எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெரன் பிம்போகட்டுரைகள்

கிறிஸ்துவை உடுத்திக்கொள்ளுதல்

முதன்முறையாக எனது புதிய கண்ணாடியை அணிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அவற்றை தூக்கி எறிய விரும்பினேன். அந்த புதிய கண்ணாடியை அணிந்தபோது என் கண்களில் வலி ஏற்பட்டது மற்றும் தலை சுற்றியது. எனக்கு பழக்கமில்லாத அந்த புதிய சட்டங்களால்(பிரேம்) எனது காதுகள் புண்பட்டன. அடுத்த நாள் நான் அதை அணியவேண்டும் என்று நினைத்தபோது கூச்சலிட்டேன். அந்த கண்ணாடியை என்னுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதற்காக, அதை நான் மீண்டும் மீண்டும் அணியவேண்டியிருந்தது. அதற்கு பல வாரங்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு, நான் அந்த கண்ணாடியை அணிந்திருப்பதை மறந்துவிட்டேன். 

புதிதாக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு சில மாற்றங்கள் அவசியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில், அதோடு நாம் பழகிவிடுகிறோம். அதுவும் நமக்கு பொருத்தமாய் மாறிவிடுகிறது. அவற்றிலிருந்து சில புதிய அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. ரோமர் 13இல், அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (வச. 12) என்றும் சரியான ஜீவியம் வாழும்படிக்கும் அறிவுறுத்துகிறார். அவர்கள் இயேசுவை நம்பியிருந்தவர்கள், ஆனால் அவர்கள் தற்போது நித்திரைகொள்வதில் மனநிறைவடைந்திருக்கிறார்கள்; அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்கவும், கண்ணியமாக நடந்துகொள்ளவும், எல்லா பாவங்களையும் விட்டுவிடவும் அவர்களை அறிவுறுத்துகிறார் (வச. 11-12). பவுல் அவர்களை இயேசுவை அணிந்துகொண்டு, அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் அவரைப் போலவே இருக்குமாறு ஊக்கப்படுத்துகிறார் (வச. 14).

இயேசுவின் அன்பான, கனிவான, இரக்கமுள்ள, கருணை நிறைந்த, உண்மையுள்ள வழிகளை நாம் ஒரே இரவில் பிரதிபலிக்கத் தொடங்குவதில்லை. அவை சங்கடமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் “ஒளியின் ஆயுதங்களை" தரிந்துகொள்ள தீர்மானிப்பது என்பது ஓர் நீண்ட செயல்முறையாகும். காலப்போக்கில், அவர் நம்மை சிறப்பாக மாற்றுகிறார்.

 

அன்பினால் ஊக்கப்படல்

கல்லூரி நாட்களில் ஜிம்மும் லனிடாவும் காதலர்கள். அவர்களின் திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் லனிடா வித்தியாசமாக நடந்துகொண்டாள், வழிப்பாதைகளையும் பணிநியமனங்களையும் மறந்தாள். அவளுடைய 47ம் வயதில், ஆரம்பக்கால அல்சைமர் நோயால் அவள் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவளது முதன்மை பராமரிப்பாளராகக் கடந்த 10 ஆண்டுகள் இருந்த ஜிம், " நான் அவளை நேசிக்கிறேன் என்று சொன்னதைக் காட்டிலும், அல்சைமர் என் மனைவியைக் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அன்பு கூறவும் அவளுக்குச் சேவை செய்யவும் எனக்கு வாய்ப்பளித்தது" என்றார்.

பரிசுத்த ஆவியானவரின் வரங்களை விளக்குகையில், பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 13ல் அன்பின் நற்பண்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடமைக்காகச் செய்யும் சேவைகளையும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பின் செயல்களையும் வேறுபடுத்துகிறார். பேச்சாற்றல் நல்லது, ஆனால் அன்பில்லாவிடில் சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" (வ.1) இருக்கும் என்று பவுல் எழுதினார். "என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." (வ. 3). "அன்பே பெரியது" (வ. 13) என இறுதியில் பவுல் கூறியுள்ளார்..

தன் மனைவியைக் கவனித்துக் கொண்டதினால்  அன்பு மற்றும் சேவையைப் பற்றிய ஜிம்மின் புரிதல் ஆழமாயிற்று. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உதவும்  பெலனை, ஆழமான மற்றும் நிலையான அன்பு மட்டுமே அவருக்கு வழங்க முடியும். இறுதியில், தேவன் நம் மீது செலுத்தும் அன்பிலே இந்த முன்மாதிரியான தியாக அன்பை முழுமையாகக் காணலாம்.இந்த அன்பே பிதாவானவர் இயேசுவை நம் பாவங்களுக்காக மரிக்க அனுப்பக் காரணமாயிற்று (யோவான் 3:16). அன்பால் உந்தப்பட்ட இந்த தியாகச் செயல் உலகை நிரந்தரமாக மாற்றிவிட்டது..

