சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி சொலல்
பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.கே. செஸ்டர்டனின் எழுத்துக்களை அநேக ஆண்டுகளாக நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. அவருடைய நகைச்சுவையும், நுண்ணறிவும் என்னைச் சிரிப்புக்குள்ளாக்குவதோடு சிந்திக்கவும் வைத்தது. எடுத்துக்காட்டாக, “சாப்பாட்டிற்கு முன் கிருபை என்று சொல்லுகிறீர்கள். நல்லது. நான் சொல்லுகிறேன், விளையாட்டிற்கும், கேளிக்கைகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகங்களுக்கும், புத்தகத்தைத் திறப்பதற்கும், எழுதுவதற்கும், படம் வரைவதற்கும், நீந்துவதற்கும், வாள் சண்டைக்கும், குத்துச் சண்டைக்கும், நடப்பதற்கும், நடனத்திற்கும், பேனாவை மையில் நனைப்பதற்கு முன்பும் கிருபை வேண்டும்.”
ஒவ்வொரு வேளை உணவிற்கு முன்பும் நாம் தேவனுக்கு நன்றி சொல்வது நல்லது. ஆனால், அது அத்தோடு நின்றுவிடக் கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு முயற்சியையும் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டியவையாகப் பார்க்கின்றார். அவற்றை தேவ நாம மகிமைக்காக செய்ய வேண்டுமெனவும் சொல்கின்றார். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ. 3:17) என்று கூறுகின்றார். பொழுதுபோக்கு, தொழில் மற்றும் கல்வி ஆகியவை நாம் தேவனைக் கனப்படுத்தவும், நம்முடைய நன்றியை தேவனுக்குச் செலுத்தும் படியாகவும் நமக்கு கொடுக்கப்பட்ட வழிகளேயாம்.
கொலோசெ சபையின் விசுவாசிகளுக்கு பவுல் “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, அதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (வச. 15) என்று கூறுகின்றார்.
நாம் தேவனுக்கு நன்றிசொல்ல நினைக்கும் எவ்விடமும், அவரை கனப்படுத்த நினைக்கும் எந்நேரமும் நாம் “கிருபை” என்று சொல்லக் கூடிய மிகச் சிறந்த இடமாகும்.
ஒரு நண்பனின் ஆறுதல்
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தன் மகளின் இடுப்பிற்குக் கீழே முழுவதும் சகதியாயிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள் அந்தத் தாய். என்ன நடந்ததென்று அவர் விசாரித்தாள். மகள், நடந்ததை விவரித்தாள். ஒரு சிநேகிதி வழுக்கி சகதி நிறைந்த ஒரு குட்டையினுள் விழுந்துவிட்டாள். ஒரு மாணவி ஆசிரியரை அழைக்க ஓடினாள். சகதியினூடே சென்று காயமடைந்த அந்தச் சிநேகிதியின் காலைத் தாங்கிக் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் வரும் வரை தானும் அந்தச் சகதியில் இறங்கி அந்தச் சிநேகிதிக்கு உதவியதாகக் கூறினாள்.
யோபு பேரிழப்பை அனுபவித்தான். தன் பிள்ளைகளை இழந்தான். உடல் முழுவதும் கொடிய பருக்களால் தாக்கப்பட்டான். அவனுடைய துயரம் அவனால் தாங்கக் கூடாதததாயிருந்தது. அவனைத் தேற்ற, ஆறுதல் கூற மூன்று நண்பர்கள் வருகின்றனர் என வேதத்தில் வாசிக்கின்றோம். அவர்கள் யோபுவைப் பார்த்த போது, “சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து, தங்கள் தலைகள் மேல் புழுதியைத் தூற்றிக் கொண்டு வந்து, யோபுவின் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்” (யோபு 2:12-13).
யோபுவினுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நல்ல புரிந்து கொள்ளலைக் காட்டினர். யாரேனும் அவனருகிலிருந்து அவனோடு புலம்ப வேண்டுமென யோபு விரும்புகிறானென உணர்ந்து கொண்டனர். அந்த மூன்று மனிதரும் பின்னர் பேச ஆரம்பிக்கின்றனர். அவர்கள் பேச ஆரம்பித்த போது எதிர்பார்த்ததற்கு முரணாக, யோபுவிற்குத் தவறான யோசனையைக் கொடுத்து விடுகின்றனர் (16:1-4).
ஒரு துயரப்பட்ட நண்பனைத் தேற்ற நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமென்னவெனின், துன்ப நேரத்தில் அவர்களோடு அமர்ந்து இருப்பதே.
சொந்தமானது
ஓவ்வொரு சனிக்கிழமை இரவு நேரங்களிலும் செல்வது போன்று, அன்றும் இரவு வெகுநேரம் வெளியில் இருந்தேன். இருபது வயதான நான் தேவனை விட்டு, என்னால் முடிந்தமட்டும் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால், திடீரென, வினோதமாக, என்னுடைய தந்தை பாதிரியாராகப் பணிபுரியும் தேவாலயத்திற்குக் கட்டாயமாகச் செல்லும்படி தூண்டப்பட்டேன். நான் எனது சாயம்போன ஜீன்ஸ் பேன்டையும், பழசான மேல் சட்டையையும் கட்டப்படாத, உயரமான ஷூக்களையும் அணிந்து கொண்டு அந்தப் பட்டணத்தின் வழியே காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
என்னுடைய தந்தையின் அன்றைய பிரசங்கத்தை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால், என்னை அவர் பார்த்தபோது, அவருக்கிருந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கமுடியவில்லை. அவருடைய கரத்தை என் தோளின் மீது போட்டு அணைத்து, என்னை அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தினார். “இவன் என்னுடைய மகன்” என்று பெருமையாகத் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக என் மீதிருந்த தேவனுடைய அன்பின் வெளிப்பாடாக அவருடைய மகிழ்ச்சி இருந்தது.
தேவன் ஓர் அன்பான தந்தை என்ற கருத்து வேதாகமம் முழுமையிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 44ல் ஒரு கோர்வையான எச்சரிப்புகளுக்கிடையே, தீர்க்கதரிசி தேவனுடைய குடும்ப அன்பினை தெரிவிக்கின்றார். “என்னுடைய தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்து கொண்ட இஸ்ரவேலே” என அழைக்கின்றார். “உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (வச. 3) என்கின்றார். தங்களுடைய குடும்ப பெருமையை இந்த வம்சாவழியினர் எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஏசாயா நன்கு தெரிந்து கொண்டார். “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்”, “ஒருவன் நான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப் போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்வான்” (வச. 5).
நான் என்னுடைய வளர்ப்புத் தந்தைக்குச் சொந்தமானவன் போல, தன்னிஷ்டம் போலத் திரிகின்ற இஸ்ரவேலரும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். நான் என்ன செய்துவிட்டிருந்தாலும் அது என் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பிலிருந்து என்னைப் பிரிக்கவில்லை. என்னுடைய பரலோகத் தந்தை என்மீது வைத்திருக்கின்ற அன்பில் ஒரு துளியை என் தந்தை எனக்குத் தந்தார்.
இயேசுவோடு ஐக்கியம்
நான் ஒரு முறை இரவு உணவின் போது பில்லி கிரஹாமின் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பைப் பெற்றேன். அது மறக்கமுடியாத ஓர் அனுபவமாயிருந்தது. நானும் கனப்படுத்தப்பட்டேன். ஆனால், அவரோடு என்ன பேசுவது பொருத்தமாயிருக்கும் என சிந்தித்துச், சற்று பதட்டமாக உணர்ந்தேன். பல ஆண்டுகளான அவருடைய ஊழியப்பாதையில் எது மிகவும் விரும்பக்கூடியதாக இருந்தது என்ற ஒரு கேள்வியோடு என்னுடைய உரையாடலை ஆரம்பித்தால் சரியாக இருக்குமென எண்ணினேன். ஆனால், நான் அநாகரீகமாக அதற்குத் தகுந்த விடைகளையும் எடுத்துரைக்கலானேன். அது ஜனாதிபதியைச் சந்தித்ததா? அல்லது இராஜாக்களையும், ராணிகளையும் சந்தித்தக் கணங்களா? அல்லது உலகெங்கும் பல லட்சம் மக்களுக்குச் சுவிசேஷம் அறிவித்த நேரங்களா?
