வகை  |  odb

இவர் எப்படிப்பட்ட இரட்சகர்?

கடந்த ஆண்டில் என் நண்பர்களும் நானும் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த மூன்று பெண்மணிகளின் சுகத்திற்காக ஜெபித்தோம். தேவன் இதைச் செய்ய வல்லமையுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தேவன் செயல்படுமாறு அனுதினமும் ஜெபித்துவந்தோம். கடந்த நாட்களில் தேவன் செயல்பட்டதைக் கண்டிருக்கின்றோம். எனவே அவ்வாறு மீண்டும் செய்வாரென விசுவாசிக்கிறோம். ஒவ்வொருவரும் அநேக நாட்கள் போராட்டத்திற்குப்பின், உண்மையிலேயே சுகம் பெற்றதாகத் தோன்றியது. நாங்கள் மகிழ்சியடைந்தோம். ஆனால், அவர்கள் மூவரும் சில நாட்களுக்குப் பின் மரித்துப் போயினர். எங்கள் மகிழ்ச்சியும் விழுந்துபோனது. சிலர் இதனை, “நித்திய சுகம்" எனக் கூறினர். ஒரு வகையில் அப்படித்தான். ஆனாலும் அந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. தேவன் அவர்களை குணப்படுத்த வேண்டுமென விரும்பினோம். ஆனால், எந்த அற்புதமும் நடைபெறாதது, ஏனென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சில ஜனங்கள் இயேசுவை அவர் செய்த அற்புதங்களுக்காகப் பின்பற்றினர். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றினர் (யோவா. 6:2,26). சிலர் அவரை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தனர் (மத். 13:55-58) வேறு சிலர் அவரை தங்களின் அரசியல் தலைவராக எதிர்பார்த்தனர் (லூக். 19:37-38) சிலர் அவரை சிறந்த போதகராகப் பார்த்தனர் (மத். 7:28-29) அவருடைய உபதேசம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தபடியால் மற்றவர்கள் அவரைவிட்டுப் பின் வாங்கினர் (யோவா. 6:66).

நாம் எதிர்பார்க்கின்றவற்றை இயேசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவர் நாம் நினைப்பதையும் விட மேலாகச் செய்கின்றவர். அவரே நித்திய வாழ்வைத் தருபவர் (யோவா. 6:47-48). அவர் நல்லவரும் ஞானமுள்ளவருமாயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கின்றார், மன்னிக்கின்றார், நம்மருகில் இருக்கின்றார், நமக்கு ஆறுதலைத் தருகின்றார். நாம் அவரின் மீது சாய்ந்து இளைப்பாறி, தொடர்ந்து அவரைப் பின்பற்றுவோம்.

கவலைக்கோர் மாற்று

சட்ட திட்டங்களைக் கடைபிடித்து நேர்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு நாள் அலைபேசி அழைப்பில் “நான் காவல்துறை அதிகாரி, காவல்துறை அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். தயவுகூர்ந்து என்னை இந்த எண்ணில் அழைக்கவும்" என்ற ஒரு செய்தி வந்தது. உடனடியாக அந்த மனிதனைக் கவலை தொற்றிக் கொண்டது. தான் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும் என பயந்தான். அவன் அந்த அழைப்பைக் கொடுக்க நடுங்கினான். அவன் சில இரவுகளைத் தூங்காமல் கழித்தான். இவ்வாறு என்ன நடக்குமோவென வௌ;வேறு காட்சிகளைத் தன் கண்முன்னே கொண்டு வந்து, கவலைப்பட்டு, தான் ஏதோவொரு பிரச்சனையில் மாட்டியிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். அந்த அதிகாரியும் அவனை மீண்டும் அழைக்கவேயில்லை. ஆனால், அந்த கவலையிலிருந்து விடுபட பல வாரங்களாயின.

கவலையைக் குறித்து இயேசுவும் ஓர் ஆர்வமான கேள்வியைக் கேட்கின்றார். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" (மத். 6:27). இது நாம் ஏன் கவலைப்படுகிறோமென மீண்டும் சிந்திக்கச் செய்கிறது. ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைக் குறித்து கரிசனை கொண்டுள்ளோமோ அதில் கவலை எந்த உதவியையும் செய்ய முடியாது.

