வகை  |  odb

பரலோகத்திலிருந்து உதவி

ககடற்பயணிகள், தங்களுடைய சோகமான நிலைமையைத் தெரிவிக்க தேவையான SOS என்ற மோர்ஸ் குறியீட்டு அடையாளம், 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு ‘ஸ்டீம் ஷிப் கென்டக்கி’ என்ற கப்பல் மூழ்கிய போது, அக்கப்பலிலிருந்த நாற்பத்தாறு பயணிகளையும் காப்பாற்ற இந்த குறியீட்டு அடையாளம் பயன்பட்டதிலிருந்து, அது பிரபல்யமடைந்தது.

SOS என்பது ஒரு சமீபகால கண்டுபிடிப்பு. ஆனால், அவசரகால உதவிக்காகக் கூப்பிடல் என்பது மனித குலம் உருவானது முதல் இருந்து வருகிறது. இத்தகைய கூப்பிடுதலை நாம் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் சரித்திரத்தில் அநேக இடங்களில் பார்க்கின்றோம். யோசுவா தன்னுடைய சொந்த இஸ்ரவேல் ஜனங்களின் எதிர்ப்பைச் சந்தித்தபோதும் (யோசு. 9:18) சவாலான வனாந்தர பிரயாணத்திலும் (3:15-17) . இஸ்ரவேலர் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக, தேவன் அவர்களுக்கு வாக்களித்த தேசத்தை கொஞ்சங், கொஞ்சமாகக் கைப்பற்றி சுதந்தரித்துக் கொண்ட போதும் காண்கின்றோம். இத்ததைய போராட்டங்களின் போது “கர்த்தர் யோசுவாவோடே கூட இருந்தார்” (6:27).

யோசுவா 10ல் காண்கிறபடி, இஸ்ரவேல் ஜனங்களோடு சமாதானமாயிருந்த கிபியோனியருக்குத் துணையாக இஸ்ரவேலர், அவர்களை எதிர்த்த ஐந்து ராஜாக்களுக்கும் எதிராக யுத்தம் பண்ணப் புறப்பட்டனர். யோசுவா, தங்களை எதிர்த்து வருகின்ற பெலசாலிகளான ஐந்து ராஜாக்களையும் மேற்கொள்ள தேவனுடைய உதவியைக் கேட்கின்றான் (வச. 12). கர்த்தர் வானத்திலிருந்து கல்மழையைத் கட்டளையிட்டார். இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களை முற்றிலும் அழிக்குமட்டும் கர்த்தர் சூரியனை நடுவானில் ஒரு பகல் முழுவதும் தரித்து நிற்கச் செய்தார் (யோசு. 10:14). இப்படி, “மெய்யாகவே கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்”.

ஒரு வேளை நீயும் இத்தகைய சவால்கள் நிறைந்த சூழலிலிருக்கலாம். நீ கர்த்தருக்கு ஒரு SOS (எஸ்.ஓ.எஸ்) அனுப்பு. யோசுவா பெற்றுக் கொண்ட உதவியை விட வேறுவிதமாக உனக்கு உதவி வரும். அது ஒருவேளை நீ எதிர்பாராத ஒரு வேலையின் வழியாகயிருக்கலாம், அல்லது உன் தேவையைப்புரிந்து கொண்ட ஒரு மருத்துவராக இருக்கலாம், அல்லது கவலையின் மத்தியில் ஏற்பட்ட சமாதானமாயிருக்கலாம். இத்தகைய வழிகளில் அவர் நீ உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டு பதிலளித்து உனக்காக யுத்தம் செய்கிறார். எனவே ஊக்கத்தோடிரு.

அந்தப் புன்னகை மனிதன்

மளிகைக் கடைக்குச் செல்வது என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு காரியமல்ல. ஆனால், அது இவ்வுலக வாழ்வோடு இணைந்த ஒன்று, கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்று.

