பரிசுத்தமாகுதல்
உலகத்தரம் வாய்ந்த மட்பாண்ட சிற்பங்களை ஒரு கலை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பின், காற்றில் உலர்ந்த களிமண்ணைக் கொண்டு ஒரு சிறிய குடத்தைச் சொந்தமாகச் செய்யும்படி அழைப்பு பெற்றேன். அந்த சிறிய குவளையை இரண்டு மணிநேரத்தில் வடித்து, செதுக்கி, அதற்கு வர்ணம் பூசினேன். என்னுடைய இந்த கடின உழைப்பெல்லாம் விருதாவாயிற்று. ஒரு சிறிய அற்பமான, வடிவமற்ற மற்றும் சீரான வண்ணமற்ற பானையே இருந்தது. அது ஒருபோதும் அருங்காட்சியகம் ஏறாது.
உன்னதமான தரத்தில் வாழ்வதென்பது மிரட்சியூட்டும். இஸ்ரவேலின் ஆசாரியர்கள் இதை அனுபவித்தனர். அவர்கள் சடங்காச்சாரமாக சுத்தமாக இருப்பதில் தேவனின் கட்டளைகளை (லேவியராகமம் 22:1-8) பின்பற்றுவதோடல்லாமல், பலிகளுக்கடுத்த உபய கட்டளைகளையும் பின்பற்றவேண்டும் (வ.10-33). ஆசாரியர்களின் வேலை பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். எனினும் அவர்கள் கடுமையாக முயன்றும் தோற்றனர். ஆகவேதான் அவர்களுடைய நீதிக்கான பொறுப்பைத் தேவனே இறுதியில் தனது தோள்களின்மேல் போட்டுக்கொண்டார். அவர் மோசேயிடம் திரும்பத்திரும்ப, “நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” (22:9, 16, 32) என்றார்.
இயேசுவே நமது பூரணமான மகாபிரதான ஆசாரியர், அவரே தனது சிலுவை மரணத்தின் மூலம் பரிசுத்தமும், ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான பாவநிவிர்த்திக்கான பலியைச் செலுத்தினார். “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக (சீஷர்களுக்காக) நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன் (பரிசுத்த பலியாக்குகிறேன்)” (யோவான் 17:19) என்று ஜெபித்தார். நீதியான வாழ்க்கை வாழ்வதற்கான நமது முயற்சிகள் அனைத்தும் வெறும் உருவற்ற களிமண் பானைகளைப்போலத் தோன்றுகையில், இயேசுவானவர் ஏற்கனவே செய்து முடித்த பூரணமான கிரியையில் நாம் இளைப்பாறலாம். மேலும், அவருக்காக வாழ்வதற்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைச் சார்ந்துகொள்ளலாம்.
விசுவாச படிகள்
ஜான் தனது வேலையை இழந்ததால் நிலைகுலைந்து போனார். ஆரம்ப நாட்களைக் காட்டிலும், வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலகட்டத்தில் புதிதாக எங்காவது வேலைக்குச் சேருவது கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். சரியான வேலைக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பின்னர் ஜான் வேலைக்கான தனது தற்குறிப்பைப் புதுப்பித்து, நேர்காணல் பயிற்சி குறிப்புகளையும் படித்தார், மேலும் தொலைப்பேசியில் நிறையப் பேரிடம் பேசினார். விண்ணப்பித்த பல வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த பனி நேரம் மற்றும் எளிதான பயணத்துடன் புதிய வேலையை ஏற்றுக்கொண்டார். அவருடைய உண்மையுள்ள கீழ்ப்படிதலும் தேவனின் போஷிப்பும் சரியான நேரத்தில் சந்தித்தன.
எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைப்பட்டிருந்த காலத்தில் யோகெபேத் (யாத்திராகமம் 6:20) மற்றும் அவரது குடும்பத்தினர் இதைவிட வியத்தகு நிகழ்வைச் சந்தித்தனர். புதிதாகப் பிறந்த அனைத்து எபிரேய மகன்களும் நைல் நதியில் போடப்பட வேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது (1:22), யோகெபெத் பயந்திருக்க வேண்டும். அவளால் சட்டத்தை மாற்ற முடியவில்லை, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன் மகனைக் காப்பாற்ற முயலும்படி அவள் சில படிகளை எடுக்கலாம். விசுவாசத்தால், அவள் அவனை எகிப்தியர்களிடமிருந்து மறைத்தாள். " ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்" (2:3). தேவன் அவனுடைய உயிரை அற்புதமாகப் பாதுகாக்க அடியெடுத்து வைத்தார் (வவ. 5-10) பின்னர் இஸ்ரவேலர் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவனைப் பயன்படுத்தினார் (3:10).
