தேவனுக்கு மகிமையைச் செலுத்துவோம்
1960 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சில வித்தியாசமான சித்திரங்கள் பிரசித்திப்பெற்றன. அவற்றில் மனிதர்களும், விலங்கினங்களும் பெரிய கவலை தோய்ந்த கண்களோடு வரையப்பட்டிருந்தன. சிலர் அந்த வேலையை விமர்சித்தனர், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனா. அந்த கலைஞரின் கணவன், தன் மனைவியின் படைப்புகளைப் பிரபலமாக்கிய போது, அவர்கள் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தனர். அந்த கலைஞரின் கையெழுத்தான மார்கரெட் கீன் என்பது அவளுடைய எந்தப் படைப்பிலுமே காணப்படவில்லை. அதற்குப்பதிலாக மார்கரெட்டின் கணவன் தன் மனைவியின் படைப்புகளைத் தன்னுடையது போல வெளியிட்டான். மார்கரெட் இந்த ஏமாற்று வேலையைக் குறித்து பயந்து, 20 ஆண்டுகள், தன்னுடைய திருமணவாழ்வு முற்றுப் பெறும் வரை அமைதியாயிருந்தார். பின்னர் ஒரு நீதிமன்ற அறையில் அவர்களிருவரும் சித்திரம் தீட்டி தங்களுடைய கலைத்திறனின் அடையாளத்தைக் நிரூபிக்குமாறு ஏற்பாடாயிற்று.
அந்த மனிதனின் ஏமாற்று வேலை முற்றிலும் தவறானது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் தேவன் நமக்குக் கொடுத்துள்ள தாலந்துகளின் பெருமைகளை நமக்குரியதாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். நாம் வெளிப்படுத்தும் தலைமத்துவ பண்பு, நாம் பிறரிடம் காட்டும் நற்செயல்கள் ஆகியவற்றை நம்முடையதாக்கிக் கொள்கின்றோம். ஆனால், இத்தகைய நற்குணங்களெல்லாம் தேவக் கிருபையாலேயே செயல்படுத்த முடியும். எரேமியா 9ல், தீர்க்கதரிசி, மக்களின் மனதில் தாழ்ச்சியும், குற்றத்தை உணரும் உள்ளமும் இல்லையெனப் புலம்புகின்றார். நம்முடைய ஞானத்தைக் குறித்தும், நம்முடைய பராக்கிரமத்தைக் குறித்தும் அல்லது நம்முடைய ஐசுவரியத்தைக் குறித்தும் நாம் மேன்மை பாராட்ட வேண்டாமெனவும், அவரே தேவனென்று புரிந்துகொண்டு 'பூமியிலே கிருபையையும், நியாயத்தையும், நீதியையும் செய்கிறவர் கர்த்தர்" (வச. 24) என்று அவரை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைப் பாராட்டக்கடவன் என்றும் கர்த்தர் சொல்கின்றார் என்று எரேமியா எழுதுகின்றார்.
நம்மைப் படைத்த உண்மையான கலைஞரை நாம் கண்டு கொண்டோமேயாயின், நம் உள்ளம் நன்றியால் நிரம்பும். 'நன்மையான எந்த ஈவும் பரிபூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக். 1:17). எல்லாத் துதியும் மகிமையும் நன்மையான ஈவுகளைத் தருகின்ற தேவனுக்கே உரியது.
உன் வாழ்வில் விளக்கு எரிந்து கொண்டேயிருக்கட்டும்
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வேலை என்னையும், என்னோடு பணிபுரியும் மற்றொருவரையும் 250 மைல்களுக்கப்பால் கொண்டு சென்றது. நாங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய போது மாலை அதிக நேரமாகிவிட்டது. வயது சென்றதாலும், கூரியபார்வை குறைந்து விட்டதாலும் இரவில் வாகனத்தை ஓட்டுவதில் சற்று சிரமமிருந்தது. இருந்த போதிலும் நானே முதலாவதாகச் செல்ல விரும்பினேன். என்னுடைய கரங்கள் திசை மாற்றுச் சக்கரத்தை நன்கு பற்றியிருக்க, என்னுடைய கண்கள் கவனமாக அந்த மங்கலான ஒளியில் சாலையை கவனித்தன. நான் ஓட்டிச் செல்கையில், அந்த நெடுஞ்சாலையில் எனக்குப் பின்னால் வந்த வாகனங்களிலிருந்து வந்த ஒளிக்கற்றை நான் அந்தச் சாலையை நன்கு பார்க்க உதவியது. என்னுடைய நண்பன் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிக் கொண்டு எனக்கு முன்னே வந்த போது நான் சற்று நிம்மதி அடைந்தேன். அவன் என்னிடம் வந்து, நான் முன் விளக்குகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பனிப்படல விளக்குகளை பயன்படுத்தி ஓட்டிக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினான்.
