வகை  |  odb

நீ ஒரு அசல்!

நாம் ஒவ்வொருவரும் தேவ கரத்தினால் படைக்கப்பட்ட அசல்கள். யாருமே தானாகவே மனிதனாக மனுஷியாக தங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. யாருமே தாலந்துமிக்கவர்களாக மெருகேற்றப்பட்டவர்களாக பிரகாசமானவர்களாக தானாக மாறிவிடவில்லை. தேவன் மட்டுமே நம் ஒவ்வொருவரையும் உண்டாக்கினார். நம்மை நினைத்த அவர் தமது விலையேறப்பெற்ற அன்பிலிருந்து நம்மை உருவாக்கினார்.

தேவன் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை உருவாக்கினார். அதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து உங்களை அவர் உருமாற்றிக் கொண்டே இருக்கிறார். நாம் முதிர்ச்சி பெற வேண்டுமென்பதே அவரது ஒரே குறிக்கோள். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் நடத்திவருவார்” (பிலி. 1:6). உங்களை தைரியமானவர்களாகவும், பலமிக்கவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், இன்னும் சமாதானமிக்கவர்களாகவும், அதிக அன்பானவர்களாகவும், சுய ஆசையற்றவர்களாகவும், நீங்கள் விரும்புகின்ற நல்ல மனிதராக தேவன் உங்களை உருவாக்கி வருகிறார்.

“கர்த்தருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங். 100:5). தேவன் எப்போதும் உங்களை நேசிக்கிறார். அவர் இறுதிவரை உங்களுக்கு உண்மையாயிருப்பார்.

நிலைத்திருக்கும் அன்பை அவர் உங்கள் மீது பொழிகிறார். அதை அவர் விட்டுவிடமாட்டார். ஆனந்தத்தோடே அவர் சன்னதி முன் வருவதற்கு (100:2) இது ஒரு சரியான காரணம்.

இராகத்தோடே உங்களால் பாட முடியவில்லையென்றால் அவரை நோக்கி உரக்க சத்தமிடுங்கள்: “கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (வச. 1).

சமாதானமான குடும்பம்!

அறுபத்து ஐந்து மில்லியன். இன்றைய உலகில், சண்டைகள் மற்றும் உபத்திரவங்களினால் தங்களது வீடுகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை அது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதாகும். ஒவ்வொரு பிள்ளையும் கல்வி வாய்ப்பைப் பெறும்படியாகவும், ஒவ்வொரு பெரியவரும் அர்த்தமுள்ள ஒரு வேலையில் அமரும்படியாகவும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு வீட்டில் வாழும்படியாகவும் அகதிகளாக்கப்பட்டவர்களை ஏற்று உதவ வழிமுறைகளை இயற்றுமாறு உலகத் தலைவர்களை ஐக்கிய நாடுகள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அசிரிய அகதிகளுக்காக வீடுகளை உருவாக்கும் கனவுத்திட்டத்தை நான் யோசிக்கையில், பலம் படைத்த இராணுவம் யூதா தேசத்தாரை வீடுகளை விட்டு பயமுறுத்தும்போது தேவன் அளித்த வாக்குறுதியை நான் நினைவுகூருகிறேன். தீர்க்கதரிசியாகிய மீகாவை அனுப்பிய தேவன், ஜனங்கள் தங்களது ஆலயத்தையும் அன்பான எருசலேம் நகரத்தையும் இடிக்கப்போகிறார்களென எச்சரித்தார். ஆயினும் இழப்பிற்கு அப்பால் ஒரு அழகான எதிர்காலத்தை தேவன் வாக்குத்தத்தம் செய்தார்.

ஒரு நாள் வரும் அப்போது உலக மக்கள் அனைவரையும் தேவன் தம்மிடம் அழைப்பாரென்று மீகா கூறினார். யுத்த ஆயுதங்கள் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும் தேவ சத்தத்தைக் கேட்கும் எவனும், அவரது இராஜ்யத்தில் ஒரு சமாதானமான குடும்ப வாழ்வையும் பயனுள்ள வாழ்க்கையையும் கண்டடைவான் (4:3-4).

