தேவனால் சூழப்பட்டிருக்கிறோம்
கூட்டம் நிறைந்துள்ள ஒரு விமான நிலையத்தில், ஓர் இளம் தாய் தனிமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அவளுடைய சிறிய குழந்தை கோபத்தில் இருந்தது. அது கத்திக் கொண்டும், உதைத்துக் கொண்டும், விமானத்திற்குள் ஏற மறுத்தும், முரட்டாட்டம் பண்ணிக் கொண்டிருந்தது. தன்னால் தாங்க முடியாமல் தவித்த அந்த கர்ப்பிணியானத் தாய், கடைசியாக கைவிட்டாள். வெறுப்படைந்தவளாய் தரையில் உட்கார்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.
உடனடியாக ஆறு அல்லது ஏழு முன்னறிமுகமில்லாத பெண் பிரயாணிகள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் சூழ்ந்துகொண்டனர். தின்பண்டங்களைக் கொடுத்தனர், தண்ணீர் கொடுத்தனர், அன்போடு அணைத்துக் கொண்டனர், ஒரு குழந்தைக்கான பாடலையும் பாடினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் அந்தக் குழந்தை அமைதியாக அமர்ந்தது. அனைத்துப் பெண்களும் தங்கள் இருக்கைக்குத் திரும்பினர். அவர்கள் தாங்கள் என்ன செய்தோமென விவாதிக்கவில்லை. ஆனால், தங்களின் உதவி சரியான நேரத்தில் அந்த இளம்தாயை பெலப்படுத்தியது என்று தெரிந்துகொண்டனர்.
இந்தக் காட்சி சங்கீதம் 125ல் காட்டப்பட்டுள்ள அழகிய உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. வசனம் 2ல் 'கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்" இது சுறுசுறுப்பான எருசலேம் நகரம் எவ்வாறிருக்கும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. எருசலேம், ஒலிவமலை, சீயோன் மலை, மோரியா மலை என அநேக மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம்.
இதே போன்று தேவன் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களின் ஆத்துமாவைப் பாதுகாக்கின்றார். 'இது முதல் என்றென்றைக்கும் பாதுகாக்கின்றார். கடினமான நாட்களிலும் 'எனக்கொத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1) என்று சங்கீதக்காரன் கூறுவது போல தேவனை நோக்கிப் பார். தேவன் உறுதியான உதவிகளோடு காத்திருக்கின்றார். நிலையான நம்பிக்கையைத் தருகின்றார். அவர் மாறாத அன்புடையவர்.
என்னுடைய தந்தையை நினைக்கின்றேன்
நான் என் தந்தையைக் குறித்து நினைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு சிறந்த வெளிவேலையைச் செய்பவராக, எப்போதும்; சுத்தியலைக் கொண்டும், தோட்ட வேலையிலும், மிகச்சிறந்த கருவிகளும், சிறிய இயந்திரங்களையும் கொண்ட அறையிலிருந்து வேலை செய்வதும் தான் என் நினைவில் வருகிறது. அவருடைய கரங்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையையோ, திட்டத்தையோ செய்துகொண்டேயிருக்கும். சில வேளைகளில் ஒர் கார் நிறுத்தும் அறையை செய்துகொண்டிருப்பார். அல்லது ஒரு சிறிய மேசையைச் செய்வார், அல்லது பறவைக்கான ஒரு வீட்டை தயாரிப்பார். சில வேளைகளில் பூட்டுகளைச் சரி செய்வார், சிறிய ஆபரணங்களை வடிவமைப்பார், கண்ணாடியில் சித்திரவேலை செய்வார்.
என்னுடைய தந்தையைக் குறித்து நினைக்கும்போது, அது என்னை என்னுடைய பரலோகத் தந்தையும், படைப்பாளருமானவரை நினைக்கச் செய்கின்றது. அவரும் தன்னுடைய வேலையில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். ஆரம்பத்தில் 'தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்தினார்... அதற்கு அளவு குறித்தார்... அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" (யோபு 38:4-7) அவருடைய படைப்புகளெல்லாம் ஒரு கலைநயமிக்க வேலை, மிகக் சிறந்த வேலை. நம்மை பிரமிக்கச் செய்யும் அழகிய உலகினை அவர் படைத்தார். 'அது மிகவும் நன்றாயிருந்தது" (ஆதி. 1:31) என்று சொன்னார்.
