வகை  |  odb

நமக்கொரு நம்பிக்கையுண்டு

1988 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான செய்திகளை நான் எங்கள் அனுதின அப்பம் என்ற பத்திரிக்கைக்கு எழுதியிருந்த போதும், ஒரு சில மட்டும் என் மனதில் பதிந்துள்ளன. அந்தச் செய்திகளுள் ஒன்றினை 1990 ஆம் ஆண்டில் நடுவில் எழுதினேன். அப்பொழுது என்னுடைய மூன்று பெண் குழந்தைகளும் வெளியே ஒரு கூட்டத்திற்கோ அல்லது ஓர் ஊழியத்திற்காகவோ சென்றிருந்தனர். எனவே என்னுடைய ஆறு வயது மகன் ஸ்டீவ்வும் நானும் மட்டும் இருக்க நேர்ந்தது.

எனவே, நாங்கள் ஒரு விமான நிலையத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். அப்பொழுது ஸ்டீவ் என்னிடம், “மெலிசா இல்லாமல் இது அத்தனை மகிழ்ச்சியாக இல்லை” என்றான். அவனுடைய எட்டு வயது அக்காவையும் அவளுடைய குறும்புகளையும் விரும்பினான். இந்த வார்த்தைகள் எத்தனை ஆழ்ந்த அர்த்தமுள்ளவையென எங்கள் இருவருக்குமே அப்பொழுது  தெரிந்திருக்கவில்லை. மெல் 17 வயதில் ஒரு வாகன விபத்தில் மரித்ததிலிருந்து பல ஆண்டுகளாக எங்களுடைய வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாகவேயில்லை. காலத்தின் ஓட்டம் ஒருவேளை அந்த வேதனையை சற்று குறைத்திருக்கலாம். ஆனால், அந்த வேதனையை ஒருவராலும் முழுவதும் நீக்க முடியவில்லை. காலம் அந்த காயத்தை குணப்படுத்தவில்லை. ஆனால், இங்கு சில காரியங்கள் நமக்கு உதவியாயிருக்கும். ஆறுதலின் தேவன் நமக்குத் தந்துள்ள ஆறுதலின் வாக்குத்தத்தங்களை நாம் கவனித்து, தியானித்து கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்.

கவனி: நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம். 3:22)

தியானி: தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். (சங். 27:5)

ருசித்திடு: அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. (சங். 119:50)

நாம் மிகவும் நேசித்த ஒருவரை இழந்தபின்னர் வாழ்க்கை ஒருபோதும் முந்தியது போலாகாது. ஆனால், தேவனுடைய வாக்குகள் நமக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் தரும்.

புயலுக்கு அடைக்கலம்

நான் ஒக்லஹோமாவில் வாழ்ந்த போது எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் சுழல் காற்று வீசும்போது அதைத் தொடர்ந்து செல்வார். ஜான் என்ற அந்த நண்பர் ரேடியோ, பிற புயல் தொடர்பாளர்கள், அருகிலுள்ள ரேடார் ஆகியவற்றோடு தொடர்புகொண்டு கவனமாகக் கேட்டு, அந்தப் புயலின் பாதையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு, புயலின் அழிவுப் பாதையை பார்த்து அதன் பாதையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை மக்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பார்.

ஒருமுறை புனல் வடிவ மேகம் திடீரென அதன் பாதையை மாற்றிவிட, ஜான் மிகப் பெரிய ஆபததில் மாட்டிக் கொண்டார். ஆனால், நல்ல வேளை, அவர் ஒரு அடைக்கலத்தைக் கண்டு பிடித்து தப்பிக்கொண்டார்.

ஜானுடைய இந்த அனுபவம் மற்றொரு அழிவுப் பாதையைக் குறித்தச் சிந்திக்க வைத்தது. அது நம் வாழ்விலுள்ள பாவம். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக். 1:14-15) என வேதாகமம் சொல்கின்றது.

இங்கேயொரு தொடர்ச்சியான நிகழ்வுகளைக் காண்கின்றோம். பாவம், முதலில் ஆபத்தில்லாதது போல தோன்றினாலும், திடீரென கட்டுப்படுத்த முடியாதபடி சுழன்று நொறுக்கி அழிவைக் கொண்டுவரும். ஆனால், சோதனை வந்து நம்மை பயமுறுத்தும் போது, தேவன் வரப்போகும் புயலுக்கு நமக்கு அடைக்கலம் தருகின்றார்.

