வகை  |  odb

தகப்பனில்லாமை இனி இல்லை

“தகப்பனில்லாத தலைமுறை” என்னும் ஜான் சோவர்ஸின் புத்தகத்தில், “இதுவரையில்லாத எந்த தலைமுறையைக் காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையில் 25 மில்லியன் பிள்ளைகள் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகின்றனர்” என்று எழுதுகிறார். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், வீதியில் நடக்கும்போது ஒருவேளை என்னுடைய அப்பா எனக்கு எதிரே வந்து என்னை மோதினாலும், அவர்தான் என்னுடைய அப்பா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் சிறுபிள்ளையாயிருக்கும்போதே என்னுடைய பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகையினால், பல ஆண்டுகளாக நான் தகப்பனில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். என் பதிமூன்றாம் வயதில் பரமண்டல ஜெபத்தைக் கேட்க நேர்ந்தது (மத்தேயு 6:9-13). “பூமியில் நீ தகப்பனில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தேவன் உன் பரலோகத் தகப்பனாயிருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

மத்தேயு 6:9இல் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம்.” 7ஆம் வசனத்தில் ஜெபத்தில் “வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் எப்படி தொடர்புடையதாகிறது என்று நாம் ஆச்சரியப்படலாம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அவருக்கு ஞாபகம் இருக்கும். நாம் விளக்கத் தேவையில்லை, அவருக்குப் புரியும். அவர் இரக்கமுள்ளவர், அவரின் நன்மைகளைக் குறித்து நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவருக்கு முடிவு ஆரம்பத்திலேயே தெரியும் என்பதினால் அவர் கிரியை செய்யும் காலமே சரியானது. 

தேவன் நம் தகப்பனாய் இருப்பதால் அவரை செயல்பட வைப்பதற்கு “வீண்வார்த்தைகளை” (வச. 7) நாம் பயன்படுத்தத் தேவையில்லை. ஜெபத்தில், நம்மை நேசிக்கிற, நம்மேல் அக்கறையுள்ள நம்மை கிறிஸ்துவின் மூலம் பிள்ளையாக்கிக் கொண்ட, நம் அப்பாவிடம் பேசுகிறோம். 

சுவிசேஷம் பகிர்தல் என்றால் “என்ன”

மக்களின் முன்னிலையில் பேசும்போது ஏற்படும் பயத்தை எப்படி மேற்கொள்வது என்று மகேஷ் என்னிடத்தில் ஆலோசனைக் கேட்டான். மக்களுக்கு முன்பு பேசுவதென்றாலே எல்லோரைப் போலவும் இருதயம் படபடக்கிறது; நாவு வறண்டு, வாய் ஒட்டிக்கொள்கிறது; முகம் சிவக்கிறது. “கிளாசோஃபோபியா” என்றழைக்கப்படும் இந்த வகையான பயம் சமுதாயத்தில் பொதுவானது. மரண பயத்தைக் காட்டிலும் மக்களுக்கு முன்பாகப் பேசுவது கொடுமையானது என்று வேடிக்கையாகவும் சொல்லுவார்கள். மகேஷின் இந்த குறைபாட்டை நிவிர்த்தி செய்வதற்கு, எப்படி பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசும்படி ஆலோசனைக் கொடுத்தேன். 

சொல்லுபவரின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து சொல்லப்படும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முறையை பின்பற்றியே பவுல் அப்போஸ்தலரும் மக்களை தேவனண்டை வழிநடத்தியுள்ளார். கொரிந்திய சபைக்கு எழுதும்போது, “மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமாயிராமல்” (1 கொரி. 2:5), கிறிஸ்துவையும் அவருடைய சிலுவை மரணத்தையும் மையப்படுத்துவதாக அறிவிக்கிறார். தன்னுடைய பேச்சுத் திறமையை வளர்க்கும்படியல்லாமல், தன்னுடைய செய்தியை அதிகாரமுள்ளதாய் மாற்றும்படிக்கே ஆவியானவரை பவுல் நம்புகிறார். 