பிரச்சனைகள் நம்மை நெருங்குகையில் நாம் இந்த இருபடி அணுகுமுறையை கடைபிடிக்கலாம். முயற்சி செய், தேவனை நம்பியிரு. நாம் அந்த பிரச்சனையைத் தவிர்க்க முடியுமாயின் அதன் வழியே முயற்சிப்போம். நாம் எடுக்க வேண்டிய செயலில் ஒரு வழியைக் காட்டும்படி தேவனிடம் ஜெபிக்கலாம். நம்மால் செய்யக் கூடியது எதுவுமில்லையாயின், தேவன் அப்படிப்பட்ட மீளமுடியாத இக்கட்டில் இல்லையென்பதை தெரிந்துகொள்ளலாம். தேவன் எப்பொழுதும் நமக்குச் சாதகமாகவே செயல்படுவார். நாம் நம் சூழ்நிலைகளை விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடம் திருப்பிவிடலாம்.

நாம் கவலைப்பட வேண்டிய வேளைகளில் துன்பங்களையும், கவலைகளையும் எதிர் நோக்கிய தாவீது அரசனின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளிடம் திரும்புவோம். "கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்" (சங். 55:22). இது கவலைக்கு எத்தனை பெரிய மாற்று வழி!

ஒரு சாதாரண மனிதன்

இங்கிலாந்து தேசத்தில் நார்த்தாம்டன் என்ற இடத்தில், ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் வில்லியம் கேரி. அவர் சிறுவனாக இருந்த போது ஒரு சுகவீனமானப் பையனாக இருந்தார். அவருடைய எதிர்காலத்தை அவர் பிரகாசமாக நினைத்ததேயில்லை. ஆனால். தேவன் அவருக்கு வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார். எல்லாக் குறைகளின் மத்தியிலும் அவர் இந்தியாவுக்கு வந்தார். இங்கு அவர் மிகப் பெரிய சமுதாயச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வேதாகமத்தை அநேக இந்திய மொழிகளில்  பெயர்த்தார். அவர் தேவனையும் மக்களையும் நேசித்தார். தேவனுக்காக அநேகக் காரியங்களை நிறைவேற்றினார்.

ஈசாயின் மகனான தாவீது ஒரு சாதாரண இளம்வாலிபன். தன் வீட்டின் இளைய மகன். அவன் பெத்லகேமின் மலைகளில் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு மேய்ப்பனாயிருந்தான் (1 சாமு. 16:11-12). ஆனால், தேவன் தாவீதின் இருதயத்தைக் கண்டார். அவனுக்கு ஒரு திட்டத்தை வைத்திருந்தார். சவுல் தேவனுக்குக் கீழ்படியாததால் தேவன் அவனை புறக்கணித்தார். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலுக்காக துக்கத்தோடிருந்தபோது, தேவன் சாமுவேலை அழைத்து வேறொரு ராஜாவை அபிஷேகம் பண்ணும்படி, ஈசாயின் மகனைக் காண்பிக்கின்றார்.

சாமுவேல் எலியாப்பின் வசீகரத்தையும், அவனுடைய சரீர வளர்ச்சியையும் கண்டபோது, “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறவன் இவன்தான்" என எண்ணினான் (வச. 6) ஆனால், தேவன் ஒரு இராஜாவைத் தேர்ந்தெடுக்கும் திட்டமும் செயலும், சாமுவேலின் பார்வையிலிருந்து வேறுபட்டது. ஈசாயின் ஒவ்வொரு மகனையும் தேவன் நிராகரித்தார். இளையவனையே தேர்ந்தெடுத்தார். தாவீதை அரசனாகத் தேர்ந்தெடுத்தது, அவனுடைய திறனின் அடிப்படையிலல்ல. வெறுமனே வெளித் தோற்றத்தைப் பார்த்தும் எடுத்த முடிவில்லை. ஓர் இளம் மேய்ப்பனிடம் தன் ஜனங்களுக்கும், தன் தேசத்திற்கும் கொடுக்கும்படியாக என்ன இருக்கக் கூடும்?

தேவன் நம் உள்ளங்களையறிவார். அவர் நமக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பதை நினைக்கும் போது எத்தனை ஆறுதலாகவுள்ளது.

