ஆறுதலின் இன்னொரு பக்கம்
“என்னுடைய ஜனத்தை ஆறுதல் படுத்துங்கள்” என்பது எங்கள் முகாமின் தலைப்பு. முகாமிற்கு வந்த ஒவ்வொரு பிரசங்கியாரும் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளையே பிரசங்கித்தனர். ஆனால் கடைசியாக பேசிய பிரசங்கியார் முற்றிலும் வேறு தொனியில் பேசினார். அவர் “உறக்கத்திலிருந்து எழுந்திருங்கள்” என்ற தலைப்பின் கீழ் ஏரேமியா 7:1-11ம் வசனங்களிலிருந்து போதித்தார். அன்போடு, ஆனால் அதே சமயத்தில் வார்த்தை ஜாலமின்றி, கண் விழித்து பாவத்திலிருந்து திரும்பும்படி அறைகூவல் விடுத்தார்.
“நான் கிறிஸ்தவன், தேவன் என்னை நேசிக்கிறார், எனக்கு பயமேதுமில்லை என்று பெருமை பாராட்டுகிறோம், ஆனால் நாம் எல்லா வித தீமையையும் செய்கிறோம். தேவனுடைய கிருபைக்குப்பின் ஒளிந்து கொண்டு இரகசிய பாவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள்” என்று ஏரேமியா தீர்க்கதரிசி உரைப்பது போல அறிவுரைத்தார்.
அவர் எங்கள் மேல் கரிசனையுள்ளவர் என்று நாங்கள் அறிவோம். தேவன் அன்பானவர் தான், ஆனாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே! (எபி. 12:29 பார்க்கவும்) என்று எங்கள் ஏரேமியா இன்று உரைத்த பொழுது எங்கள் நாற்காலிகளில் உட்காரமுடியாமல் நாங்கள் சங்கடத்தில் நெளிந்தோம். தேவன் பாவத்தை பாராது போல இருப்பவர் அல்ல.
“நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? (7:9-10) என்று தன் ஜனத்தைப் பார்த்து ஏரேமியா தீர்க்கதரிசி கேள்வி எழுப்பினார்.
“உறக்கத்திலிருந்து எழுந்திருங்கள்” என்னும் இவருடைய தலைப்பு, தேவனுடைய ஆறுதலின் இன்னொரு பக்கம். மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் கசப்பான மூலிகை போல, இவருடைய வார்த்தைகள் ஆவிக்குரிய நோய் தீர்க்கும் நல் மருந்தாக இருக்கிறது.
கடுமையான வார்த்தைகளை எதிர்கொள்ளும் பொழுது, அதைக் கேளாமல் அகன்று போவதை விட, அதின் சுகமளிக்கும் தன்மைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது நலமாயிருக்கும்.
ஒரு சிறிய தூக்கம்
முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்காட்லாண்ட் (Scottland) போதகர், ஹென்றி டர்பன்வில்லே (Henry Durbanville) தங்கள் தேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு வயதான தாயாரைப்பற்றி ஓர் கதை கூறினார். அப்பெண்மணி எடின்பர்க் (Edinburgh) நகரத்தை காண வேண்டும் என மிகவும் விரும்பினார். ஆனால், அங்கு செல்ல வேண்டுமானால், ரயில் வண்டியில் ஒரு நீண்ட இருண்ட சுரங்க பாதையை கடந்து செல்ல வேண்டும் என்பதை எண்ணி அப்பயணத்தை தவிர்த்து வந்தார்.
ஆனால் ஒரு நாள் எடின்பர்க் (Edinburgh) செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரயில் வண்டி நகரத்தை நோக்கி செல்லச் செல்ல அவருடைய பதற்றம் கூடியது. ஆனால், ரயில் சுரங்கப்பாதையை கடக்கும் முன்பு கவலையுற்றதின் களைப்பினால் உறங்கிப் போனார். அவர் கண் விழித்த பொழுது நகரத்தை அடைந்து விட்டார்!
நம்மில் ஒரு சிலர் மரணத்தை காணாமல் இருக்கக் கூடும். இயேசு திரும்ப வரும்பொழுது, நாம் உயிரோடு இருப்போமானால், அவரை “மேகங்கள்மேல்” எதிர்கொள்வோம்
(1 தெச. 4:13-18). ஆனால் நம்மில் அநேகர் மரணத்தை ருசிபார்த்து பரலோகம் செல்வோம். இந்த காரியம் அநேகருக்கு மிகப்பெரியப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மரண வழி மிகவும் கடினமாக இருக்கும் என நினைத்து கலங்குகிறோம்.
