வகை  |  odb

ஏக்கத்தோடு தேவனைத் தேடல்

ஒரு நாள் என்னுடைய மகள், எங்களது ஒரு வயது நிரம்பிய பேரனோடு, எங்களைப் பார்க்க வந்திருந்தாள். ஒரு சிறிய வேலையினிமித்தம் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானேன். ஆனால் நான் அந்த அறையை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்ததும், என்னுடைய பேரன் அழ ஆரம்பித்தான். இது இரு முறை நடந்தது, ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் திரும்பி வந்து அவனோடு சிறிது நேரம் செலவிட்டுச் செல்வேன், மூன்றாவது முறை நான் வெளியே செல்ல முயற்சித்த போது, அந்த சிறிய உதடுகள் கதற ஆரம்பித்தன. அந்நேரம் என் மகள் ‘‘அப்பா, நீங்கள் அவனை உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாதா?” என்று கேட்டாள்.

அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது எல்லா தாத்தாக்களுக்கும் தெரிந்திருக்கும். என்னுடைய பேரனும் என்னோடு பயணித்தான், ஏனெனில், நான் அவனை நேசிக்கிறேன்.

நம்முடைய இருதயத்தில் தேவனை நோக்கி நாம் கொண்டுள்ள ஏக்கங்களெல்லாம் அன்போடு சந்திக்கப்படும் என்பது எத்தனை நன்மையானது. வேதம் நமக்குக் கூறுவது, ‘‘தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” (1 யோவா. 4:16). நாம் எதையோ செய்ததாலோ அல்லது செய்யாததாலோ தேவன் நம்மீது
அன்புகூரவில்லை. தேவனுடைய அன்பு நம்முடைய தகுதியைச் சார்ந்தது அல்ல, ஆனால் தேவனுடைய நன்மையையும் உண்மையையுமே சார்ந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அன்பற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கும்போது, நாம் என்றும் மாறாத தேவனுடைய அன்பையே நம்முடைய நம்பிக்கைக்கும், சமாதானத்திற்கும் மூல காரணராகச் சார்ந்து கொள்வோம்.

நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய மகனையே நமக்குப் பரிசாகத் தந்து, பரிசுத்த ஆவியையும் அருளினதின் மூலம், நம்மீதுள்ள அவருடைய அன்பை விளங்கப்பண்ணினார். தேவன் நம்மை என்றும் மாறாத அன்போடு அன்பு கூருகிறார் என்ற உறுதி நமக்கு எத்தனை ஆறுதலைத் தருகிறது.

எதிர்பார்ப்போடு காத்திருத்தல்

ஒவ்வொரு மே தினத்தன்றும் (மே 1) இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில், அதிகாலை வேளையில் வசந்த காலத்தை வரவேற்க ஒரு கூட்ட மக்கள் திரண்டு விடுவர். காலை 6 மணிக்கு மேக்டலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து, மேக்டலின் கல்லூரி பாடகர் குழுவினர் பாடுவார்கள். அந்த இரவைக் கடந்து
வெளிவரும் பாடல்களையும், மணியோசையையும் எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பர்.

ஆரவாரத்தோடு காத்திருப்பவர்களைப் போன்று நானும் காத்திருக்கின்றேன். நான் என் ஜெபத்திற்கு வரும் பதிலுக்காகவும், தேவனின் வழி நடத்துதலுக்காகவும் காத்திருக்கின்றேன். எந்த நேரம் என் காத்திருத்தல் முடியும் என்று தெரியாதிருந்தும், எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கற்றுக் கொண்டேன். இருண்ட இரவுகளைப் போன்ற சூழ்நிலைகளை, ஆழ்ந்த கவலையோடு எதிர் நோக்குவதாக சங்கீதக்காரன், சங்கீதம் 130ல் கூறுகிறான். ஜாமக்காரனைப் போல, துன்பங்களின் மத்தியில் தேவன் மீது நம்பிக்கையாயிருப்பதைத் தெரிந்து கொண்டான். ‘‘எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (வச. 6).