அவருடைய அழகிய கலைப் படைப்புகளில் நீயும் நானும் உண்டு. தேவன் நம்மை மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் படைத்தார் (சங். 139:13-16). அவர் நமக்குப் பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். அவருடைய சாயலை நமக்குத் தந்து, நமக்குள்ளே இலக்கினையும், அதனை நிறைவேற்றும்படி வேலைசெய்யும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளார். அதில் இப்புவியையும் அதிலுள்ள படைப்புகளையும் ஆள்வதும் பாதுகாப்பதும் அடங்கும் (ஆதி. 1:26-28,2:15). நாம் எத்தகைய வேலை செய்தாலும் நம்முடைய வேலையிலோ, அல்லது ஓய்வுவேளையிலோ அவருக்காக முழு மனதோடு வேலைசெய்ய நமக்குத் திறமையையும் ஆற்றலையும் தருகின்றார்.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனைப் பிரியப்படுத்தும்படி செய்வோமாக.
தூசியோ அல்லது வேறெதுவோ
மிகவும் புத்திசாலியான வின்னி, அடிக்கடி சொல்வது, 'நீ பேசிக் கொண்டிருக்கும் நபர், உன் பேச்சைக் கவனிக்கவில்லையெனில், பொறுமையாயிரு. ஒருவேளை, ஏதோவொரு தூசு அல்லது துகள் அவனுடைய காதை அடைத்துக் கொண்டிருக்கலாம்."
பல ஆண்டுகளில் வின்னியிடமிருந்து நான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நீ கூறுவது அவர்களுக்கு பயனுள்ளதாகயிருந்தாலும் அதை அவர்கள் கவனித்துக் கேட்க வில்லையெனில் ஏதோ ஒன்று அவர்களைக் கேட்கவிடாமல் தடுக்கின்றது. ஒரு சிறிய துகள் அவர்கள் காதுகளை அடைக்கின்றது அல்லது வேறொரு காரணமும் இருக்கலாம். சிலருக்கு கவனிப்பதென்பது இயலாததாகிவிடுகின்றது. ஏனெனில், அவர்கள்; தங்கள் பிரச்சனைகளால் உடைந்து, வலுவிழந்து காணப்படுகின்றனர்.
இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுகின்றார். ஆனால், அவர்கள் கவனிக்கவில்லை. ஏனெனில், அவர்களின் ஆவி சோர்வடைந்து காணப்படுகின்றது. அவர்களின் வாழ்வு கடினமாயிருக்கிறது (யாத். 6:9). இஸ்ரவேலர் எகிப்தில் தங்கள் ஜீவன் கசந்து போகுமட்டும் அடிமைத்தனத்தில் கஷ்டங்களைச் சகித்தனர். இந்த கஷ்டங்களின் பலனால் சோர்வடைந்தனர். அதனாலேயே இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரைக்குச் செவிகொடுக்கவில்லை. மோசேயின் கரிசனையையும் புரிந்துகொள்ளலையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. அதனால் இஸ்ரவேலர் மோசேயின் அறிவுரையை நிராகரித்தனர் என்றும் சொல்ல முடியாது.
நாம் கூறுவதை பிறர் கவனிக்காவிடில் நாம் என்ன செய்ய வேண்டும்? அறிவாளியான வின்னியின் வார்த்தைகள் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். 'பொறுமையாயிரு" தேவன் சொல்வதென்னவெனில், 'அன்பு, நீடிய சாந்தமும் பொறுமையுள்ளது" (1 கொரி. 13:4). அது பொறுமையாய் காத்திருக்கும். தேவன் தன்னுடைய வேலையை அத்தோடு முடித்துவிடவில்லை. அவர்களுடைய துயரத்தில் நம்முடைய அன்பினாலும், ஜெபத்தினாலும் கிரியை செய்கின்றார். அவருடைய வேளை வரும்போது அவர்கள் கேட்கும்படி தேவன் அவர்களின் செவிகளைத் திறப்பார். அதுவரை பொறுமையாயிரு.
ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது
என்னுடைய சிநேகிதியும் அவளுடைய பேரக் குழந்தைகளும் நானும் ஒரு சிறிய நடை பயிற்சிக்குச் சென்றோம். அவள் குழந்தையின் தள்ளுவண்டியைத் தள்ளியபடியே நடந்தாள். தன்னுடைய நடைகளெல்லாம் வீணாகின்றன என்றாள். ஏனெனில், தான் கையில் அணிந்திருக்கும் கணிப்பானில் இவை எண்ணப்படுவதில்லை. தான் கைகளை விசி நடக்கவில்லையாதலால், அவை எண்ணப்படுவதில்லை என்றாள். ஆனால், இந்த நடைகளெல்லாம் அவளுடைய உடல் சுகாதாரத்திற்கு உதவுமே என்றேன். 'ஆம்" என்று பதிலளித்து, சிரித்தாள். 'ஆனால், நான் அந்த எலக்ட்ரானிக் கருவியில் தங்க நட்சத்திரம் பெற விரும்புகிறேன்" என்றாள்.
அவளுடைய எண்ணத்தை நான் புரிந்துகொண்டேன்! ஆனால், நாம் ஏதோ ஒன்றினைக் செய்யும்போது அதற்கான விளைவு உடனடியாகக் கிடைக்காவிடில், அது நம் இருதயத்தைச் சோர்வடையச் செய்யும். ஆனாலும் பலாபலன்கள் எப்பொழுதும், உடனடியாகக் கிடைப்பதில்லையே அல்லது உடனடியாகத் தெரிவதில்லையே.
அப்படியானால், நாம் செய்யும் நல்ல காரியங்கள், அதாவது ஒரு நண்பனுக்கு உதவுவது, அல்லது அறியாத ஒருவரிடம் கனிவாக நடந்துகொள்ளல் போன்றவை பயனற்றது என நினைக்கத் தோன்றுமல்லவா! கலாத்தியாவிலுள்ள சபைக்கு பவுல் விளக்கும் போது, 'மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலா. 6:7) என்கின்றார். எனவே நாம், 'நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக் நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (வச. 9). நன்மை செய்வது மட்டும் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழியல்ல. நாம் அறுவடை செய்வது இவ்வுலகிலோ அல்லது பரலோகத்திலோ என்பதைக் குறித்து வேதாகமம் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், நாம் உறுதியாக சொல்லலாம், 'நாம் ஓர் ஆசீர்வாதத்தை அறுவடை செய்வோம்" (வச. 9).
நன்மை செய்வது கடினம் தான். ஏனெனில், அதற்கான பலனை நாம் எப்பொழுது அறுவடை செய்வோம் என்பது தெரியாது. ஆனால், என்னுடைய சிநேகிதி நடப்பதால் உடல் வலிமையைப் பெற்றுக்கொள்ள முடிவதால் நாமும் நன்மையானவற்றை தொடர்ந்து செய்வோம். ஏனெனில், ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது.
ஆவியில் பாடுங்கள்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வெல்ஷ் எழுப்புதல் கூட்டங்களின் போது, தான் கண்டவற்றை வேத போதகரும் எழுத்தாளருமான பு. கேம்ப்பெல் மோர்கன் எழுதுகின்றார். தேவனைப் போற்றும் பாடல்களின் அலை ஓசையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலும் தேவப் பிரசன்னமும் இருந்ததை நம்புகின்றார். அந்தக் கூட்டங்களில் இசையின் மூலம் அனைவரையும் ஒருமுகப்படுத்தி, சிலரைத் தானாக ஜெபிக்கவும், பாவ அறிக்கை பண்ணவும், தானாகப் பாடவும் ஊக்குவித்ததை மோர்கன் கண்டதாக எழுதுகின்றார். யாராகிலும் அங்கு தங்களுடைய உணர்வுகளால் உந்தப்பட்டு நீண்ட நேரம் ஜெபித்தாலோ அல்லது மற்றவர்களோடு இசைந்திராமல் பேசினாலோ மற்றொருவர் மெல்லிய குரலில் பாட ஆரம்பிக்கின்றார். மற்றவர்கள் அப்பாடலோடு இணைந்துகொள்கின்றனர். மற்றவர்கள் அப்பாடலின் பல்லவி வரும்போது உரத்த குரலில் பாட ஆரம்பிக்கின்றனர். மற்ற சப்தங்களெல்லாம் அதில் அமிழ்ந்து விடுகின்றது.