இன்று உலகிலுள்ள பலருக்கு, ஒருவேளை உங்களுக்கும், சமாதானமிக்க ஒரு குடும்பமென்பது ஒரு தூரத்துக் கனவாக இருக்கலாம். அனைத்து தேசத்தாருக்கும் ஒரு வீடு உண்டென்னும் அந்த பண்டைய தேவ வாக்குறுதியை நாம் சார்ந்துகொள்ளும்போது, அதற்காக காத்திருந்து அதற்காக உழைத்து அதற்காக ஜெபிக்கும்போது அது ஒரு நடைமுறையாக மாறுவதை நாம் காணக்கூடும்.

பயமல்ல விசுவாசமே!

“எனது கணவர் பதவி உயர்வு பெற்று இன்னொரு நாட்டிற்கு அனுப்பப்படவிருந்தார். ஆனால் எனக்கு வீட்டை விட்டுச் செல்ல பயம். எனவே அவர் மிகுந்த தயக்கத்துடன் அந்த வாய்ப்பை வேண்டாமெனக் கூறிவிட்டார்” என்று என் தோழி என்னிடம் கூறினாள். ஒரு பெரிய மாற்றத்திற்காக பயமடைந்து ஒரு புதிய புத்துணர்வளிக்கும் வாய்ப்பை தான் தவறவிட்டதையும், வாழ்க்கையில் தான் இவ்வாறு இழந்ததை எண்ணி வருந்தியதையும் அவள் என்னோடு பகிர்ந்துகொண்டாள்.

“பாலும் தேனும் ஓடுகிற” (எண். 33;3) ஒரு வளமிக்க பசுமையான நாட்டை சுதந்தரிக்க அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்களது பயமிக்க நினைவுகள் செயலிழக்க வைத்தன. பெரிய நகரங்களில் பெலமிக்க மக்கள் வாழ்வதாகக் கேள்விப்பட்டபோது அவர்களது பயம் பெருகியது (வச. 27) தேசத்தினுள் நுழையும் அழைப்பை பெரும்பாலான இஸ்ரவேலர்கள் நிராகரித்தனர்.

யோசுவாவும் காலேபும் தேவனை நம்பும்படி அவர்களிடம் கெஞ்சினார்கள், “அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 9) அங்கிருந்த ஜனங்கள் உருவத்தில் பெரியவர்களாயிருந்த போதிலும், தேவன் தங்களோடு இருப்பதை இஸ்ரவேலர் நம்பவேண்டும்.

வேறொரு தேசத்திற்கு செல்லும்படி, இஸ்ரவேலரைப் போல எனது தோழிக்கு யாரும் கட்டளை இடவில்லை. எனினும் பயத்தினால் அவ்வாய்ப்பை அவள் நழுவ விட்டாள். நீங்கள் எப்படி? ஒரு பயமிக்க சூழ்நிலையை சந்திக்கிறீர்களா? அப்படியானால், தேவன் உங்களோடிருக்கிறார். அவர் உங்களை வழிநடத்துவார் என்பதை நம்புங்கள். அவரது ஒருபோதும் கைவிடாத அன்பைப் பெற்று, விசுவாசத்தில் நாம் முன்னேறலாம்.

அவரது செட்டைகளின் கீழ்!

பாதுகாப்பைக் குறித்து நான் யோசிக்கையில், உடனடியாக பறவையின் சிறகுகளை நினைப்பதில்லை. பறவை இறகுகள் பாதுகாப்பை அளிப்பதில் மிகக் கீழானவை போலத் தோன்றினாலும், அது சரியான மதிப்பீடல்ல.