ஆனால், இந்த வேலையில் ஓர் அங்கத்தை எதிர்பார்த்துச் செல்ல நான் தூண்டப்பட்டேன். அது ப்ரெட் நிற்கும் பகுதியில் அமைந்த வெளியே போகும் வரிசை. ப்ரெட் அந்த வெளியே செல்லும் வரிசைக்கு அதை ஒரு காட்சி நேரமாக மாற்றிவிட்டார். அவர் வியத்தகுவகையில் வேகமாகச் செயல்படுவதோடு, முகத்தில் பெரிய சிரிப்பும், சில வேளைகளில் நடனமும், அதனோடு சிலவேளைகளில் பாடலையும் கொண்டிருப்பார். அத்தோடு கரணமிட்டுத் திரும்பி நினைக்க முடியாத வேகத்தில் நாம் வாங்கிய பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பார் யாவரும் கடினமானதாகப் பார்க்கும் ஒரு வேலையை ப்ரெட் மிகவும் ஆர்வத்தோடு செய்வதைக் காணலாம். ஒரு நொடிப் பொழுதில் அவருடைய உற்சாகமான ஆவி அந்த வரிசையிலுள்ள அனைவரின் வாழ்வையும் பிரகாசிக்கச் செய்யும்.

ப்ரெட் தன்னுடைய வேலையைச் செய்யும் முறை என்னுடைய மரியாதையையும், பாராட்டையும் பெற்றது. அவருடைய மகிழ்ச்சியான நடத்தையும், சேவை செய்யும் ஆவலும், அங்கு வரிசையிலிருப்போரின் அத்தனை தேவைகளையும் நன்கு கவனித்துச் செய்வதும், அப்போஸ்தலனாகிய பவுல், நாம் எப்படி வேலை செய்ய வேண்டுமென கொலோசெயர் 3:22ல் குறிப்பிட்டிருக்கின்றாரோ அதே போலிருந்தது. “நீங்கள் மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல் தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்”

நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருக்கும் போது, எந்த வேலையை நாம் செய்ய நேர்ந்தாலும் அது தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் காட்டும் சந்தர்ப்பமாகக் கொள்ள வேண்டும். எந்த வேலையும் பெரிதென்றும், சிறிதென்றுமில்லை. அது எவ்வாறிருந்தாலும், எந்த வேலையாயினும் நம்முடைய பொறுப்புக்களை மகிழ்ச்சியோடும், புதிய வகையிலும் மிகச் சிறப்பாகவும் கையாள்வது நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களாகும்.

நம்பிக்கையோடு கூடிய புலம்பல்

பகாமாஸ் பட்டணத்தில் நாசா என்ற இடத்திலுள்ள கிளிஃப்டன் ஹெரிடேஜ் நேஷனல் பார்க்-ஐ பார்த்தோமாயின் சரித்திரத்திலுள்ள ஒரு கொடூரக்காலத்தை மீண்டும் பார்த்தது போலிருக்கும். அந்த தீவின் நிலப்பகுதியும், நீர்ப்பரப்பும் சந்திக்கும் இடத்தில், கற்களாலான ஒரு படிக்கட்டு ஒரு பாறையின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். 18ஆம் நாற்றாண்டில் இந்த பகாமாஸ்சுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட அடிமைகள் தங்கள் குடும்பத்தை விட்டு, இந்தப் படி வழியே ஏறி ஒரு மனிதாபிமானமற்ற நடத்தைக்குள்ளாக்கப்படும் வாழ்வுக்குத் தள்ளப்படுவர். அந்த மலை உச்சியில் அந்த அடிமைகளுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கேதுரு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்கள் கடலை நோக்கிய வண்ணம், தங்களுடைய தாய்நாட்டை நோக்கிய வண்ணம், தாங்கள் விட்டு வந்த தங்கள் குடும்ப நபர்களை எதிர்பார்ப்பது போல அமைந்திருக்கும். ஒவ்வொரு சிற்பத்திலும் அந்த அடிமையின் தலைவனுடைய சாட்டையின் தழும்புகள் இருக்கும்.

