வகை  |  odb

நேர்த்தியான உலகம்

“என்னுடைய நேர்த்தியான உலகம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிவருமாறு கேற்றியின் பள்ளியில் ஒரு வேலை கொடுத்திருந்தனர். அவள் தன்னுடைய கட்டுரையில் “என்னுடைய நேர்த்தியான உலகில்… ஐஸ் கிரீம்கள் இலவசம், எவ்விடத்திலும் லாலிப்பாப்கள் கிடக்கின்றன, வித்தியாசமான வடிவங்களில் அமைந்த ஒரு சில மேகங்களோடு வானம் எப்பொழுதும் நீல நிறமாகவேயிருக்கும்” என ஆரம்பித்த அவளுடைய கட்டுரை திடீரென ஒரு தீவிர மாற்றம் பெற்றது. “அந்த உலகில் ஒருவர் வீட்டிற்கும் துயரச் செய்தி வருவதில்லை. அப்படியொரு செய்தியை யாரும் கொண்டு செல்லத் தேவையேயில்லை” எனத் தொடர்ந்தாள்.

ஒருவர் வீட்டிலும் துயரச்செய்தியேயில்லை என்பதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இந்த வார்த்தைகள் நம்மை வல்லமையாக இயேசுவின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நேராகத் திருப்புகின்றது. அவர், “சகலத்தையும் புதிதாக்குகின்றார்”, நம்முடைய துயரை அகற்றி, இவ்வுலகை மாற்றுகின்றார் (வெளி. 21:5).

பரதீசில் துன்பங்கள் இல்லை, மரணமில்லை, புலம்பலில்லை, வேதனையில்லை, கண்ணீர் இல்லை (வச. 4). அது, நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு நேர்த்தியான இடம். தேவன் தம் அன்பினால் தம் விசுவாசிகளை விடுவித்து தனக்கென்று சேர்த்துக் கொண்ட இடம். எத்தனை அற்புதமான மகிழ்ச்சி நமக்குக் காத்திருக்கின்றது!

இந்த முழுமையின் உண்மையை நாம் இங்கேயே அனுபவிக்கலாம். நாம் தேவனோடு அனுதினம் ஐக்கியப்படும்போது அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் (கொலோ. 1:12-13). நாம் பாவத்தை எதிர்த்துப் போராடும் போது, பாவத்தையும், மரணத்தையும் முற்றிலும் ஜெயம் பெற்ற கிறிஸ்து நமக்குத் தருகின்ற வெற்றியை அனுபவிப்போம் (2:13-15).

நான் உன்னைப் பார்க்கின்றேன்

எங்களடைய மகன் சேவியர் இரண்டு வயதாயிருந்த போது ஒரு செருப்புக் கடை ஒன்றின் ஒவ்வொரு இடைபாதையிலும் வேகமாக ஓடி, செருப்பு பெட்டிகளின் அடுக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தான். என்னுடைய கணவன் ஆலன் அவனைப் பார்த்து, “நான் உன்னைப் பார்க்கின்றேன்” எனக் கூறியதும், அவன் சிரித்து மகிழ்ந்தான்.

சில கணங்களுக்குப் பின்னர் என் கணவன் ஆலன் பதற்றத்தோடு ஒவ்வொரு இடைபாதையிலும் சேவியர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருக்கக் கண்டேன். நாங்கள் வேகமாக அக்கடையின் முன்பக்கக் கதவையடைந்தோம். அங்கு எங்கள் குழந்தை சிரித்துக் கொண்டே, கூட்டம் நிறைந்த ஒரு தெருவிற்குச் செல்லும் கதவிற்கு நேராக ஓடிக் கொண்டிருந்தான்.

நொடிப் பொழுதில் ஆலன் அவனை அப்படியே தூக்கிக் கொண்டார். நாங்கள் அவனை அணைத்துக் கொண்டு தேவனுக்கு நன்றி கூறிக் கொண்டு, ஏக்கத்தோடு அச்சிறுவனின் கன்னங்களில் முத்தமிட்டோம்.