பறவை இறகுகள் தேவனது வடிவமைப்பு திறனுக்கு அற்புதமான ஒரு உதாரணம். பறவை இறகுகளின் மென்மையான ஒரு பாகமும், குஞ்சம் போன்ற ஒரு பாகமும் உள்ளன. மென்மையான பகுதியில் கொக்கி போன்ற பல சிறிய கூர் முனைகள் உள்ளன. குஞ்சம் போன்ற பகுதி பறவை வெப்பமாயிருக்க உதவுகிறது. இவ்விரண்டு பகுதிகளும் காற்று மற்றும் மழையிலிருந்து பறவையைக் காக்கின்றது. ஆனால் பல பறவைக் குஞ்சுகளுக்கு குஞ்சமும், வளர்ச்சியடையாத சிறகுகளும் இருப்பதால், தாய்ப் பறவை கூட்டில் தனது சொந்த சிறகுகளால் அவற்றை மூடி காற்று மற்றும் மழையிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.

சங்கீதம் 91:4லும் மற்ற வேதாகமப் பகுதிகளிலும் தேவன் தமது சிறகுகளால் நம்மை மூடுகிறார் என்பது சுகவாழ்வையும் பாதுகாப்பையும் குறிக்கிறது (சங்கீதம் 17:8). நமது மனதில் தோன்றும் படம், ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சுகளை சிறகினால் மூடிப் பாதுகாப்பதாகும். பயமுறுத்தும் புயல் மற்றும் கஷ்ட நேரத்தில் பெற்றோர் தங்கள் கரங்களால் பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் அளிப்பதைப் போல நமது மனப் புயல்களில் தேவனது ஆறுதலளிக்கும் பிரசன்னம் நமக்கு பாதுகாப்பையும் அரணையும் அளிக்கிறது.

நமது முகங்கள் தேவனை நோக்கியிருக்கையில் என்ன உபத்திரவம் கஷ்டம் வந்தாலும் நாம் அவற்றைப் பயமின்றி எதிர்கொள்ளலாம். அவர் நமது அடைக்கலம் (சங். 91:2,4,9).

பிள்ளைகள் மீது அன்பு!

தாமஸ் பர்னாடோ கி.பி. 1865ல் லண்டன் மருத்துவமனை மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார். சீனாவுக்கு மருத்துவ அருட்பணியாளராக செல்ல வேண்டுமென்பது அவரது கனவு மிக விரைவில் தான் இருக்கும் பகுதியிலேயே பெரிய தேவையிருப்பதை அவர் உணர்ந்தார். வீடற்று அநேக சிறு பிள்ளைகள் லண்டன் தெருக்களில் வசித்தனர், சிலர் மரித்துவிட்டனர். இந்த அபாயகரமான சூழ்நிலையை மாற்ற தாம் ஏதாவது செய்ய வேண்டுமென பர்னாடோ முடிவு செய்தார். லண்டனின் கிழக்கு எல்லையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லங்களை உருவாக்கி சுமார் 60,000 சிறுவ சிறுமியரை வறுமையிலிருந்தும் மரண அபாயத்திலிருந்தும் தப்புவித்தார். போதகரும் இறையில் அறிஞருமான ஜான் ஸ்டாட் “இன்று பர்னாடோவை தெரு பிள்ளைகளின் பாதுகாவலன் பரிசுத்த பர்னாடோ என அழைக்கலாம்!”

இயேசு கூறினார், “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களை இந்தக் குழந்தைகளைப் போல இருப்பவர்களுக்குத்தான் பரலோக ராஜ்யம் சொந்தமாகும்” (மத். 19:14). இவ்வாறு இயேசுவானவர் முழங்கியபோது இயேசுவின் சீஷர்களும் அங்கிருந்த திரள் கூட்டத்தாரும் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். பண்டைய உலகில், பிள்ளைகளுக்கு குறைந்த மதிப்பே வழங்கப்பட்டது. வாழ்வின் ஓரப் பகுதிகளுக்கு பிள்ளைகள் தள்ளப்பட்டார்கள். ஆயினும், இயேசுவானவர் பிள்ளைகளை வரவேற்றார். ஆசீர்வதித்தார், மதித்தார்.

