எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆல்பர்ட் லீகட்டுரைகள்

தகப்பனில்லாமை இனி இல்லை

“தகப்பனில்லாத தலைமுறை” என்னும் ஜான் சோவர்ஸின் புத்தகத்தில், “இதுவரையில்லாத எந்த தலைமுறையைக் காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையில் 25 மில்லியன் பிள்ளைகள் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகின்றனர்” என்று எழுதுகிறார். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், வீதியில் நடக்கும்போது ஒருவேளை என்னுடைய அப்பா எனக்கு எதிரே வந்து என்னை மோதினாலும், அவர்தான் என்னுடைய அப்பா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் சிறுபிள்ளையாயிருக்கும்போதே என்னுடைய பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகையினால், பல ஆண்டுகளாக நான் தகப்பனில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். என் பதிமூன்றாம் வயதில் பரமண்டல ஜெபத்தைக் கேட்க நேர்ந்தது (மத்தேயு 6:9-13). “பூமியில் நீ தகப்பனில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தேவன் உன் பரலோகத் தகப்பனாயிருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

மத்தேயு 6:9இல் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம்.” 7ஆம் வசனத்தில் ஜெபத்தில் “வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் எப்படி தொடர்புடையதாகிறது என்று நாம் ஆச்சரியப்படலாம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அவருக்கு ஞாபகம் இருக்கும். நாம் விளக்கத் தேவையில்லை, அவருக்குப் புரியும். அவர் இரக்கமுள்ளவர், அவரின் நன்மைகளைக் குறித்து நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவருக்கு முடிவு ஆரம்பத்திலேயே தெரியும் என்பதினால் அவர் கிரியை செய்யும் காலமே சரியானது. 

தேவன் நம் தகப்பனாய் இருப்பதால் அவரை செயல்பட வைப்பதற்கு “வீண்வார்த்தைகளை” (வச. 7) நாம் பயன்படுத்தத் தேவையில்லை. ஜெபத்தில், நம்மை நேசிக்கிற, நம்மேல் அக்கறையுள்ள நம்மை கிறிஸ்துவின் மூலம் பிள்ளையாக்கிக் கொண்ட, நம் அப்பாவிடம் பேசுகிறோம். 

பயத்தை மேற்கொள்ளல்

முப்பத்திரண்டு ஆண்டுகளாக பயம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஆண்டு கொண்டது. தான் செய்த ஒரு குற்றத்தினிமித்தம் பயந்து, தன்னுடைய சகோதரியின் பண்ணை வீட்டிலேயே, ஒருவரையும் சந்திக்காமலும், வேறிடம் எங்கும் செல்லாமலும் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன், தன்னுடைய தாயாரின் அடக்க வைபவத்தையும் தவிர்த்தான். ஆனால் தன்னுடைய அறுபத்திநான்காம் வயதில், தன் மீது எந்த குற்றச் சாட்டும் பதியப்படவில்லை என்பதை அறிந்தான், அவனும்  இயல்பு வாழ்வுக்குத் திரும்பினான். அவனுக்குத் தண்டனையைக்குறித்த ஓர் அச்சம் இருந்தது உண்மைதான், ஆனால், அந்த பயம் அவனை கட்டுப்படுத்தும்படி, தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான்.

பெலிஸ்தனான கோலியாத், ஏலா பள்ளத்தாக்கில் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட போது, அவர்களும் இத்தகைய பயத்தினால் இழுக்கப்பட்டனர். அவர்களுக்கிருந்த பயம் உண்மையானது தான். அவர்களின் எதிரியான கோலியாத் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம்  உயரம் இருந்தான், அவனுடைய போர் ஆயுதங்கள் மட்டும் 125 பவுண்டு எடையுள்ளனவாயிருந்தன (1 சாமு. 17:4-5). நாற்பது நாட்கள், காலையும், மாலையும், இஸ்ரவேலரின் படைகளைத் தன்னோடு யுத்தம் செய்ய வருமாறு சவால் விட்டான். ஆனால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய  ஒருவனும் முன்வரவில்லை.  இஸ்ரவேலரின் சேனைகளின் அணிவகுப்பண்டை தாவீது வரும் வரை, ஒருவனும் அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்தான், அவனுடைய இகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்டான், அவனை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.