ஓராண்டிற்கு முன்பு, சேவியர் என் கருவில் உண்டாயிருந்த போது நான் என்னுடைய முதல் குழந்தையை இழந்துவிட்டேன். தேவன் இந்த மகனைத் தந்து எங்களை ஆசீர்வதித்தபோது, நான் சற்று பயமுள்ள பெற்றோராகி விட்டேன். ஆனால், அந்த செருப்புக் கடை அநுபவம் நாம் நம் குழந்தையை எப்பொழுதும் பார்த்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது என்பதை விளக்கிவிட்டது. ஆகையால் நான் கவலையோடும், பயத்தோடும் போராடிக் கொண்டிருக்கும் போது எனக்குள்ள ஒரே உதவியான என் தேவனை நோக்கிப்பார்க்கக் கற்றுக்கொண்ட போதுதான் எனக்கு சமாதானம் கிடைத்தது.

நம்முடைய பரலோகத் தந்தை தன்னுடைய பிள்ளைகளின் மீது எப்பொழுதும் கண்ணோக்கமாயிருக்கிறார் (சங். 121:1-4) நம்முடைய சோதனைகளையும், மனவேதனைகளையும், இழப்பையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், எப்பொழுதும் நமக்குதவி செய்பவரும், நம்மைக் காப்பவரும், நம் வாழ்வைக் கண்காணிப்பவருமாகிய தேவனைச் சார்ந்து, அவர் மீதுள்ள உறுதியான நம்பிக்கையோடு வாழமுடியும் (வச. 5-8).

நாம் இழந்து போனவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் எண்ணும்படியான நாட்களையும் எதிர்நோக்கலாம். நாம் நேசிக்கின்றவர்களை நாம் பாதுகாக்க முடியாத வலிமையற்றவர்களாக உணரலாம். ஆனால், எல்லாம் அறிந்த தேவன் அவருடைய விலையேறப்பெற்ற அன்புப் பிள்ளைகளின் மீதுள்ள பார்வையை என்றுமே நீக்குவதில்லை என்பதை நாம் நம்புவோம்.

பிறர் கேட்கும்படி வாழ்தல்

நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டினிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, என்னுடைய அறையிலிருந்த மேசையின் மீது ஓர் அட்டையைக் கண்டேன். அதில், உங்களை வரவேற்கிறோம், உங்களுக்காக நாங்கள் செய்யும் ஜெபம்.

“இங்கு நீங்கள் தங்கியிருக்கும் போது நல்ல ஓய்வுகிடைக்கட்டும், உங்களுடைய பயணங்கள் பயனுள்ளவையாயிருக்கட்டும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களைப் பாதுகாத்து, தன்னுடைய முகப்பிரகாசத்தை உங்கள் மீத வீசச் செய்வாராக” என்றிருந்தது.

இந்த விடுதியை நடத்தும் நிறுவனம் இந்த அட்டையை வைத்திருந்தது. எனவே நான் அவர்களைக் குறித்து மேலும் அறிய ஆவல்கொண்டு, அவர்களுடைய வலைதளத்திற்குச் சென்று அவர்களுடைய கலாச்சாரம், வலிமை, மற்றும் அவர்களின் பண்புகளைக் குறித்துக் தெரிந்து கொண்டேன். மக்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் நேர்த்தியை எட்டிவிட முயற்சித்திருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையை தங்களின் வேலைத்தளங்களிலும் வெளிக்காட்டியுள்ளனர்.

இவர்களுடைய இந்த அணுகுமுறை, ஆசியா முழுமையிலும் சிதறடிக்கப்பட்ட இயேசுவின் சீடர்களுக்கு பேதுரு எழுதிய வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர்களைப் பேதுரு ஊக்கப்படுத்துகின்றார். கர்த்தராகிய தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்கள் வாழுகின்ற சமுதாயத்தினரிடையே விளக்கிக் காட்டும்படி கூறுகின்றார். அவர்கள் அச்சுறுத்தலையும், பாடுகளையும் அனுபவிக்க நேர்ந்தாலும் பயப்படாமல், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேது. 3:15) என்று கூறுகின்றார்.