இதனிலும் பெரிய மகிமை

ரோமப் பேரரசர்களில் முதலானவரும் மிகவும் பெரியவருமாக அகஸ்டஸ் சீசர் நினைவுகூரப்படுகின்றார். தன்னுடைய அரசியல் செல்வாக்கையும் இராணுவப்படையின் வல்லமையையும் பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளை அகற்றினார். தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ரோமாபுரியின் ஒழுங்கற்ற, பழைய, பயனற்ற நிலையை அகற்றி, பளிங்கு கற்களாலான சிற்பங்களும், கோவில்களும் நிறைந்த பட்டணமாக மாற்றினார் போற்றினார். அவரைப் போற்றிய ரோம மக்கள் அவரைத் தேவனுக்குச் சமமான தந்தையாகவும் மனுக்குலத்தை மீட்பவராகவும் போற்றினர். அவருடைய நாற்பது ஆண்டு அரசாட்சி முடிவடையும் தருவாயில் அவருடைய அரசுக்கு அவர் கொடுத்த கடைசி வார்த்தைகள், “நான் ரோமாபுரியை ஒரு களிமண் பட்டணமாகக் கண்டெடுத்தேன். அதனை ஒரு பளிங்கு பட்டணமாக விட்டுச் செல்கின்றேன்" என்பது அவருடைய மனைவியின் கூற்றுப்படி அவரின் கடைசி வார்த்தைகள், “நான் என்னுடைய பணியை நன்றாகச் செய்தேனா? அப்படியாயின் நான் போகும் போது என்னைப் பாராட்டுங்கள்" என்பது.

அகஸ்டஸ் அறியாதது என்னவெனில் ஒரு பெரிய நிகழ்வில் அவருக்கு ஒரு சிறிய பங்கே கொடுக்கப்பட்டது. அவருடைய அரசாட்சியின் மறைவில் ஒரு தச்சனின் மகனாகப் பிறந்த ஒருவர், ரோம இராணுவத்தையும் வெற்றிகளையும், கோவில்களையும், அரங்கங்களையும், அரண்மனைகளையும் காட்டிலும் மிகப் பெரிய ஓர் உண்மையை வெளிப்படுத்தினார் (லூக். 2:1)

அன்று ராத்திரியிலே அவருடைய சொந்த ஜனங்கள் அவரை ரோமப் போர் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டபோது, இயேசு பிதாவிடம் வேண்டிக் கொண்ட மகிமையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பர்? (யோவா. 17:4-5) பரலோகத்திலும் பூலோகத்திலும் என்றைக்கும் போற்றப்படும் அந்த மறைவான பலியின் அதிசயத்தை யார் தான் முன்னறிந்திருப்பார்கள்?

அது ஒரு முழுமையான நிகழ்வு. நாம் முட்டாள்தனமான கற்பனைகளைத் தொடர்பவர்களாகவும், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் தேவன் நம்மைக் காண்கி;றார். அவர் நாம் அனைவரும் சேர்ந்து அந்த பழமையான சிலுவையைக் குறித்துப் பாடும்படி நம்மை வைத்திருக்கின்றார்.

மாற்றப்பட்டதும், மாற்றிக் கொண்டிருப்பதும்

டானி, மொடூப்பே ஆகிய இருவரும் நைஜீரியாவில் வளர்ந்தனர். அவர்கள் 1970 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திற்கு உயர்கல்விக்காகச் சென்றனர். தேவனுடைய கிருபையால் வாழ்வு மாற்றம் பெற்றனர். இங்கிலாந்து தேசத்தில், விவர் பூல் மாகாணத்தில் அன்பீல்ட் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மிகவும் பின் தங்கிய, பிரிக்கப்பட்ட சமுதாயத்தினரை மாற்றும்படி தாங்கள் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் நினைத்ததேயில்லை. மருத்துவர்களான டானியும், மொடூப்பே ஆமிடேயும் உண்மையாய் தேவனைத் தேடியதோடு, தங்கள் சமுதாயத்தினருக்கும் பணி புரிந்தனர். தேவன் அநேகருடைய வாழ்வில் நம்பிக்கையைக் கொடுத்தார். அவர்கள் வல்லமையான ஒரு சபையை நடத்தியதோடு, அநேக சமுதாயச் சேவைகளையும் தொடர்ந்தனர். அதன் மூலம் எண்ணடங்கா மக்களின் வாழ்வு மாற்றத்திற்கு வழிவகுத்தனர்.