புதிய ஏற்பாட்டில் யாக்கோபு கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு அறைகூவல் விடுக்கிறார், “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது… பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” (யாக். 1:27). இந்நாட்களில், அந்த முதல் நூற்றாண்டுக் குழந்தைகளைப் போலவே, அலட்சியப் போக்காலும், மனிதர்களைக் கடத்துவதாலும், தவறான பயன்பாட்டாலும், போதை மருந்துகளினாலும் பல்வேறு இனத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டுப் பிள்ளைகளும் ஆபத்தான சூழ்நிலையில் வசிக்கின்றனர். நம்மை நேசிக்கின்ற நமது பிதாவானவரை நாம் எவ்வாறு கனப்படுத்தக்கூடும்? இயேசுவானவர் வரவேற்கிற சிறுவர் சிறுமியரின் மீது நமது அக்கறையை செலுத்துவதன் மூலமே!

பயத்திலிருந்து விசுவாசத்துக்கு!

மருத்துவரின் சொற்கள் அவளது இருதயத்;தை அதிரவைத்தது. அது புற்று நோய். அவளது கணவரையும் பிள்ளைகளையும் நினைத்தபோது அவளது உலகமே நின்றது போலிருந்தது. வேறு விதமான முடிவை வேண்டி அவர்கள் கருத்தாய் ஜெபித்தார்கள். இப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும்? கன்னங்களில் நீர் கொட்ட அவள் மென்மையாய் ஜெபித்தாள், “தேவனே, இது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது தயவுசெய்து நீர் எங்கள் பெலனாயிரும்.”

நமது முன்கணிப்பு, நம்பிக்கையைச் சிதறடிப்பதாகவும் நமது சூழ்நிலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு மீறினதாகவும் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம்? நமது எதிர்காலம் நம்பிக்கையற்றதாய்த் தோன்றும்போது நாம் எங்கே நோக்குகிறோம்?

தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் நிலைமை அவரது கட்டுப்பாட்டில் இல்லை, அவர் மிகவும் திகிலடைந்தார். வருகின்ற நியாயத்தீர்ப்பு பேரழிவைக் கொண்டுவருவதாயிருந்தது (ஆபகூக் 3:16-17) என்ற போதிலும், வரப்போகின்ற குழப்பங்களின் மத்தியில் தன் விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க (ஆபகூக் 2:4) ஆபகூக் தெரிந்துகொண்டார். தேவனில் மகிழத் தீர்மானித்தார் (3:18). தனது சூழ்நிலைகளின் மேல் தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையம் வைக்காமல், தேவனுடைய நற்குணம் மற்றும் வல்லமையைச் சார்ந்துகொள்ள முடிவு செய்தார். தேவன் மேலுள்ள தனது நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தினார்: “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்” (3:19)

வியாதிகள், குடும்பப் பிரச்சனை, நிதி நெருக்கடி போன்ற கடின சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது நாம் நமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தேவனில் வைக்க வேண்டும். அவர் எந்தச் சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கிறார்.

அனைத்திற்காகவும் நன்றி செலுத்துதல்!

ஆஸ்திரேலியாவின் நகரங்களுக்கிடையில் காரில் செல்ல பல மணி நேரம் ஆகும். உடல் சோர்வு பல கொடிய விபத்துகளுக்குக் காரணமாகலாம். எனவே நெருக்கம் நிறைந்த விடுமுறை நாட்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வத் தொண்டர்கள் இலவசமாக காப்பி வழங்குகின்றனர். நெடுந்தூரம் காரில் பயணம் செய்கையில் நானும் எனது மனைவி மெரினும் இவ்வித நிறுத்தங்களை மிகவும் ரசித்து நேசிக்கலானோம்.