தேவன் உண்மையுள்ளவர் என்பதின் மீதுள்ள எதிர்பார்ப்பு, இருளினூடே, துயரங்களின் மத்தியில், அதைத் தாங்கக் கூடிய பெலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை சங்கீதக்காரனுக்குக் கொடுக்கிறது. இருளினூடே ஒரு சிறு ஒளிக்கதிரைக் கூட காணாதிருந்தும், வேதாகமம் முழுவதும் காணப்படுகின்ற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கை அவருடைய காத்திருத்தலுக்கு பெலனளிக்கிறது.

ஒரு வேளை நீயும், இருளின் நடுவேயிருப்பாயாயின் சோர்ந்து போகாதே, விடியல் வருகிறது. அது இந்த வாழ்விலோ அல்லது பரலோகத்திலோ, தெரியாது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதே. தேவன் தரும் விடுதலைக்காக விழித்திருந்து காத்திரு. தேவன் உண்மையுள்ளவர்.

சங்கலிகளை முறித்தல்

ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

மறுபடியும் இயேசுவை நன்றாகக் கவனியுங்கள்!

நான் பார்த்ததிலேயே உண்மையுள்ள நபர் என்று ஒருவரை சொல்லக்கூடுமானால் அது சகோதரர் ஜஸ்டிஸ் ஆகத்தான் இருக்கமுடியும். தன் குடும்பம், தன் வேலை, தன் சபை பொறுப்பு என்று எல்லாவற்றிலும் அவர் உண்மையும் பொறுப்புள்ளவருமாய் இருந்தார். சமீபத்தில் பிள்ளைப்பருவத்தில் நான் போய்க்கொண்டிருந்த ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே பியானோ கருவியின் பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த பழைய ஆலயமணியை கவனித்தேன். அந்த நாட்களில், வேதபாடம் முடியப்போகிறது என்பதை உணர்த்த சகோதரர் ஜஸ்டிஸ் அந்த மணியிலிருந்து தான் ஒலியெழுப்புவார். காலத்தை தாண்டி அந்த ஆலயமணி இன்றும் நிலைத்து நிற்கிறது. சகோதரர் ஜஸ்டிஸ் கர்த்தரோடு இருக்கும்படி சென்று பல வருடங்கள் ஆனாலும், அவர் விட்டுசென்ற உண்மைத்துவத்தின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

எபிரயேர் 3-ஆம் அதிகாரம் ஒரு உண்மையுள்ள ஊழியன் மற்றும் ஒரு உண்மையுள்ள குமாரனை நம்முடைய கவனத்தின் கீழ் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் உண்மைத்துவத்தை நாம் மறுக்கமுடியாவிட்டாலும், விசுவாசிகளின் பார்வை இயேசுவின்மீதே இருக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. “ஆகையால், பரிசுத்த சகோதரர்களே சகோதரிகளே… கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (வச. 1) சோதிக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பெரிய உற்சாகத்தைத் தருகிறது. உண்மையுள்ளவராகிய இயேசுவை பின்பற்றுவதனாலேயே இந்த சுதந்தரம் உண்டாகிறது.

சோதனையின் காற்றுகள் உங்களை சூழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து களைத்துபோய், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த வேதபகுதியில்-ஒரு விரிவுரை தொகுப்பில்-உள்ளது போல், “இயேசுவை நன்றாக உற்று கவனியுங்கள் (3:1). அவரை மறுபடியும் பாருங்கள் – மறுபடியும் மறுபடியும் பாருங்கள். இயேசுவை நாம் மீண்டும் மீண்டும் நம் பார்க்கும்போது, அவருடைய குடும்பத்திற்குள் வாழ்ந்திட அவர் நம்மை திடப்படுத்துகிறார்.

பணித்தள பயிற்சி

என் மகனின் அறிவியல் ஆசிரியர் நடத்தும் அறிவியல் முகாமுக்கு என்னை ஒரு மேற்பார்வையாளனாக இருக்கும்படி கேட்டார்கள். நான் தயங்கினேன். கடந்தகால தவறுகள் மற்றும் கெட்டப் பழக்கங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நான், எப்படி ஒரு முன்மாதிரியாக முடியும்? என் மகனை அன்புடனும் பண்புடனும் வளர்க்க ஆண்டவரே உதவினார். ஆனாலும் என்னை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு ஆண்டவரால் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகித்தேன்.

