எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெரன் பிம்போகட்டுரைகள்

தேவன் நம்மை காண்கிறார்

மிச்சிகன் மாநிலத்தில் 40 லட்சம் மரங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மிகவும் சாதாரணமானவை. ஆயினும்கூட, மாநிலம் ஆண்டுதோறும் "பெரிய மர வேட்டையை" நடத்துகிறது, இது பழமையான மற்றும் மிகப்பெரிய மரங்களை அடையாளம் காணும் ஒரு போட்டியாகும், அவை வாழும் அடையாளமாக மதிப்பூட்டப்படலாம். போட்டியானது சாதாரண மரங்களை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது: எந்த வனத்தின் உள்ளேயும் ஒரு வெற்றியாளர் இருக்கலாம், கவனிக்கப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கலாம்.

அநேகரை போலல்லாமல், தேவன் எப்போதும் சாதாரணமானவர்களைக் கவனிக்கிறார். பிறர் புறக்கணிக்கும் எதையும், எவரையும் குறித்து அவர் அக்கறை காட்டுகிறார். யெரொபெயாமின் ஆட்சியின் போது தேவன் ஆமோஸ் என்ற சாதாரண மனிதனை இஸ்ரேலுக்கு அனுப்பினார். ஆமோஸ் தனது மக்களைத் தீமையிலிருந்து திரும்பவும் நீதியை நடப்பிக்கவும் அறிவுறுத்தினார், ஆனால் ஒதுக்கப்பட்டும், அமைதி காக்கும்படியும் கடிந்துகொள்ளப்பட்டார். "தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு” (ஆமோஸ் 7:12) என்று ஏளனமாக சொன்னார்கள். அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்” (வ. 14-15) என்றார்.

ஆமோஸ் ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்தபோது, ​​மந்தைகளையும் மரங்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது தேவன் அவரை அறிந்தும் கவனித்துமிருந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தி மற்றும் காட்டத்தி மரங்களுக்கு அருகேயிருந்த சாதாரண நாத்தான்வேல்  (யோவான் 1:48) மற்றும் சகேயு (லூக்கா 19:4-5) ஆகியோரை இயேசு கவனித்து அழைத்தார். நாம் எவ்வளவு மறைக்கப்பட்டவர்களாக உணர்ந்தாலும், அவர் நம்மைப் பார்க்கிறார், நம்மை நேசிக்கிறார், அவருடைய நோக்கங்களுக்காக நம்மைப் பயன்படுத்துகிறார்.

நியாயத்தின் தேவன்

ஒரு வாலிபனாக, விஜய் தனது தாயைப் புற்றுநோயால் இழந்தார். அவர் வீட்டையும் இழந்து, விரைவில் பள்ளியை விட்டும் வெளியேறினார். அவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தார் மற்றும் அடிக்கடி பசியுடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார், அது மற்றவர்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் உணவைத் தாங்களே நடவும், அறுவடை செய்யவும் மற்றும் தயாரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உணவு இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது, ஏதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறர் மீதான விஜய்யின் அக்கறை, நீதி மற்றும் கருணைக் குறித்த தேவனின் இதயத்தை எதிரொலிக்கிறது.

நாம் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி தேவன் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் இஸ்ரவேலில் பயங்கரமான அநீதியைக் கண்டபோது, ​​அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க ஆமோஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஒரு காலத்தில் எகிப்தின் அடக்குமுறையிலிருந்து தேவன் காப்பாற்றிய மக்கள் இப்போது ஒரு ஜோடு பாதரட்சைக்கு தங்கள் அண்டை வீட்டாரை அடிமைகளாக விற்கிறார்கள் (ஆமோஸ் 2:6). அவர்கள் அப்பாவி ஜனங்களுக்குத் துரோகம் செய்தார்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுத்தார்கள், தரித்திரருடைய "தலையின்மேல்" மிதித்தார்கள் (வ. 6-7), இவை அனைத்தினுடே காணிக்கைகள் மற்றும் விசேஷித்த நாட்களுடன் தேவனைப் பணிவது போல் பாசாங்கு செய்தனர் (4:4-5).

"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்" (5:14) என்று ஆமோஸ் மக்களிடம் கெஞ்சினார். விஜய்யைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடன் பழகுவதற்கும் உதவி செய்வதற்கும் போதுமான வலியையும் அநீதியையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். "நன்மையைத் தேட" மற்றும் அணைத்து வகையான நீதியையும் விதைப்பதில் அவருடன் இணைவதற்கான நேரம் கனிந்துள்ளது.

