விலங்குகளைக் கேளுங்கள்
காப்பாற்றப்பட்ட ஒரு மொட்டைத் தலைக் கழுகை மிக அருகில் பார்த்தபோது, எங்கள் பேரப்பிள்ளைகள் அதிகக் குதூகலமடைந்தார்கள். அதை தொட்டுப்பார்க்கவும் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. மிருகக் காட்சி சாலையின் தன்னார்வலர் கரத்தில் அமர்ந்திருந்த வலிமையான அந்தக் கழுகின் இறக்கை ஆறரை அடி நீளம் கொண்டது என்று தெரிந்தபோது அதிக ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதன் எலும்புகள் திண்ணமாக இல்லாத காரணத்தால் அதன் எடை வெறும் மூன்றரை கிலோ மட்டுமே.
கீழ் நோக்கிப் பாய்ந்து தன் கூர்நகங்களில் இரையைப் பிடிக்க ஏதுவாக ஒரு ஏரியின் மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகை முன்பு பார்த்ததை இந்தக் கழுகு எனக்கு நினைவுபடுத்தியது. முன்பு ஒரு முறை ஒரு குளத்தின் கரையில் அசையாமல் நின்று கொண்டிருந்த நீல நாரையைப் பார்த்ததை மனக் கண் முன் கொண்டுவந்தேன். அது தன்னுடைய நீண்ட அலகை தண்ணீருக்குள் அமிழ்த்தி இரையைப் பிடிக்கத் தயாராக நின்றது. நமது எண்ணங்களை நம்மை சிருஷ்டித்தவரை நோக்கித் திருப்ப இந்த இரண்டு பறவைகளைப் போல ஏறத்தாழ 10,000 வகைப் பறவைகள் உள்ளன.
யோபின் புத்தகத்தில், அவரது கஷ்டங்களுக்கான காரணங்களைப் பற்றி அவர் நண்பர்கள் விவாதிக்கும்போது, “சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (11:5-9) என்று கேட்கின்றனர். அதற்கு யோபு, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்” (யோபு 12:7) என்று பதில் கூறுகிறார். கடவுள் தம் சிருஷ்டிப்புகளை உருவாக்கி, பராமரித்து, ஆளுகை செய்வதை விலங்குகள் பறைசாற்றுகின்றன: “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (வச. 10).
நமது சூழ்நிலைகள் புரியாதபோதும். கடவுள் பறவைகளைப் பராமரிப்பதால், உங்களையும், என்னையும் நேசிக்கிறார், பராமரிக்கிறார் என்று உறுதிகொள்ளலாம். உங்களைச் சுற்றிப்பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
நம்முடைய பாரத்தைச் சுமந்தார்
தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு கட்டணங்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அதிகமாக இருக்கும். ஆனால் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த கியரன் ஹீலிக்கு வந்த தண்ணீர் கட்டணம் இதயத்துடிப்பே நின்றுவிடும்படி இருந்தது. அவர் 1,000 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்று அவருக்கு வந்த செய்தி கூறியது! அந்த அளவிற்கு தண்ணீரை முந்திய மாதத்தில் பயன்படுத்தவில்லை என்பதை ஹீலி அறிந்ததால், கட்டணத்தைத் தவணை முறையில் கட்டலாமா என்று விளையாட்டாகக் கேட்டார்.
1,000 கோடி டாலர் கடன் என்பது தாங்க முடியாத பாரம். ஆனால் நம் பாவங்களினால் நாம் சுமக்கவேண்டிய உண்மையான, அளவுக்கதிகமான பாரங்களோடு ஒப்பிடும்போது அது மிகவும் சாதாரணமானது. நமது பாவத்தின் பாரங்களையும், அவற்றின் பின் விளைவுகளையும் நாமே சுமக்க முயற்சிக்கும்போது, அது நமக்கு சோர்வை ஏற்படுத்தி, நம்மை குற்ற உணர்வாலும், அவமானத்தாலும் நிறைக்கிறது. நம்மால் அந்த பாரத்தை சுமக்க முடியாது என்பதே உண்மை.
நாமே அந்த பாரங்களை சுமக்க வேண்டியதில்லை. பேதுரு விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியதுபோல, கடவுளின் குமாரனாகிய குற்றமில்லாத இயேசு மட்டுமே நமது பாவங்களின் பாரங்களையும் அதன் பின் விளைவுகளையும் சுமக்க முடியும் (1 பேதுரு 2:24). இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது தவறுகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு மன்னிப்பை அருளினார். அவர் நமது பாரங்களை சுமந்ததினால், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளைப் பெறவேண்டியதில்லை.
“முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த வீணான நடத்தையில்” (1:18), பயத்தோடும், குற்ற உணர்வோடும் வாழ்வதைத் தவிர்த்து, அன்பும், சுதந்திரமும் கொண்ட புது வாழ்வை நாம் வாழ முடியும் (வச. 22-23).
பாதுகாப்பாக இயேசுவின் கரங்களில்
வெளியே வானம் இருண்டு, வானிலை அச்சுறுத்தியது. எனது அலைபேசியில் வந்த எச்சரிப்பு செய்தி திடீரென்று வெள்ளம் வரலாம் என்று அறிவித்தது. வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் எங்கள் வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்தன. பள்ளிப் பேருந்து அந்த இடத்தில் பிள்ளைகளை இறக்கி விடுவதால், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்திருந்தனர். பேருந்து வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் தன் காரில் இருந்து இறங்கி, பின்புறமிருந்து ஒரு குடையை எடுத்தார். தன் சிறு பிள்ளையை அழைத்துக்கொண்டு, அவள் காரில் ஏறும்வரை, மழையில் நனையாதபடி குடையைப் பிடித்து வந்தாள். ஒரு நல்ல தாயாக, தன் பிள்ளையை பாதுகாப்புடன் நடத்திய அந்த அழகிய தருணம், நமது பரம தந்தையின் அக்கறையை எனக்கு நினைவுபடுத்தியது.
ஏசாயா தீர்க்கதரிசி கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையையும், கடவுளின் ஜனங்களுக்கு அதன் பின்னான பிரகாசமான நாட்களையும் முன் அறிவித்தார் (ஏசாயா 40:1-8). பர்வதத்தில் இருந்து வரும் பரலோக அறிவிப்பு கடவுளின் வல்லமையான பிரசன்னத்தையும், அக்கறையையும் இஸ்ரவேலர்களுக்கு உறுதிப்படுத்தியது. கடவுளின் அதிகாரம் அப்போது இருந்ததுபோல இப்போதும் இருப்பதால், கவலைப்படுபவர்கள் பயப்படாமல் இருக்கலாம் (வச. 9-10). மேய்ப்பர்கள் அளிக்கும் பாதுகாப்பைப் போன்ற கடவுளின் பாதுகாப்பு குறித்த செய்தியும் அந்த அறிவிப்பில் இருந்தது (வச. 11): ஆட்டுக்குட்டிகள் மேய்ப்பரின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும். கறவலாடுகள் மெதுவாக நடத்தப்படும்.
கடினமான சூழ்நிலைகள் கொண்ட உலகில், பாதுகாப்பு, அக்கறை குறித்த இதுபோன்ற வர்ணனைகள், நாம் தன்னம்பிக்கையுடன் கடவுளை நோக்கிப்பார்க்க உதவுகின்றன. கர்த்தரை முழுமையாக நம்புபவர்கள், அவரில் பாதுகாப்பையும், புது பெலனையும் பெற்றுக்கொள்வார்கள் (வச. 31).
இயேசுவின் வாழ்க்கை சம்பவங்கள்
சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரின் சிறிய நூலகத்துக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் வளர் இளம் பருவத்தினருக்கான புத்தகங்கள் இருந்த பகுதியைப் பார்த்தபோது, அதில் இருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கமுடியும் என்று நினைத்தேன். என்னுடைய ஆர்வத்தில், நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கும் வழக்கம் இருப்பதை மறந்துவிட்டேன். நான் அதிக முயற்சி செய்தாலும், மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால் என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை.
அதிகமான புத்தக அலமாரிகளில், புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. யோவான் அப்போஸ்தலர் இத்தனை புத்தகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய யோவான்; 1, 2 & 3 யோவான்; மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டன.
இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியங்களை (1 யோவான் 1:1-4) அருகில் இருந்து பார்த்ததை கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க, ஆவியானவரால் ஏவப்பட்டு, யோவான் அந்த புத்தகங்களை எழுதினார். ஆனால் இயேசுவின் ஊழியங்களின், அவர் போதனைகளின் ஒரு சிறு பகுதியே யோவானின் புத்தகங்களில் உள்ளன. இயேசு செய்த அனைத்தையும் எழுதினால் “எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று” (யோவான் 21:25) யோவான் கூறினார்.