நான் என்னுடைய கருத்துக்களைக் கூறி முடிப்பதற்குள் மதிப்பிற்குரிய கிரஹாம் அவர்கள் என்னை நிறுத்திவிட்டார். ஒரு தயக்கமுமின்றி அவர், “அது நான் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம்தான். அவருடைய பிரசன்னத்தை உணர்வதும், அவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்வதும் அவருடைய வழிகாட்டலைக் கண்டு கொண்டு அதன்படி நடந்துகொள்வதுமே என்னுடைய மிகப் பெரிய மகிழ்ச்சி” என்றார். இந்த பதில் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று எண்ணச் செய்தது, ஒரு சவாலைச் சந்திக்கவும் என்னைத் தூண்டியது. இவருடைய பதிலைப் போன்று என்னுடைய பதிலும் இருக்குமா என நான் குத்தப்பட்டேன். நானும் அவரைப் போன்று தேவனைச் சார்ந்து வாழ்வதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன்.
இதனை மனதில் கொண்டுதான் பவுலும் “ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைகாக” தன்னுடைய மிகப்பெரிய சாதனைகளையெல்லாம் குப்பையென்று சொல்லுகின்றார் (பிலி. 3:8). நம் வாழ்விலும் இயேசுவும், இயேசுவோடுள்ள ஐக்கியமுமே பிரதானமானதாக இருப்பின் நம் வாழ்வும் எத்தனை விலையேறப் பெற்றதாக இருக்குமென நினைத்துப்பார்.
நேரத்தைச் சொல்லல்
“மேல் நாட்டினர் கைக்கடிகாரம் வைத்திருப்பர். ஆப்பிரிக்கர்களுக்கு நேரமுண்டு” என்று ஓ.எஸ். கின்னஸ் என்பவர் தன்னுடைய “சாத்தியமற்ற மக்கள்” என்ற புத்தகத்தில் ஓர் ஆப்பிரிக்க பழமொழியைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது, “எனக்கு நேரமில்லை” என்று என்னிடம் கேட்டுக் கொள்பவர்களின் வேண்டுகோளை நான் நிராகரித்ததை குறித்துச் சிந்திக்க வைத்தது. நான், இந்த கொடுமையான அவசரகால அட்டவணைகளும், காலக்கெடுகளும் நம் வாழ்வை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.
சங்கீதம் 90ல் மோசே ஜெபிப்பதைப் பார்க்கின்றோம். “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி. எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (வச. 12), “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபே. 5:15-16) என பவுல் எழுதுகின்றார்.
பவுலும், மோசேயும் நம்மை ஞானத்தோடு காலத்தைப் பயன்படுத்தும்படி சொல்வது, வெறுமனே கடிகாரத்தை கவனிக்கச் சொல்வதாக நினைக்க வேண்டாம். சூழ்நிலை நம்மை ஒரு நெருக்கமான கால அட்டவணையை பின்பற்றும்படி அழைக்கலாம் அல்லது நம்முடைய நேரத்தை பிறருக்குக் கொடுக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்தலாம்.
இந்த உலகில் நாம் கிறிஸ்துவுக்காக நம்மை வேறுபடுத்திக் காட்ட நமக்கு சொற்ப காலம்தான் செலவிடமுடிகிறது. ஆனால், நாம் அந்த சந்தர்ப்பத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும். எப்படியெனில், நம்முடைய கடிகாரங்களையும், திட்டங்களையும் சிறிது நேரத்திற்குத் தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் பொறுமையோடு கூடிய அன்பை, தேவன் நம் வாழ்வில் நாம் சந்திக்கும்படி கொண்டு வருபவர்களிடம் காட்ட வேண்டும்.