காணப்படாத ராஜா

“பில்கிரிம்” என்பது மோட்ச பிரயாணம் (வுhந Pடைபசiஅ’ள Pசழபசநளள) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமாகும். இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் உருவகமாகும். கதையில், ஆவிக்குரிய உலகின் அனைத்து கண்ணுக்கு தெரியாத சக்திகளும் பார்வையாளர்களுக்கு தெரியும். தேவனைக் குறிக்கும் ராஜாவின் பாத்திரம் கிட்டத்தட்ட முழு நிகழ்ச்சியிலும் மேடையில் உள்ளது. அவர் வெள்ளை உடையணிந்து, எதிரியின் தாக்குதல்களைத் தடுக்கிறார், வலியில் இருப்பவர்களை மென்மையாகப் பிடித்து, மற்றவர்களை நல்ல செயல்களுக்குத் தூண்டுகிறார். அவரது பாத்திரம் கதையில் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், முக்கிய மாம்சீக கதாபாத்திரங்கள் ராஜாவை உடல் ரீதியாக பார்க்க முடியாது. அவர் செய்யும் செயல்களின் விளைவுகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.

மெய்யான ராஜாவான தேவனை நாம் மாம்ச கண்களினால் காணமுடியாவிட்டாலும்,  நம் வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதைப் போல நாம் வாழ்கிறோமா? தேவைப்படும் நேரத்தில், தானியேல் தீர்க்கதரிசி பரலோக தூதரிடமிருந்து ஒரு தரிசனத்தைப் பெற்றார் (தானியேல் 10:7). அவருடைய உண்மையுள்ள ஜெபங்களுக்கு நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டார் (வச. 12). ஆவிக்குரிய யுத்தமானது அவர் வருவதைத் தாமதப்படுத்தியதால், தேவதூதர்களின் காப்புப்பிரதியை அனுப்ப வேண்டியிருந்தது (வச. 13) என்று தூதன் விளக்குகிறான். தானியேலால் தேவனை பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய கவனிப்பு மற்றும் கவனத்தின் சான்றுகளால் சூழப்பட்டிருப்பதை நினைவுபடுத்தினார். “பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்” (வச. 19) தூதன் அவனை ஊக்கப்படுத்துகிறான். “பில்கிரீம்” என்ற அந்த நாடகத்தின் முடிவில், முக்கிய கதாபாத்திரம் பல இன்னல்களுக்குப் பிறகு சொர்க்கத்தின் வாசலை அடையும் போது, “நான் ராஜாவைப் பார்க்கிறேன்!” என்று முதன்முறையாக மகிழ்ச்சியுடன் கூவுகிறான். பரலோகத்தில் நமது புதிய கண்களால் அவரைப் பார்க்கும் வரை, இன்று நம் வாழ்வில் அவருடைய செயலை எதிர்பார்க்கிறோம்.

 

நற்கிரியைகளில் ஐசுவரியவான்

எழுபது ஆண்டுகளாக, தேய்த்தல், உலர்த்துதல், கையால் துணிகளை அலசுதலென்று  ஒரு சலவை செய்யும் பெண்ணாகக் கடின உழைப்புக்குப் பிறகு, ஓசியோலா மெக்கார்ட்டி, இறுதியாக எண்பத்தாறு வயதில் ஓய்வு பெறத் தயாரானார். அத்தனை ஆண்டுகளும் அவர் தனது சொற்ப வருமானத்தை மிகக் கவனமாகச் சேமித்து வைத்திருந்தார். மேலும் தனது சுற்றுப்புறத்தாரை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஓசியோலா அருகிலுள்ள பல்கலைக்கழகத்திற்குத் தோராயமாக 1.24 கோடி ரூபாயை நன்கொடையாக ஏழை மாணவர்களின் உதவித்தொகை நிதியாக வழங்கினார். அவரது தன்னலமற்ற கொடையால் ஈர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அவரது அறக்கொடையை மும்மடங்காகப் பெருக போதுமான அளவு நன்கொடை அளித்தனர்.