யோவான் சொன்னது இன்றைக்கும் பொருந்தும். அநேக புத்தகங்கள் இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவின் அன்பையும், கிருபையையும் குறித்த ஒவ்வொரு சம்பவத்தையும் இந்த உலகத்தின் நூலகங்களில் அடக்கமுடியாது. மற்றவர்களோடு பகிர்வதற்கு நமது சொந்த அனுபவங்களும் உண்டு என்பதாலும், அவற்றை நாம் சதாகாலமும் பறைசாற்ற முடியும் என்பதாலும் நாம் சந்தோஷப்படலாம் (சங்கீதம் 89:1).
பாடலோடு தன்னைச் சுடும் கழுவை எதிர்கொள்ளுல்
போதைப் பொருட்கள் கடத்தலில் சிக்கிய இரண்டுபேர், மரண தண்டனை பெற்று, பத்து ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். அவர்கள் சிறையில் இருந்தபோது, இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றி தெரிந்துகொண்டனர். கடவுள் தங்கள்மீது அன்பாய் இருக்கிறார் என்று தெரிந்தபோது, அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் தண்டனையை நிறைவேற்ற, துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு முன் அவர்கள் நிறுத்தப்பட்டபோது, அவர்கள் பரமண்டல ஜெபத்தை ஏறெடுத்து, “கிருபை, கிருபை” (Amazing Grace) என்ற பாடலைப் பாடினார்கள். கடவுள் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக, ஆவியானவரின் வல்லமை மூலம், அசாத்திய தைரியத்துடன் மரணத்தை எதிர்கொண்டனர்.
தங்கள் இரட்சகர் இயேசுவின் உதாரணத்தை அவர்கள் பின்பற்றினார்கள். தன் மரணம் நெருங்குவதை அறிந்த இயேசு, மாலையில் சிறிது நேரம் தன் நண்பர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்திலும் அவர் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்ன பாடினார் என்பது அதிலும் விசேஷமான காரியம். அன்றைய இரவில், இயேசுவும் அவர் நண்பர்களும் பஸ்கா உணவை சாப்பிட்டார்கள். பொதுவாக பஸ்கா உணவு சாப்பிட்டதும், துதி என்ற பொருள்படும் ஹாலல் (Hallel) என்ற 113 முதல் 118 வரையான சங்கீதங்களைப் பாடுவார்கள். அன்று இரவு, மரணம் நெருங்கி இருப்பதை அறிந்த இயேசு, தன்னை சுற்றிக்கொண்ட “மரணக் கட்டுகள்” பற்றிப் பாடினார் (சங்கீதம் 116:3). ஆனாலும், கடவுளின் கிருபையைத் துதித்து (117:2), அவர் இரட்சிப்புக்கு நன்றி செலுத்தினார் (118:14). இந்த சங்கீதங்கள் சிலுவையில் அறையப்படும் முன், இயேசுவுக்கு அதிக ஆறுதலைத் தந்தன.
மரணத்துக்கு ஒப்புவிக்கப்படுவதற்கு இயேசு தவறு எதுவும் செய்யவில்லை. ஆனாலும், கடவுள்மேல் அவர் வைத்திருந்த அதிக நம்பிக்கையின் காரணமாக, மரணத்தை எதிர்கொள்ளும்போதும், கடவுளின் அன்பைக் குறித்துப் பாடினார். எந்த விதமான சோதனைகளை நாம் சந்தித்தாலும், இயேசுவால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.
வார்த்தைகளுக்கும் அதிகமாக
ஒரு அர்ப்பணிப்பு விழாவில், பிராந்திய ஆப்பிரிக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் பிரதி ஒன்று அந்தப் பகுதியின் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டும் விதமாக, அந்தத் தலைவர் வேதாகமத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, “ஆண்டவர் எங்கள் மொழியை புரிந்து கொள்கிறார்! இப்போது எங்கள் தாய் மொழியிலேயே நாங்கள் வேதாகமத்தை வாசிக்கமுடியும்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
நமது மொழி எதுவாக இருந்தாலும், நம் பரம பிதா அதை புரிந்துகொள்கிறார். ஆனால் பல வேளைகளில் நமது இருதயத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கங்களை அவரிடம் வெளிப்படுத்த முடிவதில்லை. நாம் என்ன மன நிலையில் இருந்தாலும், ஜெபிக்கும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். இந்த உலகத்தின் வேதனைகள் மற்றும் நமது துன்பங்கள் பற்றி “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் நமக்காக இடைபடுவதோடு ஒப்பிடுகிறார். “ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 26) என்று கூறுகிறார்.