ஒரு சமயம் காரை ஒரு ஓய்வு நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, காப்பி அருந்தச் சென்றோம். ஒரு பணியாளர் இரு கோப்பை காப்பியை நீட்டி, இரு டாலர்கள் தருமாறு கேட்டாள். ஏன் என்று கேட்டேன். அங்கிருந்த விளம்பர அட்டையைப் படிக்குமாறு கூறினாள். இந்நிறுத்தத்தில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே இலவச காப்பி, மற்ற பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எரிச்சலடைந்த நான் இது ஒரு போலி விளம்பரமென அவளிடம் கூறினேன். இரண்டு டாலரைப் செலுத்திவிட்டு எங்கள் காரை நோக்கி நடந்து சென்றேன். காருக்குச் சென்றபோது என் மனைவி மெரின் எனது பிழையைச் சுட்டிக் காண்பித்தாள்: பரிசு ஒன்றை எனது உரிமைப் பொருளாக எண்ணிக்கொண்டு நான் பெற்றுக்கொண்டதற்கு நன்றி செலுத்தத்தவறிவிட்டேன். அவள் மிகச்சரியாய்ச் சொன்னாள்.

வாக்குத்தத்த தேசத்தை நோக்கி இஸ்ரவேலரை நடத்திச் சென்ற மோசே நன்றியுள்ள மக்களாய் விளங்கும்படி  அவர்களை கேட்டுக்கொண்டார் (உபா. 8:10) தேவனுடைய ஆசிர்வாதத்தால் அந்த தேசம் நிறைந்திருந்தது என்றாலும், இந்த செழிப்பு நிலைக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதுபோல அம் மக்கள் நடந்து கொண்டனர் (வச. 17,18). இதன் அடிப்படையில், யூத மக்கள் தங்களது ஒவ்வொரு சாப்பாட்டுக்காகவும் சிறிதோ பெரிதோ தேவனைத் நன்றி கூற ஆரம்பித்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டும் எல்லாமே இலவசப் பரிசு.

நான் திரும்பிச் சென்று அந்தப் பெண் பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டேன். தகுதியற்ற எனக்கு ஒரு கோப்பை காப்பி என்பது ஒரு இலவசப் பரிசு, அதற்காக நான் நன்றிசெலுத்த வேண்டும்.

நீர் மட்டும் இருந்திருந்தால்…

வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து நாங்கள் காரை எடுக்கையில் வெளியே சைக்கிள் ஓட்டிய ஒரு இளம் பெண்ணுக்காக எனது கணவர் காரை சற்று மெதுவாக ஓட்டினார். எனது கணவர் தனது தலையை அசைத்து அவளை முன்னே போகச் சொன்னபோது, புன்னகைத்த அப்பெண் கைகளை ஆட்டிவிட்டு சைக்கிளில் சென்றால். சற்று நேரத்திற்கு பின்னர் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு காரின் ஓட்டுநர் கதவைத் திறக்க அதில் அடிபட்டு அந்த இளம்பெண் நடைபாதையில் விழுந்தாள். அவளது கால்களில் இரத்தம் கொட்டியது. வேதனையில் துடித்த அவள் நொறுங்கிப்போன தனது சைக்கிளை கவலையுடன் பார்த்தாள்.

பின்பு, அவ்விபத்தைக் குறித்து நாங்கள் யோசிக்கலானோம்… நாங்கள் மட்டும் அவளைக் காக்க வைத்திருந்தால்… அந்த மற்ற காரின் ஓட்டுநர் தனது காரின் கதவைத் திறக்குமுன் கொஞ்சம் வெளியே பார்த்திருந்தால்… வாழ்க்கையில் திடீரென ஏற்படும் சங்கடங்கள் நம்மை இப்படி வேறுவித யோசனைகளுக்குத் தள்ளுகின்றன. மதுப்பழக்கமுடைய இளம் வாலிபப் பிள்ளைகளோடு என் பிள்ளை இருப்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தால்… இந்தப் புற்று நோயை இன்னும் சற்று முன்பாகவே நாங்கள் கண்டுபிடித்திருந்தால்…

எதிர்பாராத பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கையில், தேவனது நல்ல குணத்தைக் குறித்து நாம் கேள்விகளைக் கேட்கிறோம். தங்களது சகோதரன் மரித்தபோது மார்த்தாள் மரியாள் அடைந்ததைப் போன்ற துக்கத்தை நாமும் உணரலாம். லாசரு வியாதியாயிருக்கிறானென்று அறிந்த உடனேயே இயேசுவானவர் இங்கு வந்திருந்தாரானால் (1 யோவா. 21,32).