ஆனால், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அளித்த உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாய், இந்த பூமியிலே நாம் கண்மூடி, கண் விழிக்கும் பொழுது தேவ பிரசன்னத்திலே இருப்போம் என்பதால், இளைப்பாறக்கடவோம். “ஒரு சிறு உறக்கத்திற்கு பின் நித்தியத்திலே கண் விழிப்போம்” என ஜான் டான் (John Donne) கூறியுள்ளார்.
வெளிச்சத்தில் ஜீவித்தல்
அன்று காலை நேரம் இருளாயிருந்தது. சற்று தாழ கரு மேகங்கள் வானத்தை நிறைத்திருந்தன. ஆகவே சுற்றுப்புறம் சற்று மங்கியே காணப்பட்டதால், நான் புத்தகம் படிக்க மின் விளக்கை உபயோகிக்க வேண்டியிருந்தது. நான் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த அறை முழுவதும் வெளிச்சம் உண்டாயிற்று. காற்று அந்த கரு மேகங்களை கிழக்கு நோக்கி தள்ளச் செய்து, வானத்தை தெளிவுறச் செய்து, சூரியன் பிரகாசிக்கும்படி செய்ததை கண்டேன்.
அந்த அருமையான காட்சியை நன்கு கண்டுகளிக்க நான் ஜன்னலருகே சென்ற பொழுது, “இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” (1 யோவா. 2:8) என்ற வசனம் என் நினைவுக்கு வந்தது. விசுவாசிகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு அப்போஸ்தலனாகிய யோவான் அவர்களுக்கு இதை எழுதினார். பிறரை வெறுக்கிறவன் இருளிலே சுற்றித்திரிகிறான் என்று வேறுபடுத்தி காண்பிக்கிறார். வெறுப்பு நம்மை திசை விலகி போகச் செய்யும். நல் வழியிலே நடக்க வேண்டிய உணர்வை அது நம்மை விட்டு அகற்றிவிடும்.
மற்றவர்களை நேசிப்பது சுலபமானது அல்ல. ஆனாலும் தேவனின் அன்பிலும், ஒளியிலும் ஆழ்ந்த தொடர்பு வைத்திருக்க, விரக்தி, மன்னிப்பு மற்றும் உண்மை ஆகியவை பங்களிக்கிறது என்பதை ஜன்னல் வழியாய் பார்க்கும் பொழுது நினைவுறுத்தப்பட்டேன். வெறுப்பிற்கு பதில் அன்பை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது, தேவனோடு உள்ள நம்முடைய உறவையும், அவருடைய வெளிச்சத்தையும் நாம் இந்த உலகிற்குக் காண்பிக்கிறோம். “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவா. 1:5).
நல்ல செய்தி!
இணையதளம், தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற சாதனங்கள் மூலம் உலகச் செய்திகள் நம்மை தாக்குகின்றன. பெரும்பாலான செய்தி குற்றம், தீவிரவாதம், போர் மற்றும் பொருளாதார பிரச்சனைகளையே விவரிப்பதாக இருக்கிறது. ஆனாலும், ஒரு மருத்துவ சாதனை அல்லது போரினால் ஏற்பட்ட வடுகள் நிறைந்த இடங்களில் சமாதானத்திற்கேதுவான நடவடிக்கைகள் போன்ற நல்ல செய்திகளும், துயரமும், விரக்தியுமான, இருளான நேரங்களில் படையெடுத்து வருகின்றன.
பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சோர்வுற்றிருந்த ஜனங்களுக்கு பெரிதான நம்பிக்கையை கொண்டு வந்த இரண்டு மனிதர்களைப் பற்றி வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
இரக்கமற்ற ஒரு வல்லமையான தேசத்தை பார்த்து வருகிற தேவனுடைய நியாயத்தீர்ப்பை விவரிக்கும் பொழுது, “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது” (வச. 1:15) என்று நாகூம் கூறினார். அச்செய்தி கொடுமையினால் ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்தது.
“சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா. 52:7) என்று ஏசாயா புத்தகத்திலும் அதற்கொத்த வார்த்தைகளை காணலாம்.
முதல் கிறிஸ்துமஸ் அன்று தேவதூதர் மேய்ப்பர்களைப் பார்த்து, “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11). அவரே உங்கள் மேசியா! என்று கூறிய பொழுது, நாகூம் மற்றும் ஏசாயாவின் நம்பிக்கையளிக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள் இறுதியாக நிறைவேறிற்று. நம் வாழ்வில் இதுவரையில் கூறப்பட்ட செய்திகளிலே அதிமுக்கியமான தலைப்புச்செய்தி-இரட்சகராகிய கிறிஸ்து பிறந்துள்ளார் என்பதே!