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார். 

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார்.

நீதியான பட்டணம்

2000ஆம் ஆண்டின் புத்தாண்டு முன்தினத்தில், டெட்ராய்டில் உள்ள அதிகாரிகள் நூறு ஆண்டுகள் பழமையான டைம் கேப்சூலை கவனமாக திறந்தனர். செப்புப் பெட்டியின் உள்ளே அமைந்திருந்த சில நகரத் தலைவர்களின் நம்பிக்கையூட்டும் கணிப்புகள் செழிப்பு பற்றிய தரிசனங்களை வெளிப்படுத்தின. இருப்பினும், மேயரின் செய்தி மாறுபட்ட அணுகுமுறையை வழங்கியது. அவர்;, “மற்ற எல்லாவற்றுக்கும் மேலான ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்த நாம் அனுமதிக்கப்படுவோம் . . . நீங்கள் ஒரு தேசமாகவும், மக்களாகவும், நகரமாகவும், நீதியில் வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரலாம். ஏனென்றால் இதுவே ஒரு தேசத்தை உயர்த்துகிறது” என்று அறிவித்தார்.

வெற்றி, மகிழ்ச்சி அல்லது அமைதியை விட, எதிர்கால குடிமக்கள் உண்மையிலேயே நேர்மையாகவும் நீதியாகவும் வளரவேண்டும் என்று மேயர் விரும்பினார். கிறிஸ்துவின் நீதிக்காக ஏங்குகிற மக்களை ஆசீர்வதிக்கும் கிறிஸ்துவிடமிருந்து அவர் அந்த அறிவுரையை பெற்றிருக்கக்கூடும் (மத்தேயு 5:6). ஆனால் தேவனுடைய நேர்த்தியான தராதரத்தை நாம் கருத்தில் கொள்ளும்போது சோர்வடைவது எளிது.

நாம் வளருவதற்கு நம்முடைய சுய முயற்சியை சார்ந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், “இயேசுகிறிஸ்துவைக் கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படியே செய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக” (எபிரெயர் 13:20-21). கிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம் அவரை விசுவாசிக்கும் தருணத்தில் அவருடைய இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்படுகிறோம் (வச. 12). அவர் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நீதியின் கனியை நம் இருதயங்களில் தீவிரமாக வளர்க்கிறார். வாழ்க்கைப் பயணத்தில் நாம் அடிக்கடி தடுமாற நேரிடலாம். ஆனாலும் தேவன் நீதியாய் ஆட்சிசெய்யும் வரப்போகிற நகரத்தையே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் (வச. 14).

இயேசுவின் சிறந்த வெற்றி

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில இராணுவ முகாம்களில், வீடற்ற சிப்பாய்களுக்காக ஒரு அசாதாரண வகை உபகரணம் கொடுக்கப்பட்டது. அது தான், வித்தியாசமான பியானோ இசைக்கருவி. அவை சாதாரண உலோகத்தின் பத்து சதவிகிதம் மட்டுமே கொண்டிருக்கும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டன. மேலும் அவை சிறப்பு நீர்-எதிர்ப்பு பசை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டவாறு வடிமைக்கப்பட்டிருந்தன. அந்த பியானோக்கள் எளிமையானதாய் தெரிந்தாலும், இராணுவ முகாம்களில் இருந்த சிப்பாய்கள் தங்களுக்கு பிரியமான பாடல்களைப் பாடி மணிக்கணக்காய் பொழுதுபோக்கும் வாயப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. 

கிறிஸ்தவர்கள் பொதுவாக துதி பாடல்களை பாடுவது என்பது, வாழ்க்கைப் போராட்டத்தில் அமைதியை காண்பதற்கான ஒரு சிறந்த வழி. யோசபாத் ராஜா, எதிரிகளின் படையெடுப்புப் படைகளை எதிர்கொண்டபோது இதை உண்மையாக அனுபவித்தார் (2 நாளாகமம் 20). பயந்துபோன ராஜா, பிரார்த்தனைக்கும் உபவாசத்துக்கும் எல்லா மக்களையும் அழைத்தான் (வச. 3-4). அதற்குப் பதிலளித்த தேவன், அந்த எதிரிகளை எதிர்கொள்ளுவதற்கு போர்வீரர்களை அழைத்து செல்லும்படிக்கு அறிவுறுத்துகிறார். ஆனால் “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல” (வச. 17) என்று உறுதியளிக்கிறார். யோசபாத் தேவனை நம்பினான். விசுவாசத்தில் செயல்பட்டான். வீரர்களுக்கு முன்னால் சென்று, தேவன் கொடுக்கப்போகும் வெற்றிக்காக அவரை புகழ்ந்து துதி பாடுவதற்கென்று பாடகர்களை நியமித்தான் (வச. 21). அவர்களின் இசை தொடங்கியதும், அவன் ஆச்சரியவிதமாய் எதிரிகளை தோற்கடித்து தேவ ஜனத்திற்கு மீட்பைக் கொண்டுவருகிறான் (வச. 22).

