“என்னுடைய ஜனத்தை ஆறுதல் படுத்துங்கள்” என்பது எங்கள் முகாமின் தலைப்பு. முகாமிற்கு வந்த ஒவ்வொரு பிரசங்கியாரும் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளையே பிரசங்கித்தனர். ஆனால் கடைசியாக பேசிய பிரசங்கியார் முற்றிலும் வேறு தொனியில் பேசினார். அவர் “உறக்கத்திலிருந்து எழுந்திருங்கள்” என்ற தலைப்பின் கீழ் ஏரேமியா 7:1-11ம் வசனங்களிலிருந்து போதித்தார். அன்போடு, ஆனால் அதே சமயத்தில் வார்த்தை ஜாலமின்றி, கண் விழித்து பாவத்திலிருந்து திரும்பும்படி அறைகூவல் விடுத்தார்.

“நான் கிறிஸ்தவன், தேவன் என்னை நேசிக்கிறார், எனக்கு பயமேதுமில்லை என்று பெருமை பாராட்டுகிறோம், ஆனால் நாம் எல்லா வித தீமையையும் செய்கிறோம். தேவனுடைய கிருபைக்குப்பின் ஒளிந்து கொண்டு இரகசிய பாவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்காதீர்கள்” என்று ஏரேமியா தீர்க்கதரிசி உரைப்பது போல அறிவுரைத்தார்.

அவர் எங்கள் மேல் கரிசனையுள்ளவர் என்று நாங்கள் அறிவோம். தேவன் அன்பானவர் தான், ஆனாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே! (எபி. 12:29 பார்க்கவும்) என்று எங்கள் ஏரேமியா இன்று உரைத்த பொழுது எங்கள் நாற்காலிகளில் உட்காரமுடியாமல் நாங்கள் சங்கடத்தில் நெளிந்தோம். தேவன் பாவத்தை பாராது போல இருப்பவர் அல்ல.

“நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? (7:9-10) என்று தன் ஜனத்தைப் பார்த்து ஏரேமியா தீர்க்கதரிசி கேள்வி எழுப்பினார்.

“உறக்கத்திலிருந்து எழுந்திருங்கள்” என்னும் இவருடைய தலைப்பு, தேவனுடைய ஆறுதலின் இன்னொரு பக்கம். மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் கசப்பான மூலிகை போல, இவருடைய வார்த்தைகள் ஆவிக்குரிய நோய் தீர்க்கும் நல் மருந்தாக இருக்கிறது.

கடுமையான வார்த்தைகளை எதிர்கொள்ளும் பொழுது, அதைக் கேளாமல் அகன்று போவதை விட, அதின் சுகமளிக்கும் தன்மைக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது நலமாயிருக்கும்.