ஒரு சில சமயங்களில், சம்பூரணரும், இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவருமாகிய ஆண்டவர் ஏற்றகாலத்தில் நம்மை முழுமையாக மறுரூபமாக்குவார் என்பதை என்னால் முழுவதும் கிரகித்துக்கொள்ளமுடியவில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது வேலையில் கிடைக்கும் பயிற்சியை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவன் அவனுக்கு அளித்த வரத்தை பயன்படுத்தும்படி சொன்னதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைப்பூட்டினார் (2 தீமோ. 1:6). தன்னகத்தே உள்ள மக்களுக்கு ஊழியம் புரிந்து அவர்களை வளர்ப்பதற்கு தேவையான அன்பையும், ஒழுக்கத்தையும் (வச. 7) தன் வல்லமையின் ஆதாரமாகிய ஆண்டவர் தனக்கு தருவார் என்பதில் தீமோத்தேயு தைரியம் அடையமுடியும்.

கிறிஸ்து நம்மை இரட்சித்து நம்முடைய வாழ்க்கையின் மூலம் அவரை கனப்படுத்த நம்மை தகுதிபடுத்துகிறார். அதற்கான விசேஷ தகுதி நம்மிடம் இருப்பதினாலன்று, நாம் ஒவ்வொருவரும் அவருடைய குடும்பத்தில் மதிப்பிற்குரிய அங்கத்தினராய் இருப்பதினாலேயே (வச. 9) அது நடக்கிறது.

தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்பாய் இருப்பதே நம்முடைய பங்கு என்பதை நாம் அறிந்துகொண்டால் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நம்மை இரட்சித்து, உலகத்தை பற்றி நமக்குள்ள குறுகிய தரிசனத்தை மாற்றி நமக்கு ஒரு உன்னத நோக்கத்தை கொடுப்பதே கிறிஸ்துவின் பணி. இயேசுவை நாம் அனுதினமும் பின்பற்றுகையில், அவர் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கெல்லாம் அவருடைய அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து பிறரை உற்சாகப்படுத்தும்போது அவர் நம்மையும் மறுரூபமாக்குகிறார்.

ஞானத்தின் அழைப்பு

பிரிட்டன் நாட்டின் பிரசித்திபெற்ற பத்திரிக்கையாளரும் சமுதாய ஆர்வலருமான மால்கம் மக்ரிஜ், தன்னுடைய அறுபதாவது வயதில் விசுவாச அனுபவத்திற்குள் வந்தார். அவருடைய எழுபத்தி-ஐந்தாவது பிறந்ததினத்தில், மனித வாழ்க்கையை பற்றிய இருபத்தி ஐந்து அறிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார். அதிலே ஒன்று, “சந்தோஷமாயிருக்கிற பணக்காரனை நான் சந்தித்ததேயில்லை. ஆனாலும், பணக்காரன் ஆகவேண்டும் என்று விரும்பாத ஏழையையும் நான் மிக அபூர்வமாகத் தான் சந்தித்திருக்கிறேன்”

நம்மில் அநேகர், பணம் நமக்கு சந்தோஷத்தை தராது, என்பதை ஏற்றுக்கொள்வர். ஆனாலும், அதனை நிச்சயிக்க கூடுதலான பணத்தை சேர்த்துக்கொண்டும் இருப்பர்.

ராஜா சாலமோனுக்கு இருந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒருவேளை அவர் பெரும் செல்வந்தராக இருந்தாலும், பணத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்று அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8 அவருடைய அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று. அது எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் “ஞானத்தின் அழைப்பு”. “என் சத்தம் மனுபுத்திரருக்கு தொனிக்கும்…என் வாய் சத்தியத்தை விளம்பும் (வச. 4-7). வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல (வச. 10-11).

ஞானம் சொல்கிறது, “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (வச. 19-21).

மெய்யாகவே இவைகள் அறிய செல்வங்கள்!