நம்முடைய அனுதின வாழ்விற்குத் தேவையான வெளிச்சத்தைத் தருவது தேவனுடைய வார்த்தைகளே (வச. 105) என முற்றிலும் புரிந்து கொண்ட ஒருவருடைய மிகச்சிறந்த படைப்புதான் சங்கீதம் 119. நான் அந்த நெடுஞ்சாலையில், அந்த இரவில் சந்தித்த பிரச்சனையைப் போன்று, நம் வாழ்விலும் எத்தனை, அடிக்கடி அப்படிப்பட்ட சூழல்களைச் சந்திக்கின்றோம். நாம் தெளிவாகப் பார்க்கும்படிக்கு நம்மை வருத்திக் கொள்கின்றோம், சில வேளைகளில் நல்ல பாதையைவிட்டு விலகி விடுகின்றோம். ஏனெனில், நாம் தேவன் தரும் ஒளியாகிய தேவனுடைய வார்த்தையை மறந்து விடுகின்றோம். சங்கீதம் 119 நம்மை முன் விளக்கின் சுவிட்சை அவிழ்த்து விடும்படி நம்மைத் தூண்டுகிறது. நான் அந்த விளக்கைப் போடும் போது என்ன நடக்கின்றது? நாம் சுத்தப்படுத்தப்படும்படி ஞானத்தைக் கண்டடைகிறோம் (வச. 9-11). நாம் வீணாக அலைந்து திரிவதைத் தவிர்க்கும்படி புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கண்டு கொள்கின்றோம் (வச. 101-102). நாம் வேதத்தின் வசனமாகிய வெளிச்சத்தில் வாழும் போது சங்கீதக்காரனின் துதியும் நம்முடைய துதியாக மாறும். 'உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" என்போமாக.
என்னுடைய உண்மை நிலையை கண்டுகொள்ளல்
நான் யார்? என்று ஒரு மங்கிப்போன, பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மை தன்னைக் கேட்டுக் கொண்டது. மைக் இங்க் பென் எழுதிய 'ஒன்றுமில்லை" என்ற குழந்தைகளின் புத்தகத்தில் இதனைக் காணலாம். ஒரு பரணின் மூலையில் தூசிபடிந்து கிடந்த அந்த மிருகத்தை அங்கு வந்த பொருட்களை அடுக்குபவர்கள் 'ஒன்றுமில்லை" என அழைத்ததால் 'ஒன்றுமில்லை" என்பதே தன்னுடைய பெயரென அது நினைத்துக் கொண்டது.
அது மற்ற மிருகங்களைச் சந்தித்த போது தன்னைப் பற்றிய நினைவைத் திரும்பப் பெற்றது. இப்பொழுது 'ஒன்றுமில்லை" தனக்கு ஒரு வாலிருந்தது, மீசை முடிகளிருந்தன, தன் உடலில் கோடுகள் வரையப்பட்டிருந்தன என்பதை நினைவு கூர்ந்தது. டாபி என்ற பூனையைச் சந்தித்தப் பின்னர் தான், தன்னுடைய வீட்டிற்கான வழியையும் தான் யாரென்பதையும் ஒன்றுமில்லையால் நினைவுபடுத்த முடிந்தது. உண்மையில் அது டோபி என்றழைக்கப்படும் ஒரு பஞ்சு பூனை பொம்மை. அதனுடைய எஜமானன் அன்போடு அதனைச் சேர்த்துக் கொண்டு, அதன் மீது புதிய காதுகளைத் தைத்தார், வாலையும், மீசை முடிகளையும், உடலின் கோடிகளையும் கொடுத்தார்.
நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம், நான் என்னுடைய அடையாளத்தைக் குறித்து சிந்தித்துக் கொள்வேன். நான் யார்? யோவான் விசுவாசிகளுக்கு எழுதும் போது, தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளென அழைப்பதைக் குறிப்பிடுகின்றார் (1 யோவா. 3:1). இந்த அடையாளத்தை நாம் முற்றிலுமாக புரிந்துகொள்வதில்லை. ஆனால், நாம் இயேசுவைப் பார்க்கும் போது நாம் அவரைப் போன்றிருப்போம் (வச. 2). டோபி என்ற அந்தப் பூனையைப் போல நாமும் நமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பெற்றுக் கொள்வோம். அந்த அடையாளம் இப்பொழுது பாவத்தால் மறைந்துவிட்டது. ஆனாலும், நாம் அந்த அடையாளத்தின் ஒரு பகுதியை நாம் தேவனுடைய சாயலாக இருப்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்க முடியும். ஒரு நாள் நாம் இயேசுவைக் காணும் போது. தேவன் நமக்கென்று வைத்துள்ள அடையாளத்தை முற்றிலும் மீண்டும் பெற்றவர்களாகக் காணப்படுவோம். நாம் புதிதாக்கப்படவோம்.
அன்பும் சமாதானமும்
வல்லமையுள்ள சமாதானம், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தேவ சமாதானம் நம்முடைய ஆழ்ந்த துயரத்தின் போது நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது (பிலி. 4:7), என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. நான் இதனை சமீபத்தில் என்னுடைய தந்தையின் நினைவு ஆராதனையில் உணர்ந்தேன். ஒரு நீண்ட வரிசையில், அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி மக்கள் கடந்து வந்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டபோது, நான் என் பள்ளித் தோழனைச் சந்தித்த போது வெகுவாக சமாதானம் பெற்றேன். ஒரு வார்த்தையும் பேசாமல், அவன் என்னை அணைத்துக் கொண்டான். அவனுடைய அமைதியான புரிந்து கொள்ளல், அந்தக் கவலையும் கஷ்டமும் நிறைந்த நாளில் என்னைச் சமாதானத்தால் நிரப்பிற்று. நான் நினைத்துக் கொண்டபடி தனிமையிலில்லை என்ற வலிமையான நினைவைத் தந்தது.
சங்கீதம் 16ல் தாவீது விளக்குவது போல, நம்முடைய வாழ்வின் கடினமான சூழல்களில் தேவன் தருகின்ற சமாதானமும், மகிழ்ச்சியும் நம்முடைய சொந்த பெலத்தினால் நாம் பெற்றுக் கொண்டதல்ல. ஆனால், அது நாம் தேவனிடத்தில் பாதுகாப்பைத் தேடும் போது நாம் அநுபவிக்கும்படி அவர் நமக்குத் தருகின்ற மிகப் பெரிய ஈ.வு. (வச. 1-2).
மரணம் கொண்டு வருகின்ற வேதனைகள் சில வேளைகளில் நம்மை வழிதவறச் செய்து, ஒருவேளை அந்நிய தேவர்களிடம் கொண்டு சென்றால், அங்கு இந்த வேதனைகளைத் தள்ளிவிடலாம் என்று எண்ணுவோமாயின் அது தவறு. அது இன்னும் அதிக வேதனையையே கொண்டு வரும் (வச. 4).
நாம் இதனைப் புரிந்து கொள்ளமுடியாவிடினும், நம்பிக்கையோடு தேவனிடம் திரும்புவோம். தேவன் நமக்குத் தந்த இந்த வாழ்வு வேதனை நிறைந்ததாயிருந்தாலும் அது இன்னமும் அழகாகவும், நல்லதாகவுமேயுள்ளது (வச. 6-8). நம்முடைய வேதனையின் வழியே நம்மை அன்போடு சுமந்து சென்று, மரணம் கூட எடுத்து விட முடியாத நித்திய சமாதானம், மகிழ்ச்சிக்குள் நம்மை அழைத்துச் செல்பவரின் அன்பு கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம் (வச. 11).
ஆயத்தம் செய்யப்பட்டுள்ள நற்கிரியைகள்
வெளிநாட்டில், ஒரு தெரு வழியே நானும் என் மனைவியும் சென்று கொண்டிருந்த போது, கம்பீரமான ஒரு மனிதன் எங்களை நோக்கி வந்த போது நாங்கள் பயத்தால் பின்வாங்கினோம். எங்களுடைய விடுமுறை நாட்கள் மோசமாகப் போய் கொண்டிருந்தது. சிலர் எங்களிடம் கத்தினர், எங்களை ஏமாற்றினர், அநேக முறை அச்சுறுத்தலையும் சந்தித்தோம். ஒரு வேளை மீண்டும் எங்களை கீழே தள்ளப் போகின்றாரா? என்ன ஆச்சரியம்! அந்த மனிதன் அவருடைய பட்டணத்தின் சிறந்த காட்சியை எங்கிருந்து பார்த்தால் தெளிவாகக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டினார். பின்னர், அவர் எங்களுக்கு ஒரு சாக்லேட் கட்டியைக் கொடுத்து விட்டு சிரித்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த சிறிய செயல் அந்த நாளையும் எங்களுடைய முழுபயணத்தையும் மகிழ்ச்சியாக்கியது. எங்களை மகிழச் செய்த அந்த மனிதனையும், தேவனையும் நன்றியோடு நினைக்கச் செய்தது.