தேவன் நம்மை ஒருபோதும் சோதிப்பதில்லையென்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றது. நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள் நமது தெரிந்தெடுப்பேயொழிய தேவனுடையதல்ல. “நாம் சோதிக்கப்படும் போது சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையொடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும். உண்டாக்குவார்” (1 கொரி. 10:13). சோதனை நேரங்களில் நாம் அவரிடம் திரும்பி, அவரை நோக்கி உதவிக்காகக் கூப்பிடும் போது, சோதனையை மேற்கொள்ள வேண்டிய பெலனைத் தேவன் நமக்குத் தருகின்றார். எப்பொழுதும் நமக்கு அடைக்கலமாயிருப்பவர் இயேசு ஒருவரே.

இனிமையான இல்லம்

“நாம் ஏன் நம்முடைய வீட்டை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று என்னுடைய மகன் கேட்டான். ஓர் ஐந்து வயது சிறுவனுக்கு வீடு என்பது என்ன என்பதை விளக்குவது சற்றுக் கடினம். நாங்கள் எங்கள் இருப்பிடத்தைத் தான் மாற்றுகின்றோம். எங்கள் வீட்டையல்ல. வீடு என்பது நமக்கு அன்பானவர்கள் இருக்கும் இடம். ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் நாம் திரும்பிவர ஏங்கும் ஓர் இடம் அல்லது ஒரு நாளின் கடின வேலைக்குப்பின் திரும்பி வர எண்ணும் இடம் தான் நம் வீடு.

இயேசு மரிப்பதற்கு முன்னதாக ஒரு மேல் வீட்டறையில் இருந்த போது தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார் (யோவா. 14:1) இயேசுவின் சீடர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில், இயேசு தான் மரிக்கப்போவதை அவர்களுக்கு முன்னறிவித்தார். ஆனால், இயேசு தன்னுடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடிருக்கும் எனவும், மீண்டும் அவரைக் காண்பார்களெனவும் உறுதியளித்திருந்தார். “என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; … நான் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார் (வச. 2) அவர் பரலோகத்தைக் குறிப்பிவதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாம் நன்கு பயன்படுத்தும், நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வீடு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார். அங்கு இயேசுவும் நாம் நேசிக்கும் நபர்களும் இருப்பார்.

சி.எஸ். லூயிஸ் “நம்முடைய தந்தை, நம்முடைய பயணத்தின் போது நம்மைச் சில மகிழ்ச்சியான தங்கும் விடுதிகள் மூலம் நம்மை பெலப்படுத்துகின்றார். ஆனால், நாம் அவற்றை நிரந்தரமாகத் தங்கும் இடமென நினைத்துவிடக் கூடாது” என எழுதுகின்றார். தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியான விடுதிகளுக்காக அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால், நம்முடைய நிலையான வீடு பரலோகத்திலிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். அங்கு “நாம் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். (1 தெச. 4:17)

சிலுவையின் வழியே

என்னுடன் பணிபுரியும் டாம் தன்னுடைய மேசையின் மீது 8’’க்கு12’’ அளவு கொண்ட கண்ணாடியினாலான சிலுவையொன்றறை வைத்திருக்கின்றார். அவனுடைய நண்பன் பில்லும் டாமைப் போன்று புற்று நோயிலிருந்து மீண்டவன். அவன் இந்தச் சிலுவையை, அதன் வழியே எல்லாவற்றையும் பார்க்க உதவியாயிருக்கும் எனக் கூறி, அதை டாமுக்குக் கொடுத்தான். அந்தக் கண்ணாடியினாலான சிலுவை அவனுக்கு தேவனுடைய அன்பையும், தேவன் அவனுக்கு வைத்திருக்கும் நல்ல நோக்கங்களையும் நினைவுபடுத்துவதாகக் கூறினான்.

இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் தங்களுடைய கஷ்டமான நேரங்களில் இது ஒரு சவாலானத் திட்டமாக இருக்கின்றது. தேவனுடைய அன்பின் மீது நமது நோக்கத்தைச் செலுத்துவதைவிட நம்முடைய பிரச்சனைகளின் மீது நம் எண்ணங்களைச் செலுத்துவது யாவருக்கும் எளிதானது.

பவுல் அப்போஸ்தலனின் வாழ்வு சிலுவை வடிவிலான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவர் துன்பப்படும் நேரங்களில் தான், “துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”
(2 கொரி. 4:9) என்கின்றார். மேலும் “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” (வச. 17-18) என்கின்றார்.

காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு என்பது நம்முடைய பிரச்சனைகளை குறைத்துக் கொண்டோம் என்பதல்ல. பவுல் பார்நெட் என்பவர் இப்பகுதியைக் குறித்து “தேவன் நமக்கு வைத்திருக்கும் உறுதியான நோக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ வேண்டும் அல்லது நாம் அமைதலோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய வேதனையை நம்பிக்கை கலந்த வலியோடு வெளிப்படுத்த வேண்டும்” என விளக்குகின்றார்.