விதவையின் விசுவாசம்

காலையில் அதிக இருட்டோடு இருக்கும்போதே ஆ-பி தன் நாளைத் துவக்கிடுவாள். கிராமத்தில் உள்ள மற்றவர்களும் சீக்கிரத்தில் எழுந்து ரப்பர் தோட்டத்திற்கு போக புறப்படுவார்கள். சீனாவின் (ஹூவாங்சாங்) கிராமத்தில் ஒரு ரப்பர் மரப்பால் (latex) தான் அவர்களுக்கு பிரதான வருமான ஆதாரம். விடியும்முன் எவ்வளவு சீக்கிரமாய் அவர்கள் மரத்தை செதுக்குகிறார்களோ அவ்வளவாய் அவர்கள் பாலை எடுக்கமுடியும். காலையில் ரப்பர் மரத்தை செதுக்குகிறவர்கள் நடுவில் ஆ-பி காணப்பட்டாலும், அவள் முதலில்

ஆண்டவரோடுதான் தன் நேரத்தை செலவிடுவாள்.

ஆ-பியின் தகப்பன், கணவர் மற்றும் ஒரே மகன் மூவரும் இறந்துபோனார்கள். ஆனால் அவள் – தன் மருமகளுடன் இணைந்து வயது முதிர்ந்த தாயார் மற்றும் இரண்டு பேரன்களை பராமரித்து வந்தாள். இவளுடைய கதை, வேதத்திலே ஆண்டவரை நம்பிய இன்னொரு விதவையை எனக்கு நினைவுபடுத்துகிறது.

விதவையின் இறந்த கணவன் அவளைக் கடனில் விட்டு சென்றுவிட்டான் (2 இரா. 4:1). தன்னுடைய இக்கட்டிலே அவள் ஆண்டவரின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய ஊழியக்காரனாகிய எலிசாவை அணுகினாள். ஆண்டவர் அவள்மேல் அக்கறையாய் உள்ளார் என்றும், அவளுடைய இந்த நிலைமையில் அவர் எதையாவது செய்வார் என்றும் நம்பினாள். தேவனும் அவ்வாறே செய்தார். விதவையின் அவசரத் தேவையை அற்புதமாக சந்தித்தார் (வச. 5-6). இதே ஆண்டவர் ஆ-பிக்கும் பெரிய அற்புதத்தை நிகழ்த்தாமல் அவளுடைய கையின் பிரயாசம், நிலத்தின் விளைபொருள், அவருடைய மக்கள் தரும் வெகுமதிகளின் மூலமாக நன்மை செய்தார்.

வாழ்க்கை நம்மேல் அநேக அழுத்தங்களைச் சுமத்தினாலும், தேவனுடைய பலம் நமக்கு எப்போதும் உண்டு. நம்முடைய கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்து, நம்மால் இயன்றதை நாம் செய்யும்போது, நம்முடைய சூழ்நிலைகளில் தம்முடைய கரத்தின் கிரியைகளின் மூலமாக அவர் செய்யும் காரியம் ஆச்சரியமாயிருக்கும்.

மறதி நோய்

ஒருமுறை ஒரு குறிப்பிட்ட சூழலில், கலிபோர்னியாவின் அவசர உதவி குழுவினர், ஆஸ்திரேலிய உச்சரிப்புடன் பேசும் ஒரு பெண்ணை மீட்டெடுத்தார்கள். அவளுக்கு அம்னீசியா என்னப்படும் மறதி நோய் இருந்ததாலும், எந்தவொரு அடையாள அட்டையும் அவளிடம் இல்லாத காரணத்தாலும், அவளால் தன்னுடைய பெயரையோ தான் எங்கிருந்து வந்தோம் என்கின்ற விவரத்தையோ சொல்லமுடியவில்லை. மருத்துவர்கள் மற்றும் சர்வதேச ஊடகத்தினர், இருவரும் இணைந்து இவளை இயல்புக்கு கொண்டுவந்தபின், இவளுடைய கதையை கேட்டறிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பாபிலோனிய தேசத்து ராஜா நேபுகாத்நேச்சாரும் தான் யார் என்பதையும், எங்கே இருந்து வருகிறோம் என்பதையும் மறந்துபோனான். அவனுடைய ‘அம்னீசியா’ ஒரு ஆவிக்குரிய மறதி. அவனுக்கு கொடுக்கப்பட்ட ராஜ்ஜியத்தின் மேல் பெருமிதம் கொண்டு கர்த்தர் ராஜாதி ராஜா என்பதையும், அவனிடம் இருப்பதெல்லாம் ஆண்டவரால் வந்தது (தானி. 4:17, 28-30) என்பதையும் அவன் மறந்துபோனான் (தானி. 4:17, 28-30).