அந்த மனிதன் இரு அந்நியர்களுக்கு உதவும்படி அவரைத் தூண்டியது யார்? அவர் அந்த நாள் முழுவதும் சாக்லேட் கட்டிகளோடு, யாரிடமாகிலும் கொடுத்து ஆசிர்வதிக்கும்படி திரிந்து கொண்டிருந்தாரா?
ஒரு சிறிய நற்கிரியை, பெரிய மகிழ்ச்சியைத் தந்து, ஒருவரை தேவனுக்கு நேராக வழிநடத்த முடிகிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். வேதாகமம் நற்கிரியைகள் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது (யாக். 2:17,24). அது ஒருவேளை சவால் மிக்கதாகத் தோன்றினாலும் தேவன் நம்மை இத்தகைய காரியங்களைச் செய்யும்படி அவர் நமக்கு பெலனளிக்கிறார், நமக்கு உறுதியளிக்கின்றார். ''அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்" (எபே. 2:10).
இன்று யாரோ ஒருவருக்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் தேவையென்பதையறிந்து தேவன் நம்மை அவர்களோடு தொடர்பு கொள்ளச் செய்கின்றார். பிறருக்கு உதவும்படி நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருக்குக் கீழ்படிந்து செயல்படுதலே.
அன்பு நம்மை மாற்றும்
நான் இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் முன்பு மிகவும் ஆழமாகக் காயப்பட்டிருந்தேன். நான் மேலும் காயப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் யாரிடமும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக்கொள்ள பயந்தேன். நான் ஆலனைத் திருமணம் செய்துகொள்ளும் வரை என்னுடையத் தாயாரே எனக்கு நெருங்கிய சிநேகிதியாக இருந்தார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் என்னுடைய திருமணத்தை முறித்துக் கொள்ள இருந்த போது, பாலர் பள்ளி செல்லும் என்னுடைய குழந்தை சேவியரை தூக்கிக் கொண்டு ஆலய ஆராதனைக்குச் சென்றேன். நான் அங்கு வெளியே செல்லும் கதவண்டை உட்கார்ந்தேன். விசுவாசிப்பதற்கு பயந்தும், உதவியை எதிர்பார்த்தும்
அவலநிலையிலிருந்தேன்.
நல்ல வேளையாக, அங்கிருந்த விசுவாசிகள் முன் வந்து, எங்களுடைய குடும்பத்திற்காக ஜெபித்தனர். ஜெபத்தின் மூலமாயும், வேதத்தை வாசிப்பதன் மூலமாயும் தேவனோடு உறவை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்று கற்றுக் கொடுத்தனர். நாட்கள் சென்றபோது கிறிஸ்துவின் அன்பும், அவரைப் பின்பற்றுகின்றவர்களும், என்னை மாற்றினர்.
அந்த முதல் ஆராதனைக்குப் பின் இரண்டு வருடங்கள் கழித்து அந்த ஆலய ஆராதனையில் ஆலன் சேவியர் மற்றும் என்னை ஞானஸ்நானம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் நாங்கள் வழக்கம் போல வார இறுதியில் பேசிக் கொள்வது போன்று என் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தபோது ''நீ முற்றிலும் மாறுபட்டிருக்கின்றாய். இயேசுவைப் பற்றி மேலும் எனக்குச் சொல்" என என்னிடம் கேட்டுக் கொண்டார். சில மாதங்கள் சென்றன. அவர்களும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
இயேசு வாழ்வை மாற்றினார். இயேசுவைச் சந்திக்கும் வரை சபைகளைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த சவுலின் வாழ்வை மாற்றினார் (அப். 9:1-5). மற்றவர்கள் அவன் இயேசுவைக் குறித்து மேலும் கற்றுக் கொள்ள உதவினர் (வச. 17-19). அவனுடைய திடீர் வாழ்வு மாற்றம் அவனை ஆவியில் நிறைந்து போதனை செய்பவராக அவனை பெலப்படுத்தியது (வச. 20-22).
