்டும் ஒரு முறை தேவனிடத்தில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ளலாம். வசந்த காலத்தில் துளிர்க்கும் அந்த சிறிய பூக்களை போல் தேவனும் நம்மை மறந்துவிடாமல், நம்மீது அளவில்லாத அன்பினை வைத்துள்ளார்.

ஓட்டமும் ஓய்வும்

‘ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓய்வு நாட்கள் அதிமுக்கியமானது,” என்னும் செய்தித் தலைப்பு என் கண்ணில் பட்டதும் மனதில் பதிந்தது. அமெரிக்க மலை ஓட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரான டாமி மானிங் (Tommy Manning) தன் கட்டுரையில், ஒருவர் தன் பயிற்சிக்குப் பின் சரீரம் இளைப்பாறி, பிறகு மீண்டும் கட்டப்படுவதற்கு தேவையான ஓய்வு நேரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்கிற நெறிமுறையை வலியுறுத்தி உள்ளார். ஏனெனில் மிகுந்த அர்ப்பணிப்போடு பயிற்சி மேற்கொள்ளும் அநேக விளையாட்டு வீரர்கள் இந்நெறிமுறையை அசட்டை செய்துவிடுகின்றனர். “உடல்ரீதியாக, பயிற்சியின் விளைவாக ஏற்படும் மாற்றங்கள், இளைப்பாறும்பொழுதுதான் நிறைவேறுகிறது. அதாவது பயிற்சியைப் போன்றே இளைபாறுதலும் மிக முக்கியமானது” என மானிங் தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளார். இது நம்முடைய விசுவாச ஜீவியத்திற்கும் பொருந்தும். நாம் பெலவீனப்பட்டுப் போகமாலும், சோர்ந்து போகாமலும் இருப்பதற்கு நேரம் தவறாமல் ஓய்வெடுப்பது அத்தியாவசியமானது. மிகப் பெரிய தேவைகளை எதிர்கொண்ட பொழுதும் கூட, இப்பூமியில் வாழ்ந்த நாள் முழுவதும் இயேசு ஓர் ஆவிக்குரிய சமநிலையை நாடினார். அவருடைய சீஷர்கள் பரபரப்பாக போதித்து, அநேகரை சுகமாக்கி திரும்பிய பொழுது “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று கூறினார் (மாற். 6:31). ஆனால் ஒரு பெரிய கூட்டம் அவர்களை பின்தொடர்ந்து சென்றதால், இயேசு அவர்களுக்கு போதித்து, பின்பு ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு உணவு வழங்கினார் (வச. 32-44). எல்லோரும் சென்ற பிறகு, அவர் “ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்” (வச. 46).

ஒரு வேளை நம்முடைய வாழ்க்கை, நாம் செய்யும் வேலையினால் வரையறுக்கப்பட்டிருந்தால், நாம் செய்யும் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்று போகும். ஆகவே தான் நாம் நேரம் தவறாமல் தொடர்ந்து இயேசுவோடு கூட அமைதியான இடத்திலே இளைப்பாறவும், ஜெபிக்கவும் நம்மை அழைக்கிறார்.

ஒரு சிறிய நெருப்பு

அது செப்டம்பர் மாதத்தின் ஓர் ஞாயிற்றுக்கிழமை இரவு. அநேகர் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, புட்டிங் தெருவிலுள்ள (Puding Lane) தாமஸ் ஃபாரினர் (Thomas Forriner) பேக்கரியில் சிறிய நெருப்பு பற்றியது. ஆனால் சீக்கிரத்தில் ஒவ்வொரு வீடாய் தீப்பற்றி முழு லண்டன் மாநகரமும் நெருப்பில் மூழ்கியது. 1666ஆம் ஆண்டின் மகா பெரிய நெருப்பில், எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.
அத்தீ அப்பட்டணத்தின் ஐந்தில் நான்கு பங்கு பகுதியை அழித்துப்போட்டது. ஒரு சிறிய நெருப்பிலிருந்து எவ்வளவு பெரிய அழிவு!