ராஜாவின் மனநிலையை படம்பிடிக்கும் வண்ணம் ஆண்டவர் அவனை மனுஷரினின்று தள்ளி, வெளியின் மிருகங்களோடு சஞ்சரிக்கப் பண்ணி மாடுகளைப்போல் புல்லை மேயச் செய்தார் (வச. 32-33). கடைசியாக, ஏழு ஆண்டுகளுக்கு பின், நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்துபோது, தான் யார் என்கின்ற நினைவையும், இந்த ராஜ்ஜியம் அவனுக்கு யார் தந்தது என்கின்ற அறிவையும் அவன் திரும்பப் பெற்றுக்கொண்டான். அவனுடைய உணர்வுகள் திரும்பினதும் அவன், “ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன் …(வச. 37) என்று அறிக்கை செய்தான்.

நாம் எப்படி இருக்கிறோம்? நம்மை யார் என்று எண்ணுகிறோம்? மறந்துபோகக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதால், ராஜாதி ராஜாவை நமக்கு நினைவுபடுத்த யார் நமக்கு உதவக்கூடும்?

காத்திருக்கும் காலம்

அநேக குழந்தைகள் புத்தகங்களை எழுதிய டாக்டர்.சியூஸ் கூறுகிறார்: “தூண்டிலில் எப்பொழுது மீன் அகப்படும்,? பட்டம் விட எப்பொழுது காற்றடிக்கும், ? அல்லது எப்பொழுது வெள்ளி இரவு வரும் ?….என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஏதோ ஒரு காரியம் நடக்க காத்திருக்கின்றனர்.”

வாழ்க்கையின் அதிகமான பகுதி காத்திருப்பதிலேயே கடந்துவிடுகிறது. ஆனாலும் தேவன் எவ்விதத்திலும் அவசரப்படுவதில்லை - அல்லது அவசரப்படாதவர் போல் காணப்படுகிறார். ‘தேவன் தமக்கென்று ஒரு நேரத்தையும், தாமதத்தையும் உடையவர்’ என்று ஒரு பழம்பெரும் கூற்று சொல்லுகிறது. ஆகையால் நாம் காத்திருக்கிறோம்.

காத்திருப்பது உண்மையில் கடினமானதே. கையை காலை பிசைவோம், அங்குமிங்கும் அலைவோம், பெருமூச்சு விடுவோம், விரக்தியின் உச்சத்தில் உள்ளே புழுங்குவோம். இந்த கொடூரமான மனுஷனோடு நான் ஏன் வாழனும்? இந்த கஷ்டமான வேலை, இந்த தகாத நடத்தை, இந்த வியாதிப்போராட்டம், இன்னும் எத்தனை காலம்தான் இதை சகிக்கனும்? ஏன் ஆண்டவர் பதிலளிக்காமல் உள்ளார்?

ஆண்டவருடைய பதில்: “சற்றே பொறுத்திருந்து நான் செய்யும் காரியத்தை பார்”

வாழ்க்கையை நமக்கு போதிக்கும் சிறந்த ஆசிரியர்களில் ‘காத்திருத்தலும்’ ஒன்று. அதன் மூலமாகவே நாம் ஆண்டவர் நமக்குள்ளும், நமக்காகவும் கிரியை செய்யும்வரை காத்திருப்பதினால் காத்திருத்தலின் பண்பைக் கற்றுக்கொள்கிறோம். காத்திருக்கும் அனுபவத்திலே தான் நாம் சகிப்புத்தன்மை, காரியங்கள் நமக்கு சாதகமில்லாது போனாலும் தேவனுடைய அன்பு , மற்றும் நன்மையின்மேல் நம்பிக்கை வைக்கும் திறன் (சங். 70:5) போன்றவைகளில் வளருகிறோம்.

ஆனாலும், காத்திருத்தல் ஒரு கொடுமையான, பல்லை கடிக்கும் அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. காத்திருப்பின் நாட்களில் நாம் அவருக்குள் “மகிழ்ந்து களிகூரலாம்” (வச. 4). இம்மையானாலும் மறுமையானலும், ஆண்டவர் நம்மை ஏற்ற நேரத்தில் விடுவிப்பார் என்கின்ற நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம். ஆண்டவர் எப்போதும் அவசரப்படுகிறவரல்ல, அவர் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்.