இயேசு அவருடைய வாழ்வையே நமக்காகத் தந்தார். அவருடைய அன்பு ஆழமும், தியாகமும் நிறைந்தது. நாம் நம் வாழ்க்கையை சிலுவையின் வழியாய் பார்க்கும் போது அவருடைய அன்பையும், உண்மையையும் காண முடியும். அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் வளரும்.

உன்னுடைய பேராவல் எது?

நான் செல்லும் வங்கியில் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய ஜன்னலின் அருகில் ஷெல்பை கோப்ரா ரோட்ஸ்டர் காரின் புகைப்படத்தை வைத்திருந்தார். (கோப்ரா என்பது போர்ட் கம்பெனியின் ஓர் உயர்தர கார்).

ஒரு நாள் நான் வங்கியில் என்னுடைய தொழில் சம்பந்தமான வேலையை செய்துகொண்டிருந்த போது, நான் அவரிடம் இந்த புகைப்படத்திலுள்ளது. அவருடைய காரா? எனக் கேட்டேன். “இல்லை” என பதிலளித்தார். “அது என்னுடைய பேராவல். நான் ஒவ்வொரு நாள் காலையும் எழுந்து வேலைக்குச் செல்வதே அதற்காகத்தான். ஒருநாள் நான் அந்தக் காரின் சொந்தக்காரனாவேன்” என்றார்.

நான் அந்த இளைஞனின் பேராவலைப் புரிந்து கொண்டேன். என்னுடைய நண்பர் ஒருவர் கோப்ரா கார் வைத்திருக்கின்றார். ஒரு சமயம் நான் அதனை ஓட்டினேன். அது ஒரு சாதாரண இயந்திரம்! உலகிலுள்ள அநேகக் காரியங்களைப் போன்றே கோப்ராவும் ஒன்று. அதற்காகவே வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்ற ஒன்று, அளவிற்கு விலையேறப்பெற்றதன்று. தேவனை விட்டு விட்டு பிற பொருட்களை நம்புகிறவர்கள் “முறிந்து விழுந்தார்கள்” (சங். 20:8) என சங்கீதக்காரன் குறிப்பிடுகின்றார்.

ஏனெனில், நாம் தேவனுக்கென்று உருவாக்கப்பட்டோம். நம் அனுதின வாழ்வில் நாம் உண்மையென நம்பியிருக்கும் வேறெதுவும் நிலையானதல்ல. நாம் அதையும், இதையும் வாங்குகின்றோம். ஏனெனில், இவை நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தருமென நாம்’ நினைக்கின்றோம். ஒரு குழந்தையைப் போன்று, ஒரு டஜன் அல்லது அதற்கும் மேலாக கிறிஸ்மஸ் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் “இவ்வளவு தானா?” என நமக்குள்ளே கேட்கின்றோம். எப்பொழுதும் ஏதோ ஒன்று இல்லாதது போலவே தோன்றுகிறது.

இவ்வுலகிலுள்ள எந்தவொரு மிகச் சிறந்த பொருளாலும் நம்மை முழுவதும் திருப்திப்படுத்த முடியாது. அவற்றில் ஏதோ ஓர் அளவு இன்பம் இருக்கலாம். ஆனால், அந்த மகிழ்ச்சி சீக்கிரத்தில் மறைந்து விடும் (1 யோவா. 2:17) “தேவனிடமிருந்தேயன்றி, வேறோன்றின் மூலமாகவும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற முடியாது”. அப்படித் தரக் கூடிய ஒரு பொருளும் இல்லை என சி.எஸ். லூயிஸ் கூறுகின்றார்.

என்னால் செய்ய முடியாது

“என்னால் செய்ய முடியாது!” என மனச்சோர்வடைந்த ஒரு மாணவன் புலம்பினான். அவன் கையில் வைத்திருந்த தாளின் பக்கத்தில் குறைந்த அளவே எழுதப்பட்டிருந்தது. கடினமான கருத்துக்கள், அத்தோடு மன்னிக்க முடியாத காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருந்தது. அவனுக்கு அவனுடைய ஆசிரியரின் உதவி வேண்டியதாயிருந்தது.

நாமும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்கும் போது இத்தகைய நம்பிக்கையிழந்த சூழலை உணரலாம். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” (மத். 5:44). கோபம் கொலைக்குச் சமம் (வச. 21,22). ஒரு ஸ்தரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று (வச. 28). ஒருவேளை நாம் இத்ததைய தரத்தோடு வாழ முடியும் என நினைப்போமாயின், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்” (வச. 48).