மனாசே தன்னுடைய சொந்த சமுதாயத்தை மாற்றினான். முதலாவது தீய வழிக்கு தன் ஜனங்களை நடத்தினான். பின்னர் அவர்களை நல்வழிப்படுத்தினான். யூதாவின் அரசனாக தனது பன்னிரண்டாம் வயதில் முடிசூட்டப்பட்ட மனாசே தன் ஜனங்களை வழிதவறச் செய்தான். அவர்கள் பல ஆண்டுகளாக பொல்லாப்பைச் செய்து வந்தனர் (2 நாளா. 33:1-9). அவர்கள் தேவனுடைய எச்சரிப்புக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே தேவன் மனாசேயை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லும்படி ஒப்புக்கொடுத்தார் (வச. 10-11).

அவன் இப்படி நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாகத் தன்னை மிகவும் தாழ்த்தினான். தேவன் அவனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவனை மீண்டும் அவனுடைய இராஜ்ஜியத்திற்கு வரப்பண்ணினார் (வச. 12-13). அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கட்டி, அந்நிய தேவர்களை அகற்றினான் (வச. 14-15). அவன் கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு... இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை சேவிக்க வெண்டுமென யூதாவுக்கு கட்டளையிட்டான் (வச. 16). மனாசேயிடமிருந்த பூரண மாற்றத்தைக் கண்ட ஜனங்கள், தாங்களும் மாற்றமடைந்தனர் (வச. 17).

நாம் தேவனைத் தேடும்போது, அவர் நம்மை மாற்றுவதோடல்லாமல் நம்மூலம் நம்முடைய சமுதாயத்தையும் மாற்றுவார்.

ஒளியில் நடத்தல்

எங்களுடைய காடுகளடர்ந்த கிராமத்தை இருள் சூழ்ந்தது. நிலாவும் மறைந்தது. வானத்தில் ஆங்காங்கே மின்னல் பளிச்சிட்டது. இடி முழக்கத்தோடு புயலும் மழையும் ஆரம்பித்தது. நான் சிறியவனாக இருந்தபடியால், விழித்துக் கொண்டு பல வகையான பயங்கர பிசாசுகள் என்னை நோக்கிப் பாய்ந்து வருவதைப் போன்று கற்பனை செய்து பயந்தேன். விடிந்த போது அந்தச் சப்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. சூரியன் உதித்தது, அமைதி திரும்பியது. பறவைகள் மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தன. இரவின் பயங்கர இருளுக்கும் பகல் வெளிச்சத்தின் மகிழ்ச்சிக்குமிடையேயுள்ள வேறுபாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாயிருந்தது.

சீனாய் மலையில் மின்னலையும், இடி முழக்கங்களையும் எக்காள சத்தத்தையும் கேட்டபோது இஸ்ரவேலர் பயந்து பின்வாங்கி மறைந்துகொள்ள முயற்சிக்கின்றனர் (யாத். 20:18-19) அவர்களுக்கு தேவனுடைய பிரசன்னமும், அவருடைய அன்பின் ஈவாகிய நியாயப்பிரமாணமும், பயங்கரமாகவும், கண்களால் காணக் கூடாதபடியும் இருந்தது. ஏனெனில், பாவ மனிதராகிய இஸ்ரவேலர் தேவன் எதிர்பார்த்த நீதியின்படி வாழவில்லை. அவர்களுடைய பாவம் அவர்களை இருளுக்கும் பயத்துக்கும் இழுத்துச் சென்றது (எபி. 12:18-21).

ஆனால், தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை (1 யோவா. 1:5). எபிரெயர் 12ல் சீனாய் மலை என்பது தேவனுடைய பரிசுத்தத்தையும், நம்முடைய கீழ்படியாமையின் பழைய வாழ்வையும் குறிக்கின்றது. ஆனால், “சீனாய் மலையின் அழகு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய" இயேசுவின் கிருபையையும் விசுவாசிகளுக்குத் தரப்படுகின்ற புதிய வாழ்வையும் குறிக்கும்.

