சீனாவில் முற்காலத்தில் இருந்த ஜப்பானிய சிறைமுகாம் ஒன்றில், 1945ஆம் ஆண்டு மரித்த ஒருவரின் நினைவுக் கல் உள்ளது. “1902 ஆம் ஆண்டு தியான்ஜினில், ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு மகனாக எரிக் லிட்டல் (Eric Liddell) பிறந்தார். அவர் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்று, புகழின் உச்சியை தொட்டார். அவர் சீனாவிற்கு திரும்பி, தியான்ஜினில் ஒரு ஆசிரியராக வேலை செய்தார். மனிதகுலத்தின் நலனுக்காக சிறந்த பங்களிப்பை செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதிலேயே அவரது முழு வாழ்வையும் கழித்தார்” என்று அந்நினைவுகல்லில் எழுதப்பட்டிருந்தது.

எரிக் விளையாட்டுத் துறையில் செய்த சாதனையைத் தான் பலரும் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆயினும் அவர் பிறந்த நாட்டில், அவர் நேசித்த சீனாவில், தியான்ஜினின் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆற்றிய தொண்டையும், பங்களிப்பையும் கூட பலர் நினைவுகூருகின்றனர். விசுவாசத்தினால் அவர் வாழ்ந்தும், சேவை செய்தும் வந்தார்.

நாம் எதற்காக நினைவுகூரப்படுவோம்? நம்முடைய கல்வி சாதனைகளும், வேலையின் நிலையும், பொருளாதார வெற்றியும் பிறருடைய அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தரலாம். ஆனால் பலரது வாழ்வில் நாம் செய்த அமைதியான சில காரியங்கள்தான் நாம் சென்ற பிறகும் நம்மை பற்றி எடுத்துரைத்து வாழ்ந்து கொண்டிருக்கும். விசுவாசத்தின் அதிகாரம் என்று சொல்லப்படும் எபிரெயர் 11ல் மோசேயைக் குறித்து எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம். எகிப்தியரின் பொக்கிஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டார் (வச. 26). விசுவாசத்தினால் தேவனுடைய மக்களுக்காக ஊழியம் செய்து அவர்களை வழிநடத்தினார்.