இப்பெண் சிற்பங்கள் தாங்கள் இழந்து போனதை நினைத்துப் புலம்புவது போன்ற காட்சி, நாம் இவ்வுலகில் நடக்கின்ற அநீதியையும், உடைந்துபோன நிலைமையையும் நினைத்துப் பார்த்து புலம்ப வேண்டியதின் அவசியத்தை எனக்கு நினைவுபடுத்தியது. புலம்பல் என்பது நம்பிக்கையை இழந்து விட்ட நிலையை மட்டும் குறிப்பதல்ல, அது தேவனோடு நாம் உண்மையாய் இருத்தலையும் குறிக்கும். இது கிறிஸ்தவர்களுக்கு நன்கு பழகிவிட்ட ஒரு நிலை. சங்கீதங்களில் சுமார் நாற்பது சகவீதம், புலம்பலின் சங்கீதங்களாகும். புலம்பல் புத்தகத்தில் தங்களுடைய பட்டணம் பிற படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதை நினைத்து புலம்புவதாகும் (3:55).

புலம்பல் என்பது வேதனையின் உண்மையான வெளிப்பாட்டை முறையாகத் தெரிவிப்பதாகும். அது தன் வேதனை, மற்றும் கஷ்டத்தின் மத்தியில் தேவனை இணைத்துக் கொள்ளும். மொத்தத்தில் புலம்பல் நம்பிக்கையைத் தரும். அநியாயத்திற்காக புலம்பும் போது, நாம் நம்மையும் பிறரையும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர செயல்படுமாறு அழைப்பதாகும்.

இதனாலேயே நாசாவிலுள்ள இந்த சிற்பத் தோட்டத்தை “ஆதியாகமம்” எனப் பெயரிட்டுள்ளனர். புலம்பலின் இடம் ஒரு புதிய துவக்கத்தின் இடமாக உணரப்படுகிறது.

ஒரு நல்ல தந்தை

என்னுடைய மகன் சேவியர் சிறுவனாக இருந்த போது, என்னுடைய கணவன் தன்னுடைய வேலையின் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. சேவியரின் தந்தை அவனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்ட போதும், சில கடினமான இரவுகளில் அவனை ஆறுதல் செய்ய அந்த தொலைபேசி அழைப்பு மட்டும் போதுமானதாக இல்லை. அவன் தன்னுடைய தந்தையைத் தேடிய போதெல்லாம் அவனைச் சமாதனாப்படுத்த, அவன் தூங்கச் செல்லுமுன், எங்களுடைய புகைப்பட ஆல்பத்தை அவனிடம் கொடுப்பேன். நாங்கள் இணைந்து செலவிட்ட நேரங்களை அவனுக்கு நினைவுபடுத்தி, அவனிடம், “இது உனக்கு நினைவிருக்கிறதா? எனக் கேட்பேன்.

அந்த நினைவுகள் என்னுடைய மகனின் ஏக்கத்தை நீக்கி, “ எனக்கு ஒரு நல்ல தந்தையிருக்கிறார்” என அவனைச் சொல்லும்படி வைத்தது.

சேவியர் தன் தந்தையைப் பார்க்க முடியாத போதெல்லாம், அவருடைய அன்பை நினைவுகூர விரும்புகிறான் என நான் புரிந்து கொண்டேன். நான் கடினமான சூழல்களில் இருக்கும் போதும் தனிமையில் தவிக்கும் போதெல்லாம் நானும் என்னுடைய பரலோகத் தந்தை என்னை நேசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஏங்குகிறேன்.

தாவீது தன்னுடைய பகைவரிடமிருந்து மறைந்து வனாந்தரத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தபோது தேவனை நோக்கி தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார் (சங். 63:1) தேவனோடு தனக்குள்ள தனிப்பட்ட உறவினை எண்ணி, அவருடைய எல்லையில்லா வல்லமையையும், தன்னை திருப்திப்படுத்தும் அவருடைய அன்பையும் எண்ணி அவரைப் போற்றுகின்றார் (வச. 2-5). அவருடைய மிகவும் கஷ்டமான இரவுகளிலும் தேவனுடைய அன்பின் அரவணைப்பைச் சார்ந்து கொண்டு, அவரில் மகிழ்ச்சியாயிருந்தார் (வச. 6-8).

நம்முடைய இருண்ட நேரங்களில் தேவன் நமக்குத் துணையாயில்லையோ என ஏங்கும் வேளைகளிலும், நம்முடைய தேவன் எப்படிப்பட்டவர், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம், அவரோடுள்ள நம்முடைய தனிப்பட்ட அநுபவங்களின் மூலமாகவும், வேதத்தில் நாம் காணும் அவருடைய கிரியைகள் மூலமாகவும் நம்முடைய நல்ல தந்தை நம்மீது வெவ்வேறு வழிகளில் செலுத்துகின்ற அளவற்றை அன்பினை உறுதிப்படுத்திக்கொள்வோம்.