காலத்திற்கப்பாற்பட்ட தேவனின் பெலத்தாலும், கிருபையாலும் வாழுகின்ற நாம் நம்முடைய நேரத்தை நித்தியத்திற்காகச் செலவிடுவோம்.
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நான் அடாவைச் சந்தித்தபோது, அவள் தன்னுடைய மரித்துப்போன முழு குடும்பத்தையும், தன்னுடைய நண்பர்களையும் விட்டுவிட்டு ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்தாள். “முதுமை என்பதுதான் மிகவும் கடினமான பகுதி, நம்மைத் தனியே விட்டுவிட்டு ஒவ்வொருவராக வெளியேறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறினார். ஒரு நாள் நான் அடாவிடம் எது அவளுக்கு அதிக உற்சாகம் தருவதாக இருக்கின்றது?, எப்படி அவள் நேரத்தைச் செலவிடுகின்றாள் எனக் கேட்டேன். அவள் வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய பகுதியிலிருந்து (பிலி. 1:21) எனக்கு பதில் கொடுத்தாள். “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்றாள். மேலும், “ நான் இங்கிருக்கும் போதும் எனக்கு வேலைகளிருக்கிறது, நான் நன்றாயிருக்கும் போது, இங்கிருக்கின்ற மக்களோடு இயேசுவைப் பற்றி பேசுவேன், என்னால் முடியாத நாட்களில் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன்” என்றாள்.
பவுல் சிறைச்சாலையிலிருக்கும் போதுதான் பிலிப்பியருக்கு எழுதுகின்றார். நடைமுறையிலுள்ளவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் போது தான், அது அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் துன்பங்களைச் சகிக்கும் போது, அவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கிறது. நம்மைப் பரலோகம் வரவேற்பதாகத் தோன்றினாலும், இந்த உலகில் நாம் செலவிட்ட நேரம் தேவனுக்கு முக்கியமானது.
பவுலைப் போன்று அடாவும் தன்னுடைய ஒவ்வொரு மூச்சையும், தேவனுக்குச் சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக உணர்கின்றார். எனவே அடா தன் நாட்களை பிறரை நேசிப்பதிலும், தன்னுடைய இரட்சகரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் செலவிடுகின்றாள்.
நம்முடைய இருண்ட நாட்களிலும், கிறிஸ்தவர்கள் நித்தியத்தில் தேவனோடு மகிழ்ச்சியில் வாழ்வோம் என்ற வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்ளலாம். இங்கு வாழும் போதும் நாம் அவரோடுள்ள உறவினை அநுபவிக்கின்றோம். அவர் நம்முடைய ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மணித்துளியையும் முக்கியமானதாக்கித் தருவார்.
குறைவுள்ள நியாயத்தீர்ப்பு
என்னுடைய கைப்பேசியைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போதே, தெருவில் நடந்து செல்கின்ற எவரையும் சரியாகக்கணித்து விடுவேன். எப்படி இவர்கள் தங்களை மோதவருகின்ற வாகனத்தைக் குறித்துத் தெரியாமலிருக்க முடியும்? நான் என்னையே கேட்டுக் கொள்வேன். அவர்கள் தங்கள் பாதுகாப்பைக் குறித்து கவனம் கொள்வதில்லையா? ஒருநாள், ஓர் நடைப்பாதையின் நுழைவாயிலைக் கடக்கும் போது நான் ஒரு குறுஞ் செய்தியில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது எனது இடப்புறமாக வந்த ஒரு வாகனத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஆனால், அந்த ஓட்டுநர் என்னைக் கவனித்து, சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு என் நன்றி. நான் என்னை நியாயப்படுத்தி, பிறரை குற்றப்படுத்தி பேசியது எனக்கே வந்துவிட்டது. நான் பிறரை நியாயந்தீர்த்தேன். அதே தவறை நான் செய்து அதே தீர்ப்புக்குள்ளானேன்.