நாம் இயேசுவை முதலில் சந்தித்த விதம் சவுலுடையதைப் போன்று தீடீரென ஏற்பட்டதாயிருக்க அவசியமில்லை. நம்முடைய வாழ்வு மாற்றமும் வேகமானதாகவோ திடீரென ஏற்பட்டதாகவோ இருக்க முடியாது. ஆனாலும் கிறிஸ்துவின் அன்பு நம்முடைய வாழ்வை மாற்றுவதை நம்முடைய சுற்றத்தார் கவனிப்பர். காலம் செல்லும்போது நாமும் மற்றவர்களுக்கு தேவன் நமக்குச் செய்தவற்றைச் சொல்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
இருதயத்தின் அசைவுகள்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கட்தொகை அலுவலக அறிக்கைபடி, அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக பதினொன்று முதல் பன்னிரண்டு முறையாவது தங்களுடைய வாழும் இடத்தை மாற்றிக் கொள்வர். சமீபத்தில் ஓர் ஆண்டில் 28 மில்லியன் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு மற்றொரு இடத்திற்கு நகர்ந்து புதிய வீட்டில் குடியேறியுள்ளனர்.
இஸ்ரவேலரின் 40 ஆண்டுகள் வனாந்திரப்பயணத்தில், ஒரே குடும்பமாகிய ஒரு தேசத்தின் மக்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, தேவனுடைய பிரசன்னம் வழிநடத்தியது. அவர்கள் ஒரு புதிய தேசத்தைச் சுதந்தரிக்கும் நம்பிக்கையோடு பிரயாணம் செய்தனர். இந்தக் காரியம் அடிக்கடி நடந்தது. அதனைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. அந்த மிகப் பெரிய குடும்பம் திரும்பத் திரும்ப தங்கள் உடைமைகளைக் கட்டுவதும், கட்டவழிப்பதும் நடந்தேறிக் கொண்டேயிருந்தது. அவர்களுடைய உடைமைகளை மட்டுமல்ல, மேகத்திலிருந்து தேவன் மோசேயைச் சந்தித்த தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைப் பெட்டி ஆகியவற்றையும், அவற்றின் விரிப்புகளையும் கட்டிக் கொண்டுச் சென்றனர் (யாத். 25:22).
அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசு, இஸ்ரவேலரின் பிரயாண நாட்களுக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தார். ஒரு மேகத்திலிருந்து வழிநடத்துவதற்குப் பதிலாக அவரே நேரில் வந்தார். அவர், 'என்னைப் பின்பற்றி வா" (மத். 4:19) என்று சொன்ன போது மிக முக்கியமான முகவரி மாற்றம் அவர்களுடைய இருதயத்தில் ஏற்படும்படிச் செய்தார். நண்பர்களையும், எதிரிகளையும் ஒரு ரோம சிலுவையின் அடிவாரத்திற்கு வழி நடத்திச் சென்று, மேகத்தில் தோன்றிய தேவன், அவருடைய ஆசரிப்பு கூடாரத்தில் பேசிய கர்த்தர், எவ்வாறு அவர்களை மீட்கப் போகின்றாரென்பதைக் காண்பித்தார்.
தம் முகவரியை மாற்றுவது போல, இருதயத்தின் அசைவுகளும் நிலையானதல்ல. ஆனால், ஒரு நாள் நம் தந்தையின் வீட்டிலுள்ள ஜன்னல் வழியே நாம் கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, இயேசு நம்மை எத்தனை தூரம் வழிநடத்தி வந்துள்ளார் என்பதைக் காண்போம்.