அன்பிற்கு அர்பணம்

மதம் மாறி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபீல் குரேஷி, தான் விட்டு வந்த மதத்திலுள்ள, தன்னுடைய ஜனங்களை, வாசகர்கள் புரிந்து கொள்ளும்படியாக அநேகப் புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய எண்ணம் மதிக்கத்தகுந்தது. குரேஷியின் உள்ளம் எப்பொழுதும் அவருடைய மக்கள் மீதுள்ள அன்பினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

இன்னும் இயேசுவின் மீது தன் நம்பிக்கையை வைத்திராத தன்னுடைய அன்பு சகோதரிக்கு, குரேஷி தன்னுடைய ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் சுருக்கமாயிருந்தபோதிலும் வல்லமையுள்ளதாயிருந்தது. அதில், “நாங்கள் அனைவரும் இணைந்து இயேசுவை ஆராதிக்கும் நாளைத் தருமாறு தேவனிடம் நான் கெஞ்சுகின்றேன்” என எழுதியிருந்தார்.

ரோமாபுரியிலுள்ள சபைகளுக்குப் பவுல் எழுதிய கடிதத்தை வாசிக்கும் போதும், நாம் இதேப் போன்ற ஓர் உணர்வைக் காண முடிகிறது. “எனக்கு மிகுந்த துக்கமும், இடைவிடாத மன வேதனையும் உண்டாயிருக்கிறது” மேலும், “ மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோம. 9:1,3) என பவுல் எழுதுகின்றார்.

பவுல் யூத ஜனங்களை மிகவும் நேசித்தார். அவருடைய ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி தான் தேவனை விட்டு பிரிக்கப்படுவதையும் தேர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார். அவருடைய ஜனங்கள் இயேசுவைத் தள்ளினதின் மூலம் உண்மையான தேவனைத் தள்ளினார்கள் எனத் தெரிந்து கொண்டார். இதன் மூலம் பவுல் தன்னுடைய வாசகர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாவரோடும் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்குவிக்கின்றார் (10:14-15).

நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மீதுள்ள அன்பின் நிமித்தம், நாம் படும் வேதனைக்காக நாம் ஜெபத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.

அடித்தளம் அகன்ற போது

1997ம் ஆண்டில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, சொற்ப வேலைகளே இருந்த நிலையில் அநேகர் வேலை தேடிக் கொண்டிருந்தனர். அப்படி வேலை தேடியவாகளில் நானும் ஒருவன். ஓன்பது மாதங்கள் எதிர்பார்ப்பிற்குப் பின், எழுத்தராக ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். அந்த கம்பெனியும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதால் மீண்டும் வேலையை இழந்தேன்.

நீ இத்தகைய சூழலிலிருந்திருக்கின்றாயா? மோசமான நேரம் முடிந்தது என எண்ணிய போது, திடீரென நிலை தடுமாறியது போலிருந்தது. சாறிபாத் விதவையின் நிலையைப் போன்றிருந்தது (1 இரா. 17:12). ஒரு பஞ்சத்தின் போது, அவள் தனக்கும் தன் மகனுக்கும் கடைசி உணவைத் தயாரிக்கும் போது, எலியா தீர்க்கதரிசி தனக்குக் கொஞ்சம் அப்பம் தரும்படி கேட்கின்றார். அவள் மனமில்லாமல் சம்மதிக்கின்றாள். தேவன் அவளுக்குத் தொடர்ந்து மாவையும், எண்ணெயையும் கொடுக்கின்றார் (வச. 10-16).

பிற்பாடு, அவளுடைய மகன் சுகவீனப்படுகின்றான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அந்த விதவை எலியாவை நோக்கி. “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும் என் குமாரனைச் சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?” என்றாள் (வச. 18).