ஜானும், யோகெபேத்தும் மிகவும் வித்தியாசமான அடியெடுத்தனர், ஆனால் இரண்டு சம்பவங்களும் விசுவாசம் நிறைந்த செயல்களால் அடையாளப் படுத்தப்படுகின்றன. பயம் நம்மை முடக்கிவிடும். நாம் நினைத்தது அல்லது எதிர்பார்த்தது போன்ற பலன் இல்லாவிட்டாலும், அதன் விளைவைப் பொருட்படுத்தாமல் தேவனின் நற்குணத்தில் நம்பிக்கை வைக்க விசுவாசம் நமக்குப் பெலன் அளிக்கிறது.
ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல்
சந்துரு, கிறிஸ்துவை நம்பும் குடும்பத்தில் தான் வளர்ந்தான். ஆனால், கல்லூரி மாணவராகக் குடிப்பழக்கம் மற்றும் கேளிக்கை போன்றவற்றால் தனது சிறுபிராய நம்பிக்கையிலிருந்து வழிதவற ஆரம்பித்தான். பின்னர், " தகுதியற்றிருந்த என்னை, தேவன் மீண்டும் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்" என்றான். காலப்போக்கில், சந்துரு ஒரு கோடைக்காலத்தில் முக்கிய நகரங்களின் தெருக்களில் அறிமுகமற்றவர்களோடு இயேசுவைப் பகிர்ந்துகொண்டான். தற்போது, அவனுடைய சபையில் வாலிபர் ஊழியத்தைக் குறித்த பயிற்சி படிப்பை முடித்தான். கிறிஸ்துவுக்காக வாழாமல் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க இளைஞர்களுக்கு உதவுவதே சந்துருவின் குறிக்கோள்.
சந்துருவைப் போலவே, இஸ்ரவேலின் தலைவரான மோசேக்கும் அடுத்த தலைமுறை குறித்த கரிசனை இருந்தது. தான் விரைவில் தலைமையைத் அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த மோசே, தேவனின் நல்ல ஒழுங்குமுறைகளை ஜனங்களுக்கு வழங்கினார். பின்னர் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் பலன்களையும் பட்டியலிட்டார். கீழ்ப்படிதலுக்கு, ஆசீர்வாதம் மற்றும் ஜீவன்; கீழ்ப்படியாமைக்கு, சாபம் மற்றும் மரணம். அவர் அவர்களிடம், "ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு" என்றார். "அவரே உனக்கு ஜீவனும்" (உபாகமம் 30:19-20) என்றார். தேவனை நேசிக்கவும், "அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக" (வ. 20) என்றும் அவர்களை மோசே வலியுறுத்தினார்.
பாவத்தைத் தேர்ந்தெடுப்பது பின்விளைவுகளை உண்டாக்கும். ஆனால் நாம் நம் வாழ்க்கையை மீண்டும் தேவனிடம் ஒப்படைக்கும்போது, அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவார் (வ. 2-3) மற்றும் நம்மை மீட்டெடுப்பார் (வ. 4). இந்த வாக்குத்தத்தம் இஸ்ரவேல் ஜனங்களின் சரித்திரம் முழுவதும் நிறைவேற்றப்பட்டது, ஆனால் இயேசு சிலுவையில் செய்த இறுதியான கிரியை மூலம் நம்மையும் தேவனோடு ஐக்கியப்படுத்தியது. நமக்கும் இன்று நமக்கு முன் இந்த தெரிவுதெடுப்பு வைக்கப்பட்டுள்ளது, ஜீவனைத் தேர்ந்தெடுக்க நமக்கு சுதந்தரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவன் நம்மை காண்கிறார்
மிச்சிகன் மாநிலத்தில் 40 லட்சம் மரங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மிகவும் சாதாரணமானவை. ஆயினும்கூட, மாநிலம் ஆண்டுதோறும் "பெரிய மர வேட்டையை" நடத்துகிறது, இது பழமையான மற்றும் மிகப்பெரிய மரங்களை அடையாளம் காணும் ஒரு போட்டியாகும், அவை வாழும் அடையாளமாக மதிப்பூட்டப்படலாம். போட்டியானது சாதாரண மரங்களை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது: எந்த வனத்தின் உள்ளேயும் ஒரு வெற்றியாளர் இருக்கலாம், கவனிக்கப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கலாம்.