கடவுளின் பரிசுத்த ஆவியானவர் நம்மை முற்றிலும் அறிவார். நமது வாஞ்சைகள், நமது இருதயத்தின் நினைவுகள், நம் மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத வார்த்தைகள் ஆகிய அனைத்தையும் அவர் அறிவார். நாம் கடவுளோடு பேச அவர் உதவுகிறார். குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவுகிறார் (வச. 29).
நமது பரம பிதா நம் மொழியை புரிந்துகொள்கிறார். அவரது வார்த்தையாகிய வேதாகமம் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் சிரத்தை இல்லாமலோ, சிறியதாகவோ ஜெபம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக பிதாவோடு பேசி, நமக்கு உதவுகிறார். ஜெபத்தின்மூலம் நாம் அவரோடு பேச அவர் வாஞ்சையாய் இருக்கிறார்.
பாடும் நம் பிதா
பாடுவது எவ்வளவு முக்கியமானது என்று எங்கள் குழந்தைகள் பிறக்கும் முன் எனக்கோ, என் மனைவிக்கோ யாரும் சொல்லவில்லை. என் பிள்ளைகளுக்கு இப்போது முறையே ஆறு, எட்டு, பத்து வயதாகிறது. ஆனால் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு இரவும் நானும், என் மனைவியும் மாறி மாறி அவர்களைத் தொட்டிலில் போட்டு ஆட்டி, தூங்க மாட்டார்களா என்று ஏங்குவோம். அவர்களை சீக்கிரம் தூங்க வைக்கும் எண்ணத்தில், தொட்டிலை ஆட்டுவதிலும், தாலாட்டுப் பாடுவதிலும் பல மணி நேரம் செலவழித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு இரவும் என் குழந்தைகளுக்காக நான் பாடும்போது, ஏற்பட்ட ஒரு மாறுதல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது: அவர்கள்மீது நான் வைத்திருந்த அன்பும், சந்தோஷமும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு பல மடங்கு அதிகரித்தது.
நம் பரம பிதா தன் பிள்ளைகளுக்காக மகிழ்ந்து பாடுவார் என்று வேதாகமம் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? பாட்டின்மூலம் நான் என் குழந்தைகளை அமர்த்த முயன்றதுபோல, நமது பரம தந்தை தன் மக்களுக்காகப் பாடுகிறார் என்ற வர்ணனையுடன் செப்பனியா தன் புத்தகத்தை முடிக்கிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17).
செப்பனியா தீர்க்கதரிசியின் புத்தகத்தின் பெரும்பகுதி கடவுளை நிராகரித்தவர்களுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிக்கையாகும். ஆனால் செப்பனியா தன் புத்தகத்தை நியாயத்தீர்ப்புடன் முடிக்கவில்லை. கடவுள் தன் மக்களை அவர்கள் துன்பங்களில் இருந்து மீட்பது மட்டுமல்லாமல் (வச.19-20), அவர்களை நேசிப்பதாகவும், அவர்கள்பேரில் மகிழ்ந்து பாடுவதாகவும் முடிக்கிறார் (வச. 17).
நம் ஆண்டவர் வல்லமையான இரட்சகர் மட்டுமல்லாமல் (வச.17), நமக்காக அன்பின் பாடல்களைப் பாடும் நம் நேச தகப்பனாகவும் இருக்கிறார்.
அன்பான உபசரிப்பு
சமீபத்திய விடுமுறைப் பயணத்தின்போது, நானும் என் மனைவியும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு அரங்கைப் பார்க்கச் சென்றோம். அரங்கின் வாயில்கதவு நன்றாக திறந்து இருந்ததால், பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டோம். அந்தத் திடலையும், அழகாகப் பராமரிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களையும் பார்த்து ரசித்தோம். நாங்கள் பார்த்து முடித்தபோது, ‘இந்த மைதானத்திற்குள் வர உங்களுக்கு அனுமதி இல்லை’ என்று ஒருவர் சற்றுக் கடுமையாகக் கூறினார். அவர் அப்படிக் கூறியது நாங்கள் வெளி ஆட்கள் என்று உணர்த்தி, எங்களுக்கு வருத்தத்தைத் தந்தது.
அந்த விடுமுறையின்போது ஒரு தேவாலயத்திற்கும் சென்றோம். ஆலயத்தின் வாசலும் முழுதும் திறந்திருந்ததால் நாங்கள் உள்ளே சென்றோம். ஆனால் என்ன ஒரு வித்தியாசம்! பலர் எங்களை அன்பாக வரவேற்றனர். நாங்கள் வெளி ஆட்கள் என்ற உணர்வே இல்லை. ஆலய ஆராதனை முடிந்தபோது, எங்களை அங்கே இருந்தவர்கள் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள் என்ற உணர்வுடன் வெளியே வந்தோம்.