“மலைப் பிரசங்கம் நமக்குள்ளே விரக்தியை உருவாக்குகின்றது” என ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் சொல்கின்றார். ஆனால், அவர் இதனை நல்லதாகக் கண்டார். ஏனெனில், ‘‘நம்முடைய நம்பிக்கையிழந்து, ஒன்றுமில்லாத நிலையில்தான் நாம் இயேசுவிடம் ஏதாவது பெற்றுக் கொள்ள வருவோம்.”

ஓன்றுமில்லாமையில் தான் தேவன் செயல்படுவதைக் காண்கின்றோம். தங்களால் ஒன்றும் கூடாது என்று புரிந்து கொண்டவர்கள் தான் தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்கின்றனர். “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்” (1 கொரி. 1:26-27).

தேவனுடைய ஞானத்தில் நம்முடைய போதகர் நமக்கு இரட்கசர். அவரிடத்தில் நம்பிக்கையோடு வரும்போது “அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30). அவரே நமக்கு கிருபையும், அவருக்காக வாழ வல்லமையுமாவார். எனவே தான் அவர், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது” என்றார் (மத். 5:3).

சாட்சி கையொப்பம் தேவையில்லை

எந்த மனிதனாவது தான் ஒரு கார் அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற விரும்பும் போது, அவன் பெற்ற கடனைத் திருப்பிச் செலத்தியதாக நீண்ட சரித்திரம் இல்லையெனில், கடன் கொடுப்பவர் இந்தப் பணப்பரிவர்த்தனையிலுள்ள ஆபத்தைக் கையாள தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய ஒரு செயலின் பதிவு இல்லையெனில், அந்த மனிதன் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகத் தரும் வாக்குமூலம் போதாதென வங்கியாளர்கள் கருதுகின்றனர். எனவே கடன் வாங்குபவர் அத்தகைய நற்சாட்சி பெற்ற யாரையேனும் தேடி கண்டுபிடித்து அவர்களின் பெயரை இந்தக் கடனுக்குச் சாட்சியாக சேர்த்துக் கொள்வார். இவ்வாறு சாட்சி கையொப்பமிடுபவர், இந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் என வங்கிகளுக்கு உறுதி வாக்குக் கொடுக்கின்றனர்.

இவ்வாறு யாரேனும் நமக்கு பொருளாதார ரீதியாகவோ, திருமணத்திலோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வாக்களித்திருந்தால் நாம் அவற்றை நிறைவேற்றும்படி எதிர்பார்ப்போம். தேவனும் தாம் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவர் எனத் தெரிந்து கொள்வோம். ஆபிரகாமிடம் தேவன் அவனை ஆசீர்வதித்து “அவனுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் (எபி. 6:14, ஆதி. 22:17) என வாக்களித்தபோது, ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான், நாம் காணும் அகிலம் அனைத்தையும் படைத்த தேவனை விட மேலானவர் ஒருவரும் இல்லை. அவர் ஒருவரே தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.

ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பெறும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது (எபி. 6:15). (அவன் தன்னுடைய சந்ததியார் எவ்வளவாகப் பெருகுவார்கள் என்பதைக் காணவில்லை) ஆனால், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருந்தார். தேவன் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (13-5) நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் (யோவா. 10:29)  அவர் நம்மை ஆறுதல் படுத்துகின்றார் (2 கொரி. 1:3-4) அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.

மிகச் சிறந்த பரிசு

நான் என் உடைமைகளை அடுக்கிக் கொண்டு லண்டனிலுள்ள என்னுடைய வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது என்னுடைய தாயார் ஒரு பரிசோடு, அவர்களுடைய மோதிரங்களில் நான் மிகவும் விரும்பிய ஒன்றோடு, என்னிடம் வந்தார்கள். “நீ இதை இப்பொழுதே அணிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நான் மரிக்கும்வரை நீ ஏன் காத்திருக்க வேண்டும்? அது இப்பொழுது எனக்குப் பொருந்தவுமில்லை” என்றார். ஒரு புன்னகையோடு நான் அந்த எதிர்பாராத பரிசை ஏற்றுக் கொண்டேன். சீக்கிரத்தில் கிடைத்த பரம்பரைச் சொத்து எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

என்னுடைய தாயார் ஓர் உலகப் பொருளை எனக்குப் பரிசாகத் தந்தார். ஆனால், “பரம’ பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா” என இயேசு நமக்கு வாக்களித்துள்ளார் (லூக். 11:13) பாவத்தால் தம்மைக் கெடுத்துக்கொண்ட பெற்றோர் கூட தன் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க அறிந்திருக்கும்போது (மீன் அல்லது முட்டை போன்றவற்றை) நம்முடைய பரமத்தந்தை அவருடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு அதிகமாகக் கொடுப்பார்? பரிசுத்த ஆவியாகிய கொடையின் மூலம் (யோவா. 16:13) நம்பிக்கை, அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவற்றை நம்முடைய கஷ்ட நேரங்களில் கொடுப்பார். இந்த ஆவியின் கொடைகளை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோம்.