சில வேளைகளில் நாமும் இந்த விதவையைப் போன்று செயல்படுவோம். தேவன் ஏன் நம்மைத் தண்டிக்கின்றார் என வியந்ததுண்டு. இந்தப் பாவ உலகில் தீமையானவைகளும் நடக்கும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.

எலியா இந்தத் தேவையை தேவனிடம் எடுத்துச் செல்கின்றார். உண்மையாய், முழுமனதோடு தேவனிடம் அந்தப் பையனுக்காக ஜெபிக்கின்றார். தேவன் அவனை உயிரோடு எழுப்புகின்றார் (வச. 20-22) எலியாவைப் போன்று நாமும், நாம் நம்பியிருக்கிறவர் ஒரு போதும் நம்மைக் கைவிடுவதில்லை என உணர்ந்து கொள்வோம். தேவனுடைய திட்டத்தின் மீது சார்ந்திருந்து, அதைப் புரிந்து கொள்ளும்படி தேவனிடம் ஜெபிப்போம்.

கொடுப்பதில் மகிழ்ச்சி

அது ஒரு சோர்வுக்குள்ளான வாரம். நான் எதிலும் ஆர்வமில்லாதவனாகவும், சலித்தும் காணப்பட்டேன். அது ஏனென்றும் எனக்குத் தெரியவில்லை.

அந்த வாரக் கடைசியில் என்னுடைய அத்தை ஒருவருக்கு சிறு நீரகம் செயலிழந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் அவர்களைப் போய் பார்க்க வேண்டும், ஆனால், நான் அதனைத் தள்ளிப்போட நினைத்தேன். ஆயினும் நான் என்னைத் திடப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் அவர்களுடைய இடத்துக்குச் சென்று, அவர்களோடு உணவருந்தி, பேசிக் கொண்டிருந்துவிட்டு, இணைந்து ஜெபித்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப்பின் வந்தேன். பல நாட்களாக இருந்த சோர்வு நீங்கியவனாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, பிறர் மீது கவனம் செலுத்திய போது என்னுடைய உள்ளத்தின் சோர்வு அகன்றது.

பிறருக்குக் கொடுக்கும் போது, அதைப் பெற்றுக் கொள்பவரின் நன்றியுணர்வைக் காணும்போது, கொடுப்பவரின் மனதிற்கு, அது நிருப்தியைக் கொடுக்கும் என உளவியலாளர் கூறுகின்றனர். மனிதர்கள் தாராளமாய் கொடுப்பதில் சிறந்தவர்கள் என சில வல்லுனர்கள் நம்புகின்றனர்.

எனவே தான், தெசலோனிகேயர் சபையின் விசுவாசக் குடும்பத்தினரைப் பவுல், “பலவீனரைத் தாங்குங்கள்” (1 தெச. 5:14) என ஊக்குவிக்கின்றார். முன்னதாக இயேசுவின் வார்த்தைகளான, “ வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) என்பதையும் பவுல் குறிப்பிடுகின்றார். ஒரு வேளை இது பொருளுதவி செய்வதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் கொடுப்பதையும் இது குறிக்கும்.

நாம் கொடுக்கும் போது, தேவன் அதை எவ்வாறு கருதுவார் என்பதை நம்மால் உணரமுடியும். ஏன் தேவன் நம்மீது இத்தனை அன்பைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவருடைய மகிழ்ச்சியிலும், அவர் நம்மை ஆசீர்வதிப்பதால் அடையும் திருப்தியிலும் நாமும் பங்கு பெறுகின்றோம். நான் என்னுடைய அத்தையை மீண்டும் சீக்கிரத்தில் போய் பார்ப்பேன்.