நாம் விரும்பும் வேளைகளிலோ அல்லது விதங்களிலோ வெற்றி நம்மை வந்தடைவதில்லை. ஆனால் நமக்கு ஏற்கனவே கிடைத்த பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசுவின் இறுதி வெற்றியை நாம் எப்போதும் அறிவிக்க முடியும். ஒரு போராட்டத்தில் இடையில்கூட, தேவனை ஆராதிக்கும் மனநிலையை ஏற்படுத்தி நாம் இளைப்பாறக்கூடும். 

உங்கள் தோட்டத்தை பராமரியுங்கள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் காய்கனி தாவரங்களை நாங்கள் விரும்பி பயிரிட்டோம். பின்னர் நான் மண்ணில் சிறிய துளைகளை கவனித்தேன். எங்கள் தாவரத்திலிருந்து முதல் பழம் பழுத்தபோது, தீடீரென்று அது காணாமல் போய்விட்டது. ஒரு நாள் எங்களின் மிகப் பெரிய ஸ்ட்ராபெரி செடி, குழிமுயலால் முற்றிலும் பிடுங்கப்பட்டு, வெயிலால் கருகிப் போனதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். சில எச்சரிக்கை அறிகுறிகளுக்கு நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்!

உன்னதப்பாட்டில் பதிவாகியுள்ள நேசத்தின் கவிதையானது ஒரு இளைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலை பதிவுசெய்கிறது. அந்த பெண்ணை ரூபவதி என்று அழைக்கும் நேசர், அவர்களின் நேசத்திற்கு உருவக அடையாளமான தோட்டத்தை குழிமுயல்கள் சேதப்படுத்தாதபடிக்கு பாதுகாத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப்  பிடியுங்கள்” (உன்னதப்பாட்டு 2:15) என்று சொல்லுகிறார். பொறாமை, கோபம், வஞ்சகம் அல்லது அக்கறையின்மை போன்ற அவர்களின் காதலை அழிக்கக்கூடிய “நரிகளின்” குழிகளை அவர் பார்த்திருக்கலாம். அவர் தனது ரூபவதியின் அழகில் மகிழ்ந்ததால் (வச. 14), ஆரோக்கியமற்ற பிரச்சனை இருப்பதை அவர் விரும்பமாட்டார். அவள் அவருக்கு “முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்” (வச. 2) போலிருக்கிறாள். அவர்களது உறவை பாதுகாக்கும் முயற்சியில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார். 

குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளைப் பேணிக்காப்பது என்பது எளிதல்ல என்றாலும், அவைகள் நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பரிசுகளாகும். பொறுமையோடும், பராமரிப்போடும், சிறு குழிநரிகளிடத்திலிருந்து பாதுகாப்போடும், தேவன் நம் கனிகளை விளையச்செய்வார் என்று அவரை நம்புவோம். 

தேசத்தை ஒன்றிணைத்தல்

உலகின் மிக நீளமான சர்வதேச எல்லையை அமெரிக்காவும் கனடாவும் பகிர்ந்து கொள்ளுகிறது. இது நம்பமுடியாத 5,525 மைல் பரப்பளவுகொண்ட நிலப்பகுதியையும் நீரையும் கொண்டு அமைந்துள்ளது. இரண்டு பகுதிக்கும் இடையில் இருக்கும் இடைக்கோடு நேர்த்தியாய் தெரியவேண்டும் என்பதற்காய் தொழிலாளர்கள், அந்த இருபுறத்திலும் பத்து அடிக்குட்பட்ட மரங்களை தவறாமல் வெட்டினர். “தி ஸ்லாஷ்” என்று அழைக்கப்படும் இந்த நீளமான நிலப்பரப்பு கோட்;டில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கற்கள் இடம்பெற்றுள்ளன. எனவே பார்வையாளர்கள் அந்த பிரிக்கும் கோடு எது என்பதை நேர்த்தியாய் அடையாளங்கண்டுகொள்ள முடிகிறது. 