செல்வத்தைத் தனது சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், பிறரை ஆசிர்வதிப்பதற்காகப் பயன்படுத்துவதே அதின் உண்மையான மதிப்பென்பதை ஓசியோலா புரிந்துகொண்டார். இந்த உலகத்தில் ஐசுவரியவான்களாக இருப்பவர்களுக்கு “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” (1 தீமோத்தேயு 6:18) இருக்கக் கட்டளையிடும்படி அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தினார். நாம் ஒவ்வொருவரும் உக்கிராணக்காரர்களாய் இருக்கும்படி நமக்குச் செல்வம் கொடுக்கப்பட்டுள்ளது, அது பணமாக இருக்கலாம் அல்லது பிற வளமாக இருக்கலாம். நம்முடைய ஆதாரங்களில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, தேவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு பவுல் எச்சரிக்கிறார் (வ.17).மேலும் “தாராளமாய்க் கொடுக்கிறவர்களாக” இருப்பதன் மூலம், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்க வேண்டும் (வ.18).

தேவனின் பொருளாதார கொள்கையில் பிசினித்தனமும், தாராளமாகக் கொடுக்காததும் வெறுமைக்கே வழிவகுக்கும். அன்பினால் பிறருக்குக் கொடுப்பதே நிறைவின் வழி. அதிகமாகப் பாடுபடுவதற்குப் பதிலாக, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வ. 6). ஓசியோலாவைப் போல, நமது வளங்களைத் தாராளமாகக் கொடுப்பது எவ்வாறிருக்கும்? தேவன் நம்மை வழிநடத்துவதுபோல இன்று நற்செயல்களில் ஐசுவரியமுள்ளவர்களாக இருக்க முயல்வோம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.

 

கிறிஸ்துவை உடுத்திக்கொள்ளுதல்

முதன்முறையாக எனது புதிய கண்ணாடியை அணிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு நான் அவற்றை தூக்கி எறிய விரும்பினேன். அந்த புதிய கண்ணாடியை அணிந்தபோது என் கண்களில் வலி ஏற்பட்டது மற்றும் தலை சுற்றியது. எனக்கு பழக்கமில்லாத அந்த புதிய சட்டங்களால்(பிரேம்) எனது காதுகள் புண்பட்டன. அடுத்த நாள் நான் அதை அணியவேண்டும் என்று நினைத்தபோது கூச்சலிட்டேன். அந்த கண்ணாடியை என்னுடைய சரீரம் ஏற்றுக்கொள்வதற்காக, அதை நான் மீண்டும் மீண்டும் அணியவேண்டியிருந்தது. அதற்கு பல வாரங்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு, நான் அந்த கண்ணாடியை அணிந்திருப்பதை மறந்துவிட்டேன். 

புதிதாக ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு சில மாற்றங்கள் அவசியப்படுகிறது. ஆனால் காலப்போக்கில், அதோடு நாம் பழகிவிடுகிறோம். அதுவும் நமக்கு பொருத்தமாய் மாறிவிடுகிறது. அவற்றிலிருந்து சில புதிய அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள நேரிடுகிறது. ரோமர் 13இல், அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்” (வச. 12) என்றும் சரியான ஜீவியம் வாழும்படிக்கும் அறிவுறுத்துகிறார். அவர்கள் இயேசுவை நம்பியிருந்தவர்கள், ஆனால் அவர்கள் தற்போது நித்திரைகொள்வதில் மனநிறைவடைந்திருக்கிறார்கள்; அவர்கள் தூக்கத்தைவிட்டு எழுந்திருக்கவும், கண்ணியமாக நடந்துகொள்ளவும், எல்லா பாவங்களையும் விட்டுவிடவும் அவர்களை அறிவுறுத்துகிறார் (வச. 11-12). பவுல் அவர்களை இயேசுவை அணிந்துகொண்டு, அவர்களுடைய எண்ணங்களிலும் செயல்களிலும் அவரைப் போலவே இருக்குமாறு ஊக்கப்படுத்துகிறார் (வச. 14).

இயேசுவின் அன்பான, கனிவான, இரக்கமுள்ள, கருணை நிறைந்த, உண்மையுள்ள வழிகளை நாம் ஒரே இரவில் பிரதிபலிக்கத் தொடங்குவதில்லை. அவை சங்கடமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தாலும், ஒவ்வொரு நாளும் “ஒளியின் ஆயுதங்களை" தரிந்துகொள்ள தீர்மானிப்பது என்பது ஓர் நீண்ட செயல்முறையாகும். காலப்போக்கில், அவர் நம்மை சிறப்பாக மாற்றுகிறார்.