அநேகரை போலல்லாமல், தேவன் எப்போதும் சாதாரணமானவர்களைக் கவனிக்கிறார். பிறர் புறக்கணிக்கும் எதையும், எவரையும் குறித்து அவர் அக்கறை காட்டுகிறார். யெரொபெயாமின் ஆட்சியின் போது தேவன் ஆமோஸ் என்ற சாதாரண மனிதனை இஸ்ரேலுக்கு அனுப்பினார். ஆமோஸ் தனது மக்களைத் தீமையிலிருந்து திரும்பவும் நீதியை நடப்பிக்கவும் அறிவுறுத்தினார், ஆனால் ஒதுக்கப்பட்டும், அமைதி காக்கும்படியும் கடிந்துகொள்ளப்பட்டார். "தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு” (ஆமோஸ் 7:12) என்று ஏளனமாக சொன்னார்கள். அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்” (வ. 14-15) என்றார்.
ஆமோஸ் ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்தபோது, மந்தைகளையும் மரங்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது தேவன் அவரை அறிந்தும் கவனித்துமிருந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தி மற்றும் காட்டத்தி மரங்களுக்கு அருகேயிருந்த சாதாரண நாத்தான்வேல் (யோவான் 1:48) மற்றும் சகேயு (லூக்கா 19:4-5) ஆகியோரை இயேசு கவனித்து அழைத்தார். நாம் எவ்வளவு மறைக்கப்பட்டவர்களாக உணர்ந்தாலும், அவர் நம்மைப் பார்க்கிறார், நம்மை நேசிக்கிறார், அவருடைய நோக்கங்களுக்காக நம்மைப் பயன்படுத்துகிறார்.
நியாயத்தின் தேவன்
ஒரு வாலிபனாக, விஜய் தனது தாயைப் புற்றுநோயால் இழந்தார். அவர் வீட்டையும் இழந்து, விரைவில் பள்ளியை விட்டும் வெளியேறினார். அவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தார் மற்றும் அடிக்கடி பசியுடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார், அது மற்றவர்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் உணவைத் தாங்களே நடவும், அறுவடை செய்யவும் மற்றும் தயாரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உணவு இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது, ஏதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறர் மீதான விஜய்யின் அக்கறை, நீதி மற்றும் கருணைக் குறித்த தேவனின் இதயத்தை எதிரொலிக்கிறது.
நாம் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி தேவன் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் இஸ்ரவேலில் பயங்கரமான அநீதியைக் கண்டபோது, அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க ஆமோஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஒரு காலத்தில் எகிப்தின் அடக்குமுறையிலிருந்து தேவன் காப்பாற்றிய மக்கள் இப்போது ஒரு ஜோடு பாதரட்சைக்கு தங்கள் அண்டை வீட்டாரை அடிமைகளாக விற்கிறார்கள் (ஆமோஸ் 2:6). அவர்கள் அப்பாவி ஜனங்களுக்குத் துரோகம் செய்தார்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுத்தார்கள், தரித்திரருடைய "தலையின்மேல்" மிதித்தார்கள் (வ. 6-7), இவை அனைத்தினுடே காணிக்கைகள் மற்றும் விசேஷித்த நாட்களுடன் தேவனைப் பணிவது போல் பாசாங்கு செய்தனர் (4:4-5).
"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்" (5:14) என்று ஆமோஸ் மக்களிடம் கெஞ்சினார். விஜய்யைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடன் பழகுவதற்கும் உதவி செய்வதற்கும் போதுமான வலியையும் அநீதியையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். "நன்மையைத் தேட" மற்றும் அணைத்து வகையான நீதியையும் விதைப்பதில் அவருடன் இணைவதற்கான நேரம் கனிந்துள்ளது.
காணப்படாத ராஜா
“பில்கிரிம்” என்பது மோட்ச பிரயாணம் (வுhந Pடைபசiஅ’ள Pசழபசநளள) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமாகும். இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் உருவகமாகும். கதையில், ஆவிக்குரிய உலகின் அனைத்து கண்ணுக்கு தெரியாத சக்திகளும் பார்வையாளர்களுக்கு தெரியும். தேவனைக் குறிக்கும் ராஜாவின் பாத்திரம் கிட்டத்தட்ட முழு நிகழ்ச்சியிலும் மேடையில் உள்ளது. அவர் வெள்ளை உடையணிந்து, எதிரியின் தாக்குதல்களைத் தடுக்கிறார், வலியில் இருப்பவர்களை மென்மையாகப் பிடித்து, மற்றவர்களை நல்ல செயல்களுக்குத் தூண்டுகிறார். அவரது பாத்திரம் கதையில் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், முக்கிய மாம்சீக கதாபாத்திரங்கள் ராஜாவை உடல் ரீதியாக பார்க்க முடியாது. அவர் செய்யும் செயல்களின் விளைவுகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.