பணம்
என்னுடைய உத்தியோகத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு சேவையாகவே கருதினேன். அப்பொழுது நல்ல சம்பள உயர்வுடன் கூடிய ஒரு வேலையை வேறு ஒரு நிறுவணம் எனக்கு வழங்கியது. அந்த வேலையின் மூலம் நிச்சயமாக என்னுடைய குடும்பம் பொருளாதார ரீதியிலே பயன் பெறலாம். ஆனால் ஒரு பிரச்சனை. நான் வேறு வேலை தேடவில்லை, ஏனெனில் நான் செய்து கொண்டிருந்த வேலையை நான் மிகவும் நேசித்தேன். அதையும் தாண்டி அது என் அழைப்பாக உருவாகிக் கொண்டிருந்தது.
ஆனால் பணம்...
எழுபது வயதை கடந்த என் தகப்பனாரை தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை விவரித்தேன். பக்கவாதத்தினாலும், பல வருடங்களின் மன அழுத்தத்தினாலும் கூர்மையாக இருந்த மூளையின் வேகம் இன்று குறைந்திருந்தாலும், சட்டென்று தெளிவான ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது. அதாவது, “பணத்தை பற்றி எண்ணாதே. அப்பொழுது நீ என்ன முடிவெடுப்பாய்?”
ஒரு நொடியிலே, என் மனம் ஒரு முடிவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான வேலையை விடுவதற்கு பணம் மட்டுமே காரணமாக இருந்திருக்கும்! நன்றி அப்பா!
மலைப் பிரசங்கத்தின் பெரும்பாலான பகுதியை இயேசு பணத்தையும், அதன் மேல் உள்ள நம்முடைய வாஞ்சையை குறித்தும் பிரசங்கித்தார். ஐஸ்வரியத்தை திரட்டுவதைக் குறித்து ஜெபிக்க கற்றுக்கொடுக்காமல், “வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11), என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். பூமியிலே பொக்கிஷங்கள் சேர்த்து வைப்பதைக் குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய படைப்பின் மேல் அவர் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதை பறவைகள் மற்றும் பூக்கள் மூலம் விவரித்தார் (வச. 19-31). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (வச. 33) என்று இயேசு கூறினார்.
பணம் முக்கியமானது தான். ஆனால் நம்முடைய முடிவுகளைப் பணம் தீர்மானம் செய்யக் கூடாது. கடினமான நேரங்களும், பெரிய தீர்மானங்களும் நம்முடைய விசுவாசத்திலே நாம் வளருவதற்கான சந்தர்பங்களாகும். நம்முடைய பரம பிதா நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார்.
நம்முடைய ஜெபத்தின் மூலம் தேவனை சேவித்தல்
அநேகந்தரம் நம்முடைய ஜெபங்களின் மூலமே தன்னுடைய வேலையை செய்து முடிப்பதை தேவன் தெரிந்துக்கொள்கிறார். இஸ்ரேல் தேசத்திலே மூன்றரை வருடங்களாய் இருந்த வறட்சியை நீக்க “உங்கள் தேசத்திலே நான் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்”, என்று எலியாவை நோக்கி தேவன் கூறியதின் மூலம் இதை அறியலாம் (யாக். 5:18). தேவன் மழையை வாக்கு பண்ணியிருந்தாலும், சில நேரம் கழித்து, “எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,” மழை வரும்படி ஊக்கமாய் ஜெபம் பண்ணினான் (1 இரா. 18:42). ஜெபம் செய்து கொண்டிருந்த பொழுது, தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி மழை வருவதற்கு ஏதாவது அறிகுறி உண்டோ என்று அடிவானத்தை நோட்டமிடும்படியாய், “ஏழு முறை” சமுத்திரத்தை கண்டு வரும்படியாய் அனுப்புகிறான் (வச. 43).
தாழ்மையுடன் கூடிய உறுதியான ஜெபத்தின் மூலம் தன்னுடைய கிரியையிலே பங்கு கொள்ளும்படியாய் தேவன் விரும்புகிறார் என்பதை எலியா அறிந்துக்கொண்டான். மனுஷனுடைய இயலாமைகளையும் தாண்டி, அதிசயமான வழிகளில் நம்முடைய ஜெபத்தின் மூலம் செயல்படுவதை தேவன் தெரிந்துக்கொள்கிறார். ஆகவே தான், “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது...” என்று கூறும் அதே வேளையில், “எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாய் இருந்தும்” (யாக். 5:16-17) என்று யாக்கோபு தான் எழுதின புத்தகத்திலே நினைவு படுத்துகிறார்.
