எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆல்பர்ட் லீகட்டுரைகள்

தகப்பனில்லாமை இனி இல்லை

“தகப்பனில்லாத தலைமுறை” என்னும் ஜான் சோவர்ஸின் புத்தகத்தில், “இதுவரையில்லாத எந்த தலைமுறையைக் காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையில் 25 மில்லியன் பிள்ளைகள் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகின்றனர்” என்று எழுதுகிறார். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், வீதியில் நடக்கும்போது ஒருவேளை என்னுடைய அப்பா எனக்கு எதிரே வந்து என்னை மோதினாலும், அவர்தான் என்னுடைய அப்பா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் சிறுபிள்ளையாயிருக்கும்போதே என்னுடைய பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகையினால், பல ஆண்டுகளாக நான் தகப்பனில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். என் பதிமூன்றாம் வயதில் பரமண்டல ஜெபத்தைக் கேட்க நேர்ந்தது (மத்தேயு 6:9-13). “பூமியில் நீ தகப்பனில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தேவன் உன் பரலோகத் தகப்பனாயிருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

மத்தேயு 6:9இல் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம்.” 7ஆம் வசனத்தில் ஜெபத்தில் “வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் எப்படி தொடர்புடையதாகிறது என்று நாம் ஆச்சரியப்படலாம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அவருக்கு ஞாபகம் இருக்கும். நாம் விளக்கத் தேவையில்லை, அவருக்குப் புரியும். அவர் இரக்கமுள்ளவர், அவரின் நன்மைகளைக் குறித்து நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவருக்கு முடிவு ஆரம்பத்திலேயே தெரியும் என்பதினால் அவர் கிரியை செய்யும் காலமே சரியானது. 

தேவன் நம் தகப்பனாய் இருப்பதால் அவரை செயல்பட வைப்பதற்கு “வீண்வார்த்தைகளை” (வச. 7) நாம் பயன்படுத்தத் தேவையில்லை. ஜெபத்தில், நம்மை நேசிக்கிற, நம்மேல் அக்கறையுள்ள நம்மை கிறிஸ்துவின் மூலம் பிள்ளையாக்கிக் கொண்ட, நம் அப்பாவிடம் பேசுகிறோம். 

பயத்தை மேற்கொள்ளல்

முப்பத்திரண்டு ஆண்டுகளாக பயம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஆண்டு கொண்டது. தான் செய்த ஒரு குற்றத்தினிமித்தம் பயந்து, தன்னுடைய சகோதரியின் பண்ணை வீட்டிலேயே, ஒருவரையும் சந்திக்காமலும், வேறிடம் எங்கும் செல்லாமலும் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன், தன்னுடைய தாயாரின் அடக்க வைபவத்தையும் தவிர்த்தான். ஆனால் தன்னுடைய அறுபத்திநான்காம் வயதில், தன் மீது எந்த குற்றச் சாட்டும் பதியப்படவில்லை என்பதை அறிந்தான், அவனும்  இயல்பு வாழ்வுக்குத் திரும்பினான். அவனுக்குத் தண்டனையைக்குறித்த ஓர் அச்சம் இருந்தது உண்மைதான், ஆனால், அந்த பயம் அவனை கட்டுப்படுத்தும்படி, தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான்.

பெலிஸ்தனான கோலியாத், ஏலா பள்ளத்தாக்கில் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட போது, அவர்களும் இத்தகைய பயத்தினால் இழுக்கப்பட்டனர். அவர்களுக்கிருந்த பயம் உண்மையானது தான். அவர்களின் எதிரியான கோலியாத் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம்  உயரம் இருந்தான், அவனுடைய போர் ஆயுதங்கள் மட்டும் 125 பவுண்டு எடையுள்ளனவாயிருந்தன (1 சாமு. 17:4-5). நாற்பது நாட்கள், காலையும், மாலையும், இஸ்ரவேலரின் படைகளைத் தன்னோடு யுத்தம் செய்ய வருமாறு சவால் விட்டான். ஆனால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய  ஒருவனும் முன்வரவில்லை.  இஸ்ரவேலரின் சேனைகளின் அணிவகுப்பண்டை தாவீது வரும் வரை, ஒருவனும் அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்தான், அவனுடைய இகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்டான், அவனை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.