மெய்யான ராஜாவான தேவனை நாம் மாம்ச கண்களினால் காணமுடியாவிட்டாலும், நம் வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதைப் போல நாம் வாழ்கிறோமா? தேவைப்படும் நேரத்தில், தானியேல் தீர்க்கதரிசி பரலோக தூதரிடமிருந்து ஒரு தரிசனத்தைப் பெற்றார் (தானியேல் 10:7). அவருடைய உண்மையுள்ள ஜெபங்களுக்கு நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டார் (வச. 12). ஆவிக்குரிய யுத்தமானது அவர் வருவதைத் தாமதப்படுத்தியதால், தேவதூதர்களின் காப்புப்பிரதியை அனுப்ப வேண்டியிருந்தது (வச. 13) என்று தூதன் விளக்குகிறான். தானியேலால் தேவனை பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய கவனிப்பு மற்றும் கவனத்தின் சான்றுகளால் சூழப்பட்டிருப்பதை நினைவுபடுத்தினார். “பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்” (வச. 19) தூதன் அவனை ஊக்கப்படுத்துகிறான். “பில்கிரீம்” என்ற அந்த நாடகத்தின் முடிவில், முக்கிய கதாபாத்திரம் பல இன்னல்களுக்குப் பிறகு சொர்க்கத்தின் வாசலை அடையும் போது, “நான் ராஜாவைப் பார்க்கிறேன்!” என்று முதன்முறையாக மகிழ்ச்சியுடன் கூவுகிறான். பரலோகத்தில் நமது புதிய கண்களால் அவரைப் பார்க்கும் வரை, இன்று நம் வாழ்வில் அவருடைய செயலை எதிர்பார்க்கிறோம்.
நற்கிரியைகளில் ஐசுவரியவான்
எழுபது ஆண்டுகளாக, தேய்த்தல், உலர்த்துதல், கையால் துணிகளை அலசுதலென்று ஒரு சலவை செய்யும் பெண்ணாகக் கடின உழைப்புக்குப் பிறகு, ஓசியோலா மெக்கார்ட்டி, இறுதியாக எண்பத்தாறு வயதில் ஓய்வு பெறத் தயாரானார். அத்தனை ஆண்டுகளும் அவர் தனது சொற்ப வருமானத்தை மிகக் கவனமாகச் சேமித்து வைத்திருந்தார். மேலும் தனது சுற்றுப்புறத்தாரை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஓசியோலா அருகிலுள்ள பல்கலைக்கழகத்திற்குத் தோராயமாக 1.24 கோடி ரூபாயை நன்கொடையாக ஏழை மாணவர்களின் உதவித்தொகை நிதியாக வழங்கினார். அவரது தன்னலமற்ற கொடையால் ஈர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அவரது அறக்கொடையை மும்மடங்காகப் பெருக போதுமான அளவு நன்கொடை அளித்தனர்.
செல்வத்தைத் தனது சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், பிறரை ஆசிர்வதிப்பதற்காகப் பயன்படுத்துவதே அதின் உண்மையான மதிப்பென்பதை ஓசியோலா புரிந்துகொண்டார். இந்த உலகத்தில் ஐசுவரியவான்களாக இருப்பவர்களுக்கு “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” (1 தீமோத்தேயு 6:18) இருக்கக் கட்டளையிடும்படி அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தினார். நாம் ஒவ்வொருவரும் உக்கிராணக்காரர்களாய் இருக்கும்படி நமக்குச் செல்வம் கொடுக்கப்பட்டுள்ளது, அது பணமாக இருக்கலாம் அல்லது பிற வளமாக இருக்கலாம். நம்முடைய ஆதாரங்களில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, தேவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு பவுல் எச்சரிக்கிறார் (வ.17).மேலும் “தாராளமாய்க் கொடுக்கிறவர்களாக” இருப்பதன் மூலம், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்க வேண்டும் (வ.18).
தேவனின் பொருளாதார கொள்கையில் பிசினித்தனமும், தாராளமாகக் கொடுக்காததும் வெறுமைக்கே வழிவகுக்கும். அன்பினால் பிறருக்குக் கொடுப்பதே நிறைவின் வழி. அதிகமாகப் பாடுபடுவதற்குப் பதிலாக, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வ. 6). ஓசியோலாவைப் போல, நமது வளங்களைத் தாராளமாகக் கொடுப்பது எவ்வாறிருக்கும்? தேவன் நம்மை வழிநடத்துவதுபோல இன்று நற்செயல்களில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க முயல்வோம்.
ஜெபம் முக்கியமானது
“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.
நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
கிறிஸ்துவின் சமூகம்
“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது.
வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.