எலியாவைப் போல உண்மையுள்ளவர்களாய், நம்முடைய ஜெபத்தின் மூலம் தேவனை சேவிப்பதை நம்முடைய நோக்கமாகக் கொண்டால், எந்த நொடியிலும் நாம் ஒரு அற்புதத்தைக் காணக்கூடிய ஒரு அருமையான உரிமையிலே நாம் பங்கு கொள்கிறோம்.
நண்பனால் ஏற்பட்ட காயங்கள்
சார்ல்ஸ் லோயரி (Charles Lowery) தன் முதுகின் கீழ் பகுதியிலுள்ள வலியைக் குறித்து தன்னுடைய நண்பனிடம் முறையிட்டான். அனுதாபத்தை எதிர்பார்த்த அவனுக்கு அதற்கு மாறாக நேர்மையான ஒரு பதில் கிடைத்தது. “உன் பிரச்சனை முதுகு வலியாக எனக்கு தோன்றவில்லை. உன்னுடைய பிரச்சனை உன் வயிறு. ஏனெனில் அது பெரிதாக இருப்பதால், உன் பின் பகுதியில் அழுத்தம் தருகிறது,” என்று அவன் நண்பன் கூறினான்.
புண்படக்கூடிய மனநிலைக்கு தான் செல்லாதபடி தன்னைக் காத்துக் கொண்டதாக ரெவ் (Rev) பத்திரிக்கையில் தன்னுடைய பகுதியில் இதை சார்லஸ் பகிர்ந்து கொண்டார். பின்பு, எடையை குறைத்ததும் அவருடைய வலி பறந்தோடியது. “மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:5-6) என்பதை சார்லஸ் அறிந்துகொண்டார்.
பிரச்சனை என்னவெனில், நாம் அநேகந்தரம் விமர்சனங்களால் தப்பித்துக் கொள்வதைக் காட்டிலும், துதியினால் வீழ்ச்சியடைவதையே விரும்புகிறோம். ஏனென்றால் உண்மை வலிக்கும். “நான்” என்னும் சுயத்தை அது காயப்படுத்துகிறது, சங்கடப்படுத்துகிறது. ஆனால் ஒரு நல் மாற்றத்தை முன்வைக்கிறது.
உண்மையான நண்பர்கள் நம்மை காயப்படுத்தி சந்தோஷமடைய மாட்டார்கள். மாறாக, நம்மை ஏமாற்றக் கூடியவர்களாய் இல்லாமல் மிகுந்த அன்பு செலுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். நம் குறையை அறிந்தும், அதனை ஏற்று, மாற்றிக்கொள்ளாமல் இருக்கும் காரியத்தை கூட அவர்கள் தைரியத்தோடும், அன்போடும் சுட்டிக் காண்பிப்பார்கள். நாம் கேட்க நினைப்பதை மட்டுமில்லாமல், நாம் கேட்க வேண்டிய காரியங்களையும் நமக்கு தெரிவிப்பார்கள்.
அப்படிப்பட்ட தோழமைகளை சாலமோன் கனப்படுத்துவதை நீதிமொழிகள் புத்தகத்திலே காணலாம். இயேசு இதையும் தாண்டி நம்மை உணர்த்துவதோடு, நாம் எவ்வளவாய் நேசிக்கப்படுகிறோம் என்பதையும் அறிந்துக்கொள்ள, அவரை நிராகரித்து நாம் ஏற்படுத்திய காயங்களை அவரே சுமந்து கொண்டார்.
ஊக்குவிக்கும் ஈவு
“டிசம்பர் மாதத்தை கடந்து விட்டால்,” என்கிற மெர்லி ஆகர்ட் (Merle Haggard) உடைய பழைய பாடல், வேலை இழந்த ஒரு மனிதன் தன்னுடைய மகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பரிசுப்பொருட்கள் எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலையை விவரிக்கிறது. வருடத்தின் சந்தோஷமான மாதமாக இருக்க வேண்டிய டிசம்பர் மாதம், அவருக்கு மகிழ்ச்சியற்ற இருளான மாதமாக இருக்கிறது.
சோர்வு என்பது டிசம்பர் மாதத்திற்கே உரியது இல்லை. ஆனால், அம்மாதத்திலே அது பெரியதாக மாறிவிடலாம். ஏனெனில் நம்முடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் பொழுது, துயரமும் மிக ஆழமாக இருக்கிறது. அப்பொழுது, கிடைக்கும் சிறிதளவு ஊக்கமும் நாம் வெகு தூரத்தை கடந்துச் செல்ல உதவும்.