தேவனை தனிப்பட்ட வகையில் அறிந்துகொள்ளும்போது, அவரைக் குறித்து நம்மை சுற்றியுள்ளவர்களிடம் அறிவிக்க தவறமாட்டோம். ஆயினும் சிலநேரங்களில் பேச்சுக் குறைபாட்டின் காரணமாய், துணிந்து பேசமுடியாமல் கூச்சப்பட்டுத் தயங்குகிறோம். “என்ன” என்னும் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும், தேவன் யார் என்பதையும் அவருடைய ஆச்சரியமான கிரியைகளையும், பவுலைப் போல கூச்சமில்லாமல் துணிச்சலாய் நம்மால் பிரசங்கிக்க முடியும். 

தேவனை மட்டும் நம்புதல்

சிலர் நம்மைப் பார்த்து, “இந்த அதிர்ஷ்டம் தான்” எனக்கு நன்மையைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். சில குறிப்பிட்ட மீன் வகைகள், நாணயங்கள், குடும்ப வாரிசுகள், அல்லது மங்களகரமான நாள் என்று பல காரியங்களை தங்கள் அதிர்ஷ்டமாய் கருதலாம். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது என்று நம்பப்படும் பொருட்கள் மக்களுடைய கவனத்தை அதிகமாய் ஈர்க்கிறது. 

அதிர்ஷ்டத்தை நம்புகிற இந்த நம்பிக்கை உலகத்தின் எல்லா கலாச்சாரத்திற்கும் பொதுவானது. அது நம்மை தேவனை நம்புவதிலிருந்து வழிவிலகச்செய்து, பணத்தையோ, மனித பெலத்தையோ, மார்க்க சடங்காச்சாரங்களையோ நம்புவதற்குத் தூண்டுகிறது. இஸ்ரவேலர்கள் அசீரியர்களால் அச்சுறுத்தப்படும்போது, தேவனிடத்திற்கு திரும்புவதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடின தன்னுடைய ஜனத்திற்கு தேவன் இதை எச்சரிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள்!” (ஏசாயா 30:15-16).

தேவன் சொன்னதுபோல அவர்களின் ஓட்டம் முடிந்துவிட்டது; யூதேயா அசீரியாவினால் மேற்கொள்ளப்பட்டது. “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” என்றும் தேவன் தன் ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். நம்முடைய கொஞ்சத்தில் தேவனை நம்பும்போது, தேவன் தன்னுடைய கரங்களை விரித்து நம்மிடத்திற்கு திரும்புகிறார். “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18). 

சுத்திகரிக்கும் முறை

கை கழுவும் தொட்டியில் தங்கள் கைகளை கழுவும்போது, இரண்டு சிறுவர்களும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை இரண்டுமுறை பாடினார்கள். “கைகளில் உள்ள கிருமிகளை கழுவி சுத்தம்செய்வதற்கு அவ்வளவு நேரம் தேவைப்படும்” என்று அவர்களுடைய அம்மா சொல்லியிருக்கிறார்கள். கோவிட்-19 தொற்று பரவத்துவங்கும் முன்னரே, தங்கள் கைகளை நன்றாய் கழுவி சுத்தம்செய்ய இவர்கள் பழகிக்கொண்டனர். 

இந்த தொற்று பரவிய நாட்களில், நம்மைச் சார்ந்த அனைத்தையும் சுத்தமாக வைக்கும் கடினமான பழக்கத்தைக் கற்றுக்கொண்டோம். ஆனால் நம்முடைய பாவத்தைக் கழுவி சுத்திகரிப்பது, நம்மை தேவனிடமாய் திருப்பும். 

யாக்கோபு, ரோம சாம்ராஜ்யம் எங்கிலும் சிதறிக்கிடந்த கிறிஸ்தவர்களை தேவனிடமாய் திருப்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். சண்டை சச்சரவுகள், சுயமேம்பாட்டு யுத்தங்கள், ஆஸ்திகள், உலக இன்பங்கள், பணம், புகழ், ஆகியவைகள் அவர்களை தேவனுக்கு விரோதிகளாய் மாற்றிவிட்டது. ஆகையினால் யாக்கோபு, “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்... பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார் (யாக்கோபு 4:7-8). ஆனால் அதை செய்வது எப்படி? 