என்னுடைய நண்பர் ஒருவர் இதனையே “உங்கள் வாழ்க்கை முறைக்கான விளக்கத்தைத் தாருங்கள் என்று கேட்குமளவிற்கு வாழ்ந்துகாட்டுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நாம் எங்கு வேலை செய்தாலும், வாழ்ந்தாலும் அங்கு தேவ பெலத்தோடு தேவன் மீதுள்ள நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவோம். நம்முடைய நம்பிக்கையைக் குறித்து நம்மிடம் கேட்பவர்களுக்கு மரியாதையோடும், நிதானத்தோடும் பதிலளிக்க எப்பொழுதும் தயாராக இருப்போமாக.

தேவன் யாரைப் போன்றிருப்பார்?

ஒரு சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக என்னுடைய கணவன் என்னை அருகிலுள்ள கலை அரங்கத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வண்ணந்தீட்டப்பெற்ற படங்களில் ஏதாவது ஒன்றினை அவருடைய பரிசாக வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய நீரோடை காட்டினூடே ஓடுகின்ற காட்சியைக் கொண்ட படத்தினைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நீரோடையின் பரப்பு அந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டபடியால் வானத்தின் காட்சி இப்படத்தில் காட்டப்படவில்லை. ஆனால், அந்த நீரின் பிரதிபலிப்பில் சூரியன் இருந்த வான் பகுதியையும், மரங்களின் மேற்பகுதியையும், மங்கலான சுற்றுச் சூழலையும் காணமுடிந்தது. வானத்தைக் காட்டக்கூடிய ஒரேயிடம் அந்த நீரின் மேற்பரப்புமட்டும் தான்.

ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இயேசுவும் அந்த நீரோடையைப் போன்றே, தேவன் யாரைப் போன்றிருப்பார் என்பதை நமக்கு பிரதிபலிக்கின்றார். எபிரெயரை எழுதியவர் “குமாரன் தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார்” (1:3) என எழுதுகின்றார். தேவனைக் குறித்த உண்மைகளை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “தேவன் அன்பாயிருக்கிறார்” என்பது போன்ற சில நேரடியான கூற்றுக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தாலும், நாம் இவ்வுலகில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை தேவன் சந்திக்க நேரிட்டால் அவர் எவ்வாறு செயல்படுவார் என்று நாம் சிந்தித்தோமேயாயின் நம்முடைய புரிந்துகொள்ளல் இன்னும் சற்று ஆழமாக இருக்க முடியும். தேவன் மனிதனாக இவ்வுலகில் இருந்தால் எவ்வாறு செயல்படுவார் என்பதையே இயேசு நமக்குச் செயல்படுத்திக் காண்பித்தார்.

சோதனை நேரங்களில் இயேசு, தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தினார். ஆவியின் இருளை எதிர்நோக்கும்போது தேவனுடைய அதிகாரத்தை இயேசு காட்டினார். ஜனங்களின் பிரச்சனைகளோடு போராடும் போது தேவனுடைய ஞானத்தை நமக்குக் காட்டினார். அவருடைய மரணத்தின் மூலம் தேவனுடைய அன்பை விளக்கினார்.

தேவனைக் குறித்த அனைத்துக் காரியங்களையும் நம்மால் கிரகிக்கக் முடியாது. நம்முடைய குறுகிய சிந்தனையில் அவருடைய பரந்த எல்லையைக் காணமுடியாது. ஆனால், தேவனுடைய குணாதிசயங்களைக் கிறிஸ்துவைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடியும்.

உலகத்திற்கு ஒளி

இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலுள்ள கிபிள் சிற்றாலயத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. ஆங்கிலேய கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹன்ட் வரைந்த “உலகத்தின் ஒளி” என்ற சித்திரத்தில், இயேசு ஒரு கையில் விளக்கை ஏந்திக்கொண்டு ஒரு வீட்டின் கதவைத் தட்டுவது போல இருக்கும்.

