‘ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஓய்வு நாட்கள் அதிமுக்கியமானது,” என்னும் செய்தித் தலைப்பு என் கண்ணில் பட்டதும் மனதில் பதிந்தது. அமெரிக்க மலை ஓட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரான டாமி மானிங் (Tommy Manning) தன் கட்டுரையில், ஒருவர் தன் பயிற்சிக்குப் பின் சரீரம் இளைப்பாறி, பிறகு மீண்டும் கட்டப்படுவதற்கு தேவையான ஓய்வு நேரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்கிற நெறிமுறையை வலியுறுத்தி உள்ளார். ஏனெனில் மிகுந்த அர்ப்பணிப்போடு பயிற்சி மேற்கொள்ளும் அநேக விளையாட்டு வீரர்கள் இந்நெறிமுறையை அசட்டை செய்துவிடுகின்றனர். “உடல்ரீதியாக, பயிற்சியின் விளைவாக ஏற்படும் மாற்றங்கள், இளைப்பாறும்பொழுதுதான் நிறைவேறுகிறது. அதாவது பயிற்சியைப் போன்றே இளைபாறுதலும் மிக முக்கியமானது” என மானிங் தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளார். இது நம்முடைய விசுவாச ஜீவியத்திற்கும் பொருந்தும். நாம் பெலவீனப்பட்டுப் போகமாலும், சோர்ந்து போகாமலும் இருப்பதற்கு நேரம் தவறாமல் ஓய்வெடுப்பது அத்தியாவசியமானது. மிகப் பெரிய தேவைகளை எதிர்கொண்ட பொழுதும் கூட, இப்பூமியில் வாழ்ந்த நாள் முழுவதும் இயேசு ஓர் ஆவிக்குரிய சமநிலையை நாடினார். அவருடைய சீஷர்கள் பரபரப்பாக போதித்து, அநேகரை சுகமாக்கி திரும்பிய பொழுது “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று கூறினார் (மாற். 6:31). ஆனால் ஒரு பெரிய கூட்டம் அவர்களை பின்தொடர்ந்து சென்றதால், இயேசு அவர்களுக்கு போதித்து, பின்பு ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு உணவு வழங்கினார் (வச. 32-44). எல்லோரும் சென்ற பிறகு, அவர் “ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறினார்” (வச. 46).

ஒரு வேளை நம்முடைய வாழ்க்கை, நாம் செய்யும் வேலையினால் வரையறுக்கப்பட்டிருந்தால், நாம் செய்யும் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்று போகும். ஆகவே தான் நாம் நேரம் தவறாமல் தொடர்ந்து இயேசுவோடு கூட அமைதியான இடத்திலே இளைப்பாறவும், ஜெபிக்கவும் நம்மை அழைக்கிறார்.