மோர்கன் விளக்குகின்ற, இத்தகைய பாடல் மூலம் துதித்தலை வேதாகமத்திலும் காண்கின்றோம். அங்கும் இசை முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியைக் கொண்டாட இசை பயன்பட்டது (யாத். 15:1-21). ஆலய பிரதிஷ்டையின் போது தேவனை ஆராதிக்கவும்
(2 நாளா. 5:12-14), இராணுவத்தின் யுத்த முறைகளில் ஒரு பகுதியாகவும் (20:21-23) இசை பயன்படுத்தப்பட்டது. வேதாகமத்தின் மையத்திலுள்ள புத்தகமான சங்கீதம் பாடல்களால் நிறைந்த புத்தகம் (சங். 1-150). புதிய ஏற்பாட்டில், பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதங்களிலும் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை விளக்குகின்றார். 'ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம்பண்ணுங்கள்" என்கின்றார் (எபே. 5:18-19).
போராட்டங்களிலும், ஆராதனையிலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் விசுவாசத்தின் பாடல்கள் ஒருமனத்தைக் கொண்டுவர உதவுகின்றன. பழைய புதிய வகை இசையின் மூலம் நாம் மேலும் மேலும் புதுப்பிக்கப்படுகின்றோம். வல்லமையாலும், அதிகாரத்தாலுமல்ல, ஆவியினாலும் தேவனைப் போற்றும் பாடல்களாலுமே இது நடக்கின்றது.
மேகங்களால் மறைக்கப்பட்டது
மிக அபூர்வமான நிலவின் காட்சி, நவம்பர் மாதம் 2016ல் தெரிந்தது. நிலா தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று பூமிக்கு மிக அருகில் வந்ததால் அது மிகப் பெரியதாகவும் மிகப் பிரகாசமானதாகவும் தோன்றியது. கடந்த அறுபது ஆண்டுகளுக்குப்பின் காணக் கிடைத்த ஓர் அரிய காட்சி. ஆனால், நான் இக்காட்சியைக் கரிய மேகங்களால் சூழப்பட்டதால் வானத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், வேறு இடங்களிலிருந்து இக்காட்சியைக் கண்ட என்னுடைய நண்பர்களின் புகைப்படங்கள் மூலம் கண்டு கொண்டேன். நான் வானத்தை உற்று நோக்கினேன். மேகங்களுக்குப் பின்னால் இந்த மிகப் பெரிய நிலா இருக்கின்றது என்பதை நான் நம்பவேண்டியதாயிற்று.
கொரிந்து பட்டணத்தின் சபைகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது அவர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தின் மத்தியில் காணப்படாத நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையை விடாதிருக்கக் கேட்கின்றார். மேலும் 'அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" எனக் கூறுகின்றார் (2 கொரி. 4:17). எனவே அவர்கள் தங்கள் கண்களை, ''காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கித்" திருப்புமாறும் ''காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்" (வச. 18) எனவும் கூறுகின்றார். கொரிந்து சபையினரின் விசுவாசம் வளர வேண்டுமென பவுல் வாஞ்சிக்கின்றார். அவர்கள் துயரத்தை அநுபவிப்பதால். தேவன் மீது நம்பிக்கையோடிருக்க விரும்புகின்றார். அவர்களால் தேவனைக் காண முடியாவிட்டாலும் தேவன் அவர்களை நாளுக்கு நாள் புதிதாக்குகின்றதை நம்பும்படி கேட்கின்றார் (வச. 16).
நான் அன்று அந்த மேகங்களினூடே பார்த்தபோது காணப்படாத ஒரு பெரிய நிலாவை எப்படி நம்பினேனோ, அப்படியே தேவன் காணப்படாதவராகவும் ஆனால் நித்தியமானவராகவும் இருக்கின்றார். தேவன் என்னை விட்டு மிக தூரத்தில் இருக்கின்றார் என்று நான் நினைக்கத் தோன்றும்போதெல்லாம் நான் என் கண்களை காணப்படாத நித்தியமானவைகளின் மீது வைத்துக் கொள்வேன்.
அநியாயத்தின் பாரத்தை சுமத்தல்
குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, 38 வருடங்களுக்குப் பின், 2018 ஜனவரி 30 ஆம் நாள் மால்கம் அலெக்சாண்டர் சிறைச்சாலையை விட்டு சுதந்திர மனிதனாக வெளியே நடந்தார். டி.என்.எ சாட்சிகள் அலெக்சாண்டரை குற்றவாளியல்லவென்று காண்பிக்க, தொடர்ந்து தான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டரின் வாக்குகளின் மத்தியில் வெளியான அனைத்து நீதிமன்ற செயல்களும் அவருக்கு எதிராக அநீதியாக தீர்ப்பிட்டன. குற்றவாளியின் சார்பாக செயல்பட்ட திறமையற்ற அரசு வழக்கறிஞர்கள், ஜோடிக்கப்பட்ட சாட்சிகள், சந்தேகத்தைக் கொண்டுவரும் விசாரனை யுக்திகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதனை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் சிறையிலடைத்தது. கடைசியாக விடுதலைப்பெற்று வெளிவந்த போது, அலெக்சாண்டர் அளவிடமுடியாத கருணையைக் காண்பித்தார். 'நீ கோபத்தோடிருக்கக்கூடாது. இன்னும் கோபத்தோடிருக்க போதிய காலமில்லை" என கூறிக்கொண்டார்.