இந்த படத்திலுள்ள ஒரு புதிரான காரியமென்னவெனில், அதிலுள்ள கதவில் எந்தவொரு கைப்பிடியும் இல்லை. அப்படியாயின் இந்தக் கதவைத் திறப்பதற்கு வழியொன்றுமில்லையே என்று கேட்டபோது ஹன்ட், இதன் மூலம் வெளிப்படுத்தல் 3:20ன் கருத்தை வெளிப்படுத்திக் காட்ட விரும்பியதாகக் கூறினார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து…”

அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளும் இந்த சித்திரமும் இயேசுவின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. அவர் மென்மையாக, தன்னுடைய சமாதானத்தைத் தருவதாகக் கூறி நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். நம்முடைய பதில் வரும் வரையில் இயேசு பொறுமையாகக் காத்திருக்கின்றார். அவர் தானாகக் கதவைத் திறப்பதில்லை. நம்முடைய வாழ்வில் கட்டயமாக நுழைவதில்லை. அவர் தமது சித்தத்தை நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவர் எல்லா ஜனத்திற்கும்; அவருடைய நற்கொடையாம் இரட்சிப்பையும், வாழ்விற்கு வழிகாட்ட ஒளியையும் தர காத்திருக்கின்றார்.

யார் அவருக்குக் கதவைத் திறந்தாலும் அவர் வருவேனென வாக்களித்துள்ளார், இதற்கு வேறெந்த நிபந்தனைகளோ முன் ஆயத்தங்களோ தேவையில்லை.

உன்னுடைய ஆன்மாவின் கதவை இயேசு மென்மையாகத் தட்டுகின்ற சத்தத்தைக் கேட்பாயாகில் நீ அவரை உள்ளே வரவேற்கும் மட்டும் அவர் பொறுமையாகக் காத்திருப்பார் என்பது உனக்கு ஆவலையும், ஊக்கத்தையும் தரும்.

அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள்

நானும், என்னுடைய குழந்தைகளும் ஒரு புதிய அனுதின பயிற்சியை ஆரம்பித்தோம். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்லும்முன் நாங்கள் பல பென்சில்களை சேகரித்து வைத்து அதில் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைப்போம். தேவனிடம் எங்களுடைய பாதைக்கு வெளிச்சம் தாரும் என்று கேட்டு விட்டு எங்களுடைய நாளிதழில் வரும் படங்களை வரையவும், இரண்டு கேள்விகளுக்கு விடையெழுதவும் ஆரம்பிப்போம். எங்கு நான் என்னுடைய அன்பைக் காட்டினேன்? எங்கு நான் அன்பைக் காட்டவில்லை?

ஆரம்பத்திலிருந்தே, நம்முடைய அயலகத்தாரை நேசிக்க வேண்டுமென்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது (2 யோவா. 1:5). யோவான் தன்னுடைய சபையினருக்கு எழுதின இரண்டாம் கடிதத்தில் கேட்டுக்கொள்வதும் தேவனுக்குக் கீழ்படிந்து ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்பதே (2 யோவா. 1:5-6) யோவானுடைய அனைத்துக் கடிதங்களிலும் பிரதானமாகக் காணப்படுவது அன்பு. நாம் உண்மையான அன்பைச் செயல்படுத்தும் போது சத்தியத்திற்குரியவர்களாகின்றோம், அவருடைய பிரசன்னத்தில் வாழ்கின்றவர்களாவோம்
(1 யோவா. 3:18-19) நானும் என் குழந்தைகளும் எங்களைக் குறித்துச் சிந்திக்கும் போது எங்களுடைய வாழ்வில் அன்பு சிறு செயல்களின் வழியே செயல்பட ஆரம்பித்தது. ஒரு குடையை பகிர்ந்துகொள்வது, கவலையோடிருக்கும் ஒருவரைத் தேற்றுவது, அனைவருக்கும் விருப்பமான ஓர் உணவைச் சமைத்தல் போன்ற செயல்களின் வழியே அன்பு செயல்பட்டது. பிறரைப் பற்றி குறைபேசுதல், பகிர்ந்துகொள்ள மறுத்தல், பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்காமல் எங்களுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றுதல் ஆகியவை நாங்கள் அன்பைச் செலுத்தத் தவறிய கணங்கள்.

