பிப்ரவரி, 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: பிப்ரவரி 2017

இருளில் ஒரு நமுட்டுச் சிரிப்பு

வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.

மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.

சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?

கண்களால் காண முடியாத மோதிரம்

கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ (கி.மு. 427 - கி.மு. 348) மனித இருதயத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓர் கற்பனை வழியை கையாண்டார். பூமியின் ஆழத்திலே நன்கு புதைந்து மறைந்து கிடந்த ஒரு தங்க மோதிரத்தை எதேச்சையாக கண்டுபிடித்த மேய்ப்பனைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை கூறினார். ஒரு நாள் ஓர் பயங்கர நிலநடுக்கம் பழங்கால மலைக்கல்லறை ஒன்றை பிளந்து அந்த மோதிரத்தை அம்மேய்ப்பனுக்கு வெளிப்டுத்தியது. அதுமட்டுமன்றி, அந்த மோதிரத்திற்கு மந்திர சக்தி உள்ளதையும் அதை அணிபவர் மற்றவர் கண்களுக்கு தெரியாவண்ணம் மாயமாய் மறைந்து போக முடியும் என்பதையும் எதேச்சையாக அம்மேய்ப்பன் அறிந்துகொண்டான். மாயமாய் மறைந்து போவதைக் குறித்து எண்ணும் பொழுது பிளாட்டோ ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது மனிதர்கள் தாங்கள் பிடிபட்டு, தங்கள் தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கக் கூடும் என்கிற கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தால், தீமை செய்ய அவர்கள் தயங்குவார்களா என்பதே கேள்வி.

யோவான் சுவிசேஷத்திலே இக்கருத்தை இயேசு வேறொரு கோணத்தில் சொல்வதை நாம் காணலாம். நல்ல மேய்ப்பன் என அழைக்கப்படும் இயேசு, தங்களுடைய செயல்கள் வெளியரங்கமாகிவிடாதபடி தங்களுடைய இருதயங்களை இருளின் போர்வைக்குள் மறைத்துக்கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யோவா. 3:19-20). தங்களுடைய தவறுகளை மூடி மறைத்து வைக்க நினைப்பதை சுட்டிக்காட்டி நம்மை குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை, மாறாக அவர் மூலமாக அவர் அளிக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, அவரின் வெளிச்சத்திற்குள் நம்மை அழைக்கிறார் (வச. 17). நம்முடைய இருதயங்களின் மேய்ப்பவராகிய அவர் மனுஷ இருதயங்களில் உள்ள மிக மோசமான காரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதின் மூலம் தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறார் (வச. 16).

தேவன் தம்முடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்தினாலே இருளில் இருக்கும் நம்மை ஒளியிலே அவரைப் பின்பற்றி நடக்க அழைக்கிறார்.

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

முழு இருதயத்தோடு!

காலேப் ‘முழு இருதயத்தோடு’ ஆண்டவரைச் சேவித்த உத்தமமான மனிதன். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உளவுபார்த்து மோசேவுக்கும் மக்களுக்கும் அறிக்கை அளிக்கும்படி அனுப்பப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் காலேபும், யோசுவாவும் இருந்தனர். “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்வோம்” (எண். 13:30) என காலேப் கூறினான். ஆனால் அந்தக் குழுவில் இருந்து 10 பேர் வெற்றிபெற இயலாது என கூறினார்கள். தேவன் அதை அவர்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை அறிந்திருந்தும், தடைகளை மாத்திரமே அவர்கள் பார்த்தார்கள் (வச. 31-33).

இந்த 10 பேர் ஜனங்களை நம்பிக்கை இழக்கச்செய்து, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தார்கள். இதனால் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்திலேயே அலைந்து திரிந்தார்கள். ஆனால் காலேப் தன்னுடைய நம்பிக்கையை இழந்து போகவேயில்லை. “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் (முழுமனதுடன்) என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (14:24) என கர்த்தர் கூறினார். 45 ஆண்டுகள் கழித்து, காலேப் 85 வயதாய் இருக்கும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் (முழு இருதயத்தோடு) பின்பற்றினபடியினால்” (யோசு. 14:14) எபிரோன் பட்டணத்தை தனக்கென பெற்றுக்கொண்டான்.

பல நூற்றாண்டுகள் கழித்து, “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என இயேசுவை நோக்கி நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் கேட்ட பொழுது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:35-38) என இயேசு பதிலளித்தார்.

இன்றும்கூட, நம் முழு இருதயத்தோடு நாம் செலுத்தும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் பாத்திரரான தேவன் மீது தான் கொண்ட விசுவாசத்தின் மூலம் காலேப் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.