என்னுடைய பெரிய அத்தை விளம்பரம் செய்கின்ற ஒரு நல்ல வேலையிலிருந்தார்கள். தன்னுடைய வேலையினிமித்தம் சிக்காகோவிற்கும் நியூயார்க்கிற்குமிடையே அடிக்கடி பிரயாணம் செய்வார்கள். ஆனால், தன்னுடைய பெற்றோரின் மீதிருந்த அன்பினால், தன்னுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கக் கூடிய இந்த வேலையை விட்டுவிட எண்ணினார்கள். அவளுடைய பெற்றோர் மினிசோட்டா என்ற இடத்திலிருந்தபடியால் அங்கு அவர்களை கவனிக்க வேண்டியிருந்தது. அவளுடைய இரு சகோதரரும் இளம் வயதிலேயே சோகமாக மரித்ததால் இவர் மட்டுமே அவளுடைய பெற்றோரைக் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைப் பொருத்தவரை தன் பெற்றோருக்குப் பணி செய்வதையே தன் விசுவாசத்தின் வெளிப்பாடாக கருதினாள்.

ரோமாபுரியிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது விசுவாசிகள் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கின்றார் (ரோம. 12:1). கிறிஸ்துவின் அன்போடு கூடிய தியாகத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் கொடுக்கும்படி விரும்புகின்றார். உங்களில் ஒருவனும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றார் (வச. 3). அவர்களுக்குள்ளே வாக்குவாதங்களும் பிரிவினைகளும் வராதபடிக்கு பெருமையானவற்றை விட்டு விடவும் ஆலோசனைக் கூறுகின்றார். ‘அநேகராகிய நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்” (வச. 5) எனவே நாம் ஒருவருக்கொருவர் மாயமற்ற அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றார்.

ஒவ்வொரு நாளும், நாம் பிறருக்குப் பணிசெய்யும்படி அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. நாம் ஏதோவொரு வரிசையில் நமக்குப் பிந்தி நிற்பவரை நமக்கு முன்னே செல்ல வழிவிடலாம் அல்லது எனது அத்தையைப் போன்று சுகவீனமான ஒருவனைக் கவனிக்கலாம், அல்லது நம்முடைய அநுபவங்களிலிருந்து மற்றவருக்கு ஆலோசனைகளைத் தந்து வழிகாட்டலாம். நம்மை இவ்வாறு ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.