அலெக்சாண்டரின் வார்த்தைகள் ஆழ்ந்த கருணையின் வார்த்தைகள். அநீதி அவருடைய முப்பதெட்டு ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டது. அவருடைய பாரம்பரியத்தை கொன்றுவிட்டது. அப்படியாயின் நாம் கோபத்தோடும், வெறியோடுமல்லவா இருக்கவேண்டும். அலெக்சாண்டர் தன்மீது திணிக்கப்பட்ட குற்றங்களை சுமந்து, உள்ளம் உடைக்கப்பட்டவராக அநேக ஆண்டுகளைக் கழிக்க நேரிட்ட போதிலும், அவர் தீமையினால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய முழு பெலத்தையும் பழிவாங்கும்படி செலவிடாமல், பேதுரு கூறிய நிலையை வெளிப்படுத்துகின்றார். 'தீமைக்கு தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்" என்பதை செயலில் காட்டினார் (1 பேது. 3:9).
வேதாகமம் இன்னும் ஒருபடி மேலேயே கூறுகின்றது. பழிவாங்கலுக்குப் பதிலாக ஆசீர்வதியுங்கள் (வச. 9) எனக் கூறுகின்றது. நமக்கு அநீதியாக தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பையும், நல்வாழ்விற்கான நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் தீய செயல்களை காரணம் காட்டாமல், நம்முடைய குற்றங்களை இயேசு சிலுவையில் சுமந்ததாலேயே நாம் தேவ இரக்கத்தைப் பெற்றுள்ளோம். நாமும் அந்த இரக்கத்தைப் பிறருக்குக் காட்டுவோம். நமக்கு அநீதியிழைத்தவருக்கும் காட்டுவோம்.
என்னுடைய கரத்தால், உனக்காக செய்யப்பட்டது
என்னுடைய பாட்டியம்மா ஒரு மிகச்சிறந்த தையல்காரி. அவளுடைய சொந்த இடமான டெக்ஸாஸில் அநேக போட்டிகளில் வெற்றி பெற்றவர். அநேக முக்கிய கொண்டாட்டங்களின் போது தன்னுடைய கையால் தைக்கப்பட்ட உடைகளைப் பரிசாக வழங்குவது அவர்களது வழக்கம். என்னுடைய உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பின் போது, சிவப்பு நிற, உயர்ரக கம்பளி நூலால் தைக்கப்பட்ட குளிர்கால ஆடையை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். நீலம் கலந்த பச்சை நிற மெத்தையை என் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கலை அம்சமிக்க பகுதியிலும் அவளுடைய பெயர் பொறிக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருப்பதைக் காண்பேன் 'உனக்காக, என் கரத்தால் செய்யப்பட்டது - முன்னா" என்று எழுதப்பட்டிருக்கும். தையலால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் பாட்டியம்மா என்மீது வைத்திருக்கும் அன்பினைக் காட்டும். மேலும் அவள் என்னுடைய எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டும் வல்லமையுள்ள வார்த்தைகளாக இருக்கும்.
எபேசு சபை மக்களுக்கு பவுல் எழுதும்போது, நாம் இவ்வுலகில் வாழும் நோக்கம் என்னவெனில், 'இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு நற்கிரியைகளைச் செய்கிறதற்கு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்" என்கின்றார் (2:10). இங்கு செய்கை என்பது ஒரு கலைஞனின் கைவினை அல்லது மிகச்சிறந்த படைப்பு என குறிப்பிடப்படுகிறது. பவுல் இதனை விளக்கும்போது, தேவன் நம்மை அவருடைய கைவினையாகப் படைத்து, நாமும் நற்கிரியைகளைச் செய்து, இயேசுவோடு நமக்குள்ள மீட்கப்பட்ட உறவின் வெளிப்பாடாகத் திகழவேண்டும் என்கின்றார். இந்த உலகில் நாம் அவருடைய மகிமைக்கென உருவாக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சொந்த நற்கிரியைகளால் நம்மை இரட்சிக்க முடியாது. ஆனால், தேவனுடைய கரம், அவருடைய நோக்கத்திற்காக நம்மை உருவாக்கியுள்ளதால் நாமும் பிறரை தேவனுடைய பெரிய அன்பண்டை கொண்டுவர, அவர் நம்மை பயன்படுத்த முடியும்.
