எங்கள் வீட்டினருகிலுள்ள உடற்பயிற்சி மையத்திற்குச் செல்லும் போதெல்லாம் நான் அதிகம் ஊக்குவிக்கப்படுவேன். அந்த விறுவிறுப்பான இடத்தில் நான் எப்பொழுதும் தங்களின் உடல் நிலையையும், உடல் வலுவையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் மக்களால் சூழப்பட்டிருப்பேன். ஒருவரையொருவர் தீர்ப்பிடாதேயுங்கள் என்ற சிந்தனையைத் தரும் குறிப்புகளும், பிறரின் முயற்சியை வரவேற்கும் வார்த்தைகளும், ஆங்காங்கே காணப்படும்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் எல்லையெங்கும் எப்படிப்பட்ட காரியங்கள் காணப்பட வேண்டும் என்பதைக் குறித்து இது ஒரு நல்ல காட்சியைத் தருகிறது. ஆவியில் நல்ல முதிர்ச்சியைப் பெறும்படியும், தம்முடைய விசுவாசத்தில் வளரும்படியும் போராடிக் கொண்டிருப்பவர்களும் சில வேளைகளில் மற்றவர்களைப் பார்த்து, தங்களைக் குறித்து விசுவாசக் கூட்டத்தோடு சேர தகுதியற்றவர்களாகவும் இயேசுவோடு கூட நடப்பதில் முதிர்ச்சி பெறாதவர்களாகவும் கருதலாம்.

பவுல் நமக்கு ஒரு சிறிய வழிமுறையைத் தருகின்றார். ‘ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெச. 5:11) என்கின்றார். ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு, நம்மில் ஒவ்வொருவரும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன் (ரோம. 15:2) என எழுதுகின்றார். நம்முடைய தந்தையின் அன்பு மிகுந்த கிருபையை உணர்ந்தவர்களாய், நாமும் தேவனுடைய கிருபையை பிறரிடம் நம்முடைய ஊக்கப்படுத்தும் வார்த்தையாலும், செயலாலும் காண்பிப்போமாக.

‘நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் (வச. 7) என்ற வார்த்தையின்படி நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய ஆவியின் நடத்துதலுக்கு கீழ்ப்படிவோம். இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்றும் போது, இயேசுவுக்குள் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு விசுவாசத்தில் வளரும்படி ஊக்கத்தைத் தரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்போம்.