“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (வச. 8). இந்த வார்த்தைகள் தேவனிடமாய் திரும்புவதின் அவசியத்தை உணர்த்துவதின் மூலமாய், பாவத்தை வேறோடு அகற்றும் கிருமிநாசினியாய் செயல்படுகிறது. யாக்கோபு தொடர்ந்து, சுத்திகரிக்கும் முறையை அறிவிக்கிறார்: “நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 9-10). 

பாவத்தைக் கழுவுதல் என்பது நம்மை முற்றிலும் தாழ்த்துவதாகும். ஆனால். அல்லேலூயா! நம்முடைய “சுத்திகரித்தலை” ஆராதனையாய் மாற்றுவதற்கு தேவன் உண்மையுள்ளவர். 

தேவனை கனப்படுத்தத் தீர்மானித்தல்

லியோ டால்ஸ்டாயின் “குடும்ப சந்தோஷம்” என்னும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான செர்ஜே, அழகும் இளமையும் நிறைந்த மாஷாவை சந்திக்கிறார். வயதில் மூத்தவரான செர்ஜே, உலகம் சுற்றும் ஒரு வியாபாரி. ஆனால் மாஷா உலகமறியாத ஒரு கிராமத்துப் பெண். இருவரும் ஒருவரையொருவர் நேசித்து, பின் திருமணம் செய்துகொள்கின்றனர். 

திருமணத்திற்குப் பின் ஒரு கிராமத்தில் குடியேறுகின்றனர். அந்த கிராம சுற்றுப்புறத்தைப் பார்த்து மாஷா மிகவும் சலிப்படைந்திருக்கிறாள். அதை அறிந்த செர்ஜே, செயின்ட் பீட்டர்ஸ்பர்கை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்கிறான். அங்கே மாஷாவின் அழகும் வசீகரமான தோற்றமும் அவளுக்கு திடீர் புகழை தேடித்தருகிறது. அங்கிருந்து வீடு திரும்பும் நேரம் வந்தபோது, அந்த ஊரின் இளவரசர் மாஷாவை சந்திக்க விரும்பி அங்கு வருகிறார். செர்ஜே, அவளைக் கட்டாயப்படுத்தி தன் ஊருக்குத் திரும்ப அழைத்து வந்திருக்க முடியும். ஆனால், அவளையே தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிடுகிறான். அவள் அங்கேயே தங்க தீர்மானிக்கிறாள். அவளின் துரோகம் செர்ஜேயின் இருதயத்தை உடைத்தது. 

செர்ஜேயைப் போன்று அவருக்கு உண்மையாய் இருக்கும்படிக்கு, தேவனும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. அவர் நம்மை நேசிப்பதால் அவருக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நம்மிடத்திலேயே கொடுக்கிறார். அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கான பலியாக ஏற்றுக்கொண்டதே நாம் அவருக்கு சாதகமாய் எடுத்த முதல் தீர்மானம் (1 யோவான் 4:9-10). அதற்கு பின்பு, வாழ்நாள் முழுவதும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆவியன் நடத்துதலின்படி, தேவனுக்கு உண்மையாய் இருக்க தீர்மானிக்கிறோமா? அல்லது உலகம் நம்மை ஆளுகை செய்ய அனுமதிக்கிறோமா? தாவீது, அந்த அளவிற்கு நேர்த்தியான ஒரு மனிதன் இல்லை. ஆனால், “கர்த்தருடைய வழிகளைக்” கைக்கொண்டதாகவும் அதின் மூலம் நல்ல பலனை அடைந்ததாகவும் அடிக்கடி குறிப்பிடுகிறார் (சங்கீதம் 18:21-24). நம்முடைய தீர்மானங்கள் தேவனை கனப்படுத்தும்போது, “தயவுள்ளவனுக்கு.. (அவர்) தயவுள்ளவராக” வெளிப்படுகிறார் என்று தாவீது சொன்ன ஆசீர்வாதத்தை நாமும் அனுபவிக்க முடியும்.