இயேசுவைப் பின்பற்றுகின்ற ஒவ்வொருவரும் “இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோவா. 8:12) அவர் மூலமாக நம்முடைய பழைய வாழ்வின் இருளை அகற்றி, புதிய வாழ்வில், ஒளியில் மகிழ்ச்சியோடு நடந்து அவருடைய இராஜ்;ஜியத்தின் அழகில் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

இறுக மூடப்பட்ட கண்கள்

தான் அதனைச் செய்திருக்கக் கூடாதென்று என்னுடைய சகோதரனின் மகனுக்குத் தெளிவாகக் தெரியும். தான் செய்தது தவறு என்பதை அவன் நன்கு புரிந்த கொண்டானென நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது. அவன் செய்த காரியத்தைக் குறித்து அவனோடு விவாதிக்க அமர்ந்தபோது, அவன் தன் கண்களை மூடிக்கொண்டு, கசக்க ஆரம்பித்தான். அவன் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டான். தன் கண்களை மூடிக் கொண்டதால் என்னைக் காண முடியவில்லை, ஆகையால் நானும் அவனைக் காண முடியாதென எண்ணினான். அவன் தன்னை மறைத்துக் கொண்டால், எங்களுடைய விவாதத்தையும் அதன் விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என எண்ணினான்.

நான் அவனை அந்தக் கணத்தில் பார்க்க முடிந்ததால் மகிழ்ச்சியடைந்தேன். அவனுடைய செயலை நான் காணாதது போல விட்டு விட முடியாதாகையால், நாங்கள் அதனைக் குறித்தப் பேசியேயாக வேண்டும். எனவே, எங்களுக்கிடையே எந்த தடையும் வர நான் விரும்பவில்லை. நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன், நான் அவனை முற்றிலும் மன்னிக்க ஆவலாயிருக்கிறேன் என்பதை, அவன் என் முகத்தை முழுவதும் பார்த்து தெரிந்துகொள்ள விரும்பினேன். அப்பொழுதுதான் எனக்குள் அந்த சிந்தனை வந்தது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய நம்பிக்கையை இழந்தபோது தேவன் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் குறித்து சிறிது நினைக்கத் தோன்றியது. தங்கள் தவற்றை உணர்ந்து அவர்கள் தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஒளிந்து கொண்டனர் (ஆதி. 3:10) நான் எனது சகோதரனின் மகனைக் கண்டது போல தேவனும் அவர்களைத் தெளிவாகக் கண்டார்.

நாமும் சில தவறுகளைச் செய்துவிட்டோமென உணரும் போது அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்க விரும்புவதில்லை. நாமும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவோ, அதனை மறைத்து விடவோ அல்லது உண்மைக்கு நம் கண்களை மூடிக்கொள்ளவோ எண்ணுவதுண்டு. தேவன் தம்முடைய நீதிக்கு முன்பாக நம்மை கணக்குக் கொடுக்கும்படி நம்மைத் தேடுகின்றார். நம்மைக் காண்கின்றார். ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்.

கேட்பது நல்லது

எந்த திசை, எந்த இடம் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய திசையறியும் திறனுடையவர் என் தந்தை. சில வேளைகளில் நான் பொறாமைப்படக் கூடிய அளவிற்கு அவருடைய உள்ளுணர்வு அவருக்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளைச் சரியாகக் காட்டும். ஒருவேளை, அவர் பிறக்கும்போதே இத்தகைய உள்ளுணர்வோடு பிறந்திருப்பார் போலும். எப்பொழுதும் சரியாகவே சொல்லும் அவரும் ஒரு நாள் இரவு பாதை தெரியாமல் தடுமாறினார்.

அந்த இரவு என் தந்தை தன்னுடைய பாதையை தவறவிட்டார். அவரும் என்னுடைய தாயாரும் எங்களுக்கு அறிமுகம் இல்லாத ஓரிடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்வு முடிந்து, இரவு திரும்பினர். நெடுஞ்சாலையை அடைவதற்கான வழியைத் தான் கண்டுபிடித்து விடமுடியும் என்ற எண்ணத்தோடு அவர்கள் திரும்பினர். ஆனால், முடியவில்லை. அவ்விடத்திலேயே சுற்றி வந்து, குழப்பமுற்று, விரக்தியடைந்தனர்.