ஓவ்வொரு இரவும் நாங்கள் இவ்வாறு செய்யும் போது, ஒவ்வொரு பகலிலும் நாங்கள் கவனமாகச் செயல்பட உதவியாக இருந்தது. எங்களுடைய வாழ்வில் ஆவியானவர் காட்டும் வழியில் நாங்கள் நடக்க எங்களுக்கு உதவியாயிருந்தது. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு நாங்கள் அன்போடு நடக்கக் கற்றுக் கொள்கின்றோம் (2 யோவ. 1:6).

குப்பைக் கூடையினுள் மோதிரம்

என்னுடைய கல்லூரி விடுதியில், ஒருநாள் காலை எழுந்தபோது, என்னுடைய அறைத் தோழி கேரல் பயத்தால் பீதியடைந்து உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அவளுடைய முத்திரை மோதிரம் தொலைந்துவிட்டது. நாங்கள் எல்லாவிடத்திலும் தேடினோம், அடுத்த நாள் காலையில் நாங்கள் குப்பைக் கூடையினுள் தேடினோம். நான் வேகமாகக் குப்பைப் பையைத் திறந்தேன். “நீ இதைத் தேடுவதில் மிகவும் அர்ப்பணத்தோடிருக்கின்றாய்” என்றாள். “இருநூறு டாலர் மோதிரத்தை நான் இழக்கப் போவதில்லை” என்று உறுதியாயிருந்தாள்.

கேரலின் உறுதியான எண்ணம் இயேசு கூறிய ஓர் உவமையை எனக்கு நினைவுபடுத்தியது. “பரலோக இராஜ்ஜியம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்கிறான்” (மத். 13:44) என்றார். சில பொருட்கள் அதிக முயற்சியெடுத்துத் தேடக் கூடிய மதிப்பைப் பெற்றுள்ளது.

தேவனைத் தேடுகின்றவர்கள் கண்டடைவார்கள் என்று தேவன் வேதாகமத்தில் பல இடங்களில் வாக்களித்துள்ளார். உபாகமத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி, முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேவனைத் தேடும் போது அவரைக் கண்டடைவார்கள் என கூறப்பட்டுள்ளது (4:28-29). 2 நாளாகமத்தில் ஆசா இராஜாவும் இதே வாக்குத்தத்தத்தால் ஊக்குவிக்கப்படுகின்றார் (15:2) எரேமியா புத்தகத்தில் சிறையிருப்பிலிருக்கின்ற இஸ்ரவேலரிடம் தேவன் இந்த வாக்குத்தத்தத்தையே எடுத்துரைக்கின்றார். தேவன் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து மீட்பாரென உரைக்கின்றார் (29:13-14).

நாம் தேவனை நம் அனுதின வாழ்வில் அவருடைய வார்த்தையின் மூலமாயும், அவரை ஆராதிப்பதாலும் அவரைக் கண்டுகொள்ள முடியும். நாளடைவில் அவரை நன்கு ஆழமாகத் தெரிந்துகொள்வோம். அதுவே, கேரல் தன்னுடைய மோதிரத்தை அந்த குப்பைப் பையிலிருந்து எடுத்த போதிருந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இனிமையான அனுபவமாகும்.