நான் பார்க்க முடிந்ததெல்லாம்
ஒரு குளிர்ந்த நாளில், உறையும் பனியில், ஓர் ஏரிக்கரையில் பனியினால் மூடப்பட்ட கலங்கரை விளக்கின் அழகினை கிறிஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து இந்தக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சித்தபோது, அவளுடைய கண்ணாடி பனிப் படலத்தால் மூடப்பட்டது. அவளால் அதன் வழியே ஒன்றும் பார்க்க முடியவில்லை. எனவே அவள் தன்னுடைய கேமராவை அந்தக் கலங்கரை விளக்கிற்கு நேராகத் திருப்பி மூன்று படங்களை, வெவ்வேறு கோணங்களில் எடுத்தாள். பின்பு அவள் அந்தப் படங்களைப் பார்த்த போது தான் அவளுடைய கேமரா ''செல்பி" நிலையிலிருந்திருக்கின்றதை உணர்ந்தாள். அவள் சிரித்துக் கொண்டே, ''என்னுடைய கவனம் என்மீது, என்மீதேயிருந்திருக்கின்றது. நான் பார்க்க முடிந்ததெல்லாம் என்னையே" என்று கூறினாள். கிறிஸ்டாவின் படங்கள் என்னை அத்தகைய ஒரு தவறினைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டின. நாம் நம்மீதே கவனம் செலுத்தும் போது, தேவனுடைய திட்டத்தினைக் குறித்த பெரிய காட்சியைக் காணத் தவறிவிடுகின்றோம்.
இயேசுவின் உறவினனான யோவான் தன் மீது கவனம் செலுத்தும்படி தான் வரவில்லையென்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆரம்பத்திலிருந்தே அவன் தன்னுடைய அழைப்பு, பிறரை தேவக்குமாரனான இயேசுவிடம் திருப்புவதேயென்பதை நன்கு கண்டறிந்து கொண்டார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தன்னிடம் வரக்கண்ட யோவான், ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவா. 1:29) எனத் தெரிவிக்கின்றார். அத்தோடு, "இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்" என்றார் (வச. 31). யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து, அநேகர் இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றனர் எனத் தகவல் கொடுத்த போது, யோவான் அவர்களிடம், 'நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்... அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" (3:28-30) என்று கூறினார்.
நம்முடைய வாழ்வின் முழுகவனமும் இயேசுவின் மீதும் அவரை முழுமனதோடும் அன்பு செய்வதிலேயுமே இருக்கட்டும்.
கேட்பதற்கே செவிகள் உருவாக்கப்பட்டன
குடும்பத்தின் ஒரு நபராக நடிக்கும்படி நடிகை டயான் குருசெர்க்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. அவள் அதில் தன்னுடைய கணவனையும் குழந்தையையும் இழந்த ஓர் இளம் மனைவியாகவும், தாயாகவும் நடிக்க வேண்டும். ஆனால், நிஜ வாழ்வில் அவள் இந்த அளவுக்கு வேதனைகளை அநுபவித்ததேயில்லை. எனவே அவளால் அதனை நம்பக்கூடிய அளவுக்கு நடிக்க முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அவள் அதனை ஏற்றுக் கொண்டாள். அதற்குத் தன்னை தயாரிக்கும்படி, துயரத்தின் பள்ளத்தாக்கினை கடந்து கொண்டிருக்கும் அத்தகையோரினைக் தாங்கும்படி நடத்தப்பட்ட கூட்டங்களில் அவள் பங்கு பெற்றாள்.
அக்கூட்டத்தினர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, ஆரம்பத்தில் அவள் அவர்களுக்கு ஆலோசனைகளையும் சிந்தனையையும் கொடுத்தாள். நம்மில் அநேகரைப் போன்று அவளும் அவர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினாள். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல அவள் பேசுவதை நிறுத்தினாள். அவர்களின் பகிர்தலைக் கேட்க ஆரம்பித்தாள். உண்மையில் அப்பொழுதுதான் அவர்களோடு கடினப் பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய செவிகளைச் சாய்த்தபோதுதான் அவளால் உண்மையை உணர முடிந்தது.
இஸ்ரவேல் ஜனங்களின் மீது எரேமியாவின் குற்றச்சாட்டு என்னவெனின், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படி தங்கள் செவிகளைத் திருப்புவதில்லை. எரேமியா அவர்களை அறிவில்லாத ஜனங்கள், முட்டாள்களென கடினமான வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார் (எரே. 5:21). தேவன் தம்முடைய அன்பான வார்த்தைகளையும், அறிவுரைகளையும், ஊக்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து நம் வாழ்வில் கொடுப்பதன் மூலம் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார். நாம் கற்றுக் கொண்டு முதிர்ச்சி பெற வேண்டுமென்பதே நம் தந்தையின் ஆவல். நாம் கற்றுக்கொள்ள பயன்படுத்தவே செவிகளைத் தந்துள்ளார். இப்பொழுது கேள்வியென்னவெனில், தேவனுடைய இருதயத்தின் வாஞ்சையைத் தெரிந்துகொள்ள நம் செவிகளை நாம் பயன்படுத்துகின்றோமா? என்பதே.