 

அன்பினால் ஊக்கப்படல்

கல்லூரி நாட்களில் ஜிம்மும் லனிடாவும் காதலர்கள். அவர்களின் திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் லனிடா வித்தியாசமாக நடந்துகொண்டாள், வழிப்பாதைகளையும் பணிநியமனங்களையும் மறந்தாள். அவளுடைய 47ம் வயதில், ஆரம்பக்கால அல்சைமர் நோயால் அவள் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவளது முதன்மை பராமரிப்பாளராகக் கடந்த 10 ஆண்டுகள் இருந்த ஜிம், " நான் அவளை நேசிக்கிறேன் என்று சொன்னதைக் காட்டிலும், அல்சைமர் என் மனைவியைக் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அன்பு கூறவும் அவளுக்குச் சேவை செய்யவும் எனக்கு வாய்ப்பளித்தது" என்றார்.

பரிசுத்த ஆவியானவரின் வரங்களை விளக்குகையில், பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 13ல் அன்பின் நற்பண்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடமைக்காகச் செய்யும் சேவைகளையும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பின் செயல்களையும் வேறுபடுத்துகிறார். பேச்சாற்றல் நல்லது, ஆனால் அன்பில்லாவிடில் சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" (வ.1) இருக்கும் என்று பவுல் எழுதினார். "என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." (வ. 3). "அன்பே பெரியது" (வ. 13) என இறுதியில் பவுல் கூறியுள்ளார்..

தன் மனைவியைக் கவனித்துக் கொண்டதினால்  அன்பு மற்றும் சேவையைப் பற்றிய ஜிம்மின் புரிதல் ஆழமாயிற்று. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உதவும்  பெலனை, ஆழமான மற்றும் நிலையான அன்பு மட்டுமே அவருக்கு வழங்க முடியும். இறுதியில், தேவன் நம் மீது செலுத்தும் அன்பிலே இந்த முன்மாதிரியான தியாக அன்பை முழுமையாகக் காணலாம்.இந்த அன்பே பிதாவானவர் இயேசுவை நம் பாவங்களுக்காக மரிக்க அனுப்பக் காரணமாயிற்று (யோவான் 3:16). அன்பால் உந்தப்பட்ட இந்த தியாகச் செயல் உலகை நிரந்தரமாக மாற்றிவிட்டது..

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார். 

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “சிறந்த மனிதன் உருவாக்கிய நதி" திட்டம் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உள்ளிருந்து மறுருபமகுதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், மேற்கு லண்டனில் உள்ள இருபத்தி நான்கு மாடி கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் தீ பரவி எழுபது பேரின் உயிர்களைப் பலியாக்கியது. கட்டிடத்தின் புதுப்பித்தலின் பகுதியாக, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைப்பூச்சுதான் தீப்பிழம்புகள் மிக விரைவாகப் பரவுவதற்கான முதன்மைக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த பொருள் வெளியில்தான் அலுமினியம், ஆனால் பற்றக்கூடிய நெகிழி அதின் நடுவில் கொண்டிருந்தது.

அத்தகைய ஆபத்தான பொருள் எவ்வாறு விற்கப்பட்டது, நிறுவப்பட்டது? இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள், இது தீ பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை வெளியிடத் தவறினர். மேலும் வாங்குபவர்கள், பொருளின் மலிவான விலைக் குறியீட்டால், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். பளபளப்பான உறை வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளித்தது.

இயேசுவின் சில கடுமையான வார்த்தைகள் மத போதகர்களை நோக்கியே  வந்தது, அவர்கள் அழகாகத் தோன்றும் வெளிப்புறத்தில் அநீதியை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். அவை " வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்", " புறம்பே அலங்காரமாய்" தோன்றும், ஆனால் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளினால் நிறைந்திருக்கும்  (மத்தேயு 23:27) என்றார். "நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்" (வ. 23) பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் அலங்காரமாய்க் காணப்படுவதற்குக் கவனம் செலுத்தினர். "போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தை" சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினர், ஆனால் உள்ளேயிருந்த "கொள்ளை, அநீதி" ஆகியவற்றை விட்டுவிட்டனர் (வ. 25).

நம்முடைய பாவத்தையும்,உள்ள முறிவையும் தேவனுக்கு முன்பாக நேர்மையாகக் கொண்டுவருவதை விட "அலங்காரமாய் தோன்றுவதில்” கவனம் செலுத்துவது எளிது. ஆனால் அழகாகத் தோற்றமளிக்கும் வெளிப்புறமானது, அநீதத்தின் இதயம் உண்டாக்கும் ஆபத்தை மாற்றாது. நம் அனைவரையும் உள்ளிருந்து மாற்றும்படி விட்டுக்கொடுக்க, தேவன் நம்மை அழைக்கிறார் (1 யோவான் 1:9).