திறக்கப்பட்டது

ஒரு பையன் மூளை வாத நோயோடு பிறந்தான். அதனால் அவனால் பேசவோ பிறரோடு தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. ஆனால், அவனுடைய தாயார் சான்டல் பிரையன் சோர்ந்து போகவில்லை. அவன் பத்து வயதாயிருந்த போது, அவனுடைய கண்கள் மூலமாகவும். ஓர் எழுத்துப் பலகையின் உதவியாலும் அவனோடு தொடர்புகொள்ளத் தெரிந்து கொண்டார். இந்த வழிமுறைக்குப் பின்னர் அவள் சொன்னது, “அவன் திறக்கப்பட்டான் நான் அவனிடம் எதையும் கேட்கலாம்”: என்றாள். இப்பொழுது யோனத்தானால் எழுதவும், வாசிக்கவும் முடிகிறது. அவன் செய்யுள்களையும் எழுதுகின்றான். கண்கள் மூலம் புரிந்துகொள்கின்றான். அவனுடைய குடும்ப நபர்களோடும், நண்பர்களொடும் “பேசுவது” எப்படியிருக்கும் என்று கேட்டபோது, அவன் “நான் அவர்களை நேசிக்கிறேன் என்று சொல்லுவது மிகவும் அற்புதமானது” என்று கூறினான்.

யோனாத்தானின் கதை நம்மை ஆழமாகத் தொடுவதாக இருக்கிறது, நம்மையும் தேவன் எவ்வாறு பாவமாகிய சிறையிலிருந்து விடுவிக்கின்றார் என்பதை நினைக்கச் செய்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும் போது, “முன்பு நாம் தேவனுக்கு அந்நியராக இருந்தோம்” (கொலோ. 1:21) எனக் குறிப்பிடுகின்றார். நம்முடைய துர்க்கிரியைகள் நம்மை தேவனுக்கு பகைஞராக்கியது. ஆனால், கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை “தேவனுக்கு முன்பாக பரிசுத்தராக” ஒப்புரவாக்கினார் (வச. 21) இப்பொழுது நாம் “சகல வித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ள… அவருடைய வல்லமையால் பலப்படுத்தப்படுகிறோம்” (வச. 10-11).

நம்முடைய திறக்கப்பட்ட சத்தத்தை, தேவனைத் துதிக்கவும், அவர் நம்மை பாவ வாழ்விலிருந்து விடுவித்தார் என்ற சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துவோம். தேவன் மீதுள்ள நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டு நம் விசுவாச வாழ்வைத் தொடருவோம்.

விடுதலை செய்யப்பட்டாய்

நான் சிறுவயதில், ஒரு கிராமத்திலிருந்தபோது, கோழிக்குஞ்சுகள் என்னை மிகவும் கவர்ந்தன, எப்பொழுதாகில் நான் ஒரு கோழிக்குஞ்சைப் பிடிக்கும் போது, நான் சிறிது நேரத்திற்கு என் கரத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் விட்டுவிடுவேன். நான் விட்டப்பின்னரும், நான் கையில் வைத்திருக்கின்றேன் என்ற நினைப்பில் அந்த கோழிக்குஞ்சு அப்படியே நிற்கும். அது சுதந்திரமாக ஓட முடியும், என்றாலும் அது பிடிபட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்ளும்.

நாம் நமது நம்பிக்கையை இயேசுவின் மீது வைக்கும் போது, அவர் கிருபையாக நம்மைப் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிக்கின்றார். ஆனால், நம்முடைய பாவப்பழக்கங்களிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் மாற்றிக்கொள்ள நேரமாகுமென்பதால், நாம் இன்னும் சாத்தானின் பிடியிலிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றான். ஆனால், தேவனுடைய ஆவியானவர் நம்மை விடுவித்துவிட்டார். அவர் நம்மை அடிமைப்படுத்துவதில்லை. ரோமாபுரியாருக்கு பவுல் சொல்வதென்னவெனின், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமால் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோம. 8:1-2).

நம்முடைய வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை ஆகியவற்றின் மூலம் தேவன் செயல்பட்டு நம்மை; சுத்திகரித்து அவருக்காக வாழ உதவுகின்றார். நாம் இன்னமும் விடுதலையாகவில்லை என்ற உணர்வை விட்டுவிட்டு, நாம் தேவனோடு நடக்கின்றோம் என்ற நம்பிக்கையோடிருக்க வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது.

“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு சொல்கின்றார். தேவனுக்குள் நாம் பெற்ற சுதந்திரம் நம்மை தேவனை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் தூண்டுகிறது.