“அது கடினமானது தான். ஆனால், உங்களுடைய செல்போனின் உதவியால் திசையைக் கண்டு பிடித்துவிடலாம். எல்லாம் சரியாகிவிடும்” என என்னுடைய தாயார் ஊக்கமளித்துள்ளார். எனக்குத் தெரிந்த அளவில், என்னுடைய எழுபத்தாறு வயது தந்தை, அவருடைய வாழ்வில் முதல் முறையாக செல்போனில் கேட்டு திசையைத் தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கின்றார்.

சங்கீதக்காரன் நிறைய அனுபவங்கள் கொண்ட ஒரு மனிதன். ஆனாலும், தாவீது தனது ஆவியிலும் சிந்தையிலும் கலங்கியிருந்த வேளைகளைக் குறித்துச் சில சங்கீதங்கள் விளக்குகின்றன. சங்கீதம் 143 அத்தகைய வேளைகளில் எழுதப்பட்டது. அந்தப் பெரிய அரசனின் உள்ளம் பயத்தால் சோர்ந்து விட்டதைக் காட்டுகின்றது (வச. 4). அவர் பிரச்சனைகளுக்குள் இருக்கின்றார் (வச. 11) எனவே அவர் காத்திருந்து ஜெபிக்கின்றார். “நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும் (வச. 8) என்று கேட்கின்றார். ஒரு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய நாட்களுக்கு வெகுமுன்னர், சங்கீதக்காரன் தேவனை நோக்கிக் கதறுகின்றார். "உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்" (வச. 8) என ஜெபிக்கின்றார்.

கர்த்தர், "என்னுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்" என்று தாவீதைக் குறித்து (1 சாமு. 13:14) சொல்லியுள்ளார். அவரே சிலவேளைகளில் கைவிடப்பட்டவராக எண்ணும்போது, நாம் தேவனை நோக்கி ஒவ்வொரு நாளும் அவருடைய வழிநடத்துதலுக்காக கெஞ்சவேண்டியது எத்தனை அவசியம்.

புது வருடமும், புது முன்னுரிமைகளும்

“செல்லோ” என்ற இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென அநேக நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால், எனக்கு அதற்கான நேரம் ஒதுக்கமுடியவில்லை. நான் பரலோகத்தில், ஒருவேளை இந்தக் கருவியை நேர்த்தியாக வாசிக்கக் கூடும். தேவன் என்னுடைய நேரத்தை, அவருக்கு ஊழியம் செய்யும்படி எப்படியெல்லாம் செலவிட திட்டமிட்டிருக்கின்றாரோ அதற்கே அதிக கவனம் செலுத்தும்படி விரும்புகிறேன்.

நம்முடைய வாழ்வு மிகவும் குறுகியது. அந்த நாட்கள் முடிவதற்குள், இப்புவியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் அதன் அர்த்தமென்ன?

சாலமோன் ராஜா வாழ்வின் நோக்கத்தை விளக்க முன்வரும்போது, இரு காரியங்களைக் குறித்து விளக்குகின்றார். முதலாவது நாம் நம் வாழ்வை நம்மால் முடிந்தவரை பயனுள்ள வகையில் வாழவேண்டும். அதாவது தேவன் நாம் அனுபவிக்கும்படி கொடுத்துள்ள உணவு, தண்ணீர் (பிர. 9:7) உடை, வாசனை திரவியங்கள் (வச. 8) திருமணம் (வச. 9) போன்ற தேவன் தரும் நன்மையான ஈவுகள் அனைத்தையும் அனுபவி. சேல்லோவை இசைக்கக் கற்றுக் கொள்வதும் இதில் அடங்கும்.

அவருடைய இரண்டாவது பரிந்துரை என்னவெனின், கடின உழைப்பு (வச. 10). வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இங்கு அதிக வேலைகள் நிறைவேற்றப்படும்படி கிடக்கின்றன. தேவன் தரும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி, அவருடைய ஞானத்தைத் தேடி கண்டுபடித்து, அவருடைய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்முடைய தாலந்துகளை தேவனுக்குப் பணிசெய்யும்படி பயன்படுத்த வேண்டும்.

வாழ்வு என்பது தேவன் தரும் அற்புத ஈவு. அவர் அனுதினமும் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களிலும், நம்முடைய அர்த்தமுள்ள ஊழியங்களிலும் நாம் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.