இஸ்ரவேலர் அனைவரும், கோலியாத்தை தாங்கள் எதிர்த்து நிற்க கூடாதபடி, மிகப் பெரியவனாகப் பார்த்தனர், சிறிய பையனாகிய தாவீதோ, அவனை, தனக்குள் இருக்கும் தேவனைக் காட்டிலும் மிகச் சிறியவனாகக் கண்டான். அவன், “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்’’ என்றான் (வச. 47).

நம்மையும் பயம் ஆட்கொள்ளும் போது, தாவீதைப் போன்று நம்முடைய கண்களை தேவனுக்கு நேராகத் திருப்பி, நம்முடைய பிரச்சனையைக் குறித்த சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.  நமக்கிருக்கும் அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கெதிராக இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும், நம்மோடிருக்கும் தேவன், நமக்காக யுத்தம் செய்யும் தேவன், பெரியவர்.

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

உறுதியாக பற்றிக்கொள்

சீனாவில் ஷாங்க் ஜியாஜியிலுள்ள டையமன் மலை, உலகிலுள்ள அழகான மலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மலையின் உயர்ந்த சிகரங்களின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்க டையமன் ஷான் கேபிள் காரின் (Cable Car) மூலம் செல்ல வேண்டும். இந்த கேபிள் கார் 7455 மீட்டர் (4.5 மைல்) தூரத்திற்கு பயணிக்கிறது. அந்த கேபிள் காரில் எந்த ஒரு மின் மோட்டாரும் இல்லாமல் மிக உயரமான மலைகளை அவ்வளவு தூரம் கடந்து செல்வது என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. ஆனாலும் இது பிரமிக்கத்தக்க உயரமான அந்த மலைகளை பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டாருடன், மிக வலுவான கம்பிவடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

நமது விசுவாசப் பயணத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14) என்று, நாமும் நமது ஓட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க இயலும்? அந்த கேபிள் காரைப்போல நமக்கு கிறிஸ்துவுடன் கூட மிக வலுவான பிணைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் பவுல் “கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” (பிலி. 4:1) என்று கூறியுள்ளார். நாமாக செயல்படக்கூடிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை. நாம் முன்னேறிச் செல்ல முழுவதுமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம். நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களைக் கடந்து செல்ல, அவர் உதவிசெய்து நம்மை பாதுகாவலாகப் பரலோகத்தில் சேர்ப்பார்.

இந்த உலகில் வாழ்ந்த இறுதி நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று அறிவித்தார்; நீங்களும் அவ்வாறே கூற இயலும். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது போதும்.

கிறிஸ்மஸின் பிறப்பு

காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து…

நாம் யார்?

1940ன் ஆரம்பத்தில் ஜெர்மனியை ஆண்ட சமநெறிக் கொள்கையினரால் சிறைக்கைதிகள் கொடுமையாக நடத்தப்பட்ட, வன்சிறைக்காப்பிடங்களில் (Concentration camp) கோரிடென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் அனுபவித்த பயங்கரமான கொடுமைகளை அவளது சுயசரிதையில் விளக்கியுள்ளாள். சிறையில், ஒருமுறை ஓர் ஆய்வின் போது அவர்களது உடைகளை களைந்து போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். கோரி, அவளது பெண்மை பாதிக்கப்பட்டவளாகவும், கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்த நிலையில் வரிசையில் நின்றாள். இயேசு சிலுவையில் நிர்வாணக் கோலத்தில் தொங்கினதை திடீரென்று நினைவு கூர்ந்தாள். அந்த எண்ணத்தினால் ஆச்சரியமான ஆராதிக்கும் உணர்வைப் பெற்ற அவள், “பெட்சி, அவர்கள் அவரது…

வாழ்க்கையின் புயல்கள்

வேதாகமத்தில் மாற்கு என்ற புத்தகத்தில் பயங்கரமான புயல் காற்றைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடு கூட ஒரு படகில் கலிலேயாக் கடலில் சென்று கொண்டிருந்தார்கள். “பலத்த சுழல் காற்று” அடித்த பொழுது, சீஷர்கள் அவர்களில் சிலர் அனுபவமிக்க மீனவர்களாக இருந்தபொழுதும், அவர்களது ஜீவனைக் குறித்து பயந்தார்கள். (4:37-38) தேவன் கவலைப்படவில்லையா? அவர்கள் இயேசுவினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இயேசுவுக்கு மிகவும் நெருங்கினவர்களாகவும் இல்லையா? “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் அல்லவா? (வச.35) பின்பு ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.