நாம் வளர்ந்துவிட்டபோது, நம்முடைய பெற்றோரால் நம்மை முழுவதும் கவனிக்கவும் அன்பு கூரவும் முடியாமல் போகும். நம்முடைய தாயோ, தந்தையோ ஒரு தியாக அன்பின் எடுத்துக் காட்டுகளாகிவிட்டிருக்கலாம். அல்லது நம்முடைய அனுபவம் இவற்றிற்கிடையேயிருக்கலாம். நம்முடைய உலகப் பெற்றோரிடமிருந்து நாம் எதைத் தெரிந்து கொண்டாலும் நாம் நம்முடைய பரமதந்தை மாறாத அன்பைத் தருவதாகக் கூறும் வாக்கைப் பற்றிக் கொள்வோம். அவர் தம்முயை பிள்ளைகளுக்குப் பரிசுத்த ஆவியைப் பரிசாகத் தந்தார்.

நம்முடைய காயங்களை மறைத்தல்

நான் அருகிலுள்ள ஒரு தேவாலயத்திற்குச் சிறப்பு செய்தியாளராகச் சொன்றிருந்தேன். அன்று என்னுடைய செய்தியின் கருத்து, நம்முடைய உடைந்த உள்ளத்தை தேவனிடம் கொடுத்து, அவர் கொடுக்க விரும்புகிற சுகத்தைப் பெற்றுக்கொள்ளல் என்பதைக் குறித்த ஓர் உண்மைக் கதை. கடைசி ஜெபத்திற்கு முன்பு அங்குள்ள போதகர், இடைப்பாதையின் மத்தியில் நின்றுகொண்டு அங்கு கூடியிருக்கும் சபையினரின் கண்களை ஆழ்ந்து நோக்கி, “உங்களுடைய போதகராக நான் உங்களை இந்த வார நடுவில் பார்க்கவும், உங்களுடைய இருதயத்தை நொறுக்கின நினைவுகளைப் பற்றிக் கேட்கவும் வாய்ப்பைப் பெறுகிறேன். வார இறுதி ஆராதனையில் நீங்கள் உங்கள் காயங்களை எவ்வாறு மறைத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் கவனிக்கும் வேதனையை நான் எடுத்துக் கொள்கின்றேன்” என்றார்.

நாம் மறைத்து வைத்துள்ள காயங்களால் ஏற்பட்ட என் இருதய வேதனையை சுகப்படுத்தும்படி தேவன் வந்தார். எபிரெயரை எழுதியவர் தேவனுடைய வார்த்தைகள் உயிருள்ளவை, செயல்படுபவை என்கின்றார். நம்மில் அநேகர் இந்த வார்த்தைகளை வேதாகமம் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அது அதையும் விட மேலானது. தேவனுடைய வார்த்தையின் ஜீவன் இயேசு கிறிஸ்து அவர் நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் மதிப்பிடுகின்றார். ஆனாலும், நம்மீது அன்பு கூறுகின்றார்.

இயேசு மரித்ததின் மூலம் நாம் தேவனுடைய சமூகத்திற்கு எல்லா வேளைகளிலும் செல்லக் கூடிய வழியைத் தந்தார். நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வது என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பது நம்மனைவருக்கும் தெரியும், நாம் குற்ற உணர்வோடு உடைந்து போனவர்களாய் அல்ல, மன்னிக்கப்பட்ட கிறிஸ்துவின் சீடர்களாக வாழும் இடமாக தேவனுடைய ஆலயத்தைத் தந்துள்ளார். அது “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” கொள்ள வேண்டிய இடம்’’ (கலா. 6:2).

இன்று மற்றவர்களின் கண்களுக்கு நீ எதை மறைத்துக் கொண்டிருக்கின்றாய்? தேவனிடமிருந்தும் எப்படி உன்னை மறைத்துக் கொள்ளப் பார்க்கின்றாய்? இயேசுவின் மூலம் தேவன் நம்மைக் காண்கின்றார். ஆனாலும் தேவன் நம்மை நேசிக்கின்றார். அவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வோமா?