மார்த்தாள் மரியாளைப் போலவே நமக்கு ஏன் கடினமான காரியங்கள் நடக்கின்றன என நமக்குப் புரிவதில்லை. ஆயினும், மிகப்பெரிய நன்மையொன்றை தேவ சித்தம் நிறைவேற்றும் என்னும் நம்பிக்கையில் நாம் அமைதியாய் இருந்துவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும், அன்பான உண்மையுள்ள ஒரு தேவனின் ஞானத்தை நாம் நம்பலாம்.

நமது பிதாவின் முகம்!

எனது தந்தையின் முகத்தை நினைத்துப் பார்க்கிறேன். அவர் முகத்தின் அர்த்தத்தைக் கண்டுகொள்வது சுலபமன்று. அப்பா மிகவும் அன்பானவர் எனினும் அமைதியாய் சுயஅடக்கத்தோடு தோன்றுபவர். சிறுவனாயிருக்கும் பொழுது அவரது முகத்தில் ஒரு புன் முறுவளையோ அல்லது அன்பு நிறைந்த ஒரு பார்வையையோ நான் பல முறை தேடியிருக்கிறேன். நமது முகம் நாம் யாரென்பதைக் காட்டுகிறது. ஒரு கோபம், ஒரு உணர்வற்ற பார்வை, ஒரு புன்சிரிப்பு மற்றும் சுருக்கங்கள் நிறைந்த கண்கள் மற்றவர்களைக் குறித்து நாம் என்ன நினைக்கிறோமென்பதை வெளிப்படுத்துகின்றன. நாம் யார் என்பதை நமது முகங்கள் சொல்லி விடுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.

சங்கீதம் 80-ன் ஆசிரியறான ஆசாப் மிகவும் கவலையடைந்தவனாய் தேவனுடைய முகத்தைக் காண ஆசைப்பட்டான். எருசலேமின் வடக்கே அவன் பார்த்தபோது யூதேயாவின் சகோதர தேசமாகிய இஸ்ரவேல் அசீரிய சாம்ராஜ்யத்தின் சுமையால் நிலைகுலைந்திருப்பதைக் கண்டான். அந்த தேசம் பறிபோன நிலையில், யூதேயாவானது அனைத்து திசையிலிருந்தும் அன்னிய படையெடுப்புக்கு இலக்காயிருந்தது. வடக்கிலிருந்து அசீரியா, தெற்கிலிருந்து எகிப்து, கிழக்கிலிருந்து அரேபிய தேசங்கள். யூதேயா எண்ணிக்கையில் குறைந்தும் பலவீனமாயும் காணப்பட்டது.

தனது பயங்களையெல்லாம் ஜெபமாக ஒருங்கிணைத்த ஆசாப் மூன்று முறை திரும்பத் திரும்ப கூறுகிறான், “உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (80:3,7,19). (வேறொரு விதத்தில் சொன்னால், நான் உமது புன்முறுவலைக் காண்பேனாக)

நமது பயங்களை விட்டுவிட்டு, நமது பரலோகப் பிதாவின் முகத்தைத் தேடுவது நல்லது. தேவனின் முகத்தைப் பார்க்கும் மிகச் சிறந்த வழி சிலுவையைப் பார்ப்பதாகும். சிலுவை அவர் யாரென்று நமக்குச் சொல்லிவிடுகிறது (யோவா. 3:11).

இதை அறிந்துகொள்ளுங்கள்: பிதாவானவர் உங்களைப் பார்க்கும்போது அவரது முகத்தில் ஒரு பெரிய புன்சிரிப்பு மிளிர்கிறது. நீங்கள் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள்.