என்னுடைய முன்னா தையல் வேலையில் முனைந்து, அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினையும் அதன் தீவிரத்தையும் எனக்குக் காட்டியபோது, நானும் இவ்வுலகில் எனக்குரிய நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. தேவனுடைய விரல்கள் என் நாட்களின் அழகினை சரிப்படுத்தி உருவாக்கினபோது தேவனுடைய கரம், அவருடைய அன்பையும், நோக்கத்தையும் என் இருதயத்தில் தைத்து வைத்தார். எனவே, நான் அவருடைய அன்பை அறிந்துகொள்ளவும் முடிகிறது. அவருடைய கைவினையை பிறருக்குக் காட்டவும் முடிகிறது.
புலம்பலிலிருந்து ஆராதனைக்கு
கிம், 2013ல் மார்பகப் புற்றுநோயோடு போராடத் தொடங்கினாள். அவளுடைய சிகிச்சை முடிந்து நான்கு நாட்கள் கழித்து மருத்துவர்கள், நுரையீரலிலும் வியாதியிருப்பதைக் கண்டறிந்தனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளே அவளால் வாழமுடியும் எனவும் தெரிவித்தனர். முதல் ஆண்டு முழுவதும் அவள் வேதனைப்பட்டாள். தன்னுடைய உணர்வுகளை தேவனுக்குத் தெரியப்படுத்தி, ஜெபத்தில் அழுதாள். 2015ல் நான் கிம்மைச் சந்தித்தபோது அவள் தன் வாழ்வை தேவனுடைய கரத்தில் விட்டிருந்தாள். அவளிடமிருந்து மகிழ்ச்சியும், சமாதானமும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. கடினமான நாட்களை அவள் கடந்தபோதிலும், தேவன் அவளுடைய இருதயத்தை உடையச் செய்யும் வேதனைகளை அழகிய, நம்பிக்கையோடு கூடிய துதிகளைக் கொண்ட சாட்சியாக மாற்றியிருந்தார். அவள் மற்றவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுப்பவளாக மாறியிருந்தாள்.
நாம் பயங்கரமான சூழலிலிருந்தாலும் தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த நடனமாக மாற்றக் கூடியவர். அவருடைய குணமாக்கல், நாம் எதிர்பார்க்கின்ற அல்லது நாம் நம்புகின்றபடி இல்லையெனினும் தேவனுடைய வழிகளின் மீது நாம் உறுதியாயிருக்கலாம் (சங். 30:1-3). நம்முடைய பாதையில் எவ்வளவு கண்ணீர் சிந்தப்பட்டிருந்தாலும் நாம் அவரைப் போற்றுவதற்கு எண்ணிலடங்காத நன்மைகளைப் பெற்றுள்ளோம் (வச. 4). அவர் நம்முடைய உறுதியான நம்பிக்கையைக் காத்துக் கொண்டபடியால் அவரில் மகிழ்ந்திருப்போம் (வச. 5-7). அவருடைய இரக்கத்திற்காக கதறுவோம் (வச. 8-10). என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக எங்களுடைய அழுகையை நீக்கி மகிழ்ச்சியினால் நிறையப் பண்ணினீர். நான் எத்தகைய சூழலிலிருந்தாலும் தேவனாகிய கர்த்தரே என் அழுகையை களிப்பாக மாற்ற வல்லவர் (வச. 11-12).
நம்முடைய இரக்கத்தின் தேவன் நம்முடைய துயரத்தில் ஆறுதல் தந்து, நம்மைச் சமாதானத்தால் மூடி, நம்மை இரக்கத்தால் நிறைத்து மற்றவர்களுக்கு இரக்கத்தைக் கொடுக்கும்படி நம்மை மாற்றுவார். நம்மீது அன்புள்ள நம்முடைய உண்மை தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த களிப்பாகவும், உள்ளம் நிறைந்த நம்பிக்கையையும், துதியையும் கொண்ட மகிழ்ச்சியோடு கூடிய நடனமாகவும் மாற்றுகின்றவர்.