கடினமான புதிர்கள்

நானும் என்னுடைய சிநேகிதியும் நடைபயிற்சி செய்தபோது, நாங்கள் வேதத்தின் மீது வைத்துள்ள அன்பைக் குறித்துப் பேசிக் கொண்டாம். அப்பொழுது அவள், “ஓ, நான் பழைய ஏற்பாட்டை அதிகம் விரும்புவதில்லை, அதிலுள்ள கடினமான காரியங்களும் பழிவாங்கலும் - நான் விரும்பவில்லை!” – இயேசுவே வேண்டும் எனக் கூறியது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நாகூம் போன்ற புத்தகங்களைப் படிக்கும் போது, நாமும் என் சிநேகிதியின் கருத்தை ஒத்துக் கொள்வோம். “கர்த்தர் நீதியைச் சரிகட்டுகிறவர், உக்கிர கோபமுள்ளவர்;” (நாகூம் 1:2) என்ற வார்த்தை நம்மைத் கலங்கச் செய்கிறது. ஆயினும் இதற்கு அடுத்த வார்த்தை நம்மை நம்பிக்கையால் நிரப்புகிறது. “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்” (வச. 3). தேவனுடைய கோபத்தைக் குறித்து இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோமாயின், அவர் தமது கோபத்தைச் செயல்படுத்துவது, தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கவும், அவருடைய பெயரை நிலைநிறுத்தவுமே என்பதைப் புரிந்து கொள்வோம். தேவன் நம்மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதால், நாம் செய்த தவறுகளுக்கு நியாயத்தைச் செய்யவும், தம்மை விட்டுத் திரும்பிச் சென்றவர்களை மீட்கும் பொருட்டாகவும் தம்முடைய கோபத்தைக் காண்பிக்கின்றார். அவரைவிட்டுச் சென்றவர்களை மீண்டும் அவரிடம் அழைக்கும் நிகழ்வுகளை நாம் பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்லும் காண்கின்றோம். எப்படியெனில், நம்முடைய பாவங்களுக்கு பலியாக அவர் தமது சொந்த குமாரனையே அனுப்புகின்றார்.

தேவனுடைய இந்தப் புதிரான குணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவர் நியாயத்தைச் செயல்படுத்துபவர் மட்டுமல்ல, அவரே அன்பின் ஊற்று என்பதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். அவருக்கு நாம் பயப்படத்தேவையில்லை, ஏனெனில், “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அவர் அறிந்திருக்கிறார்”
(வச. 7).

தீவிர மாற்றந்தரும் அன்பு

அவளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாராவின் நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது. அவளுடைய கவலை, ஏமாற்றம் இவைகளின் மத்தியில், அவள் தன்னுடைய திருமண வைபவத்திற்காக வாங்கியிருந்த உணவு வகைகளை வீணாக்கக் கூடாது எனத் தீர்மானம் செய்து, அந்தக் கொண்டாட்டத்தை வேறு வகையில் திட்டமிட்டாள். தன்னுடைய விருந்தினர் பட்டியலை மாற்றியமைத்து, அருகிலுள்ள வீடற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களை விருந்திற்கு அழைத்தாள்.

இயேசுவும் இத்தகைய உறவினர் அல்லாதோரிடம் காட்டும் கருணையை விரும்புகின்றார். அவர் பரிசேயரிடம் பேசிய போது, “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்” (லூக். 14:13-14) என்றார். அத்தோடு அவர்கள் உனக்கு பதில் செய்யமாட்டார்கள். ஆனால், உனக்கு தேவனிடமிருந்து ஆசீர்வாதம் வரும் என்றும் கூறினார். தங்களால் எந்த நன்கொடையும் கொடுக்க முடியாத, கவர்ச்சிகரமான உரையாடல் செய்ய முடியாத, அல்லது எந்த சமுதாயத் தொடர்பும் அற்ற மக்களுக்கு உதவுவதையே இயேசுவும் அங்கிகரிக்கின்றார்.

பரிசேயன் ஒருவன் இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த போது, இயேசு இந்த வார்த்தைகளைப் பேசினார். அவருடைய செய்தி இருதயத்தை ஊடுருவுவதாகவும், ஆழமானதாயுமிருந்தது. உண்மையான அன்பு ஆழமானது. அன்பு என்பது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பிறரின் தேவைகளைச் சந்தித்தலாகும். இப்படியே இயேசுவும் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கின்றார். நம்முடைய உள்ளான ஏழ்மையை அவர் காண்கின்றார். அவருடைய வாழ்வையே நமக்காகக் கொடுத்து அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்துவை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டோமென்பது, அவருடைய முடிவில்லாத அன்பிற்குள் பயணித்தலாகும். “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்  இன்னதென்று உணர்ந்து (எபே. 3:18) கண்டறிந்து கொள்ள நம்மனைவரையும் அழைக்கின்றார்.