என்னுடைய இந்த மாய்மாலமான எண்ணத்தைக் குறித்துத்தான் இயேசுவும் மலைப்பிரசங்கத்தில், “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்” (மத். 7:5) என்றார். என் கண்ணில் ஒரு பெரிய கட்டை போன்ற ஒரு குருட்டு பகுதியிருக்கின்றது. அதன் வழியே நான் பிறரை என்னுடைய குறைவான நியாயத்தீர்ப்பின் மூலம் குற்றப்படுத்துகிறேன்.
“நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” (7:2) எனவும் இயேசு கூறுகின்றார். நான் ஒரு காரின் முன்புறம் நடந்து சென்ற போது, விரைவாக நிறுத்திய அந்த ஓட்டுனரின் முகத்திலிருந்த வெறுப்படைந்த பார்வையை நினைத்துப் பார்த்தேன். தங்கள் அலைபேசியில் மூழ்சியிருக்கும் பிறர் மீது நான் செலுத்தும் வெறுப்படைந்த பார்வையை அது நினைவுபடுத்தியது.
நாம் ஒருவருமே நேர்மையானவர்களல்ல. ஆனால், நாம் சில வேளைகளில் அதை மறந்து, பிறரைத் தீர்ப்பிட அவசரப்படுகின்றோம். நம் அனைவருக்கும் தேவனுடைய கிருபை வேண்டும்.
குழப்பத்தின் மத்தியில் ஆசீர்வாதம்
“நான் இந்த குழப்பத்தினுள் வந்து விட்டேன். எனவே நான் இதைவிட்டு வெளியேறிவிடுகிறேன்” என நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. நான் கிருபையின் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தும், எனக்குத்தகுதியிருக்கும் போது மட்டுமே தேவனுடைய உதவி எனக்குக் கிட்டும் என சில வேளைகளில் நான் நினைக்கும்படி தூண்டப்படுகிறேன்.
தேவன் முதலாவதாக யாக்கோபைச் சந்தித்தவிதம் இதற்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு, இந்த எண்ணத்தை உண்மையற்றதாக்குகிறது.
யாக்கோபு தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வாழ்வை மாற்றுவதற்கு முயற்சிப்பதில் செலவிடுகின்றான். அவன் இரண்டாவது மகனாகப் பிறக்கின்றான். ஆனால், அந்த நாட்களில் தந்தையின் ஆசீர்வாதம் மூத்தவனுக்குத்தான் சேரும். மூத்தவன் தான்’ செழிப்பான வாழ்வைப் பெறுவான் என நம்பப்பட்டது.
எனவே யாக்கோபு தன்னுடைய தந்தையின் ஆசீர்வாதத்தை எப்படியாகிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்படுகின்றான். ஏமாற்றுவதன் மூலம் அதில் வெற்றியும் பெறுகின்றான். தன்னுடைய சகோதரனுக்குள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றான் (ஆதி. 27:19-29).
ஆனால், அதன் விளைவாக குடும்பம் பிரிக்கப்படுகிறது. யாக்கோபு கோபத்திலிருக்கும் தன்னுடைய சகோதரனிடமிருந்து தப்பி ஓடுகிறான் (வச. 41-43). இரவு வந்த போது (28:11) யாக்கோபு ஓர் ஆசீர்வாதமான வாழ்க்கையிலிருந்து தான் எத்தனை தூரத்திலிருக்கின்றான் என்பதை உணர்ந்திருப்பான்.