இதைப்போலவே பலத்த அழிவை உண்டாக்கக்கூடிய வேறு ஒரு சிறிய நெருப்பைக் குறித்து வேதம் நம்மை எச்சரிக்கிறது. “அப்படியே, நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக். 3:5) என யாக்கோபு எழுதிய பொழுது, கட்டிடங்களை எண்ணி இதை அவர் எழுதவில்லை, மாறாக நம்முடைய வாழ்க்கையையும், உறவுகளையும் மனதில் வைத்தே இதை எழுதினார்.

ஆனால் நம்முடைய வார்த்தைகள் பிறரை எழுப்பி கட்டுகிறதாகவும் இருக்கலாம். “இனிய சொற்கள்
தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும் எலும்புகளுக்கு ஓளஷதமும்” என நீதிமொழிகள் 16:24 நமக்கு நினைப்பூட்டுகிறது. அப்போஸ்தலனாகிய பவுலும் “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” எனக் கூறுகிறார் (கொலோ. 4:6). உப்பானது நம்முடைய உணவிற்கு சுவையூட்டுவது போல, கிருபையான வார்த்தைகள் பிறரை பெலப்டுத்தி எழுப்பிக் கட்டுகிறது. 

துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறவும், விசுவாசத்தில் வளர விரும்புகிறவர்களை உற்சாகப் படுத்தவும் அல்லது இரட்சகரண்டை வரவேண்டியவர்களை வழிநடத்தவும் ஏற்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

ஏதோவொன்று தவறாக உள்ளது

எங்களுடைய மகன் ஆலன் பிறந்த மறுநாள் காலை, எனது கட்டிலோரத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்த மருத்துவர், “ஏதோவொன்று தவறாக உள்ளது” எனக் கூறினார். வேளிப்புறம் பரிபூரணமாக காணப்பட்ட எங்கள் மகனிற்கு பிறப்பிலேயே உயிருக்கு ஆபத்தான ஒரு குறைபாடு இருந்ததால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய 700 மைல்களுக்கு அப்பால் இருந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிருந்தது.

உங்கள் குழந்தைக்கு ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என மருத்துவர் கூறும்பொழுது, உங்கள் வாழ்க்கை மாறிவிடுகிறது. நமக்கு முன் இருக்கிற காரியங்களை குறித்து பயந்து, ஆவியில் நொறுங்குண்டு, நாம் தள்ளாட ஆரம்பிக்கிறோம். அப்பொழுது, கலங்கிப் போயிருக்கும் நாம் நம்முடைய பிள்ளையை போஷிக்க நமக்கு தேவையான பெலத்தை தந்து நம்மை தேற்றி ஆற்றும்படி தேவனையே நோக்கி காத்திருக்கிறோம்.

அன்புள்ள தேவன் இதை அனுமதிப்பாரா? என குழம்புகிறோம். என் குழந்தை மீது அவருக்கு அக்கறை உள்ளதா? அவர் என் குழந்தையோடு இருக்கின்றாரா? என்று அக்காலை வேளையிலே பல எண்ணங்கள் என் விசுவாசத்தை நிலைகுலுங்கச் செய்தது.

பின்பு அங்கு வந்த என்னுடைய கணவர் ஹீராமிடம் மருத்துவர் அச்செய்தியைக் கூறினார். மருத்துவர் சென்ற பிறகு, “ஜோலீன், நாம் ஜெபம் செய்வோம்,” என்று என் கணவர் கூறினார். நான் சரி என்று தலையசைத்தேன். அப்பொழுது அவர் என் கரங்களை பற்றிக்கொண்டு, “பிதாவே நீர் ஆலனை எங்களுக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனாலும் அவன் எங்களுடையவனல்ல, உமக்குரியவனே. நாங்கள் அவனை அறியும் முன்னமே நீர் அவனை நேசித்துள்ளீர். ஆகவே அவன் உம்முடையவனே. நாங்கள் அவனோடு இருக்கக்கூடாமற்போயினும் நீர் அவனோடு தயவாய் இருந்தருளும் ஆமென்” என ஜெபித்தார்.