கிளையாகிய இயேசு

சிவப்பாய் காட்சியளித்த மலைகளுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கிறது அழகிய ஹோலி கிராஸ் சிற்றாலயம். அதற்குள் நுழைந்தவுடன், சிலுவையில் இயேசுவின் வித்தியாசமான சிற்பம் உடனடியாக ஈர்த்தது. ஒரு பாரம்பரிய சிலுவைக்குப் பதிலாக, இயேசு ஒரு மரத்தின் கிளைகளில் இரண்டு தண்டுகளில் சிலுவையில் அறையப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. கிடைமட்டமாகத்  துண்டிக்கப்பட்ட, காய்ந்த தண்டு, தேவனை நிராகரித்த பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குறிக்கிறது. மற்ற தண்டு மேல்நோக்கி வளர்ந்து கிளைகள்; யூதாவின் செழிப்பான கோத்திரத்தையும், தாவீது ராஜாவின் குடும்ப வம்சத்தையும் குறிக்கிறது.

குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலை, இயேசுவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூதாவின் கோத்திரம் சிறையிருப்பில் வாழ்ந்தாலும், எரேமியா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியைக் கொடுத்தார்: "நான்.. சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்" (எரேமியா 33:14) "அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்” (வ. 15) என்று மீட்பரை குறித்தது. அவரை ஜனங்கள் அடையாளம் காண்பதற்கான ஓர் வழி, "தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்" (வ. 15) என்பதே. அதாவது, மீட்பர் தாவீது ராஜாவின் வழித்தோன்றலாக இருப்பார்.

இயேசுவின் வம்சாவளியின் விவரங்களில், தேவன் வாக்களித்த அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராக இருந்தார் என்ற முக்கியமான உண்மையை இச்சிற்பம் திறமையாக வெளிக்காட்டுகிறது. அதிலும், கடந்த காலத்தில் அவருடைய உண்மைத்தன்மையானது  எதிர்காலத்தில் நமக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருப்பார் என்ற உறுதியளிக்கிறது என்பதற்கான நினைவூட்டல்.

பிரதிபலன்

1921 ஆம் ஆண்டில், கலைஞர் சாம் ரோடியா தனது வாட்ஸ் டவர்ஸ் கட்டுமானத்தைத் தொடங்கினார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸில் பதினேழு சிற்பங்கள் முப்பது மீட்டர் உயரம் எழுப்பப்பட்டன. இசைக்கலைஞர் ஜெர்ரி கார்சியா ரோடியாவின் தலைசிறந்த படைப்பை  நிராகரித்தார். ""நீங்கள் மரித்த பிறகும் இருக்கும் விஷயம் இது. அதுதான் இதன் பலன்" என்றார் கார்சியா. பிறகு, "ஆனால் இது எனக்கானதல்ல" என்றார்.

அதனால் அவருக்கு கிடைத்த பலன் என்ன? அவரது இசைக்குழு உறுப்பினர் பாப் வீா், இவ்விருவரின் கருத்தைச் சுருக்கமாகக் கூறினார்: “நித்தியத்தில், உங்களைப் பற்றி எதுவும் நினைவில் கொள்ளப்படாது. எனவே ஏன் வேடிக்கைகாக இருக்கக்கூடாது?"

ஒரு ஐசுவரியமான ஞானி  ஒருமுறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து "அதற்கான பலனை" கண்டுகொள்ள முயன்றான். அவர் , "வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்" (பிரசங்கி 2:1) என்று எழுதினார். ஆனால் அவர், " மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை" (வச. 16) என்றும் குறிப்பிட்டார். அவர், "சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது" (வ. 17) என்று முடித்தார்.

இயேசுவின் வாழ்க்கையும் செய்தியும், அத்தகைய குறுகிய மனப்பான்மையான வாழ்க்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இயேசு நமக்கு "பரிபூரண ஜீவனை " கொடுக்க வந்தார் (யோவான் 10:10) மேலும் இந்த வாழ்க்கையை நித்தியத்தின் கண்ணோட்டத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார். "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்.. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" (மத்தேயு 6:19-20) என்று அவர் கூறினார். பின்னர் அவர் அதைச் சுருக்கமாக: "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (வ. 33) என்றார்.

அதுதான் சூரியனுக்குக் கீழும், அதற்கு அப்பாலும் நீடிக்கும் பலன் .