இஸ்ரவேலர் அனைவரும், கோலியாத்தை தாங்கள் எதிர்த்து நிற்க கூடாதபடி, மிகப் பெரியவனாகப் பார்த்தனர், சிறிய பையனாகிய தாவீதோ, அவனை, தனக்குள் இருக்கும் தேவனைக் காட்டிலும் மிகச் சிறியவனாகக் கண்டான். அவன், “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்’’ என்றான் (வச. 47).

நம்மையும் பயம் ஆட்கொள்ளும் போது, தாவீதைப் போன்று நம்முடைய கண்களை தேவனுக்கு நேராகத் திருப்பி, நம்முடைய பிரச்சனையைக் குறித்த சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.  நமக்கிருக்கும் அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கெதிராக இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும், நம்மோடிருக்கும் தேவன், நமக்காக யுத்தம் செய்யும் தேவன், பெரியவர்.

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

உறுதியாக பற்றிக்கொள்

சீனாவில் ஷாங்க் ஜியாஜியிலுள்ள டையமன் மலை, உலகிலுள்ள அழகான மலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மலையின் உயர்ந்த சிகரங்களின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்க டையமன் ஷான் கேபிள் காரின் (Cable Car) மூலம் செல்ல வேண்டும். இந்த கேபிள் கார் 7455 மீட்டர் (4.5 மைல்) தூரத்திற்கு பயணிக்கிறது. அந்த கேபிள் காரில் எந்த ஒரு மின் மோட்டாரும் இல்லாமல் மிக உயரமான மலைகளை அவ்வளவு தூரம் கடந்து செல்வது என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. ஆனாலும் இது பிரமிக்கத்தக்க உயரமான அந்த மலைகளை பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டாருடன், மிக வலுவான கம்பிவடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

நமது விசுவாசப் பயணத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14) என்று, நாமும் நமது ஓட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க இயலும்? அந்த கேபிள் காரைப்போல நமக்கு கிறிஸ்துவுடன் கூட மிக வலுவான பிணைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் பவுல் “கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” (பிலி. 4:1) என்று கூறியுள்ளார். நாமாக செயல்படக்கூடிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை. நாம் முன்னேறிச் செல்ல முழுவதுமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம். நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களைக் கடந்து செல்ல, அவர் உதவிசெய்து நம்மை பாதுகாவலாகப் பரலோகத்தில் சேர்ப்பார்.

இந்த உலகில் வாழ்ந்த இறுதி நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று அறிவித்தார்; நீங்களும் அவ்வாறே கூற இயலும். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது போதும்.

கிறிஸ்மஸின் பிறப்பு

காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து…

நாம் யார்?

1940ன் ஆரம்பத்தில் ஜெர்மனியை ஆண்ட சமநெறிக் கொள்கையினரால் சிறைக்கைதிகள் கொடுமையாக நடத்தப்பட்ட, வன்சிறைக்காப்பிடங்களில் (Concentration camp) கோரிடென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் அனுபவித்த பயங்கரமான கொடுமைகளை அவளது சுயசரிதையில் விளக்கியுள்ளாள். சிறையில், ஒருமுறை ஓர் ஆய்வின் போது அவர்களது உடைகளை களைந்து போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். கோரி, அவளது பெண்மை பாதிக்கப்பட்டவளாகவும், கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்த நிலையில் வரிசையில் நின்றாள். இயேசு சிலுவையில் நிர்வாணக் கோலத்தில் தொங்கினதை திடீரென்று நினைவு கூர்ந்தாள். அந்த எண்ணத்தினால் ஆச்சரியமான ஆராதிக்கும் உணர்வைப் பெற்ற அவள், “பெட்சி, அவர்கள் அவரது…

வாழ்க்கையின் புயல்கள்

வேதாகமத்தில் மாற்கு என்ற புத்தகத்தில் பயங்கரமான புயல் காற்றைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடு கூட ஒரு படகில் கலிலேயாக் கடலில் சென்று கொண்டிருந்தார்கள். “பலத்த சுழல் காற்று” அடித்த பொழுது, சீஷர்கள் அவர்களில் சிலர் அனுபவமிக்க மீனவர்களாக இருந்தபொழுதும், அவர்களது ஜீவனைக் குறித்து பயந்தார்கள். (4:37-38) தேவன் கவலைப்படவில்லையா? அவர்கள் இயேசுவினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இயேசுவுக்கு மிகவும் நெருங்கினவர்களாகவும் இல்லையா? “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் அல்லவா? (வச.35) பின்பு ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).