என்னுடைய கணவர் ஹீராம் பொதுவாக அதிகம் பேசமாட்டார். அவருடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள சிரமப்படுவார். எப்பேற்பட்ட அமைதலான தருணங்களையும் போதுமான வார்த்தைகளைக் கொண்டு என்னால் நிரப்ப முடியும் என்பதை அவர் அறிந்திருந்ததால், அநேகந்தரம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளக் கூட முயற்சிக்க மாட்டார்.

ஆனால் அன்றைய தினம் விசுவாசமின்றி உடைந்து போன இருதயத்தோடு, ஆவியிலே நொறுங்குண்டு இருந்த பொழுது, என்னால் கூற முடியாத வார்த்தைகளை என் கணவர் கூறி ஜெபிக்கும்படி தேவன் அவரை பெலப்படுத்தினார். இன்னும் என் கணவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த நான், ஆழ்ந்த அமைதியின் மத்தியில், பல கண்ணீர் துளிகளின் ஊடாய் தேவன் எனக்கு மிக அருகில் உள்ளார் என்பதை உணர்ந்தேன்.

உங்களுக்குப் பின்

சில கலாச்சாரங்களில், ஒரு அறைக்குள் பிரவேசிக்கும்பொழுது, பெரியவர்கள் உள்ளே சென்றபின் இளையவர்கள் செல்லும்படி எதிர்பார்க்கப்படுகிறது. வேறுசில கலாச்சாரங்களில், மிக முக்கியமான அல்லது உயர் பதவியிலிருக்கிற நபர்கள் முதலாவது உள்ளே செல்வார்கள். இப்படி நமது கலாச்சாரம் எதுவாக இருப்பினும், சில சமயம், முக்கியமான காரியங்களில், வேறு ஒருவரை தேர்வு செய்ய நேர்ந்தால், அதுவும், தேர்வு செய்வதற்கான எல்லாவித உரிமையும் நியாயப்படி நமக்கு இருக்கும் பொழுது வேறு ஒருவரை அனுமதிப்பது நமக்கு சற்று கடினமாக இருக்கிறது.

ஆபிராம் (பின்பு ஆபிரகாம்) மற்றும் அவனுடைய சகோதரனின் மகனாகிய லோத்துவுக்கு அநேக ஆடுமாடுகளும், கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒன்றாகப் பயணித்ததால், அவர்கள் அனைவரையும் போஷிக்க அப்பூமி திணறியது. பிரச்சனையை தவிர்க்க அவனும், லோத்துவும் பிரிந்து போவதே நலமாயிருக்கும் என ஆபிராம் ஆலோசித்து, லோத்து போக நினைக்கும் இடத்தை முதலாவதாக தேர்வு செய்து கொள்ளும்படி கூறினான். உடனே லோத்து செழிப்பான யோர்தான் பள்ளத்தாக்கை தனக்கு தேர்வு செய்து கொண்டு, ஆபிராமிற்கு சாதாரண இடத்தை விட்டுவைத்தான்.

ஆபிராம் லோத்துவைவிட வயதில் பெரியவராக இருப்பினும், இச்சூழலில் தன்னுடைய உரிமைகளை வலியுறுத்தாமல், தன் எதிர்காலத்தை தேவன் பார்த்துக்கொள்வார் என விசுவாசித்தான். “ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும், வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்த தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்” (ஆதி. 13:8-9). லோத்துவின் தேர்வு இறுதியில் அவனது முழு குடும்பத்திற்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது (ஆதி. 19).

இன்று, நம் வாழ்க்கையில் பல விதமான வாய்ப்புகளை எதிர்கொள்ளும் பொழுது, அவருடைய வழியிலே நம்மை நடத்திச்சென்று ஏற்றதை நாம் தேர்ந்தெடுக்க நம்முடைய பிதா நமக்கு உதவி செய்திடுவார் என்று அவரில் விசுவாசம் கொள்வோமாக. அவர் எப்பொழுதும் நம்மைப் கவனித்து ‘விசாரிப்பதாக’ வாக்குபண்ணியுள்ளார். தேவன் நம்முடைய தேவைகளைச் சந்திப்பார்.