எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Jolene Philoகட்டுரைகள்

ஏதோவொன்று தவறாக உள்ளது

எங்களுடைய மகன் ஆலன் பிறந்த மறுநாள் காலை, எனது கட்டிலோரத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்த மருத்துவர், “ஏதோவொன்று தவறாக உள்ளது” எனக் கூறினார். வேளிப்புறம் பரிபூரணமாக காணப்பட்ட எங்கள் மகனிற்கு பிறப்பிலேயே உயிருக்கு ஆபத்தான ஒரு குறைபாடு இருந்ததால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய 700 மைல்களுக்கு அப்பால் இருந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிருந்தது.

உங்கள் குழந்தைக்கு ஏதோ ஒரு குறைபாடு உள்ளது என மருத்துவர் கூறும்பொழுது, உங்கள் வாழ்க்கை மாறிவிடுகிறது. நமக்கு முன் இருக்கிற காரியங்களை குறித்து பயந்து, ஆவியில் நொறுங்குண்டு, நாம் தள்ளாட ஆரம்பிக்கிறோம். அப்பொழுது, கலங்கிப் போயிருக்கும் நாம் நம்முடைய பிள்ளையை போஷிக்க நமக்கு தேவையான பெலத்தை தந்து நம்மை தேற்றி ஆற்றும்படி தேவனையே நோக்கி காத்திருக்கிறோம்.

அன்புள்ள தேவன் இதை அனுமதிப்பாரா? என குழம்புகிறோம். என் குழந்தை மீது அவருக்கு அக்கறை உள்ளதா? அவர் என் குழந்தையோடு இருக்கின்றாரா? என்று அக்காலை வேளையிலே பல எண்ணங்கள் என் விசுவாசத்தை நிலைகுலுங்கச் செய்தது.

பின்பு அங்கு வந்த என்னுடைய கணவர் ஹீராமிடம் மருத்துவர் அச்செய்தியைக் கூறினார். மருத்துவர் சென்ற பிறகு, “ஜோலீன், நாம் ஜெபம் செய்வோம்,” என்று என் கணவர் கூறினார். நான் சரி என்று தலையசைத்தேன். அப்பொழுது அவர் என் கரங்களை பற்றிக்கொண்டு, “பிதாவே நீர் ஆலனை எங்களுக்கு கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனாலும் அவன் எங்களுடையவனல்ல, உமக்குரியவனே. நாங்கள் அவனை அறியும் முன்னமே நீர் அவனை நேசித்துள்ளீர். ஆகவே அவன் உம்முடையவனே. நாங்கள் அவனோடு இருக்கக்கூடாமற்போயினும் நீர் அவனோடு தயவாய் இருந்தருளும் ஆமென்” என ஜெபித்தார்.

என்னுடைய கணவர் ஹீராம் பொதுவாக அதிகம் பேசமாட்டார். அவருடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ள சிரமப்படுவார். எப்பேற்பட்ட அமைதலான தருணங்களையும் போதுமான வார்த்தைகளைக் கொண்டு என்னால் நிரப்ப முடியும் என்பதை அவர் அறிந்திருந்ததால், அநேகந்தரம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளக் கூட முயற்சிக்க மாட்டார்.

ஆனால் அன்றைய தினம் விசுவாசமின்றி உடைந்து போன இருதயத்தோடு, ஆவியிலே நொறுங்குண்டு இருந்த பொழுது, என்னால் கூற முடியாத வார்த்தைகளை என் கணவர் கூறி ஜெபிக்கும்படி தேவன் அவரை பெலப்படுத்தினார். இன்னும் என் கணவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டிருந்த நான், ஆழ்ந்த அமைதியின் மத்தியில், பல கண்ணீர் துளிகளின் ஊடாய் தேவன் எனக்கு மிக அருகில் உள்ளார் என்பதை உணர்ந்தேன்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப் பலர் கருதுகின்றனர்.

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக. 

 

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம்.