எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கான் காம்பெல்கட்டுரைகள்

தத்தெடுக்கும் அழகு

“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான். 

இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது. 

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.  

மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது. 

இயேசுவே நம் சமாதானம்

டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம். 

டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம். 

நாம் பேசுவதை அவர் கேட்கிறார்

அமெரிக்க ஜனாதிபதியான ப்ராங்கிளின் ரூஸ்வெல்ட்டை சந்திக்க, ஒவ்வொருநாளும் அவருடைய வெள்ளை மாளிகையின் வரவேற்பறையில் நீண்ட வரிசை நின்றிருக்கும். அவர்களிடம் கைகுலுக்கும்போது, அவர் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை என்று அவருக்கு தோன்றியது. அவர் அதை பரிசோதிக்க எண்ணினார். அடுத்தமுறை அவரை சந்திக்கநின்ற அந்த நீண்ட வரிசையில் ஒவ்வொருவரின் கைகளைக் குலுக்கும்போதும், “இன்று காலை என்னுடைய பாட்டியை கொன்றுவிட்டேன்” என்று சொன்னாராம். பரபரப்பில் கைகுலுக்கிய பலபேர், “ஓ! மகிழ்ச்சி, தொடர்ந்து செய்ய எங்களுடைய வாழ்த்துக்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று பதிலளித்தனர். வரிசையில் கடைசியில் நின்றிருந்த பொலிவியாவின் தூதரகத் தலைவரிடமும் அதையே சொல்ல, புரிந்துகொண்ட அவர் குழப்பத்துடன், அருகாமையில் வந்து “அவர்களுக்கு அது தேவைதான்” என்று மெதுவாகச் சொன்னாராம். 

நீங்கள் பேசுவதை மக்கள் நிஜமாக கேட்கிறார்களா என்று சந்தேகித்ததுண்டா? அல்லது, நீங்கள் பேசுவதை தேவன் கேட்கிறாரா என்று நீங்கள் சந்தேகித்ததுண்டா? மக்கள் முகபாவணையையும் கண்களின் அசைவையும் வைத்து அவர்கள் நம்முடைய பேச்சைக் கேட்கிறார்களா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் தேவன் நமது பேச்சைக் கேட்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? நம் உணர்வுகளை வைத்தா? அல்லது அவர் பதில்கொடுப்பதை வைத்தா?

பாபிலோன் அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் இருந்த பின்பு, தேவன் தன் ஜனத்தை மீட்டுக் கொண்டுவருவதாகவும், அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணியிருந்தார் (எரேமியா 29:10-11). எனவே அவர்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டவுடன், அவர் கேட்டார் (வச. 12). அவர் நம்முடைய கூக்குரலைக் கேட்பார் என்பது அவர்களுக்கு மிக நன்றாய் தெரியும். ஏனெனில் தேவன் கேட்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். நமக்கும் அப்படித்தான் (1 யோவான் 5:4). நாமும் உணர்வுகளை சார்ந்தோ, அல்லது அடையாளத்திற்கு காத்திருக்கவோ வேண்டியதில்லை. நம்முடைய ஜெபத்தைக் கேட்பதாக அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் (2 கொரிந்தியர் 1:20).

விவேகமான ஆலோசனையைக் கேட்பது

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு அரசியல்வாதியைப் பிரியப்படுத்த விரும்புவதாகக் கண்டார். எனவே அவர் சில யூனியன் ராணுவ படைவகுப்புகளை மாற்றுவதற்கான கட்டளையை வெளியிட்டார். போர் குழுவின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் இந்த உத்தரவைப் பெற்றபோது, அதை நிறைவேற்ற அவர் மறுத்துவிட்டார். ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று அவர் கூறினார். ஸ்டாண்டன் கூறியதை லிங்கனிடம் கூறினார்கள், அவர் பதிலளித்தார்: “நான் ஒரு முட்டாள் என்று ஸ்டாண்டன் சொன்னால், நான் அப்படியாக தான் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் எப்போதும் சரியானவர்; நான் என்னை சரிசெய்துக் கொள்கிறேன்.” இரண்டு பேரும் பேசினப்போது, ஜனாதிபதி தனது முடிவு ஒரு மோசமான தவறு என்பதை விரைவாக உணர்ந்தார். தயக்கமின்றி அவர் அதைத் திரும்பப் பெற்றார். ஸ்டாண்டன் லிங்கனை ஒரு முட்டாள் என்று அழைத்தபோதிலும், ஸ்டாண்டன் அவருடன் உடன்படாதபோது ஜனாதிபதி தனது தவறான முடிவை பிடித்துக்கொண்டு இல்லாதபடி, அதற்கு பதிலாக, லிங்கன் ஆலோசனையைக் கேட்டு, அதைக் கருத்தில்கொண்டு, மனதை மாற்றிக்கொண்டதின் மூலம் புத்திசாலி என நிரூபித்தார். 