அந்த கோடு மறையாமலிருப்பதற்காக அகற்றப்பட்ட மரங்களானது, இரண்டு வெவ்வேறு அரசியலமைப்பையும் கலாச்சாரத்தையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாமும், தேவன் அந்த சூழ்நிலையை மாற்றியமைத்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு காலத்தை எதிர்நோக்குகிறோம். ஏசாயா தீர்க்கதரிசி, தேவனுடைய ஆலயம் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டு உயர்த்தப்படும் ஒரு ஆசீர்வாதமான காலகட்டத்தை முன்னறிவிக்கிறார் (ஏசாயா 2:2). எல்லா நாடுகளிலிருந்தும் ஜனங்கள் தேவனின் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கும், அவருடைய பாதையில் மக்கள் நடப்பதற்கும் கூடுவார்கள் (வச. 3). அமைதியைக் காக்கத் தவறிய மனித முயற்சிகளை இனி நாம் நம்ப வேண்டாம். நமது மெய்யான ராஜாவாக செயல்பட்டு, தேவன் தேசங்களுக்கு இடையில் நியாயம் விசாரித்து, ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை நிவிர்த்திசெய்வார் (வச. 4). 

பிரிவிணையில்லாத, சச்சரவுகள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யமுடிகிறதா? அதை கொண்டுவருவதாக தேவன் நமக்கு வாக்களிக்கிறார். நம்மை சுற்றியிருக்கும் பிரிவினை பேதங்களுக்கு மத்தியிலும், நாம் “கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம்” (வச. 5). அவரையே நம்புவோம். தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு நாள், தம்முடைய ஜனங்கள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைப்பார்.  

நித்திய வாழ்க்கை

“மரணத்திற்கு பயப்பட வேண்டாம், வின்னி, உயிரற்ற வாழ்க்கைக்கு பயப்படு" என்று அங்கஸ் டக் கூறினார். “டக் எவர்லாஸ்டிங்” என்ற திரைப்படமாக்கப்பட்ட நாவலில் இந்த வசனம், மரணமில்லாத ஒரு கதாப்பாத்திரத்தினால் சொல்லப்படுகிறது. அந்த கதையில், டக் என்பவரின் குடும்பம் அழிவில்லாமையை பெற்றுக்கொள்கின்றனர். அக்குடும்பத்தின் நபரான இளம் ஜேம்ஸ் டக், வின்னியை காதலிக்கிறான். ஆகையால் அவளோடு நித்தியமாய் மகிழ்ந்திருக்கும்பொருட்டு அழிவில்லாமையை தரித்துக்கொள்ளும்படிக்கு அவளிடம் கெஞ்சுகிறான். ஆனால் அங்கஸ் டக் என்பவர், வெறுமையாய் நித்திய வாழ்க்கையை அனுபவிப்பது என்பது எந்த நிறைவையும் நமக்கு தராது என்பதை ஞானமாய் விளக்குகிறார். 

நாம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், உற்சாகமாகவும் இருந்தால் நாம் நிச்சயமாகவே மகிழ்ச்சியாய் இருக்கமுடியும் என்று நம்முடைய உலக கலாச்சாரம் நமக்கு அறிவிக்கிறது. ஆனால் அதில் நமக்கு நிறைவு கிடையாது. இயேசு சிலுவைக்கு போகுமுன்பு, அவர் தன்னுடைய சீஷர்களுக்காகவும் எதிர்கால விசுவாச சந்ததியினருக்காகவும் ஜெபித்தார். அவர், “ஒன்;றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3) என்று சொன்னார். இயேசுவின் மீதான விசுவாசத்தைக் கொண்டு தேவனிடத்தில் உறவை ஏற்படுத்துவதில் தான் நம்முடைய நிறைவு இருக்கிறது. அவரே நம்முடைய எதிர்கால நம்பிக்கையும், நிகழ்கால மகிழ்ச்சியுமாயிருக்கிறார். 

இயேசு தன்னுடைய சீஷர்கள், புதுவாழ்வின் அடையாளமான, தேவனுக்கு கீழ்ப்படிவது (வச. 6), இயேசு தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை நம்புவது (வச. 8) மற்றும் ஒரே சரீரமாய் இணைந்து செயல்படுவது (வச. 11) போன்று சுபாவங்களை அவர்கள் தரித்துக்கொள்ளும்படிக்கு வேண்டிக்கொண்டார். கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்துவோடு கூட நித்திய வாழ்வை அனுபவிக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் பூமியில் நாம் வாழும் இந்த நாட்களில், அவர் வாக்குப்பண்ணிய பரிபூரணத்தை தற்போது நாம் அனுபவிக்கும் வாழ்க்கையை நாம் அடையமுடியும்.

எப்போதும் நம்பக்கூடியவர்

நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது. 

டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர். 

தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12).

நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).