எனக்கு பத்தொன்பது வயதானபோது, என்னிடம் அலைபேசி இல்லாமலிருந்தும், அம்மாவைவிட்டு எழுநூறு மைல்களுக்கப்பால் சென்றுவிட்டேன். ஒரு நாள் காலை, சில சிறு வேலைகளினிமித்தம் மிக சீக்கிரமாகவே நான் வெளியே வந்து விட்டமையால், எனக்கு எப்பொழுதும் வரும் தொலைபேசி அழைப்புகளை மறந்துவிட்டேன். ஒரு நாளும் என் அம்மாவின் அழைப்பை நான் தவறவிட்டதில்லை. என்னுடைய தாயார் திரும்பத் திரும்ப அழைத்தும், ‘பிஸி’ என்ற பதிலே வந்ததால் மிகவும் கவலையில் இருந்திருக்கின்றார். அன்று இரவு, இரண்டு காவல்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்தனர். என்னிடமிருந்து எந்த பதிலும் வராததால் அவர்கள் காவல்துறையை அணுகி என்னைக் கண்டுபிடிக்குமாறு கூறியிருக்கின்றார். ஒரு அதிகாரி என்னிடம், “அன்பு என்றும் உனக்காக காத்திருக்கும் என்பதும் ஓர் ஆசீர்வாதம்” என்றார்.

நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து என் தாயாரை அழைத்த போதுதான், நான் தொலைபேசியை சரியாக வைக்காமலிருந்திருக்கின்றேனென புரிந்து கொண்டேன். நான் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்தபோது, அவர்கள் நான் காணாமல் போய்விட்டதாக தெரிவித்த உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நல்ல செய்தியைத் தெரிவிக்க வேண்டியுள்ளது என்றார்கள். என்னுடைய தாயார் சற்று அதிகமாகவே செயல்பட்டிருக்கின்றார்கள் என நினைத்தவாறே தொலைபேசியை வைத்தேன். எத்தனை அன்பாயிருக்கிறார் என்று நினைத்தபோது, அது நல்லதாகவே தோன்றியது.

தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை வேதாகமம் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கின்றது. அவரை விட்டு, அலைந்து திரிகின்ற அவருடைய பிள்ளைகளை மனந்தளராமல் அழைத்துக் கொண்டேயிருக்கின்றார். ஒரு நல்ல மேய்ப்பனைப்போல அவர் நம்மீது கரிசனையுடன், காணாமல் போல ஆட்டைப்போல நம்மைத் தேடி அலைகின்றார். நம்மை விலையேறப் பெற்றவர்களாகவும், தன் நேசப்பிள்ளைகளாகவும் கருதுகின்றார் (லூக். 15:1-7).

நம்மீது அவர் வைத்துள்ள அன்பு ஒரு போதும் நின்று போவதில்லை. நாம் அவரிடம் திரும்பி வந்து சேரும் வரை நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றார். யாரெல்லாம் இன்னும் தேவனுடைய அன்பைப் பெற்றுக் கொள்ளவில்லையோ. அவர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம். தேவனும் (அன்பு) அவர்களை அன்போடு பார்ப்பதை விட்டுவிடவில்லை.