ஞானமான ஆலோசனையைக் கேட்காத ஒருவரை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? (1 இராஜாக்கள் 12:1-11 ஐ காண்க.) இது எரிச்சலூட்டுகிறதல்லவா? அல்லது, இன்னும் தனிப்பட்ட முறையில், நீங்கள் எப்போதாவது ஆலோசனையைக் கேட்க மறுத்திருக்கிறீர்களா? நீதிமொழிகள் 12:15 கூறுவது போல், “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்கு செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்கு செவிக்கொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” மக்கள் எப்போதுமே சரியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது, அது நமக்கும் அது பொருந்தும்! எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்கள் மட்டுமே விதிவிலக்கு என்று முட்டாள்கள் கருதுகிறார்கள். அதற்கு பதிலாக, நாம் ஆரம்பத்தில் உடன்படவில்லை என்றாலும், தெய்வீக ஞானத்தைக் கடைபிடிப்போம்; மற்றவர்களின் ஞானமான ஆலோசனையைக் கேட்போம். சில சமயங்களில் தேவன் நம்முடைய நன்மைக்காகவே அவ்வாறு செயல்படுகிறார் (வச. 2).

முட்டாள்தனத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஒரு நபர் மளிகை கடைக்குள் நடந்து சென்று கவுண்டரில் ரூ.500-யை வைத்து கொண்டு சில்லரை  கேட்டார். கடைகாரர் பணப் பெட்டியை திறந்த போது, அந்த மனிதன் ஒரு துப்பாக்கியை எடுத்து அனைத்து பணத்தையும் கேட்டார்  அந்த கடைக்காரர் உடனடியாக முழுவதையும் வழங்கினார். அந்த நபர் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார், ஐதூறு ரூபாய் நோட்டை கவுண்டரிலேயே  விட்டுவிட்டார் . அந்த பணப் பெட்டியிலிருந்து அவர் பெற்ற மொத்த பணம்?முன்னூறு ரூபாய்.

நாம் அனைவரும் சில நேரங்களில் முட்டாள்தனமாக செயல்படுகிறோம் ... இந்த திருடனைப் போலல்லாமல், நாம் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம். முக்கியமானது நமது முட்டாள்தனமான நடக்கையிலிருந்து நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். திருத்தம் செய்யவில்லை என்றால், நமது மோசமான தேர்வுகள் பழக்கமாக மாறக்கூடும், அது நம் தன்மையை எதிர்மறையாக வடிவமைக்கும். நாம் “முட்டாள்கள்” ஆகிவிடுவோம். . . மதிகெட்டவனாக” (பிரசங்கி 10: 3). 

சில நேரங்களில் நம் முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வது கடினம், ஏனெனில் அதற்கு கூடுதலான செயல்பாடு தேவைப்படுகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நாம் பிரதிபலிக்க வேண்டும், அது வேதனையானது. அல்லது ஒரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அடுத்த முறை நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், நம்முடைய முட்டாள்தனமான வழிகளைப் புறக்கணிக்க அது ஒருபோதும் உதவாது.

அதிர்ஷ்டவசமாக, தேவன் நம்முடைய முட்டாள்தனத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் நம்மை வடிவமைப்பதற்கும் பயன்படுத்தலாம். எந்தச் சிட்சையும் “தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்” துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”(எபிரெயர் 12:11). நம்முடைய முட்டாள்தனமான நடக்கைக்காக நம்முடைய பிதாவின் சிட்சையை ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பும் மகன்கள் மற்றும் மகள்களைப் போல நம்மை மேலும் மாற்றும்படி அவரிடம் வேண்டிக்கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.