ஆனால் பல சமயங்களில் “உங்களுக்கு இங்கே அனுமதி இல்லை” என்ற உணர்வை ஆலயத்திற்கு வருபவர்கள் பெறும்படியாக இருக்கிறது என்பது மிக வருத்தமான உண்மை. ஆனால் வேதாகமம் நாம் அனைவரையும் உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது. இயேசு நம்மைப் போல நாம் பிறரையும் நேசிக்கவேண்டும் என்று கூறுகிறார். அவர்களை உபசரித்து, நம் வாழ்வில், நம் தேவாலயங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே அது குறிக்கிறது (மத்தேயு 22:39). எபிரேயரில் “அந்நியரை உபசரிக்கும்படி” அழைக்கப்படுகிறோம் (13:2). சமூகத்தில் பின் தங்கியவர்கள், மற்றும் உடல் ஊனமுற்றவர்களிடத்தில் அன்பாக இருக்கும்படி லூக்காவும், பவுலும் நம்மை அறிவுறுத்துகிறார்கள் (லூக்கா 14:13-14; ரோமர் 12:13). விசுவாசிகளிடத்தில் அன்பு செலுத்த நமக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது (கலாத்தியர் 6:10).
கிறிஸ்துவைப் போல் நாம் அனைத்து மக்களையும் உபசரிக்கும்போது, நமது இரட்சகரின் அன்பையும், பரிவையும் நாம் பிரதிபலிக்கிறோம்.
விண்மீன் பிரகாசம்
“ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” என்பது ஒரு ஆங்கில தாலாட்டுப் பாடல். நட்சத்திரங்கள் “உலகத்திற்கு மேலே உயரத்தில்” இருக்கின்றன என்று அதிசயத்தக்க கடவுளின் பிரபஞ்சத்தைப் பற்றிய இந்த வரிகளை ஜேன் டேய்லர் முதலில் ஒரு கவிதையாக எழுதினார். அதிகம் அறியப்படாத மற்ற சரணங்களில் “உன்னுடைய வெளிச்சமான சிறிய பொறி, இருட்டில் செல்லும் பயணிக்கு ஒளி” என்று நட்சத்திரம் ஒரு வழிகாட்டியாக சித்தரிக்கப்படுகிறது.
பிலிப்புவில் உள்ள விசுவாசிகள் தங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்கும்போது “சுடர்களைப்போல பிரகாசித்து” குற்றமற்றவர்களும் கபடற்றவர்களுமாக இருக்கும்படி பவுல் பிலிப்பியரில் அறைகூவல் விடுக்கிறார் (வச. 15-16). நாம் எப்படி நட்சத்திரங்களைப் போல் பிரகாசிக்க முடியும் என்று நினைக்கிறோம். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நம் “ஒளி” வெளிச்சமாக இருக்கிறதா என்று நம்ப முடியாமல் தவிக்கிறோம். நாம் குறைவுள்ளவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நட்சத்திரங்கள் நட்சத்திரங்களாக இருக்க முயற்சி செய்வதில்லை. அவை நட்சத்திரங்களாக இருக்கின்றன, அவ்வளவே. ஒளி நம் உலகத்தை மாற்றுகிறது. அது நம்மையும் மாற்றுகிறது. ஆண்டவர் உலகத்திற்கு ஒளியைத் தந்தார் (ஆதியாகமம் 1:3). இயேசுவின் மூலமாக, கடவுள் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய ஒளியைத் தருகிறார் (யோவான் 1:1-4).
கடவுளின் ஒளியைக் கொண்டுள்ள நாம், நம்மைக் காண்பவர்கள் ஒளியைக் கண்டு, அதன் மூல ஆதாரத்தை நோக்கி ஈர்க்கப்படும்படி, ஒளிவீச வேண்டும். இரவில், வானத்தில் நட்சத்திரம் எப்படி எளிதாக ஒளிவீசுகிறதோ, நம் ஒளியும், அது ஒளி என்கிற காரணத்தினாலேயே ஓரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் இருட்டான உலகில் ஒளி வீசும்போது, “ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு” என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்றுகிறோம். இதனால் நம் நம்பிக்கையின் மூல ஆதாரமான இயேசுவிடம் நாம் மற்றவர்களை ஈர்க்கிறோம்.