இயேசுவைப் பின்பற்றிய முன்னோடிகளில் ஒருவன் சீப்புருதீவு ஊரானாகிய, யோசே. அப்போஸ்தலர்கள் இவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். அதாவது “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம். அவனைத்தான் நாம் அப்போஸ்தலர் 4:36-37 வசனங்களில், தன் நிலத்தை விற்று, மற்ற விசுவாசிகளின் தேவைக்காக நன்கொடை கொடுக்கக் கண்டோம்.
இதற்கு பின்பு, சவுலை குறிப்பிடும் பொழுது, சீஷர்கள் அவனைக் குறித்து பயந்தார்கள் என வாசிக்கலாம் (அப். 9:26). “அப்பொழுது பர்னபா..., அப்போஸ்தலரிடத்தில் சவுலை அழைத்துக் கொண்டுபோய்” (வச. 27) எனக் காண்கிறோம். பவுல் என பின்பு அழைக்கப்பெற்ற சவுல், முன்பு விசுவாசிகளைக் கொலை செய்யும்படி சுற்றித்திரிந்தவன். ஆனால் பர்னபா கிறிஸ்துவினால் மறுரூபமாக்கப்பட்ட சவுலுக்காகப் பரிந்து பேசினான்.
நம்மை சுற்றி அநேகர் ஆறுதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேரத்திற்கேற்ற ஒரு வார்த்தை, அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது ஒரு ஜெபம் கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும்.
பர்னபாவுடைய பெருந்தன்மையும், ஆதரவும், ஒரு ஆறுதலின் மகளாக அல்லது மகனாக இருப்பது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையிலே மற்றவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு இதுவே.
சுற்றிச் சூழ்ந்த ஒலி
சினிமாவில் இசையைக் கேட்பதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் (Walt Disney Studios) அறிமுகம் செய்தது. அது எத்திசையிலும் எழும்பும் ஒலி அல்லது சூழ் ஒலி (Stereophonic sound) என கூறலாம். சினிமா பார்ப்பவர்கள் இசையை ஒரு புதிய வகையில் கேட்டு ரசிக்க தயாரிப்பாளர்கள் விரும்பியதால், இது உருவாக்கப்பட்டது.
ஆனால் “சுற்றும் சூழ்ந்த ஒலியை” பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏனெனில் பல 1000 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் கட்டி எழுப்பிய எருசலேமின் மதில் சுவரை பிரதிஷ்டை செய்யும் பொழுது, இந்த முறையை நெகேமியா அறிமுகம் செய்தார். “அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்” (நெகே. 12:31) என்று அவர் விவரிக்கிறார். மதில் சுவரின் தென் பகுதியில் உள்ள குப்பை மேட்டு வாசலில் தொடங்கி, இரண்டு பாடற்குழுவினரும் இடதுபுறமும், வலதுபுறமுமாக பிரிந்து, துதியோடு எருசலேமைச் சுற்றி ஆலயத்தை வந்தடைந்தார்கள் (வச. 31, 37-40).
பாடகற் குழுவினர் ஜனத்தை மிகுதியான சந்தோஷத்திற்குள் நடத்திச் சென்றனர். ஏனெனில், “தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்” (வச. 43).
அவர்களுடைய கொண்டாட்டம், “தூரத்திலே கேட்கப்பட்டது,” சன்பலாத் போன்ற எதிரிகளின் எதிர்ப்பை மேற்கொண்டு, மறுபடியும் மதில் சுவரைக் கட்ட தேவன் செய்த உதவியை எண்ணி அவர்கள் துதி செலுத்தினார்கள். நம்முடைய மகிழ்ச்சி துதியாகப் புரண்டு வரும்படி தேவன் நமக்கு என்ன செய்தார்? நம் வாழ்வில் தேவனுடைய தெளிவான வழிகாட்டுதலா? அல்லது நம்முடைய துயர நேரத்தில் அவர் மட்டுமே அளிக்கக்கூடிய ஆறுதலா? அல்லது நம்முடைய தலைசிறந்த ஈவாகிய இரட்சிப்பா?
ஒருவேளை நம்மால் “சுற்றும் சூழ்ந்த சத்தத்தை” நம் துதியின் மூலம் உண்டாக்க முடியாமல் போகலாம். ஆனால், தேவன் நமக்கு அளித்த “மகிழ்ச்சியில்” களிகூரலாம். அப்படி செய்யும் பொழுது, பிறர் நம்முடைய துதியை கேட்டு, நம்முடைய வாழ்வில் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை அறிந்துக் கொள்வார்கள். !