அங்கு தான் யாக்கோபு தான் செய்து வந்த எத்தனங்களையெல்லாம் தள்ளிவிட்டு தேவனைச் சந்திக்கின்றான். தேவன் அவனை ஆசீர்வதிக்க வேண்டுமாயின் தீவிரமான திட்டங்கள் தேவையில்லை என்பதை அவனுக்குத் காண்பிக்கின்றார். அவன் உலகப்பிரகாரமான செல்வங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தேவனிடம் வந்துள்ளான். உலக செல்வங்களையெல்லாம் விட மேலான ஒரு நோக்கத்தை கண்டு கொண்டு (வச. 14) அவனை விட்டு என்றும் நீங்காத தேவனைப் பற்றிக் கொண்டான் (வச. 15).
இது யாக்கோபு தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கற்றுக்கொண்ட பாடம்.
இது நமக்கும் தான். நாம் எத்தனையோ மன வருத்தங்களைச் சுமந்து கொண்டிருக்கலாம். தேவன் நம்மை விட்டு தூர இருப்பதாக நினைக்கலாம். ஆனால், அவர் நம் அருகிலேயே இருக்கின்றார். அவர் நம்மை அருமையாக வழிநடத்தி, நம் குழப்பங்களிலிருந்து வெளியேற்றி அவருடைய ஆசீர்வாதத்திற்குள் கொண்டு வருகின்றார்.
நம்முடைய பாதுகாப்பான இடம்
என்னுடைய முதல் வேலையை நான் ஓர் உணவகத்தில் ஆரம்பித்தேன். ஒரு சனிக்கிழமை மாலையில் ஒரு மனிதன் எங்கள் உணவகம் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். பின்னர் நான் வேலையிலிருந்து வெளியே வருகின்ற நேரம் எது என்று அவன் என்னிடம் கேட்டான். அது எனக்கு சற்று பயமாக இருந்தது. நேரமாகிய போதும் அவன் பொரியல்களையும், ஒரு பானத்தையும் கட்டளையிட்டான். மேலாளராலும் அவனை வெளியேற்ற முடியவில்லை. நான் மிக அதிக தூரத்திலிருந்து வராவிடினும், என்னுடைய வீட்டிற்குச் செல்ல இரண்டு இருண்ட வாகன நிறுத்தும் இடங்களையும், ஒரு பரந்த மணல்வெளியையும் கடந்து செல்லவேண்டும். கடைசியாக நடு இரவு நேரத்தில் நான் அலுவலகத்திலுள்ள தொலைபேசியில் பேசச் சென்றேன்.
தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்ட என்னுடைய தந்தை, தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து ஐந்து நிமிடத்திற்குள் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.
என்னுடைய தந்தை எப்படியாயினும் அந்த இரவில் வந்து உதவுவார் என்று எனக்கிருந்த உறுதி, சங்கீதம் 91ல் நாம் வாசிக்கின்ற உத்தரவாதத்தை நினைவுபடுத்தியது. நம் பரலோகத் தந்தை எப்போதும் நம்மோடிருக்கின்றார். நாம் குழப்பத்திலோ, பயத்திலோ அல்லது தேவையிலோ இருக்கும் போது நம்மை பாதுகாக்கின்றார். நம்மீது கரிசனையுள்ளவராயிருக்கின்றார். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன்” (சங். 91:5) என்று கூறுகின்றார். அவர் நாம் பாதுகாப்பாக ஓடி ஒதுங்குகின்ற இடம் மட்டுமல்ல, அவர் நம்முடைய தங்கும் இடம் (வச. 1) நாம் அடைக்கலமாகத் தங்கிக்கொள்ளும் கன்மலையாயிருக்கின்றார் (வச. 2).
நம்முடைய பயம், அபாயம், அல்லது நிலையற்ற நேரங்களில், தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி அவரை நோக்கிக் கூப்பிடும் போது, அவர் நமக்கு மறு உத்தரவு அருளிச் செய்து, ஆபத்தில் நம்மோடிருந்து நம்மைத் தப்புவிக்கின்றவராயிருக்கிறார் (வச. 14-15). தேவன் நமக்குப் பாதுகாப்பான தங்குமிடமாயிருக்கிறார்.