Archives: அக்டோபர் 2020

குச்சிகளும் செங்கற்களும் தேவனும்

அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் தேவன் அவர்களை என்ன செய்ய அழைகிக்கிறார் என்ற கேள்வியோடு  ஜெபித்த பிறகு, மார்க்கும் நீனாவும் அவர்கள் நகர்ப்புற மையத்திற்கு செல்வது தான் சரி என்று தீர்மானித்தனர். அவர்கள் ஒரு காலியான வீட்டை வாங்கினர். வீடு  புதுப்பித்தல் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையிலே புயல் வந்தது. மார்க் எனக்கு இவ்வாறு ஒரு உரை செய்தியில் எழுதினார்: “ எங்கள் நகரம் வழியாக பாய்ந்த புயல், எங்களுடைய  புதுப்பித்தல் வேலையை தகர்த்தெரிந்தது. வெறும் குச்சிகளும் மற்றும் செங்கற்களும் தான் நிற்கின்றன. தேவன் ஏதோவொன்றைக் திட்டம் கொண்டிருக்கிறார்போலும்” 

கட்டுப்படுத்த முடியாத புயல்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கும், வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும்.  துரதிர்ஷ்டத்தின் மத்தியில் நாம் தேவனை நோக்கிக்கொண்டிருப்பது தான்  பிழைக்க ஒரே  வழி. 

யோபின் வாழ்க்கையில் வானிலையால் ஏற்பட்ட பேரழிவு, சொத்து இழப்பு மற்றும் பிள்ளைகளின் இறப்பு
(யோபு 1:19) அவருடைய வாழ்வில் அவர் சந்தித்த அதிர்ச்சியாகும். அதற்கு முன் மூன்று தூதர்கள் துற்செய்திகளைக் கொண்டு வந்தார்கள் (வச. 13-17).

எந்த ஒரு நாளிலும், விருந்தில் இருந்து வருத்தத்திற்கு, கொண்டாட்டத்திலிருந்து மரணத்திற்கு ஊடே நாம் செல்ல கூடும். நம் வாழ்க்கையை துரிதமாகவே  - நிதி, உறவு, உடல், உணர்ச்சி, ஆன்மீகம் ரீதியில் - வெறும்  “குச்சிகள் மற்றும் செங்கற்கள் ஆகலாம். ஆனால் கடவுள் எந்த புயலையும் விட வலிமையானவர். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும், யோபைபோல  “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக்கூடிய விசுவாச பக்குவம் வேண்டும்.” (வச. 21).

அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தேவை

என்னுடைய புது மேற்பார்வையாளருடைய அறைக்குள் நான் நுழையும் போது சற்றே பயந்து தயக்கம் கொண்டேன். ஏனென்றால் பழைய மேற்பார்வையாளர் கடினமான குணம் உள்ளவர். அடிக்கடி அவருக்கு கீழ் வேலை செய்கிறவர்களை அழ வைத்தார். புதிதாக வந்தவர் எப்பேற்பட்டவரோ என்று யோசித்துக்கொண்டே அந்த அறையில் நுழைந்தேன். அவர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றபோது என்னுடைய பயங்கள் நீங்கியன; என்னுடைய அனுபவங்களை அவர் விசாரித்து கனிவாக பேசினார். அவர் உண்மையிலேயே கரிசனை கொண்டவர் என்று நான் அறிந்துகொண்டேன். இயேசுவின் மேல் விசுவாசம் கொண்ட  அவர் எனக்கு நண்பரும், ஊக்குவிப்பவரும், குருவுமாக ஆனார்.

அப்போஸ்தலர் பவுல் இவ்விதமாக “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு” (தீத்து 1:1) ஆவிக்குரிய குரு. அவனுக்கு எழுதின நிருபத்தில் அவன் சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1),  “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக”. (வ 7-8)  என்கிறார். அதனால் தீத்து அவருடைய “சகோதரனும்,கூட்டாளியும், உடன்வேலையாளுமாக (2 கொரி. 2:13; 8:23) கருதப்பட்டான்.

நம்மில் அநேகர்  - ஒரு ஆசிரியர், பயிற்சியாளர், தாத்தா, இளைஞர் தலைவர் அல்லது போதகர் - இவர்கள் மூலமாக அறிவு, ஞானம் ஊக்கம், தேவன் மேல் விசுவாசம் இவைகளில் வளர்ந்திருக்கிறோம்.  இயேசுவுடன் பயணிக்கும்போது நீங்கள்  கற்றுக்கொண்ட ஆவிக்குரிய படங்களால் யார் பயன் பெறலாம்.

ஒரு பாரஊர்தி (truck) ஓட்டுநரின் கரங்கள்

என்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும்  என்னுடைய அப்பாதான்.  இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.

நான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது  உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா? அதையும்  நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது?” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு  இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..

இந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்களை போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை  ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.

இது யாருக்காக?

அந்த காட்சி என்னை சத்தமாகவே சிரிக்க செய்தது. சாலையின் இருபுறமும் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வண்ணப்பிரதிகளை எறிந்துகொண்டு, கட்சித் தலைவர் வருகையை எதிர்நோக்கி மக்கள் கூட்டம் பெருகிற்று.  அப்பொழுது சாலையின் நடுவே ஒரு தெரு நாய்க்குட்டி மெதுவாக நடந்து போனது. அங்கு எழும்பின ஆரவாரம் எல்லாம் தனக்கே என்று புன்னகை செய்ததுபோல எனக்கு பட்டது. 

நாய்க்குட்டி இவ்வாறாக நடந்துகொண்டது ஒரு விதத்தில் அழகாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய புகழ்ச்சியை நாம் கடத்திக் கொள்வது நம்மையே விழச்செய்யும். தாவீது இதை அறிந்திருந்தான்; தன்னுடைய பெலசாலிகள் தம்முயிரை துச்சமென்றெண்ணி கொண்டுவந்த தண்ணீரை அவன் குடிக்க மறுத்தான். பெத்லெகெமிலிருந்த அந்த கிணற்றிலிருந்து யாராவது குடிக்க நீர் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்று அவன் ஏறக்குறைய தனக்குள் சொல்லிக் கொண்டதை  அவனுடைய மூன்று பலசாலிகள் உண்மையாக எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய அணிகளைத் தாண்டி தண்ணீர் மொண்டு கொண்டுவந்தனர். அதைக் கண்டு உணர்ச்சிவசமான தாவீது அதை குடிக்க மறுத்தான். அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். (2 சாமு. 23:16)

கனத்தையும் துதியையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம்  என்பது நம்மை குறித்து அதிகம் சொல்லும். ஆண்டவருக்கு மகிமை செலுத்தப்படும் போது குறுக்கிடாதே. அந்த அணிவகுப்பு நமக்கு அல்ல. நம்மை யாராவது கௌரவித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி இயேசுவுக்கே மகிமை செலுத்துங்கள்  அந்த “தண்ணீர்” நமக்கல்ல. துதி செலுத்திய பின் அதை ஆண்டவருக்கு முன்பாக ஊற்றி விடுங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.